எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டாம் ஃபெல்டன்கட்டுரைகள்

ஒழுங்கின் தேவன்

சுரேஷ் மருந்து பெட்டியில் கிடைத்த அனைத்து மருந்துகளையும் எடுத்துக்கொண்டான். ஒழுங்கின்மை நிறைந்த ஓர் குடும்பத்தில் வளர்ந்த அவனது வாழ்க்கை சற்று குழப்பமானதாகவே இருந்தது. அவனுடைய தந்தை மரிக்கும்வரை தனது தாயாரை தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டே இருந்துள்ளார். தற்போது சுரேஷ் தன் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பினான். ஆனால் தான் மரித்தால் எங்கே போவேன்? என்ற கேள்வி அவனுக்குள் உதித்தது. கர்த்தருடைய கிருபையால் சுரேஷ் அந்த தற்கொலை முயற்சியை அன்று கைவிட்டான். காலப்போக்கில், தன் நண்பர் ஒருவரின் வேதாகமத்தை வாசித்து, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டான். படைப்பில் இருந்த அழகும் ஒழுங்குமே, சுரேஷை இரட்சிப்புக்கு நேராய் ஈர்த்தது எனலாம். “நான் பார்க்கும் இந்த அழகான படைப்புகளுக்கு யாரோ ஒருவர் காரணமாய் இருக்கவேண்டும்” என்று அவன் கூறுகிறான். 

ஆதியாகமம் 1இல், அனைத்தையும் உண்டாக்கிய தேவனைக் குறித்து வாசிக்கிறோம். அப்போது “பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது” (வச. 2). அந்த ஒழுங்கீனத்தை அவர் மாற்றுகிறார். “வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்” (வச. 4). கடல்களுக்கு மத்தியில் வெட்டாந்தரையை ஏற்படுத்தினார் (வச. 10). வகைவகையான தாவரங்களை உண்டுபண்ணுகிறார் (வச. 11-12, 21, 24-25). “வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும்... குடியிருப்புக்காகச் செய்து” படைத்தவர் (ஏசாயா 45:18), தொடர்ந்து தேசத்தை காத்து அதில் சமாதானத்தை உண்டுபண்ணி, சுரேஷ் ஒப்புக்கொடுத்ததுபோல நமது ஜீவியத்தையும் கிறிஸ்துவுக்கு ஒப்புவிக்கச்செய்வார். 

வாழ்க்கை குழப்பமாகவும் சவாலாகவும் இருக்கலாம். அவர் ஒழுங்கீனத்தின் தேவனல்ல; சமாதானத்தின் தேவன் (1 கொரிந்தியர் 14:33). நாம் இன்று அவரை நோக்கிக் கூப்பிட்டு, அவருடைய படைப்பின் அழகையும் ஒழுங்கையும் அறிந்துகொள்ள முற்படுவோம்.

 

தேவனின் உன்னத வல்லமை

மார்ச் 1945 இல், "கோஸ்ட் ஆர்மி" படைப்பிரிவு அமெரிக்கப் படைகள் ரைன் நதியைக் கடக்க உதவியது. இது இரண்டாம் உலகப் போரில் மேற்கு முனையிலிருந்து செயல்படுவதற்கு கூட்டுப்படைகளுக்கு ஒரு முக்கிய தளத்தை அளித்தது. அனைத்துப 23 வது தலைமையக சிறப்பு துருப்புக்களின் வீரர்கள் சாதாரணமான மனிதர்கலேயன்றி, தோற்றங்கள் அல்ல. இந்தச் சந்தர்ப்பத்தில் நிகழ்ந்தது; 1,100 பேர் கொண்ட குழு, ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தி ஒலிவதிர்வுகளை உண்டாக்கி 30,000 வீரர்கள், துருப்பு டாங்கிகள், குண்டுவீச்சு படையினர் மற்றும் பலர் உள்ளதை போல தோற்றத்தை ஏற்படுத்தியது. ஒப்பீட்டளவில் சிறிய எண்ணிக்கையிலான கோஸ்ட் ஆர்மி உறுப்பினர்கள் மிகப் பெரிய படையாக தங்களை எதிரிகள் கருதி பயப்பட வழிவகுத்தனர்.

