Archives: ஜூலை 2023

தேவனுடைய வழித்தடத்தில் செல்லுதல்

பல ஆண்டுகளுக்கு முன்பு, 218 பேருடன் சென்ற ரயில், வடமேற்கு ஸ்பெயினில் தடம் புரண்டதில் 79 பேர் இறந்தனர், 66 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுனரால் அந்த விபத்தை விளக்க முடியவில்லை, ஆனால் வீடியோ காட்சிகள் அதை செய்தது. ஒரு கொடிய வளைவைத் தாண்டும் முன் ரயில் மிக வேகமாக சென்று, ரயிலில் உள்ள அனைவரையும் பாதுகாப்பதற்காக அனுமதிக்கப்பட்ட வேக அளவை தாண்டியது. ஸ்பெயினின் தேசிய இரயில் நிறுவனத்தில் முப்பது வருட அனுபவமிக்கவராக இருந்தபோதிலும், ஓட்டுநர் வேக எல்லையை புறக்கணித்ததால் பலர் உயிரிழந்தனர்.

 

உபாகமம் 5 இல், மோசே தனது மக்களுக்கான தேவனின் உடன்படிக்கை எல்லைகளை நினைப்பூட்டினார். மோசே ஒரு புதிய தலைமுறையினருக்கு தேவனின் அறிவுறுத்தலை, அவருடனான தங்கள் சொந்த உடன்படிக்கையாகக் கருதும்படி ஊக்கப்படுத்தினார் (வ. 3), அவர் பத்துக் கட்டளைகளை மீண்டும் கூறினார் (வவ. 7-21). கட்டளைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமும், முந்தைய தலைமுறையின் கீழ்ப்படியாமையிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதன் மூலமும், மோசே இஸ்ரவேலர்களை பயபக்தியோடும், தாழ்மையோடும், தேவனின் உண்மைத்தன்மையைக் கவனத்தில் கொள்ளும்படி அழைத்தார். தேவன் தம்முடைய மக்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தினார், அவருடைய வழிகளில் உண்மையாய் நடப்பவர்கள், தங்கள் வாழ்க்கையையோ, மற்றவர்களின் வாழ்க்கையையோ சிதைக்க மாட்டார்கள். தேவ ஞானத்தைப் புறக்கணித்தால், அவர்கள் தங்கள் சொந்த ஆபத்தில் விழுவார்கள்.

 

இன்று, தேவன் நம்மை வழிநடத்திச் செல்வதால், வேதவாக்கியங்களை நம் மகிழ்ச்சியாகவும், ஆலோசகராகவும், நம் வாழ்வின் பாதுகாப்புத் தண்டவாளமாகவும் கொள்வோம். ஆவியானவர் நம்மை வழிநடத்துவதால், அவருடைய ஞானமான பாதுகாப்பிற்குள் முழு மனதுடன் நம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்கலாம்.

கீழ்த்தளத்தில்

எனது நண்பர் ஒருவர், ஆப்பிரிக்காவின் மெர்சி என்ற மருத்துவமனைக் கப்பலில் பணிபுரிகிறார். இம்மருத்துவமனை வளரும் நாடுகளுக்கு இலவச சுகாதார சேவையை எடுத்துச் செல்கிறது. அங்கே பணிபுரிபவர்கள் தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சேவை செய்கிறார்கள். இல்லையெனில், அவர்களின் நோய்கள் சிகிச்சை அளிக்கப்படாமல் போய்விடும்.

 

அவ்வப்போது கப்பலில் ஏறும் தொலைக்காட்சிக் குழுவினர், அங்கே அற்புதமாக பணி புரியும் மருத்துவப் பணியாளர்களின் சேவைகளை படமெடுப்பர். சில நேரங்களில், அவர்கள் அங்கே உள்ள மற்ற குழு உறுப்பினர்களை நேர்காணல் செய்ய, தளத்தின் கீழே செல்வார்கள். அங்கே மிக் என்பவர் செய்யும் வேலை பொதுவாக கவனிக்கப்படாமல் இருந்தது.

