எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டாம் ஃபெல்டன்கட்டுரைகள்

கிருபையும் மாற்றமும்

குற்றம் அதிர்ச்சியூட்டக்கூடிய வகையில் இருந்தது. அதைச் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்வந்த ஆண்டுகளில் சிறையில் கழித்த அந்த மனிதன், தன்னுடைய சிந்தையையும் ஆவிக்குரிய சுகத்தையும் நாடினான். அது அவனை மனந்திரும்புதலுக்கு வழிநடத்தி, இயேசுவுடனான ஜீவியத்தை புதுப்பித்தது. இந்த நாட்களில் அவன் தன்னுடைய சக சிறைக் கைதிகளிடம் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டான். தேவனுடைய கிருபையினாலும் அவனுடைய சாட்சியினிமித்தமும் உடன் இருந்த கைதிகளில் சிலர் இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டு அவரிடம் மன்னிப்பைப் பெற்றனர்.  
விசுவாச வீரனாய் கருதப்படும் மோசேயும் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு குற்றத்தை செய்துவிட்டான். ஒரு எகிப்தியன் எபிரேயனை அடித்து துன்புறுத்துவதைப் பார்த்த மோசே, அவனை கொன்றுவிட்டான் (யாத்திராகமம் 2:11-12). அவன் பெரிய பாவத்தை செய்தபோதிலும், தேவன் அதை கிருபையாய் சரிகட்டினார். பின்பாக, தேவன் தன்னுடைய ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும்பொருட்டு மோசேயை தெரிந்துகொண்டார் (3:10). ரோமர் 5:14இல், “மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது” என்று நாம் வாசிக்கிறோம். தொடரும் வரிகளில், எங்களுடைய கடந்தகால பாவம் எப்படியிருந்தாலும் அதை மாற்றி அவரோடு ஒப்புரவாக்குதலை கர்த்தருடைய கிருபை சாத்தியமாக்கிற்று என்று பவுல் சொல்லுகிறார் (வச. 15-16). 
நாம் செய்த தப்பிதங்களின் அடிப்படையில் தேவனுடைய மன்னிப்பை பெற்றுக்கொண்டு அவருடைய நாம மகிமைக்காய் செயல்படுவது சாத்தியமில்லாதது என்று ஒருவேளை நாம் எண்ணலாம். ஆனால் அவருடைய கிருபையினிமித்தம், நாம் மறுரூபமாக்கப்பட்டு, மற்றவர்களையும் அந்த மறுரூப அனுபவத்திற்குள் பிரவேசிக்கச் செய்யலாம்.  

தோலுக்கு உள்ளே கிரியை

சிறுவயதில் நானும் என் சகோதரியும் அடிக்கடி மோதிக் கொண்டேயிருப்போம். அதில் ஒரு குறிப்பிட்ட தருணம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நாங்கள் இருவரும் சத்தத்தை உயர்த்தி ஒருவரையொருவர் திட்டிக்கொண்டிருந்தவேளையில், அவள் சொன்ன ஒரு காரியம் என்னால் மன்னிக்கவே முடியாத வகையில் இருந்தது. எங்களுக்கிடையில் வளர்ந்து வரும் பகைமையைக் கண்ட என் பாட்டி, “தேவன் உங்களுக்கு வாழ்க்கையில் ஒரேயொரு சகோதரியைத் தான் கொடுத்திருக்கிறார். நீங்கள் ஒருவர் மீது ஒருவர் பரிவு காண்பிக்க பழக வேண்டும்” என்று ஒருவரையொருவர் நேசிக்க வேண்டிய எங்களது பொறுப்பை எங்களுக்கு எடுத்துச் சொன்னார். எங்களை அன்பினாலும் புரிதலினாலும் நிரப்பும்பொருட்டு தேவனிடத்தில் நாங்கள் ஜெபித்தபோது, ஒருவரையொருவர் நாங்கள் எந்தவிதத்தில் காயப்படுத்தினோம் என்பதையும் எப்படி மன்னிக்கவேண்டும் என்பதையும் தேவன் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.  
கோபத்தையும் கசப்பையும் உள்ளுக்குள் வைத்திருப்பது சாதாரணமாய் தெரியலாம். ஆனால் தேவனின் துணையோடு நம்முடைய எரிச்சலின் ஆவியை விட்டுவிட்டு, தேவன் கொடுக்கும் சமாதானத்தை நாம் உணரவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது (எபேசியர் 4:31). இந்த மாம்சத்தின் உணர்வுகளுக்கு அடிமைப்படாமல், கிறிஸ்துவை மாதிரியாய் வைத்து, ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் நம்மை மன்னித்ததுபோல, நாமும் ஒருவருக்கொருவர் மன்னிப்பை செயல்படுத்துவோம் (வச. 32). நமக்கு மன்னிப்பது கடினமாய் தோன்றினால், அவர் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளும் கிருபையை நாம் சார்ந்துகொள்வோம். நாம் எத்தனை முறை விழுந்தாலும், அவர் கிருபை நம்மை விட்டு விலகுவதில்லை (புலம்பல் 3:22). தேவன் நம்முடைய இருதயங்களில் இருக்கும் கசப்பை நீக்குவதற்கு நமக்கு உதவிசெய்வார். அதினால் நாம் நம்பிக்கையோடு அவருடைய அன்பிற்கு உட்பட்டவர்களாய் நிலைத்திருப்போம்.  

