பிப்ரவரி, 2025 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: பிப்ரவரி 2025

கிறிஸ்துவின் சமாதானம்

வாக்குவாதத்தால் வெல்வார்களா? ஒருபோதுமில்லை. ஒரு சிறு நகரத் தலைவர் அடிரோண்டாக் பூங்காவில் வசிப்பவர்களை எச்சரித்தார், அங்கு சுற்றுச்சூழலாளர்கள் மற்றும் சிறு தொழில் உரிமையாளர்களுக்கு இடையேயான சண்டை, "அடிரோண்டாக் போர்களை" தூண்டியது. அப்ஸ்டேட் நியூயார்க்கில் உள்ள பழமையான வனப்பகுதியைக் காப்பாற்றுவதா அல்லது அதை மேம்படுத்துவதா என்ற அவர்களின் போராட்டத்தை, பெயரே விவரித்தது.

"நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்புங்கள்!" ஒரு உள்ளூர் தலைவர், சுற்றுச்சூழல் ஆர்வலரிடம் கத்தினார். ஆனால் விரைவில் ஒரு புதிய செய்தி வெளியானது. “ஒருவருக்கொருவர் சத்தம் போடாதீர்கள். ஒருவருக்கொருவர் பேச முயலுங்கள்". சண்டையிடும் பிரிவுகளுக்கு இடையே பாலம் அமைக்க, சார்பற்ற ஒரு பொதுவான கூட்டணி உருவாக்கப்பட்டது. பொதுஜனங்களின் உரையாடல் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது; இருபது ஆண்டுகளிலிருந்ததை விட அடிரோண்டாக் நகரங்கள் மிகவும் செழிப்பாக வளர்ந்தபோதும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஏக்கர் காட்டு நிலம் பாதுகாக்கப்பட்டது.

சமாதானமான சகவாழ்வு ஒரு ஆரம்பமே, ஆனால் பவுல் மேலான ஒன்றைக் கற்பித்தார். கொலோசேயில் இருந்த புதிய விசுவாசிகளிடம், “கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்" (கொலோசெயர் 3:8) என்றார். கிறிஸ்துவிலான புதிய சுபாவத்திற்கு தங்கள் பழைய வழிகளை மாற்றிக்கொள்ளுமாறு பவுல் அவர்களை வலியுறுத்தினார்: "உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு" (வ.12) என்று அவர் எழுதினார்.

கிறிஸ்துவிலான புதிய வாழ்க்கைக்கு நமது பழைய கேவலமான வாழ்க்கையைச் சரணடையச் செய்வதற்கான இந்த அழைப்பு அனைத்து விசுவாசிகளுக்கும் இன்று  விடுக்கப்படுகிறது. "தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்" (வ.15). அப்போது, ​​நம் சமாதானத்தில், உலகம் இயேசுவைக் காணும்.

முன்னோக்கிய பாதை

'நாம் என்ன செய்வது?' வேதாகமத்திற்கு மாறான வாழ்க்கை முறைகளைத் தெரிந்துகொண்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்று மஞ்சுவும், தயாளும் வேதனைப்பட்டனர். அவர்கள் வேதவாக்கியங்களைப் படித்து ஜெபித்தபோது, ​​முன்னோக்கிச் செல்ல ஒரு வழியும் உண்டானது: முதலில், அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் அன்பானவர்களிடம் தங்கள் அன்பை வலுப்படுத்தினர்; இரண்டாவதாக, தேவனின் நல்ல திட்டத்தின் அடிப்படையில் அவர்கள் உண்மையையும் நல்லதையும் வெளிப்படுத்தினர்; மூன்றாவதாக, வேதாகம ஞானத்தின் அடிப்படையில் அவர்களுடன் எப்படி அன்புடன் பழகுவார்கள் என்பதை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். காலப்போக்கில், மஞ்சுவும் தயாளும் கிறிஸ்து போன்ற அன்பை வெளிக்காட்டியதால்,  உறவுகளில் அதிக நம்பிக்கை ஏற்பட்டது.