 

மிக், ஒரு பொறியாளர், கப்பலின் கழிவுநீர் ஆலையில் வேலை செய்ய நியமிக்கப்பட்ட பொறுப்பை, முதலில் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நாற்பதாயிரம் லிட்டர் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதால், இந்த நச்சுப் பொருளை நிர்வகிப்பது கடினமான பணியாகும். மிக் அதன் குழாய்கள் மற்றும் பம்புகளை பராமரிக்காவிட்டால், ஆப்பிரிக்காவின் மெர்சி மருத்துவமனையின் உயிர் கொடுக்கும் செயல்பாடுகள் நின்றுவிடும்.

 

கிறிஸ்தவ ஊழியத்தின் "மேல் தளத்தில்" இருப்பவர்களைப் பாராட்டுவது எளிது, அதே சமயம் கீழே உள்ள தாழ்வான இடங்களில் இருப்பவர்களைக் கண்டும் காணாதது போல் இருக்கிறோம். கொரிந்தியர்கள், அசாதாரணமான வரங்களைக் கொண்டவர்களை பிறரைக்காட்டிலும் உயர்த்தியபோது, கிறிஸ்துவின் வேலையில் அனைத்து விசுவாசிகளுக்கும் பங்குண்டென்று பவுல் அவர்களுக்கு நினைவூட்டினார் (1 கொரிந்தியர் 12:7-20). அற்புத சுகமளிப்பதோ, பிறருக்கு உதவுவதோ, ஒவ்வொரு வரமும் முக்கியமானது (வ.27–31). உண்மையில், குறைவான முக்கியத்துவம் என்று நாம் எண்ணும் பணியே அதிக மரியாதைக்குரியது (வ. 22-24).

 

நீங்கள் ஒரு "கீழ்த்தளத்தில்" உள்ள நபரா? உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.உங்கள் பணி தேவனால் மதிக்கப்படுகிறது மற்றும் அனைவருக்கும் இன்றியமையாதது.

அமைதியின் ஜெபம்

கிரீன் பேங்க் என்பது மேற்கு வர்ஜீனியாவின் கரடுமுரடான அப்பலாச்சியன் மலைகளில் உள்ள ஒரு சிறிய சமூகம். இந்த நகரம் அப்பகுதியில் உள்ள பல சிறிய நகரங்களை போலிருந்தாலும், ஒரு பெரிய வித்தியாசமுமிருந்தது. அங்கே 142 குடும்பங்களுக்கும் இணைய வசதி கிடையாது. இந்த கிரீன் பாங்கில் உள்ள தொலைநோக்கி வானத்தில் தொடர்ந்து செயல்படுவதற்கு, அருகிலுள்ள வை-பை அல்லது அலைபேசி கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் குறிக்கீட்டை தடைசெய்துள்ளனர். அதனால் கிரீன் பேங்க், வட அமெரிக்காவில் தொழில்நுட்ப இரைச்சலற்ற இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது .

 

சில சமயங்களில், அமைதியான சூழலே முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த வழியாகும்; குறிப்பாக தேவனுடனான நமது உறவில். இயேசுவே பிதாவுடன் பேசுவதற்கு அமைதியான, ஒதுங்கிய இடங்களுக்கு சென்றதன் மூலம் நமக்கு முன்மாதிரியை விட்டுச் சென்றுள்ளார். லூக்கா 5:16ல், “அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்” (லூக்கா 5:16) என வாசிக்கிறோம். அவர் அடிக்கடி அவ்வாறு செய்தார். இது கிறிஸ்துவின் வழக்கமான நடைமுறையாகும். மேலும், இது நமக்கு சரியான முன்மாதிரியாக அமைகிறது. இவ்வுலகத்தின் சிருஷ்டிகர் தனது பிதாவை இவ்வளவாய் சார்ந்திருந்தால், நாம் எவ்வளவாய் அவரை சார்ந்திருக்க வேண்டியதாயிருக்கிறது!