காயப்பட்டோரை சுமக்குதல்

 ஜோஸ் சமீபத்தில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரு இளைஞன். அவனுடைய சகோதனுடைய திருச்சபைக்கு ஒரு நாள் போயிருந்தான். அவன் திருச்சபைக்குள் நுழைவதைப் பார்த்த அவனுடைய சகோதரனின் முகம் வாடிப்போயிற்று. ஜோஸ் டி-ஷர்ட் அணிந்திருந்ததால், அவனுடைய இரு கைகளிலும் வரையப்பட்டிருந்த டாட்டூக்கள் தெளிவாக பளிச்சிட்டன. அவனுடைய டாட்டூக்கள் அவனுடைய பழைய வாழ்க்கையை நினைவுபடுத்தக்கூடியதாய் இருந்ததினால், அவனை வீட்டிற்கு சென்று ஒரு முழுக்கை சட்டை அணிந்துவரும்படிக்கு அவனுடைய சகோதரன் வலியுறுத்தினான். அதைக் கேட்ட ஜோஸ் சோர்ந்துபோய்விட்டான். அவர்களுடைய பேச்சைக் கேட்ட வேறொருவர் அவர்கள் இருவரையும் திருச்சபை போதகரின் முன்னிலையில் கொண்டு நிறுத்தி, நடந்ததை சொன்னார். போதகர் அதைக் கேட்டு புன்னகையோடு தன்னுடைய சட்டையின் பட்டனை அவிழ்த்தார். அவருடைய மார்பு பகுதியில் அவருடைய பழைய வாழ்க்கையை வெளிப்படுத்தும் ஒரு பெரிய டாட்டூ இருந்ததை அவர்களுக்குக் காண்பித்தார். பின்பு ஜோஸைப் பார்த்து, தேவன் நம்மை உள்ளும் புறம்பும் சுத்திகரித்துவிட்டபடியால், உன் கைகளில் இருக்கும் டாட்டூக்களை நீ மறைக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அறிவுறுத்தினார்.  
தாவீது, தேவனால் சுத்திகரிக்கப்பட்ட அனுபவத்தைப் பெற்றுக்கொண்டான். தன்னுடைய பாவத்தை தேவனிடத்தில் அறிக்கையிட்ட தாவீது ராஜா, “எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்” (சங். 32:1) என்று எழுதுகிறான். மேலும் செம்மையான இருதயமுள்ளவர்களோடு சேர்ந்து ஆனந்த முழக்கமிடுகிறார் (வச. 11). பவுல் அப்போஸ்தலர், கிறிஸ்துவின் மீதான விசுவாசம் நம்மை இரட்சிப்புக்கு நேராய் வழிநடத்தி, அவருக்கு முன்பாக மாசில்லாதவர்களாய் நிறுத்தும் அறிக்கையை வெளிப்படுத்தும் ரோமர் 4:7-8 வேதப்பகுதியில், சங்கீதம் 32:1-2ஐ மேற்கோள் காண்பிக்கிறார். 
இயேசுவில் நம்முடைய பரிசுத்தம் என்பது தோலோடு அல்ல, அவர் நம்மை அறிந்து நம்முடைய இருதயத்தை சுத்திகரிக்கிறார் (1 சாமுவேல் 16:7; 1 யோவான் 1:9). அவருடைய சுத்திகரிக்கும் கிரியையில் இன்று நாம் மகிழ்ச்சியடைவோம்.  