மீதியானியர்களும், அவர்கள் கூட்டுப்படையினரும் இரவில் பெரிதாய் தோன்றின ஒரு மிகச்சிறிய படைக்குமுன் நடுங்கினர் (நியாயாதிபதிகள் 7:8–22). நியாயாதிபதி, தீர்க்கதரிசி மற்றும் இஸ்ரேலின் இராணுவத் தலைவரான கிதியோன் தனது அற்பமான படையை கொண்டு எதிரியை நடுங்கச்செய்ய தேவனால் பயன்படுத்தப்பட்டார். அவர்கள் செயற்கை ஒலி (ஊதப்பட்ட எக்காளங்கள், அடித்து நொறுக்கப்பட்ட களிமண் பானைகள், மனித குரல்கள்) மற்றும் கண்ணுக்குத் தெரியும் பொருள்கள் (எரியும் தீவட்டிகள்) ஆகியவற்றைப் பயன்படுத்தி, "வெட்டுக் கிளிகளைப் போலத் திரளாய்" பரந்திருந்த எதிரிகளை (வி. 12) தங்களைக்காட்டிலும் ஒரு பெரிய எதிரியை எதிர்கொண்டதாக நம்பச்செய்தார்கள். தேவனின் கட்டளையால் 32,000 வீரர்களாயிருந்தவர்கள், வெறும் 300 பேர் கொண்ட படையாக குறைக்கப்பட்டு (வ. 2–8) அந்த இரவில் எதிரிகளை தோற்கடித்தனர். ஏன்? ஏனென்றால், போரில் வென்றது யார் என்பது தெளிவாகிறது. தேவன் கிதியோனிடம் சொன்னது போல, "அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்" (வ.9).

நாம் பலவீனமாகவும் குறைவாகவும் உணரும்போது, ​​தேவனைத் தேடுவோம், அவருடைய பலத்தில் மட்டுமே இளைப்பாறுவோம். ஏனெனில், நம் "பலவீனத்திலே என் (அவர்) பலம் பூரணமாய் விளங்கும்" (2 கொரிந்தியர் 12:9).

சுகமான தூக்கம்

கெட்ட நினைவுகளும் குற்றச்சாட்டுகளும் சாலின் மனதை அலைக்கழித்தன. பயத்தால் நெஞ்சம் நிறைந்து, வியர்த்து விறுவிறுத்து தூக்கம் தூரமானது. அவனுடைய ஞானஸ்நானத்திற்கு முந்தைய இரவு அது, இருண்ட எண்ணங்களின் தாக்குதலை அவனால் தவிர்க்க முடியவில்லை. சால், இயேசுவில் இரட்சிக்கப்பட்டு தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டதை அறிந்திருந்தார், ஆனால் ஆவிக்குரிய யுத்தம் தொடர்ந்தது.அப்போதுதான் அவரது மனைவி அவனுடைய கரம் பிடித்து ஜெபித்தார். சில நொடிகளில், சாலின் இதயத்தில் பயம் நீங்கி அமைதி நிறைந்தது. ஞானஸ்நான ஆராதனையில்,  அவர் பேசப்போவதை முன்பாகவே எழுதினார். முன்னர் அது அவரால் செய்ய முடியாத ஒன்றாயிருந்தது. அதன் பிறகு, அவர் இன்பமாக உறங்கினார்.

தாவீது ராஜாவும் அமைதியற்ற இரவின் அனுபவத்தை அறிந்திருந்தார். அரியணையைப் பறிக்க முயன்ற தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடினார் (2 சாமுவேல் 15-17), "சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேரு(ர்)" (சங்கீதம் 3:6) இருப்பதை அறிந்திருந்தார். "கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! !" (v. 1) என தாவீது புலம்பினார். பயமும் சந்தேகமும் மேலோங்கியிருப்பினும், அவர் தமது "கேடகமு(மான)ம்" (வ.3) தேவனை நோக்கி கூப்பிட்டார். பின்னர், "நான் படுத்து நித்திரை செய்தேன்" (வ. 5) ஏனெனில், "கர்த்தர்

என்னை தாங்குகிறார்" (வ.5).என்றார்.

நம்பிக்கை நம் மனதை நிரப்புகிறது. சால் மற்றும் தாவீது போல நாம் உடனடியாக இனிமையான தூக்கத்தை அனுபவிக்கவில்லை என்றாலும், "சமாதானத்தோடே [நாம்] நித்திரை செய்ய முடியும்..  நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்" (4:8)  எனலாம். ஏனெனில் தேவன் நம்மோடு இருக்கிறார், அவரே நமக்கு இளைப்பாறுதல்.