 

தேவனின் பிரசன்னத்தில் புதுபெலன் பெற அமைதியான இடத்திற்கு செல்லுகையில், அவருடைய பெலத்தால் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து முன்னேற நம்மை ஆயத்தப்படுத்துகிறது. அத்தகைய இடத்தை இன்று நீங்கள் எங்கே காணலாம்?

நீண்ட காத்திருப்பு

துனின் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டபோது, இராணுவம் விசுவாசிகளை பயமுறுத்தி, அவர்களின் பண்ணை விலங்குகளை கொல்லத் தொடங்கியது. வாழ்வாதாரத்தை இழந்த துனின் குடும்பம், பல்வேறு நாடுகளுக்கு சிதறடிக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளாக, துன் தனது குடும்பத்திலிருந்து வெகுதொலைவில் உள்ள அகதிகள் முகாமில் இருந்தார். தேவன் தன்னுடன் இருப்பதை அவர் அறிந்திருந்தும், பிரிவின் போது இரண்டு குடும்ப உறுப்பினரை இழந்ததால் விரக்தியில் இருந்தார்.

 

நீண்ட காலத்திற்கு முன்பு, மற்றொரு மக்கள் குழுவினர் இதைப் போலவே கொடூரமான ஒடுக்குமுறையை எதிர்கொண்டனர். ஆகவே, அந்த மக்களை (இஸ்ரவேலர்) எகிப்திலிருந்து வெளியே வழிநடத்த தேவன் மோசேயை நியமித்தார். மோசே தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் பார்வோனை அணுகியபோது, எகிப்திய அதிகாரி அடக்குமுறையை தீவிரப்படுத்தினான் (யாத்திராகமம் 5:6-9). பார்வோன்: நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான் (வ.5:2).

மக்கள் மோசேயிடம் முறையிட்டனர், அவர் தேவனிடம் முறையிட்டார் (வ.20-23).

 

இறுதியில், தேவன் இஸ்ரவேலர்களை விடுவித்தார், அவர்கள் விரும்பிய சுதந்திரத்தைப் பெற்றார்கள். ஆனால் தேவனின் வழியிலும், நேரத்திலும். அவர் ஒரு நீண்ட காலம் எடுத்து, அவருடைய குணாதிசயத்தைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறார். பெரிய விஷயத்திற்கு நம்மை தயார்படுத்துகிறார்.

 

துன் அகதிகள் முகாமில் தனது ஆண்டுகளை நன்கு பயன்படுத்திக் கொண்டார், புதுதில்லி வேதாகம கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். இப்போது அவர் தனது சொந்த மக்களுக்கு ஒரு போதகர். ஒரு புதிய அடைக்கலத்தை கண்டுகொண்டு அவரைப் போலவே இருந்த மக்களுக்கு போதகரானார். "ஒரு அகதியான எனது கதை ஒரு ஊழியனாக மற்றவர்களை வழிநடத்துவதற்காக என்னை புடமிட்டது," என்று அவர் கூறினார். அவரது சாட்சியில், யாத்திராகமம் 15:2 இல், மோசேயின் பாடலை மேற்கோள் காட்டுகிறார், ”கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்” (யாத்திராகமம் 15:2). அவர் இன்று நம்முடையவராய் இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