முன்னோக்கிய பாதை

'நாம் என்ன செய்வது?' வேதாகமத்திற்கு மாறான வாழ்க்கை முறைகளைத் தெரிந்துகொண்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்று மஞ்சுவும், தயாளும் வேதனைப்பட்டனர். அவர்கள் வேதவாக்கியங்களைப் படித்து ஜெபித்தபோது, ​​முன்னோக்கிச் செல்ல ஒரு வழியும் உண்டானது: முதலில், அவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் அன்பானவர்களிடம் தங்கள் அன்பை வலுப்படுத்தினர்; இரண்டாவதாக, தேவனின் நல்ல திட்டத்தின் அடிப்படையில் அவர்கள் உண்மையையும் நல்லதையும் வெளிப்படுத்தினர்; மூன்றாவதாக, வேதாகம ஞானத்தின் அடிப்படையில் அவர்களுடன் எப்படி அன்புடன் பழகுவார்கள் என்பதை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். காலப்போக்கில், மஞ்சுவும் தயாளும் கிறிஸ்து போன்ற அன்பை வெளிக்காட்டியதால்,  உறவுகளில் அதிக நம்பிக்கை ஏற்பட்டது.

தேவனையும் தன்னையும் மதிக்காத வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்ட ஒரு பெண்ணை எப்படி தன் மனைவியாக்கிக் கொள்வது என்று ஓசியா யோசித்திருக்கலாம். தேவனோ, “தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை சேர்த்துக்கொள்" (ஓசியா 3:1) என்று தீர்க்கதரிசியை வழிநடத்தினார். தீர்க்கதரிசி அவள் மீதான தனது அன்பை வெளிப்படையாக வலுப்படுத்தினார்; அதே சமயம் அவர்களுக்கும், தேவனுக்கு முன்பாக அவர்களின் உறவுக்கும் எது தகுதியானது மற்றும் உண்மையானது என்பதை வெளிப்படுத்தினார் (வ.3). அவளுடனான அவரது உறவு, கலகவீட்டாரான பூர்வ இஸ்ரவேலுடனான தேவனின் சொந்த சவாலான உறவையே அடையாளப்படுத்தியது. அவர்கள் ஒரு தவறான போக்கைத் தேர்ந்தெடுத்தாலும், அவர் முன்னோக்கிச் செல்வதற்கான பாதையை வழங்கினார், அவர் "அவர்களை மனப்பூர்வமாய்"  (14:4) சிநேகிப்பார். ஆனால் அவர்கள் அவருடைய வழிகளைத் தெரிந்துகொள்ளும்படி கூறினார், ஏனெனில் அவைகளே "செம்மையானவைகள்" (வ.9).

தேவன் ஞானத்தையும் பகுத்தறிவையும் அருள்வதால், வேதாகமத்திற்கு மாறான வாழ்க்கை முறையைத் தெரிந்துகொண்டவர்களுக்கும் அவருடைய அன்பையும் சத்தியத்தையும் தொடர்ந்து வழங்குவோம். முன்னோக்கிச் செல்லும் பாதையை நமக்கு அவரது உதாரணமே வழங்குகிறது.

சிருஷ்டியில் தேவனைக் காணுதல்

கென்னி, கடவுள் நம்பிக்கை இழந்து, பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் விட்டுச் சென்ற சபையின் முன் நின்றார். அவர் தனது நம்பிக்கையை மீட்டெடுக்கப்பட்டதாகப் பகிர்ந்து கொண்டார். எப்படி? சிருஷ்டிப்பில் அவர் பார்த்த அழகு மற்றும் வடிவமைப்பு மூலம் தேவன் அவரது உள்ளத்தில் பேசியிருந்தார். இயற்கை உலகில் காணப்பட்ட தேவனின் பொதுவான  வெளிப்பாட்டின் சாட்சியின் மூலம் கென்னி மீண்டும் ஒருமுறை தேவனைக் குறித்துப் பிரமித்தார், மேலும் அவர் இப்போது வேதத்தில் பிரேத்யேகமாக வெளிப்பட்டிருக்கும் தேவ ஞானத்தை ஏற்றுக்கொண்டார். அவரது கதையைப் பகிர்ந்து கொண்ட பிறகு, கென்னி சபையின் முன்புறத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் இறங்கினார். அவரது தந்தை, கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய, இயேசுவின் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