தேவனையும் தன்னையும் மதிக்காத வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்ட ஒரு பெண்ணை எப்படி தன் மனைவியாக்கிக் கொள்வது என்று ஓசியா யோசித்திருக்கலாம். தேவனோ, “தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை சேர்த்துக்கொள்" (ஓசியா 3:1) என்று தீர்க்கதரிசியை வழிநடத்தினார். தீர்க்கதரிசி அவள் மீதான தனது அன்பை வெளிப்படையாக வலுப்படுத்தினார்; அதே சமயம் அவர்களுக்கும், தேவனுக்கு முன்பாக அவர்களின் உறவுக்கும் எது தகுதியானது மற்றும் உண்மையானது என்பதை வெளிப்படுத்தினார் (வ.3). அவளுடனான அவரது உறவு, கலகவீட்டாரான பூர்வ இஸ்ரவேலுடனான தேவனின் சொந்த சவாலான உறவையே அடையாளப்படுத்தியது. அவர்கள் ஒரு தவறான போக்கைத் தேர்ந்தெடுத்தாலும், அவர் முன்னோக்கிச் செல்வதற்கான பாதையை வழங்கினார், அவர் "அவர்களை மனப்பூர்வமாய்"  (14:4) சிநேகிப்பார். ஆனால் அவர்கள் அவருடைய வழிகளைத் தெரிந்துகொள்ளும்படி கூறினார், ஏனெனில் அவைகளே "செம்மையானவைகள்" (வ.9).

தேவன் ஞானத்தையும் பகுத்தறிவையும் அருள்வதால், வேதாகமத்திற்கு மாறான வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்டவர்களுக்கும் அவருடைய அன்பையும் சத்தியத்தையும் தொடர்ந்து வழங்குவோம். முன்னோக்கிச் செல்லும் பாதையை நமக்கு அவரது உதாரணமே வழங்குகிறது.

கொடுப்பதில் உள்ள சந்தோஷம்

ஐந்து மணி நேர விமான பயணத்தில், ஒரு பெண் தீவிரமாக கம்பளி சட்டையைப் பின்னிக்கொண்டிருந்தாள். அவள் தனது ஊசியை உள்ளேயும் வெளியேயும் நகர்த்தும்போது, ​​அவள் அசைவுகளில் சொக்கிப்போன ஐந்து மாதக் குழந்தையைக் கவனித்தாள். அப்போது அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது: அவள் பின்னிக்கொண்டிருந்த கம்பளி சட்டையை முடிப்பதற்குப் பதிலாக; அவள் தனது சிறிய ரசிகனுக்காக ஒரு தொப்பியை பிண்ண எண்ணினாள். விமானம் தரையிறங்கும் நேரத்தில் அவள் தொப்பியை முடிக்க வேண்டும், அதற்கு ஒரு மணிநேரமே இருந்தது ! அந்த பெண், குழந்தையின் தாயாருக்குச் சிறிய தொப்பியைப் பரிசாக அளித்த போது, ​​மற்ற பயணிகள் புன்னகையுடன் கைதட்டி மகிழ்ந்தனர், அதை முழு குடும்பமும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர்.

ஆச்சரியமான பரிசுகள் பெரும்பாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. அவை நமக்குத் தேவையான அல்லது வெறுமனே விரும்பும் பரிசுகளாக இருந்தாலும், அவற்றின் மூலம் கொடுப்பவர் கிறிஸ்துவின் இரக்கத்தையும் நமக்குக் காட்டலாம். ஆதி சபையில், தபீத்தாள் ஆடைகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், "நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்" செய்வதற்கும் பேர்போனவள் (அப்போஸ்தலர் 9:36). அவள் இறந்தபோது, ​​அவளால் பயனடைந்தவர்கள் “[அவள்] செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும்" (வ.39) காண்பித்தனர். அவளுடைய கருணையையும் மற்றும் அவள் தங்கள் வாழ்க்கையைத் தொட்ட விதத்தையும் அவர்கள் சாட்சியமளித்தனர்.

நிகழ்வுகளின் வியத்தகு திருப்பத்தில், பேதுரு, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் மூலம், தபீத்தாளை மீண்டும் உயிர்ப்பித்தார் (வ.40). அவருடைய செயல்கள் அவளை நேசித்தவர்களை மகிழ்ச்சியில் நிரப்பியது; மேலும் பலர் கிறிஸ்துவில் விசுவாசிக்க வழிவகுத்தது (வ.42).

நம்முடைய தயவான செயல்களே நாம் செய்யும் மிகவும் மறக்கமுடியாத சில சாட்சியங்களாக இருக்கலாம். தேவன் வழங்குவதற்கேற்ப, இன்று சில ஆச்சரியமான பரிசுகளைப் பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.