விசித்திரமான இடங்கள்

தேவனே, ஏன் இப்படி நடக்கிறது? இது உண்மையில் எங்களைக் குறித்த உம்முடைய சித்தமா?

ஒரு கணவனாகவும், சிறு குழந்தைகளின் அப்பாவாகவும், தீவிரமான புற்றுநோய் கண்டறிதலுடன் நான் மல்யுத்தம் செய்தபோது, இந்த கேள்வி எனக்குள் அடிக்கடி எழுந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, அநேக சிறுபிள்ளைகளை ஆண்டவருக்குள் வழிநடத்தும் ஒரு கிறிஸ்தவ மிஷன் குழுவோடு சேர்ந்து நாங்கள் குடும்பமாய் ஊழியம் செய்துகொண்டிருந்தோம். தேவனுக்காய் கனிகொடுக்கிற குடும்பமாய் நாங்கள் இருந்தோம். அது எங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியை கொடுத்தது. இப்போது இப்படியொரு இக்கட்டான சூழ்நிலை?  

எஸ்தர் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்திலிருந்து எடுக்கப்பட்டு விசித்திரமான ஒரு தேசத்திற்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டதும், தேவ சமூகத்தில் கேள்விகளையும் ஜெபங்களையும் முன்வைத்திருந்திருக்கக்கூடும் (எஸ்தர் 2:8). அவள் அனாதையான பிறகு அவளுடைய உறவினர் மொர்தெகாய் அவளை தனது சொந்த மகளாக வளர்த்தார் (வச. 7). ஆனால் பின்னர் அவள் ஒரு ராஜாவின் அரண்மனையில் வைக்கப்பட்டாள். இறுதியில் அவனுடைய ராணியாக பணியாற்ற உயர்த்தப்பட்டாள் (வச. 17). மொர்தெகாய் எஸ்தருக்கு என்ன சம்பவிக்கிறது என்பதைக் குறித்து கவலையுற்றான் (வச. 11). ஆனால் காலப்போக்கில், தேவன் அவளை இப்படிப்பட்ட காலத்துக்கு” (4:14) உதவியாயிருக்கும்படிக்கு அழைப்புக் கொடுத்திருக்கிறார் என்பதை இருவரும் உணர்ந்தனர். இது அவர்களுடைய சொந்த ஜனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற அவர்களுக்கு ஏதுவாயிருந்தது (அதி. 7-8).

தேவன் தனது நேர்த்தியான திட்டத்தின் ஒரு பகுதியாக எஸ்தரை ஒரு விசித்திரமான இடத்தில் வைத்தார் என்பது தெளிவாகிறது. என்னிடமும் அவ்வாறே செய்தார். புற்றுநோயுடன் ஒரு நீண்ட போரை நான் சகித்திருந்ததால், பல நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் என் நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அவர் உங்களை எந்த விசித்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லுகிறார்? அவனை நம்புங்கள். அவர் நல்லவர், அவருடைய திட்டங்களும் நன்மையானவைகளே (ரோமர் 11:33-36).

சுவர்கள் இடிக்கப்பட்டன, ஒற்றுமை உருவானது

1961லிருந்து குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் பெர்லின் சுவரால் பிரிக்கப்பட்டனர். கிழக்கு ஜெர்மானிய அரசாங்கத்தால் அந்த ஆண்டு அமைக்கப்பட்ட இந்த தடையானது, அதின் குடிமக்கள் மேற்கு ஜெர்மனிக்கு தப்பிச் செல்லாமல் தடுத்தது. 1949லிருந்து இந்த சுவர் கட்டப்பட்ட ஆண்டிற்குள்ளதாக, ஏறத்தாழ 2.5 மில்லியனுக்கும் அதிகமான கிழக்கு ஜெர்மானியர்கள் மேற்கு நோக்கிச் சென்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் 1987இல் சுவரில் நின்று, “இந்தச் சுவரை இடித்துவிடுங்கள்” என்று கட்டளையிட்டார். 1989இல் சுவர் இடிக்கப்பட்டது. ஜெர்மனியின் மகிழ்ச்சியான மறுஇணைப்பிற்கு வழிவகுத்தது.