யோபு, வாழ்க்கையில் நிறைய இழந்த பிறகு, யோபுவின் விசுவாசமும் அசைந்தது. அவர் கூறினார், “உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சிநிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.” (யோபு 30:20). தேவன் "பெருங்காற்றிலிருந்து யோபுக்கு” (38:1) பதிலளித்தார், அவர் யோபுவை பாராமல் இல்லையென்றும்  மாறாகத் தேவனின் அற்புதமான, கருக்கலான சிருஷ்டிப்பைக் கருத்தில் கொள்ள யோபுவின் பார்வைதான் விரிவாக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தார். "பூமியின் அஸ்திவாரம்" மற்றும் "விடியற்காலத்து நட்சத்திரங்கள்" (வ. 4, 7) மற்றும் இடையில் காணப்படும் அனைத்து உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் நீர் (வவ. 8-41), என்று அனைத்தும் யோபு நம்பக்கூடிய ஒருவரைச் சுட்டிக்காட்டியது, ஆச்சரியமான அன்பும் வல்லமையும் கொண்ட தேவனே அவர். யோபு பதிலாக, "என் காதில் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது" (42:5) என்றார்.

சந்தேகங்கள் கிறிஸ்துவின் மீதான உங்கள் நம்பிக்கையை அச்சுறுத்தும் போது, ​​தேவனின் சிருஷ்டியின் மகத்துவத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். நாம் பார்ப்பதற்கு மனமிருந்தால், அவர் அதில் தன்னை வெளிப்படுத்துகிறார்.

 

நாம் யாருக்குச் செவிகொடுக்கிறோம்?

"நான் அவசரநிலையை அறிவிக்க வேண்டும். எனது விமானி இறந்து விட்டார்", டக் ஒயிட் பதற்றத்துடன் தனது விமானத்தைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு இந்த  வார்த்தைகளைக் கூறினார். புறப்பட்ட சில நிமிடங்களில், டக் குடும்பம் வாடகைக்கு எடுத்திருந்த தனியார் விமானத்தின் விமானி திடீரென மரித்தார். பழைய வகை விமானங்களை ஓட்டும் மூன்று மாத பயிற்சி அனுபவத்துடன், டக் விமானி இருக்கையில் அமர்ந்தார். பின்னர், அவர் விமானத்தைத் தரையிறக்குவதன் மூலம் தன்னிடம் பேசிய உள்ளூர் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்களுக்கு கவனமாகச் செவிகொடுத்தார். பின்னர், டக், "ஏறக்குறைய ஏற்பட்டிருக்கும் நிச்சயமான தீ விபத்திலிருந்து [அவர்கள்] என் குடும்பத்தைக் காப்பாற்றினர்" என்றார்.

வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள ஒருவர் மட்டுமே நமக்கு உதவ முடியும். மோசே இஸ்ரவேலர்களிடம் பேசுகையில், “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக” (உபாகமம் 18:15) என்றார். இந்த வாக்குத்தத்தம் தேவன் தம் மக்களுக்கு வழங்கிய தீர்க்கதரிசிகளின் வரிசையைச் சுட்டிக்காட்டியது, ஆனால் அது மேசியாவைப் பற்றியும் பேசுகிறது. பேதுரு மற்றும் ஸ்தேவான் இருவரும் இந்த கடை முடிவான தீர்க்கதரிசி இயேசுவே என்று பின்னர் கூறியிருப்பார்கள் (அப்போஸ்தலர் 3:19-22; 7:37, 51-56). அவர் மட்டுமே தேவனின் அன்பும் ஞானமுமான அறிவுரைகளை நமக்குச் சொல்ல வந்தார் (உபாகமம் 18:18).

கிறிஸ்துவின் வாழ்நாளில், பிதாவாகிய தேவன், “இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்” (மாற்கு 9:7) என்றார். ஞானமாக வாழவும், இந்த வாழ்க்கையில் நொறுங்கி அழிவதைத் தவிர்க்கவும், வேதாகமம் மற்றும் பரிசுத்த ஆவியானவர் மூலம் இயேசு சொல்வதற்குச் செவிகொடுப்போமாக. அவருக்குச் செவிசாய்ப்பதே பெரிய மாற்றத்தை உண்டாக்குகிறது.

