Archives: ஏப்ரல் 2023

வாலையும் நாக்கையும் அசைத்தல்

பெப் என்னும் நாய்க்குட்டி, ஆளுநரின் மனைவிக்கு சொந்தமான பூனையை கொன்றுவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது அந்த தவறை செய்யவில்லை. கவர்னர் மாளிகையில் இருந்த மெத்தையை மென்று தின்றது வேண்டுமானால் அதின் குற்றமாய் இருக்கலாம். 

பெப், 1920களில் பென்சில்வேனியாவின் கவர்னர் கிஃபோர்ட் பிஞ்சோட்டிற்குச் சொந்தமான ஒரு இளம் லாப்ரடோர் வகையை சேர்ந்த நாய். அந்த குற்றத்திற்காய் பெப், கிழக்கு மாநில சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அதின் புகைப்படம் கைதி அடையாள எண்ணுடன் எடுக்கப்பட்டது. இதைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு பத்திரிகை நிருபர், அந்த செய்தியை பத்திரிக்கையில் பிரசுரித்தார். அவரது அறிக்கை செய்தித்தாளில் வெளிவந்ததால், பெப் உண்மையில் ஒரு பூனை கொலையாளி என்று பலர் நம்பினர்.

இஸ்ரவேலின் ராஜா சாலெமோன் தவறான செய்தியின் சக்தியை நன்கு அறிந்திருந்தார். அவர் எழுதும்போது “கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்” என்று எழுதுகிறார் (நீதிமொழிகள் 18:8). சில வேளைகளில் நம்முடைய மனித இயல்பின் பிரகாரம், உண்மையல்லாத செய்திகளையும் நிஜம் என்று நம்பத் தூண்டப்படுகிறோம். 

மற்றவர்கள் நம்மைப் பற்றிய பொய்களை நம்பினாலும், தேவனால் அதை நன்மையாய் முடியப்பண்ணக் கூடும். ஆளுநர் பெப்பை சிறைக்கு அனுப்பினார். ஆனால் பெப் அங்கிருந்த கைதிகளுக்கு சிநேகிதனாய் மாறியது. அது அங்குள்ள கைதிகளுக்கு ஆறுதலாய் இருந்து மனரீதியான சிகிச்சை கொடுத்தது. 

மற்றவர்கள் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் நம் வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தம் மாறாதது. மற்றவர்கள் நம்மைப் பற்றி கிசுகிசுக்கும்போது, அதைக் குறித்து நாம் பொருட்படுத்தாமல், தேவன் நம்மைக் குறித்து என்ன எண்ணுகிறார் என்பதையும் அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறார் என்பதையுமே நாம் கருத்தில்கொள்ள வேண்டும். 

எப்போதும் நம்பக்கூடியவர்

நான் அதிகமாய் கவலைப்படக்கூடியவன். நான் தனிமையில் வாழக்கூடிய நபர் என்பதினால் அதிகாலை நேரம் என்பது, பொல்லாத எண்ணங்கள் சிந்தையில் நிழலாடும் மிகவும் மோசமான தருணங்கள். எனவே ஹட்சன் டெய்லரின் (சீனாவிற்கான ஒரு பிரிட்டிஷ் மிஷனரி) மேற்கோளை எனது குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைத்தேன். என் எண்ணங்கள் பாதிக்கப்படும்போது, நான் அதைப் பார்க்க முடியும்: “ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வேதாகமத்தில் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார், வாக்குச்செய்த அனைத்தையும் செய்திருக்கிறார்” என்று அந்த வாசகம் நீளுகிறது. 

டெய்லரின் இந்த வார்த்தைகள், பல வருடங்களாக தேவனுடன் நடந்து, அவர் யார் என்பதையும், நோய், வறுமை, தனிமை மற்றும் துக்கத்தின் போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்பகமானவர் என்பதை அவர் சாதாரணமாய் அறியவில்லை; அவருடைய நம்பகத்தன்மையை அவர் அனுபவித்தார். அவர் தேவனின் வாக்குறுதிகளை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்ததால், ஆயிரக்கணக்கான சீன மக்கள் இயேசுவுக்கு தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர். 

தேவனையும் அவருடைய வழிகளையும் அனுபவிப்பதின் மூலம் தேவன் நம்பகமானவர் என்பதை தாவீது உணர்ந்தார். அவர் தேவனை நல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், அவர் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகவும் அனுபவித்ததால், சங்கீதம் 145ஐ துதி பாடலாக எழுதினார். நாம் தேவனை நம்பி பின்பற்றும்போது, அவர் தன்னை யார் என்று சொல்லுகிறாரோ அவர் அதுவே என்ற நம்பிக்கைக்கு நாம் பாத்திரவானாகிறோம். அப்போது, தாவீதைப் போல நாமும் தேவனை துதிகளின் மூலமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (வச. 10-12).