பவுல் இயேசுவால் இடிக்கப்பட்ட “பகைச்சுவர்” பற்றி எழுதுகிறார் (எபேசியர் 2:14). யூதர்களுக்கும் (கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்) மற்றும் புறஜாதிகளுக்கும் (மற்ற அனைத்து மக்களுக்கும்) இடையே தடுப்புச்சுவர் இருந்தது. மேலும் இது பெரிய ஏரோதுவால் எருசலேமில் கட்டப்பட்ட பழங்கால ஆலயத்தின் தடுப்புச்சுவர் (சோரெக்) மூலம் அடையாளப்படுத்தப்பட்டது. அது புறஜாதிகளை கோவிலின் வெளிப் பிராகாரங்களுக்கு அப்பால் நுழையவிடாமல் தடுத்தது. ஆனால் இயேசு, யூதருக்கும் புறஜாதிகளுக்கும் இடையேயான பிரிவையும், தேவனுக்கும் மற்ற ஜனங்களுக்கும் இடையான பிரிவையும் சமரசம் செய்தார். அவர் சிலுவை மரணத்தின் மூலம், பகையாய் இருந்த நடுச்சுவரை தகர்த்து, இறுதிறத்தாரையும் ஒன்றாக்கினார் (வச. 14,16). மேலும் “சமாதானத்தின் சுவிசேஷம்” (வச. 17-18) கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தால் அனைவரும் ஒன்றுபடுவதை சாத்தியமாக்கியது.

 

இன்று, பல விஷயங்கள் நம்மை பிரிக்கக்கூடும். தேவன் நமக்குத் தேவையானதை கொடுப்பதால், கிறிஸ்துவில் காணப்படும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் அனுபவிக்கலாம் (வச. 19-22).

அன்பில் மேற்கொள்ளுதல்

அவர் பல விஷயங்களை நன்றாக செய்தார். ஆனால் ஒரு சிக்கல் இருந்தது. அனைவரும் அதை பார்த்துவிட்டனர். ஆயினும்கூட, அவர் தனது பெரும்பாலான பங்கை நிறைவேற்றுவதில் மிகவும் திறம்பட இருந்ததால், அவருடைய கோபப்படும் பிரச்சனை அதிக அளவில் கவனிக்கப்படவில்லை. அவர் அந்த குறையை சரிசெய்ய முயற்சிக்கவில்லை. அதின் விளைவாக, பலர் காயப்படவேண்டியிருந்தது. அதினிமித்தம், அந்த கிறிஸ்தவ சகோதரன் துவங்கிய அந்த வியாபாரம் வெகுவிரைவில் முடிவுக்கு வரவேண்டியிருந்தது. 

ஆதியாகமம் 4இல், அன்பில் ஒருவரின் பாவத்தை எதிர்கொள்வது என்பதன் சரியான காட்சியை தேவன் கொடுக்கிறார். காயீன் எரிச்சலடைந்தான். அவன் நிலத்தைப் பயிரிடுகிறவனாயிருந்தபடியால், அவன் “நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்” (வச. 3). ஆனால் அவனுடைய காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல என்பதை கர்த்தர் தெளிவுபடுத்தினார். காயீனுடைய காணிக்கை நிராகரிக்கப்பட்டது. அவனுக்கு “மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது” (வச. 5). கர்த்தர் காயீனை நோக்கி, “உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று?” (வச. 6) என்று கேட்கிறார். அவனுடைய பாவ வழிகளை விட்டு விலகி, சரியானதை செய்யும்படிக்கு கர்த்தர் அவனுக்கு வலியுறுத்துகிறார். துரதிர்ஷ்டவசமாக, காயீன் கர்த்தருடைய வார்த்தைகளைப் புறக்கணித்து ஒரு பயங்கரமான பாவச் செயலை செய்தான் (வச. 8).

பாவமான நடத்தைகளிலிருந்து பிறரை மனந்திரும்பும்படி நாம் கட்டாயப்படுத்த முடியாது என்றாலும், நாம் அவர்களை இரக்கத்துடன் எதிர்கொள்ள முடியும். நாம் “அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு” நடந்தால், நாம் கிறிஸ்துவைப் போல மாற முடியும் (எபேசியர் 4:15). நாம் கேட்பதற்கு தேவன் காதுகளைக் கொடுத்துள்ளபடியால், மற்றவர்களிடமிருந்து கடினமான வார்த்தைகளையும் கேட்பதற்கு நம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளலாம். 