உதாரத்துவத்திற்குப் பதில் செய்தல்

லிடியாவுக்கு அறிமுகமில்லாத நன்கொடையாளர்கள் கிட்டதட்ட 8.5 லட்சங்களைப் பரிசாக வழங்கியபோது, ​​அதில் கொஞ்சமே தனக்காகச் செலவு செய்தார். மாறாக, சக பணியாளர்கள், குடும்பத்தினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்குத் தாராளமாகப் பரிசுகளை வழங்கினார். தடயமற்ற வங்கிப் பரிமாற்றத்தின் மூலம் 8.5 லட்சம் பரிசுக்கு இருநூறு பேர் தெரிந்தெடுக்கப்பட்டு,  எவ்வாறு செலவழித்தனர் என்பதைத் தொடர்ந்த ஒரு ஆய்வின் ஒரு பகுதியாக லிடியா இருந்தார் என்பது அவருக்கே தெரியாது. அந்த அன்பளிப்புப் பணத்தில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் கொடையாகக் கொடுக்கப்பட்டதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கதையைப் பகிர்ந்துகொண்டு, டெட் எனும் இலாப நோக்கற்ற ஊடக அமைப்பின் தலைவரான கிறிஸ் ஆண்டர்சன், “மனிதர்களாகிய நாம் உதாரத்துவத்திற்குத் தாராள மனப்பான்மையுடன் பதில் செய்வது நமக்குள் இயற்கையாக இருக்குமொன்று போல" என்றார்.

வேதாகமத்தில், ஜனங்கள் தாராளமாகக் கொடுத்து வாழும்போது, ​​​​அவர்கள் தங்களைப் படைத்த தேவனின் இதயத்தைப் பிரதிபலிக்கிறார்கள் என்பதை நாம் காண்கிறோம். தேவன் தாராளமாகவும், இரக்கமுள்ளவராகவும், கருணையுள்ளவராகவும் இருக்கிறார், சிலருக்கு மட்டுமல்ல, அனைவருக்கும்; "நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும்" கூட (லூக்கா 6:35). ஆகவே, தேவனின் சுபாவத்தைப் பிரதிபலிக்க விரும்புவோருக்கு, "கைம்மாறுகருதாமல்" (வ.32-35) "அன்பு" செய்ய, "நன்மை செய்ய" மற்றும் எதிரிகளுக்கு "கடன் கொடுக்க" இயேசு அறிவுறுத்தினார்.

நாம் எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும்போது, ​​அது ஒருபோதும் நமக்கு தீங்குண்டாக்கும் வாழ்க்கை முறை அல்ல என்பதை அறிந்துகொள்வோம். இதையும் இயேசு சுட்டிக்காட்டி, “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்... நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படுமென்றார்” (வ.38). தேவனின் தாராள மனப்பான்மைக்கு நாம் பதிலளிக்கும் விதமாக உதாரத்துவமாய் வாழ்வதன் மூலம், ​​எண்ணற்ற வழிகளில் நாம் செழிப்புடன் இருப்பதைக் காணலாம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?

“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.  
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள். 
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.  
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.  
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.