நான் கவலைப்படும் தருணங்களில், தேவன் உண்மையுள்ளவர் என்பதினால் அவரோடு நடக்கும் நம்முடைய அடிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மை அவர் நடத்தட்டும் (எபிரெயர் 10:23).

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார்.

தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது. 

வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார். 

சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே!

களைகளுக்கு நீர்ப்பாசனம்

இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள். 

களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம்.

பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார். 

பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் செய்ததை அவர்களுக்குச் சொல்

எனது கல்லூரி நண்பர் பில் டோபியாஸ் ஓர் தீவில் பல வருடங்களாய் மிஷனரியாக சேவை செய்துள்ளார். ஓர் இளைஞன் தன் சொந்த ஊரைவிட்டு வெளியேறி தனது அதிர்ஷ்டத்தைக் கண்டடையச் சென்றக் கதையைக் கூறுகிறார். ஆனால் வேறொரு நண்பர் அவரை தேவாலயத்திற்கு அழைத்துச் செல்ல, அங்கு அவர் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டார்.

ஓர் இளைஞன் “பில்லிசூனியத்தில் மூழ்கியிருந்த” தனது மக்களுக்கு நற்செய்தியை எடுத்துச் செல்ல விரும்பினான். அதனால் ஜனங்களை சந்திக்க ஓர் ஊழியக்காரரைத் தேடினான். ஆனால் ஊழியக்காரரோ அவரிடம் “கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார்” (மாற்கு 5:19 ஐப் பார்க்கவும்). அதைத்தான் அந்த இளைஞன் செய்தான். அவனது சொந்த ஊரில் பலர் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். அந்தப் பட்டணத்தில் இருந்த மாயவித்தைக்கார மருத்துவர் இயேசுவே “வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறார்” (யோவான் 14:6) என்று ஏற்றுக்கொண்டபோது மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டது. அவன் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்த பிறகு, அவரைப் பற்றி ஊர் முழுவதும் கூறினான். நான்கு ஆண்டுகளுக்குள், ஓர் இளைஞனின் சாட்சி அப்பகுதியில் ஏழு திருச்சபைகளை நிறுவ வழிவகுத்தது.

2 கொரிந்தியரில், கிறிஸ்துவை இன்னும் அறியாதவர்களுக்கு நற்செய்தியை அறிமுகப்படுத்துவதற்கான தெளிவான திட்டத்தை பவுல் முன்வைக்கிறார். அது அந்த இளைஞனுக்கு சொல்லப்பட்ட ஆலோசனையோடு ஒத்துப்போகிறது. “ஆனபடியினாலே... நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்“(2 கொரிந்தியர் 5:20). ஒவ்வொரு விசுவாசியிடமும் இயேசு எவ்வாறு அவர்களை புது சிருஷ்டியாய் மாற்றியிருக்கிறார் என்றும் தேவனோடு அவர்கள் எவ்விதம் ஒப்புரவானார்கள் என்றும் சொல்ல ஓர் தனித்துவமான கதை உள்ளது (வச. 17-18). அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வோம். 

முத்தத்தோடு திருத்துதல்

ஜார்ஜ் மெக்டொனால்ட் “ஞானமுள்ள ஸ்திரீ” என்ற தனது உவமையில் இரண்டு சிறுமிகளின் கதையைக் கூறுகிறார். அவர்களின் சுயநலம் அவர்கள் உட்பட அனைவருக்கும் துன்பத்தைத் தருகிறது. ஓர் ஞானமுள்ள பெண் அவர்களை மாற்றுவதற்கு தொடர்ச்சியான சோதனைகளை கொடுத்து அவர்களை மீண்டுவரச் செய்கிறாள். அந்த இரண்டு பெண்களும் தங்களுக்கு நேரிட்ட ஒவ்வொரு சோதனையிலும் தோல்வியடைந்து அவமானம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு ஆளான பிறகு, அவர்களில் ஒருவரான ரோசாமண்ட், தன்னை மாற்றிக்கொள்ள முடியாது என்பதை இறுதியாக உணர்ந்தாள். “உன்னால் எனக்கு உதவ முடியவில்லையா?” என்று அறிவுள்ள பெண்ணிடம் கேட்கிறாள். “இப்போது நீ என்னிடம் கேட்டால் ஒருவேளை என்னால் முடியலாம்” என்று அந்தப் பெண் பதிலளிக்கிறாள். புத்திசாலித்தனமான பெண்ணால் கிடைக்கப்பட்ட தெய்வீக உதவியால், ரோசாமண்ட் மாறத் தொடங்குகிறார். அப்போது அந்தப் பெண் தான் செய்த எல்லாப் பிரச்சனைகளையும் மன்னிப்பாளா என்று கேட்கிறாள். “நான் உன்னை மன்னிக்கவில்லை என்றால், உன்னை தண்டிக்க நான் ஒருபோதும் சிரமப்பட்டிருக்க மாட்டேன்” என்று அந்த பெண் கூறுகிறாள்.