அறிதலும் அன்புகூருதலும்

“என் மகனுக்கு உன்னைத் தெரியுமா?” என்ற பிரபல கட்டுரையில் விளையாட்டு எழுத்தாளர் ஜொனாதன் ஜார்க்ஸ் டெர்மினல், புற்றுநோயுடன் அவர் போரிடுவதையும், மற்றவர்கள் தனது மனைவியையும் இளம் மகனையும் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற தனது ஏக்கத்தையும் எழுதியிருந்தார். முப்பத்தி நான்கு வயதான அவர் இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அக்கட்டுரையை எழுதினார். விசுவாசியான ஜார்க்ஸ், தன் இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். ஆனால் அவருடைய தந்தை இறப்பதற்கு முன்பு, விதவைகளையும் திக்கற்றவர்களையும் ஆதரிக்கும் வேதப்பகுதியை அவருக்கு வாசித்துக் காண்பித்திருக்கிறார் (யாத்திராகமம் 22:22; ஏசாயா 1:17; யாக்கோபு 1:27). மேலும் அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய வார்த்தைகளில், “நான் உங்களை பரலோகில் பார்க்கும்போது, நான் கேட்கப் போவது ஒன்றே ஒன்றுதான் - என் மகனுக்கும் என் மனைவிக்கும் நீங்கள் நல்லவராக இருந்தீர்களா? . . . என் மகனுக்கு உங்களைத் தெரியுமா?” என்று எழுதுகிறார். 

“யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா” என்று தாவீது ஆச்சரியமாய் கேட்கிறானாம் (2 சாமுவேல் 9:1). அப்போது இரண்டு கால்களும் முடமான மேவிபோசேத் (வச. 3) என்று யோனத்தானின் குமாரன் ஒருவன் இருக்கிறான் என்று அவனை ராஜாவுக்கு முன்பு கொண்டுவந்தார்கள். தாவீது அவனைப் பார்த்து, “உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்” (9:7). தாவீது மேவிபோசேத்து என்று ஒருவன் இருக்கிறான் என்பதை கேள்விப்பட்ட மாத்திரத்தில், அவனுக்கு பரிவு காண்பிக்க தீர்மானிக்கிறான் (பார்க்க: 19:24-30). 

இயேசு நம்மை அவர் நேசிப்பதுபோல் மற்றவர்களை நாம் நேசிக்கும்பொருட்டு நமக்கு அழைப்பு விடுக்கிறார் (யோவான் 13:34). அவர் நம்மிலும், நம் மூலமாகவும் கிரியை செய்யும்போது, நாமும் மற்றவர்களை அறியவும் நேசிக்கவும் பிரயாசப்படுவோம்.

நம் காலில் நாமே சுடுதல்

2021 ஆம் ஆண்டில், வரலாற்றில் இதுவரை அம்பு எய்தவர்களைவிட அதிக தொலைவில் அம்பு எய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் ஒரு பொறியாளர் 2,028 அடி சாதனையை இலக்காகக் கொண்டார். ஒரு உப்புத் தட்டில் படுத்துக்கொண்டு, அவர் பிரத்யேகமாய் வடிவமைத்த கால் வில்லின் நாண்களை இழுத்து, ஒரு மைலுக்கும் (5,280 அடி) புதிய சாதனைத் தூரம் இருக்கும் என்று அவர் நம்பும் அளவிற்கு அம்பை ஏவத் தயார் செய்தார். ஆழமாக மூச்சை இழுத்து அம்பை எய்தார். அது ஒரு மைல் கூட பயணிக்கவில்லை. உண்மையில், அது ஒரு அடிக்கும் குறைவாகவே பயணித்தது. அவரது காலில் பட்டு, கணிசமான சேதத்தை ஏற்படுத்தியது. ஐயோ!