ஒரு நன்றியுளள்ள மறுமொழி

தீமோத்தேயு என்ற ஆஸ்திரேலிய மாலுமி பச்சையான மீன் மற்றும் மழைநீர் இவற்றைக் கொண்டே மூன்று மாதங்கள் உயிர் வாழ்ந்தார். பசிபிக் பெருங்கடலில், நிலத்திலிருந்து 1,200 மைல் தொலைவில், புயலால் உருக்குலைந்த தனது கட்டுமரத்தோடு ஒரு தீவில் தனியாகச் சிக்கிக்கொண்டார். ஆனால், மெக்சிகன் நாட்டு டுனா படகின் ஊழியர்கள், மோசமாகச் சேதமடைந்திருந்த  அவரது படகைக் கண்டு, அவரை மீட்டனர். பின்னர், மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டு மெலிந்திருந்த அவர், "என் உயிரைக் காப்பாற்றிய கப்பல் தலைவருக்கும் மீன்பிடி நிறுவனத்திற்கும்  நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்!" என்றார்.

தனது மிகவும் விரும்பத்தகாத அனுபவத்திற்குப் பின்னர் தீமோத்தேயு நன்றி கூறினார். ஆனால் தீர்க்கதரிசி தானியேல், ஒரு நெருக்கடிக்கு முன்னும், பின்னும், அதின் மத்தியிலும் தனது நன்றியுள்ளத்தை வெளிக்காட்டினார். மற்ற யூதர்களுடன் யூதாவிலிருந்து பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போன (தானியேல் 1:1-6) தானியேல் மேலான அதிகாரத்திற்கு உயர்ந்தார். ஆனாலும் அவரைக் கொல்ல விரும்பும் மற்ற தலைவர்களின்  அச்சுறுத்தல் இருந்தது (6:1-7). அவருடைய எதிரிகள், பாபிலோன் ராஜாவிடம் சென்று, "ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும்" நோக்கி எவன் விண்ணப்பம்பண்ணினாலும் , "அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட" (வ. 7) ஆணையில் கையெழுத்திடச் செய்தனர். ஒன்றான மெய்தேவனை நேசித்து, சேவித்த மனிதனாகிய தானியேல் என்ன செய்வார்? அவர் “முன் செய்துவந்தபடியே , . . . தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்” (வ. 10). அவர் நன்றி செலுத்தினார், மேலும் தேவன் அவரது உயிரைக் காப்பாற்றி, அவருக்கு கனத்தைக் கொடுத்து (வ. 26-28) அவரது நன்றியுள்ள உள்ளத்திற்கு வெகுமதி அளித்தார்.

அப்போஸ்தலன் பவுல் எழுதியது போல், "எஎல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்(ய)யுங்கள்" (1 தெசலோனிக்கேயர் 5:18) தேவன் நமக்கு உதவுவாராக. நாம் ஒரு நெருக்கடியை எதிர்கொள்கிறோமோ அல்லது அதிலிருந்த மீண்டு வந்தோமோ, நன்றியுடன் கூடிய பிரதிபலன் அவரைக் கனப்படுத்துகிறது, மற்றும் நம் விசுவாசம் நிலைக்க உதவுகிறது.

அழகான ஓர் ஆச்சரியம்

உழப்பட்ட நிலத்தில் ஒரு ரகசியம் இருந்தது, ஏதோ மறைந்திருந்தது. அவர்களின் ஐம்பதாவது திருமண ஆண்டு விழாவை முன்னிட்டு, லீ வில்சன் தனது எண்பது ஏக்கர் நிலத்தைத் தனது மனைவி இதுவரை கண்டிராத மிகப் பெரிய மலா்கள் பூக்கும் தோட்டத்தை பரிசை வழங்குவதற்காக ஒதுக்கினார். அவர் ரகசியமாக எண்ணற்ற சூரியகாந்தி விதைகளை விதைத்திருந்தார், அது இறுதியில் 1.2 மில்லியன் சூரியகாந்தி செடிகளாக வெடித்தது, அவரது மனைவிக்குப் பிடித்தவை. சூரியகாந்திப் பூக்கள் தங்கள் மஞ்சள் கிரீடங்களை விரித்தபோது, ​​ரெனி லீயின் அழகான அன்பின் செயலால் திக்குமுக்காடி அதிர்ச்சியடைந்தார்.

ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யூதாவின் மக்களிடம் பேசுகையில், தேவன் அவர்களுடன் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர்களால் இப்போது காணமுடியாவிட்டாலும்,  அவர்கள் தமக்குச் செய்த துரோகத்திற்காக  அவர்களுக்கு எதிராக அவர் வாக்களித்த நியாயத்தீர்ப்புக்குப் பிறகு (ஏசாயா 3:1-4:1) ஒரு புதியதும் பொன்னானதுமான நாள் விடியும். "அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்." (4:2). ஆம், அவர்கள் பாபிலோனிய கைகளில் பேரழிவையும் சிறையிருப்பையும் அனுபவிப்பார்கள், ஆனால் ஒரு அழகான “கிளை" அப்போது தரையிலிருந்து ஒரு புதிய தளிராக வெளிப்படும். அவருடைய ஜனங்களில் மீதியாயிருப்பவர்கள் பிரித்தெடுக்கப்பட்டு  ("பரிசுத்தனென்று", வ. 4), சுத்திகரிக்கப்பட்டு (வ. 4), மற்றும் அவரால் அன்பாக வழிநடத்தப்பட்டுப் பராமரிக்கப்படுவார்கள் (வ. 5-6).

நம்முடைய நாட்கள் இருண்டதாகவும் தேவனுடைய வாக்குகளின் நிறைவேற்றம் மறைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றலாம்  ஆனால் விசுவாசத்தினால் நாம் அவரைப் பற்றிக்கொள்ளும்போது, ​​ஒரு நாள் அவருடைய "மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும்" (2 பேதுரு 1:4) அனைத்தும் நிறைவேற்றப்படும். ஒரு அழகான புதிய நாள் காத்திருக்கிறது.

ஆச்சரியமான போதனை

சோபியா ராபர்ட்ஸ் தனது பதினொரு வயதில் முதன்முறையாக திறந்த இதய அறுவை சிகிச்சையை அனுபவித்தாள். அத்தகைய மருத்துவ முறையைப் பார்க்க ஒரு குழந்தைக்கு இது சற்று இளமையாகத் தோன்றினாலும், அவளுடைய அப்பா டாக்டர். ஹெரால்ட் ராபர்ட்ஸ் ஜூனியர் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 2022 ஆம் ஆண்டில், முப்பது வயதான சோபியா, தற்போது அறுவை சிகிச்சை மருத்துவராய் தனது தந்தையுடன் இணைந்து வெற்றிகரமான பெருநாடி வால்வு மாற்ற அறுவை சிகிச்சையை வெற்றியாகச் செய்தார். ஹரோல்ட் கூறும்போது, “வேறென்ன ஆச்சரியம் இருக்கமுடியும்? நான் இந்த குழந்தைக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தேன்... இப்போது, ஒரு மனித இதயத்தை எவ்வாறு கையாளுவது என்பதை கற்றுக்கொடுப்பது மிகுந்த சுவாரஸ்யமாயிருக்கிறது” என்று சொல்லுகிறார். 

நம்மில் சிலர் ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை திறன்களைக் கற்பிக்கலாம். சாலெமோன் அடுத்த தலைமுறைக்கு தேவனையும் அவருடைய வழிகளையும் கனப்படுத்த கற்றுக்கொடுக்கிறார். ஞானமுள்ள ராஜா, தேவனுடனான தனது உறவில் கற்றுக்கொண்டதை தன் குழந்தையுடன் உணர்ச்சிபொங்க பகிர்ந்துகொள்கிறார்: “என் மகனே... உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது” (நீதிமொழிகள் 3:1,5), “கர்த்தருக்கு பயப்படுங்கள்” (வச. 7), “கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே” (வச. 11). அவருடைய சிட்சையையும் வழிகாட்டுதலையும் விருப்பத்துடன் பெற்றுக்கொள்ளும் தம்முடைய பிள்ளைகளில் தேவன் “அன்பு செய்கிறார்” மற்றும் “மகிழ்ச்சியடைகிறார்” என்பதை சாலெமோன் அறிந்திருந்தார் (வச. 12).

நம் அற்புதமான, ஆச்சரியமான தேவனை நம்புவது, மதித்தல், மரியாதை செய்வது மற்றும் தாழ்மையுடன் செயல்படுவதின் அர்த்தம் என்ன என்பதை அடுத்த தலைமுறைக்கு கற்பிப்போம். அப்படிச் செய்வதில் அவருடன் கூட்டு சேர்வது மனதைக் கவரும் ஒரு சிலாக்கியம்!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உங்கள் வியாகுலங்கள் கேட்கப்பட்டது