தேவன் நம்மை சிட்சிக்கும் தருணங்கள் உள்ளன. ஏன் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். அவரது சிட்சையானது பழிவாங்குதல் மூலம் இயக்கப்படவில்லை, மாறாக நம் நலனில் தகப்பனின் அக்கறையால் இயக்கப்படுகிறது (எபிரெயர் 12:6). அவருடைய “பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டும்”, “நீதியாகிய சமாதான பலனை” (வச. 10-11) அடையும்பொருட்டும் அவர் விரும்புகிறார். சுயநலம் துன்பத்தைத் தருகிறது, ஆனால் பரிசுத்தம் நம்மை முழுமையாகவும், மகிழ்ச்சியாகவும், அவரைப்போல் “அழகாகவும்” மாற்றுகிறது. தன்னைப் போன்ற சுயநலமிக்க பெண்ணை எப்படி நேசிக்க முடியும் என்று அந்த புத்திசாலியான பெண்ணிடம் ரோசாமண்ட் கேட்கிறாள். அவளை முத்தமிட குனிந்து, “நீ என்னவாக இருக்கப் போகிறாய் என்பதை நான் பார்த்தேன்” என்று இவள் பதிலளித்தாள். தேவனுடைய சிட்சையானது அன்போடும், எதிர்காலத்தில் நாம் யாராக இருக்கப்போகிறோம் என்ற புரிதலோடும் வருகிறது.

பல வர்ண சுவர்

என் தோழி அவள் தீட்டிக் கொண்டிருந்த ஒரு நீர்வர்ண ஓவியத்தை என்னிடம் காட்டியபோது, வரைதிரையில் இருந்த சித்திரம் வேலூர் கோட்டை என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். நான் ஓவியர் அல்ல, ஆனால் யாராவது சுவருக்கு வண்ணம் தீட்டினால், அவர்கள் முழு சுவரையும் ஒரே வர்ணத்தில் பூசுவார்கள் என்று நான் கற்பனை செய்தேன். ஆனால், அவள் வரைந்த சுவர் நேர்த்தியாகப் பல வண்ணங்களிலிருந்தது. ஒரு கல் காவி நிறம், மற்றொன்று பொன்னிறம். ஒரு பாசி பச்சை மற்றும் ஒரு மாதுளை ஊதா கூட இருந்தது. நான் மிகவும் கவரப்பட்டு, “சுவர் எப்படி வித்தியாசமாக இருக்கிறது?” என்று கேட்டேன். அவள், "ஏனென்றால் ஒவ்வொரு கல்லும் ஒரு பாறையிலிருந்து வருகிறது, ஒவ்வொன்றும் வெவ்வேறு சாயல்களைக் கொண்டுள்ளது" என்று பதிலளித்தாள். அப்போதிருந்து, நான் ஒரு கல் சுவரைப் பார்க்கும்போதெல்லாம், அதன் பல கற்களின் அமைப்புகளையும், நிறங்களையும் மற்றும் வடிவங்களையும் என்னால் கவனிக்காமல் இருக்க முடியாது.

பேதுரு நம்மை "ஜீவனுள்ள கற்கள்" (வ.5) என்று அழைக்கிறார். என் தோழியின் ஓவியத்தில் உள்ள கற்களைப் போல, நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். நாங்கள் வெவ்வேறு பின்னணியிலிருந்து வருகிறோம் மற்றும் பலவிதமான அனுபவங்களைக் கொண்டுள்ளோம். ஆனால் கட்டிடத்திலிருந்து ஒதுக்கப்பட்ட கல் போல நாம் தனிமையில் வாழ வேண்டும் என்று அர்த்தமல்ல. மாறாக, தேவன் நம் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து நம்மை ஒன்று சேர்த்தார் (வ.4). ஒரு கல் ஒரு சுவரை உருவாக்காது என்றாலும், தேவன் நம்மை ஒன்று சேர்க்கும்போது, அவர் நம்மை "ஆவிக்கேற்ற மாளிகையாக" (வ. 5) கட்டுகிறார். மூலைக்கல்லாகிய இயேசுவால் ஒன்றுபட்டு, நாம் "தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும்" (வ.5-9) ஆக்கப்படுகிறோம்.

நாம் நிராகரிக்கப்பட்டவர்களாகவோ அல்லது எங்கும் பொருந்த முடியாத அளவுக்கு வித்தியாசமானவர்களாகவோ உணரும்போது (வ.11-12), பேதுரு சொல்வதை நினைவில் கொள்வோம்: "அதின்மேல் (இயேசுவின்மேல்) விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை" (வ.6). தேவன் கட்டுவதில் ஒரு பகுதியாக இருக்க இயேசுவின் மூலம் நம்மைத் தேர்ந்தெடுத்தார் (வ.5). நமது தனித்துவம் தேவனின் சமூகத்தில் சரியாகப் பொருந்துகிறது.