சில சமயங்களில் தவறான லட்சியத்துடன் நம்முடைய காலில் நாமே காயத்தை ஏற்படுத்திக்கொள்கிறோம். யாக்கோபுக்கும் யோவானுக்கும் நல்லதை லட்சியமாக தேடுவது என்றால் என்ன என்று தெரியும். ஆனால் தவறான காரணங்களுக்காக. “உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும்” (மாற்கு 10:37) என்று இயேசுவிடம் கேட்டார்கள். அவர்களுக்கு இயேசு “இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள்” (மத்தேயு 19:28) என்று பதிலளிப்பதின் மூலம் அவர்கள் ஏன் இந்த கேள்வியை கேட்டார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பிரச்சனை என்ன? அவர்கள் கிறிஸ்துவின் மகிமையில் தங்களுடைய சுயநலமான பதவியின் ஸ்தானத்தை ஸ்தாபிக்க முயற்சித்தனர். மேலும் இயேசு அவர்களிடம் நீங்கள் கேட்கிறது இன்னதென்று உங்களுக்கு தெரியவில்லை என்றும் (மாற்கு 10:38), “உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்” (வச. 43) என்றும் சொல்லுகிறார். 

நான் கிறிஸ்துவுக்காய் நன்மையும் மேன்மையுமான காரியங்களை செய்வதற்கு பிரயாசப்படும்போது, இயேசு செய்ததுபோல மற்றவர்களுக்கு மனத்தாழ்மையோடு சேவை செய்யும் ஞானத்தையும் வழிநடத்துதலையும் நாடமுடியும். 

திறந்த ஸ்தலங்களை கண்டறிதல்

டாக்டர் ரிச்சர்ட் ஸ்வென்சன் தனது “மார்ஜின்” என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “நாங்கள் சுவாசிக்க கொஞ்சம் இடம்வேண்டும். சிந்திக்க சுதந்திரமும், குணமடைய அனுமதியும் வேண்டும். எங்கள் உறவுகள் ஒவ்வொன்றும் பட்டினியால் மடிகின்றன.... நற்சிந்தனையோடு சீறிப்பாய்ந்த எங்கள் குழந்தைகள் காயப்பட்டு தரையில் வீழ்ந்தனர். கடவுள் இப்போது சோர்வுக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ? அமர்ந்த தண்ணீரண்டைக்கு அவர் மக்களை இப்போது வழிநடத்துவதில்லையோ? கடந்த காலத்தின் பரந்த திறந்தவெளிகளை யார் கொள்ளையடித்தார்கள்? அவற்றை நாங்கள் எவ்வாறு திரும்பப் பெறுவது?” நாம் தேவனோடு இளைப்பாறுவதற்கும் தேவனை சந்திப்பதற்கும் அமர்ந்த செழிப்பான நிலம் வேண்டும் என்று ஸ்வென்சன் கூறுகிறார்.

அது எதிரொலிக்கிறதா? திறந்த வெளிகளைத் தேடும் வாழ்க்கைமுறையை மோசே நன்றாக வாழ்ந்திருக்கிறார் எனலாம். முரட்டாட்டமும் கலகமும் செய்யும் ஜனக்கூட்டத்தை வழிநடத்தி சென்ற மோசேக்கு, அமைதியாய் இளைப்பாறி தேவனுடைய பிரசன்னத்தை உணரவேண்டியது அவசியமாய் தோன்றியது. மேலும் அவருடைய “ஆசரிப்புக் கூடாரத்தில்” (வ. 7), “ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்” (வச. 11). இயேசுவும் அவ்வப்போது, “வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்” (லூக்கா 5:16) என்று வேதம் சொல்லுகிறது. அவரும் மோசேயும் பிதாவோடு தனிப்பட்ட விதத்தில் நேரம் செலவழிப்பதின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர்.

நாமும், தேவனோடு இளைப்பாறுவதற்கும் அவருடைய பிரசன்னத்தை உணருவதற்கும் இப்படிப்பட்ட ஸ்தலத்தை தெரிந்துகொள்வது அவசியம். அவரோடு நேரம் செலவழிப்பது என்பது நல்ல தீர்மானங்களை எடுக்க உதவும் - நமது வாழ்க்கையில் ஆரோக்கியமான விளிம்புகளையும் எல்லைகளையும் உருவாக்கி, அவரையும் மற்றவர்களையும் நன்றாக நேசிக்கும் அலைவரிசையை நாம் பெறுவதற்கு உதவுகிறது.

திறந்தவெளியில் தேவனைத் தேட பிரயாசப்படுவோம்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

குடும்பம் மிகவும் முக்கியமானது

எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்திற்காகவும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது. 

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).