“இயற்பியல்” என்ற புத்தகத்தில், ஆசிரியர்கள் சார்லஸ் ரிபோர்க் மான் மற்றும் ஜார்ஜ் ரான்சம் ட்விஸ் ஆகியோர், “யாருமில்லாத தனிமையான காட்டில் மரம் விழுந்தால், அந்த சத்தத்தைக் கேட்க அருகில் எந்த மிருகமும் இல்லையென்றால், அது ஒலி எழுப்புமா?” என்ற கேள்வியை கேட்கிறார்கள். பல ஆண்டுகளாக, இந்த கேள்வி, ஒலி, உணர்தல் மற்றும் இருப்பு பற்றிய தத்துவ மற்றும் அறிவியல் விவாதங்களைத் தூண்டியது. இருப்பினும், ஒரு உறுதியான பதில் இன்னும் கண்டறியப்படவில்லை.  
ஒரு நாள் இரவில் நான் சோர்ந்துபோய் கவலையாயிருந்த தருணத்தில், நான் யாரிடத்திலும் சொல்லாமல், இந்த கேள்வியைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தேன்: “உதவிக்கான என்னுடைய அழுகுரலுக்கு யாருமே செவிகொடுக்காத வேளையில், தேவன் அதைக் கேட்கிறாரா?” 
116-ம் சங்கீதத்தை எழுதியவர், மரண அச்சுறுத்தலை எதிர்கொண்டு, பாடுகள் அனுபவித்ததால், கைவிடப்பட்டவராக உணர்ந்திருக்கலாம். எனவே அவர் தேவனை அழைத்தார். அழைத்தால் அவர் கேட்கிறார், கேட்டு அவருக்கு உதவிசெய்வார் என்பதை அறிந்திருந்தார். “கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால்… அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால்..” அவரை தொழுதுகொள்வதாக சங்கீதக்காரன் அறிவிக்கிறான் (வச. 1-2). நம்முடைய வேதனையை யாரும் அறியாத நேரத்தில் தேவன் அறிகிறார். நம்முடைய அழுகுரலை யாரும் கேட்காதவேளையில் தேவன் கேட்கிறார்.  
கடினமான தருணங்களில் தேவன் தன்னுடைய அன்பையும் பாதுகாப்பையும் அருளுவார் என்று அறிந்து, இளைப்பாறலாம் (வச. 7). “இளைப்பாறுதல்” (மனோக்) என்பதற்கு பயன்படுத்தப்படும் எபிரெய வார்த்தையானது யாருமில்லாத பாதுகாப்பான ஓர் இடத்தைக் குறிக்கிறது. தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதியுடன் நாம் இளைப்பாறுதலையும் உதவியையும் பெற்றுக்கொள்ளலாம்.  
அந்த இரண்டு இயற்பியல் ஆசிரியர்கள் கேட்ட கேள்வியானது பல்வேறு பதில்களை கொண்டுவந்தது. ஆனால் தேவன் நம்முடைய வியாகுலத்தைக் கேட்கிறாரா? என்னும் கேள்விக்கு ஆம்! என்ற ஒற்றை பதில் மட்டுமே உள்ளது.  

பாட்டியின் ஆராய்ச்சி

எமோரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் பாட்டிமார்களின் மூளையை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு முன்பாக அவர்களுடைய மகனுடைய போட்டோவையும், பேரக் குழந்தையின் போட்டோவையும், அவர்களுக்கு அறிமுகமில்லாத இன்னொரு குழந்தையின் போட்டோவையும் காண்பித்து அவர்களின் உணர்ச்சி அனுதாபங்கள் பரிசோதிக்கப்பட்டது. அதில் தங்களுடைய சொந்த பிள்ளைகளை விட தங்கள் பேரப்பிள்ளைகளின் மீதான அனுதாபங்கள் அவர்களுக்கு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடைய சொந்த பிள்ளையைக் காட்டிலும் பேரப்பிள்ளைகள் அதிக அபிமானமாக தெரிவதால், இதனை “அழகான காரணி” என்று அழைக்கின்றனர்.  
“இதிலென்ன ஆச்சரியம்” என்று நீங்கள் சொல்லுவதற்கு முன்னால் அந்த ஆராய்ச்சியை செயல்படுத்திய ஜேம்ஸ் ரில்லிங் என்பவரின் கூற்றைக் கேட்போம். அவர், “அவர்களின் பேரக்குழந்தை சிரிக்கும்போது, பாட்டியும் சிரிக்கிறாள்; அவர்களின் பேரக்குழந்தை அழும்போது, பாட்டி, அதின் வலியையும் வேதனையையும் உணருகிறாள்” என்று சொல்லுகிறார்.  
தேவன் தன்னுடைய ஜனத்தைப் பார்க்கும்போது அவருடைய “எம்.ஆர்.ஐ ஸ்கேனை” ஒரு தீர்க்கதரிசி வரைகிறார்: “அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்” (செப்பனியா 3:17). அதனை சிலர் வேறுவிதமாகவும் மொழிபெயர்க்கின்றனர்: நீ அவருடைய இருதயத்தை திருப்தியடையச் செய்வாய், அவர் கெம்பீரமாய் பாடுவார்.” ஒரு அன்பான பாட்டியாய் தேவன் நம்முடைய வேதனையை அறிகிறார். “அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்” (ஏசாயா 63:9). “கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்” (சங்கீதம் 149:4).  
நாம் சோர்வுறும்போது, நம்மைக் குறித்த தேவனுடைய உணர்வுகள் மெய்யானவைகள் என்பதை நினைவுகூருவது நல்லது. அவர் நம்மை பொருட்படுத்தாமல் எங்கேயோ தூரத்தில் வாழும் தேவனல்ல. அவர் நம்மில் மகிழ்ந்திருக்கிற தேவன். இது அவரை நாம் கிட்டிச்சேருகிற நேரம். அவருடைய புன்னகையை உணருவோம்; அவர் பாடலைக் கேட்டு ரசிப்போம்.  

