வேதாகமத்தில் மாற்கு என்ற புத்தகத்தில் பயங்கரமான புயல் காற்றைப் பற்றி வாசிக்கின்றோம். இயேசுவின் சீஷர்கள் இயேசுவோடு கூட ஒரு படகில் கலிலேயாக் கடலில் சென்று கொண்டிருந்தார்கள். “பலத்த சுழல் காற்று” அடித்த பொழுது, சீஷர்கள் அவர்களில் சிலர் அனுபவமிக்க மீனவர்களாக இருந்தபொழுதும், அவர்களது ஜீவனைக் குறித்து பயந்தார்கள். (4:37-38) தேவன் கவலைப்படவில்லையா? அவர்கள் இயேசுவினால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும், இயேசுவுக்கு மிகவும் நெருங்கினவர்களாகவும் இல்லையா? “அக்கரைக்குப் போவோம் வாருங்கள்” என்று இயேசு கூறினதற்கு அவர்கள் கீழ்ப்படிந்தார்கள் அல்லவா? (வச.35) பின்பு ஏன் இப்படிப்பட்ட பயங்கரமான சுழலில் சிக்கித்தவிக்கிறார்கள்.
வாழ்க்கையின் புயல்களுக்கு ஒருவருமே விதிவிலக்கு அல்ல. ஆரம்பத்தில் புயலைக் கண்டு பயந்த சீஷர்கள் பின்பு எப்படியாகக் கிறிஸ்துவுக்கு பயந்து அவரைக் கனம் பண்ணினார்களோ அதுபோல, வாழ்க்கையில் நாம் சந்திக்கும் புயல்களும், தேவனைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்ள வழி வகுக்கின்றன. “யார் இவர்? காற்றும் கடலும் இவருக்கு கீழ்ப்படிகின்றனவே” (வச.41) என்று சீஷர்கள் மிக ஆழமாக சிந்தித்தார்கள். நமது சோதனைகளின் மத்தியில், தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற இயலாத அளவுக்கு எந்த ஒரு புயலும் இல்லை என்பதைக் கற்றுக் கொள்ளுகிறோம்.
நமது வாழ்க்கையில் சோதனைகளை ஏன் தேவன் அனுமதிக்கிறார் என்று நாம் அறியாவிட்டாலும் அவற்றின் மூலமாக அவர் யார் என்பதை நாம் அறிந்துகொள்வதால் அவருக்கு நன்றி கூறுகிறோம். அவர் நமது ஜீவனைக் காத்ததினாலே, நாம் அவருக்கு ஊழியம் செய்ய ஜீவிக்கிறோம்.