தேவன் பார்க்கிறார், புரிந்துகொள்கிறார், பாதுகாக்கிறார்

சில நேரங்களில், நாள்பட்ட வலி மற்றும் சோர்வுடன் வாழ்வது என்பது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு தனக்கு யாருமில்லை என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. தேவனோ அல்லது மற்றவர்களோ என்னை பார்க்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனது நாயுடன் அதிகாலையில் நான் ஜெபநடை ஏறெடுக்கும்போது, இதுபோன்ற உணர்வுகள் என்னை வெகுவாய் பாதித்தது. தூரத்தில் காற்று நிரப்பப்பட்ட பெரிய பலூன் பறந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அதில் பயணம் செய்யும் நபர்கள் பூமியை உயரத்திலிருந்து பார்த்து ரசிக்கமுடியும். நான் என் அயலவர்களின் வீடுகளை நடந்து கடந்தபோது, பெருமூச்சு விட்டேன். அந்த மூடிய கதவுகளுக்குப் பின்னால் எத்தனை பேர் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவும் முக்கியமற்றவர்களாகவும் உணர்கிறார்கள்? நான் என் நடைப்பயணத்தை முடித்தவுடன், நான் அவர்களைப் பார்க்கிறேன், அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என்பதை என் அண்டை வீட்டாருக்குத் தெரியப்படுத்த எனக்கு வாய்ப்புகளைத் தரும்படி தேவனிடம் கேட்டேன். அவரும் அப்படித்தான். 
தேவன் எத்தனை நட்சத்திரங்களைப் படைத்தார் என்னும் தொகை அவருக்கு தெரியும். ஒவ்வொரு நட்சத்திரங்களையும் அவர் பேர்சொல்லி அழைப்பது (சங்கீதம் 147:5), சிறு விஷயங்களுக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. அவருடைய வல்லமை, ஞானம், பகுத்தறிவு ஆகியவைகள் காலவரம்பற்றவைகள் (வச. 5). 
தேவன் ஒவ்வொரு அவிசுவாசத்தின் அழுகையையும் கேட்கிறார்; ஒவ்வொரு அமைதியான கண்ணீரையும் அவர் தெளிவாகக் காண்கிறார். ஒவ்வொரு திருப்தி பெருமூச்சையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் எப்போது தடுமாறுகிறோம், எப்போது வெற்றிபெறுகிறோம் என்பதை அவர் பார்க்கிறார். நம்முடைய ஆழ்ந்த அச்சங்களையும், நமது உள்ளார்ந்த எண்ணங்களையும், நம்முடைய பயங்கரமான கனவுகளையும் அவர் புரிந்துகொள்கிறார். நாம் எங்கு இருந்தோம், எங்கு செல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். நம் அண்டை வீட்டாரைப் பார்க்கவும், கேட்கவும், நேசிக்கவும் தேவன் நமக்கு உதவுவதால், நம்மைப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும், கவனித்துக் கொள்ளவும் அவரை முழுமையாய் நம்பலாம். 

களவுபோன தெய்வங்கள்

மரத்தால் செய்யப்பட்ட ஒரு குலதெய்வ விக்கிரகத்தைக் காணவில்லை என்று ஒரு பெண் அதிகாரிகளிடம் புகார் அளித்தாள். அவர்கள் அந்த விக்கிரகத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணி, அடையாளம் காண்பிப்பதற்காக அவளை வரச்சொன்னார்கள். இது உங்களுடைய குலதெய்வமா? என்று அவளைக் கேட்க, அவள் வருத்தத்துடன் “இல்லை, என்னுடைய தெய்வம் இதைக்காட்டிலும் பெரியதும் அழகானதுமாய் இருக்கும்” என்று பதிலளித்தாளாம்.  
மக்கள் அவர்களுடைய கரங்களால் செய்யப்படும் தெய்வங்கள் அவர்களை பாதுகாக்கும் என்று நம்பி அவர்கள் விரும்பின வடிவத்தை அதற்கு கொடுக்கிறார்கள். அதினால் தான் யாக்கோபின் மனைவி ராகேல், லாபானிடத்திலிருந்து மறைமுகமாய் புறப்பட்டபோது “தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்” (ஆதியாகமம் 31:19) என்று வேதம் சொல்லுகிறது. ஆனாலும் அந்த சுரூபங்களுக்கு மத்தியில் தேவன் யாக்கோபை பாதுகாத்தார் (வச. 34).  
யாக்கோபுடைய பயணத்தில் யாக்கோபு இரவு முழுவதும் ஒரு மனிதனோடு போராடுகிறான் (32:24). அந்த மனிதன் சாதாரண மனுஷீகத்திற்கு உட்பட்டவன் இல்லை என்பதை யாக்கோபு அறிந்ததினால் தான் “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” (வச. 26) என்று சொல்லுகிறான். அந்த மனிதன் இவனுடைய பெயரை இஸ்ரவேல் (“தேவன் யுத்தம்செய்கிறார்”) என்று மாற்றி ஆசீர்வதிக்கிறார் (வச. 28-29). “நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல்” (வச. 30) என்று யாக்கோபு பேரிட்டான். 
இந்த தேவனே ஒருவரால் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு பெரியவரும் அழகானவருமாகிய தேவன். அவரை செதுக்கவோ, திருடவோ, மறைக்கவோ முடியாது. ஆனாலும், அன்றிரவு யாக்கோபு கற்றுக்கொண்டபடி, நாம் அந்த தேவனை அணுகலாம்! இந்த தேவனை “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று அழைக்க இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 6:9).