குறுச்செய்திகள், பிரச்சனைகள் மற்றும் ஜெயம்

ஜிம்மி, சமூக பிரச்சனைகள், அபாயங்கள், மற்றும் பிரச்சனைகள் நிறைந்திருக்கும் உலகத்தின் ஏழ்மையான நாட்டில் ஊழியம் செய்துகொண்டிருக்கும் தம்பதியினரை உற்சாகப் படுத்துவதற்காக அங்கு கடந்து சென்றார். அவர் அனுப்பிய குறுச்செய்திகளிலிருந்து அவர் கடந்துபோன கடினமான பாதைகளை நாங்கள் அறிந்துகொண்டோம்: “சரி நண்பர்களே, ஜெபத்தை ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. கடந்த இரண்டு மணி நேரத்தில் நாம் பத்து மைல் தூரத்தைக் கடந்திருக்கிறோம்... அதற்கிடையில் நம்முடைய கார் பன்னிரண்டு தரம் சூடாகிவிட்டது.” வாகன பிரச்சனைகளில் சிக்கி, ஐந்து மணி நேரமாய் அவருடைய செய்திக்காய் காத்திருந்தவர்களை சந்திக்க நள்ளிரவில் வந்து சேர்ந்தார். அதற்கு பின்பதாய் வித்தியாசமான குறுச்செய்திகளை காண நேர்ந்தது. “ஆச்சரியம், அழகான ஒரு ஐக்கியம்... ஜெபம் செய்துகொள்வதற்காக பன்னிரெண்டு பேர் ஒப்புக்கொடுத்து முன்னுக்கு வந்தார்கள். அது ஒரு வல்லமையான இரவாய் அமைந்தது.”  
தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்வது ஒரு சவால். எபிரெயர் 11ஆம் அதிகாரத்தில் இடம்பெற்றிருக்கும் விசுவாச வீரர்கள் இதை அங்கீகரித்துக்கொள்வார்கள். தங்கள் விசுவாசத்தினிமித்தம், சாதாரண மனிதர்கள் சங்கடமான பல சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கின்றனர். “வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்” (வச. 36). அந்த சவால்களை மேற்கொள்ளும்படிக்கு அவர்களுடைய விசுவாசம் அவர்களை நெருக்கி ஏவியது. நமக்கும் அப்படித்தான். நம் நம்பிக்கையை நம்பி வாழ்வது நம்மை ஆபத்தான இடங்களுக்கோ அல்லது வெகுதூரத்திற்கு அழைத்துச் செல்லாமல் போகலாம், ஆனால் அது நம்முடைய தெருக்களுக்கு, வளாகங்களுக்கு, உணவு அறைக்கு அல்லது அலுவலக அறைகளுக்குள் அழைத்துச் செல்லலாம். அது ஒருவேளை அபாயகரமானதாய் இருக்கலாம். ஆனால் நாம் துணிகரமாய் எடுக்கும் அந்த அபாயகரமான முயற்சிகளுக்கு தகுதியான வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்வோம் என்பது அதிக நிச்சயம்.

இப்போது இது வெறுமையாயிருக்கிறது

எனது சகோதரர்களும் எனது குடும்பத்தினரும், நாங்கள் சிறுவயது முதல் வாழ்ந்து வந்த எங்கள் வீட்டிலிருந்த பெற்றோரின் பொருட்களை இடமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டோம். அன்றைய நாளின் மத்தியானத்தில், கடைசியாய் பொருட்களை அவ்வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வருமுன்பு, இனி அந்த வீட்டிற்கு நாங்கள் போகப்போவதில்லை என்பதை அறிந்து, அவ்வீட்டின் பின்புற வராந்தாவில் நின்று நாங்கள் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் அம்மா என் பக்கம் திரும்பி, “இப்போது இது வெறுமையாயிருக்கிறது” என்று என்னிடம் சொன்னபோது, எனக்கு கண்ணீர் வந்தது. 54 வருடங்கள் நாங்கள் வாழ்ந்த அந்த வீடு தற்போது வெறுமையாயிருக்கிறது. அதைக் குறித்து என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.  
எரேமியாவின் புலம்பல்களின் முதல் வசனத்தோடு என் இதயத்தின் வலி எதிரொலிக்கிறது: “ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே!” (1:1). “அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம்” (வச. 5) எருசலேம் வெறுமையாய் அமர்ந்திருக்கிறது. அதனுடைய ஜனங்கள் மனந்திரும்ப மறுத்து தேவனுக்கு விரோதமாய் கலகம்பண்ண நினைத்ததால், தேவன் அதின் குடிகளை சிறையிருப்பிற்கு அனுப்பினார் (வச. 18). அனால் என்னுடைய பெற்றோர், பாவத்தினிமித்தம் வீட்டை காலிசெய்யவில்லை. ஆனால் ஆதாமின் பாவத்தினிமித்தம் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் பெலவீனத்திற்கு நேராய் கடந்துசெல்லுகிறான். நமக்கும் வயதாகும்போது, நம்மால் பராமரிக்க முடியாத வீட்டிற்குள் நாம் தனிமையாய் வாழமுடியாது.  
ஆனால் எங்களுடைய அந்த அழகான வீட்டில் நாங்கள் வாழ்ந்த அந்த நினைவுகளுக்காய் நான் நன்றிசெலுத்துகிறேன். வேதனை என்பது அன்பின் விலை. எங்கள் பெற்றோரின் வீட்டை மட்டுமல்ல; எங்கள் பெற்றோரையும் சீக்கிரத்தில் நான் இழக்க நேரிடும். அப்போதும் நான் அழுவேன். இந்த வேதனையான பிரிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்தையும் சீரமைக்கும்படிக்கு இயேசுவின் வருகையை எதிர்நோக்குகிறேன். அவர் மீது என் நம்பிக்கை இருக்கிறது.  