தேவன் பெயர்களை அறிந்திருக்கிறார்

 நான் திருச்சபையின் வாலிபர் குழு தலைவியாய் பொறுப்பேற்று, பல வாலிபர்களை சந்தித்து பேசிக்கொண்டிருந்த வேளையில், ஒரு ஞாயிற்றுக்கிழமையின்போது தன் தாயின் அருகாமையில் அமர்ந்திருந்த ஒரு இளம் வாலிப பெண்ணிடம் பேசினேன். அதிக வெட்கப்படும் அந்த பெண்ணைப் பார்த்து, ஒரு புன்னகையோடு அவளுடைய பெயரை நான் சொல்லி அழைத்து எப்படி இருக்கிறாய் என்று கேட்டேன். அவள் தன்னுடைய தலையை உயர்த்தி, அழகான கண்கள் விரிய என்னைப் பார்த்து, “உங்களுக்கு என்னுடைய பெயர் ஞாபகம் இருக்கிறதா?” என்று ஆச்சரியமாய் கேட்டாள். வயதில் மூத்தவர்களாய் நிறைந்திருந்த அந்த திருச்சபையில் அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டு அழைத்ததால், அவளுடன் நம்பிக்கையான ஒரு உறவை ஏற்படுத்த என்னால் முடிந்தது. அவளை ஒரு பொருட்டாக எண்ணுகிறார்கள் என்ற நம்பிக்கை அவளுடைய சுயமதிப்பை கூடச் செய்தது.  
ஏசாயா 43ஆம் அதிகாரத்தில் அதேபோன்ற ஒரு செய்தியை இஸ்ரவேலர்களுக்கு சொல்லும்படிக்கு தேவன் ஏசாயா தீர்க்கதரிசியை பயன்படுத்துகிறார். தேவன் இஸ்ரவேலர்களை காண்கிறார் மற்றும் அவர்களை மதிப்பிடுகிறார் என்பதே அச்செய்தி. சிறையிருப்பிலும் வனாந்திரத்திலும் தேவன் அவர்களைக் கண்டு அவர்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார் (வச. 1). அவர்கள் வேறுயாரோ அல்ல; அவர்கள் தேவனுக்கு சொந்தமானவர்கள். அவர்கள் கைவிடப்பட்டவர்களாய் தெரிந்தாலும், அவர்கள் தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றவர்கள், அவர்களைக் குறித்த அவருடைய அன்பு மாறாதது (வச. 4). தேவன் அவர்களை பேர்ச் சொல்லி அழைக்கிறார் என்பதை அவர்களுக்கு நினைப்பூட்டுவதின் மூலம் அவர்களுடைய அந்த இக்கட்டான தருணத்தில் தேவன் அவர்களுக்கு செய்யப்போகிற நன்மைகளை அறிவிக்கிறார். அவர்கள் பாடுகளின் பாதையில் பயணிக்கும்போது தேவன் அவர்களோடே இருப்பார் (வச. 2). தேவன் அவர்களின் பெயர்களை அறிந்திருப்பதால் அவர்கள் பயப்படவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை.  
நாம் நம்முடைய வாழ்க்கையின் ஆழமான ஆழிகளைக் கடக்கும்போது தேவன் அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவரின் பெயர்களையும் அறிந்திருக்கிறார் என்பதே நமக்கான நற்செய்தி.