விரும்பி கீழ்ப்படிதல்

அந்த இளம்பெண்ணின் முகம் கோபத்தையும் அவமானத்தையும் பிரதிபலித்தது. 2022 குளிர்கால ஒலிம்பிக்கின் பனிச்சறுக்கு விளையாட்டில் அவள் பெற்ற வெற்றி இணையற்றது. பல தங்கப் பதக்கத்தை அவள் வென்றிருக்கிறாள். ஆனால் தடைசெய்யப்பட்ட ஒரு போதை வஸ்தை அவள் எடுத்திருக்கிறாள் என்று மருத்துவ பரிசோதனை நிரூபித்தது. அதிக எதிர்பார்ப்பும் மக்களுடைய கண்டனங்களின் அழுத்தமும் தாங்க முடியாத அவள், தொடர்ந்த அவளுடைய விளையாட்டு பயணத்தில் பலமுறை தடுமாற்றம் கண்டு விழுந்திருக்கிறாள். அந்த மறைவான குற்றத்திற்கு முன்பு அவள் தன்னுடைய விளையாட்டில் சுதந்தரமாகவும் உத்வேகத்துடனும் விளையாடினாள். ஆனால் அவளுடைய இந்த விதி மீறல், அவளுடைய கனவுகளை நொறுக்கியது.  
மனுஷீகத்தின் ஆரம்ப நாட்களில், மனிதனுடைய சுயசித்தத்தை செயல்படுத்துகிற வேளையில் கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தை தேவன் வெளிப்படுத்தினார். உடைக்கப்படுகிற அனுபவமும் மரணமும் பாவத்தின் விளைவு என்பதினால், ஆதாம் ஏவாளின் கீழ்ப்படியாமை பாவத்தின் பாதிப்புகளை முழு மனுஷீகத்திற்கும் கொண்டுவந்தது (ஆதியாகமம் 3:16-19). ஆனால் அச்சம்பவம் அப்படி முடிந்திருக்கவேண்டியதில்லை. தேவன் அவர்களிடம், “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்” (2:16-17) என்று கட்டளையிடுகிறார். அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு, அவர்கள் தேவர்கள் போலாகலாம் என்று எண்ணி, தடைசெய்யப்பட்ட நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை அவர்கள் புசிக்கின்றனர் (3:5; 2:17). அதினிமித்தம் மனுஷீகம் பாவம், அவமானம் மற்றும் மரணம் ஆகியவைகளுக்கு உட்படவேண்டியதாயிற்று.  
தேவன் நமக்கு சுயசித்தத்தையும், அநேக காரியங்களை அனுபவிக்கும் அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார் (யோவான் 10:10). நாம் நன்மையை அனுபவிக்கவேண்டும் என்று நம் மீதான அவருடைய அன்பினிமித்தம் அவருக்கு கீழ்படிய நமக்கு அழைப்புக் கொடுக்கிறார். நாம் கீழ்ப்படிதலை தெரிந்துகொள்ளவும், இலச்சை இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை சுதந்தரித்துக்கொள்ளவும் அவர் நமக்கு உதவிசெய்வாராக.