ஏப்ரல், 2023 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஏப்ரல் 2023

வாலையும் நாக்கையும் அசைத்தல்

பெப் என்னும் நாய்க்குட்டி, ஆளுநரின் மனைவிக்கு சொந்தமான பூனையை கொன்றுவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அது அந்த தவறை செய்யவில்லை. கவர்னர் மாளிகையில் இருந்த மெத்தையை மென்று தின்றது வேண்டுமானால் அதின் குற்றமாய் இருக்கலாம். 

பெப், 1920களில் பென்சில்வேனியாவின் கவர்னர் கிஃபோர்ட் பிஞ்சோட்டிற்குச் சொந்தமான ஒரு இளம் லாப்ரடோர் வகையை சேர்ந்த நாய். அந்த குற்றத்திற்காய் பெப், கிழக்கு மாநில சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டது. அங்கு அதின் புகைப்படம் கைதி அடையாள எண்ணுடன் எடுக்கப்பட்டது. இதைப் பற்றி கேள்விப்பட்ட ஒரு பத்திரிகை நிருபர், அந்த செய்தியை பத்திரிக்கையில் பிரசுரித்தார். அவரது அறிக்கை செய்தித்தாளில் வெளிவந்ததால், பெப் உண்மையில் ஒரு பூனை கொலையாளி என்று பலர் நம்பினர்.

இஸ்ரவேலின் ராஜா சாலெமோன் தவறான செய்தியின் சக்தியை நன்கு அறிந்திருந்தார். அவர் எழுதும்போது “கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்” என்று எழுதுகிறார் (நீதிமொழிகள் 18:8). சில வேளைகளில் நம்முடைய மனித இயல்பின் பிரகாரம், உண்மையல்லாத செய்திகளையும் நிஜம் என்று நம்பத் தூண்டப்படுகிறோம். 

மற்றவர்கள் நம்மைப் பற்றிய பொய்களை நம்பினாலும், தேவனால் அதை நன்மையாய் முடியப்பண்ணக் கூடும். ஆளுநர் பெப்பை சிறைக்கு அனுப்பினார். ஆனால் பெப் அங்கிருந்த கைதிகளுக்கு சிநேகிதனாய் மாறியது. அது அங்குள்ள கைதிகளுக்கு ஆறுதலாய் இருந்து மனரீதியான சிகிச்சை கொடுத்தது. 

மற்றவர்கள் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் நம் வாழ்க்கைக்கான தேவனுடைய சித்தம் மாறாதது. மற்றவர்கள் நம்மைப் பற்றி கிசுகிசுக்கும்போது, அதைக் குறித்து நாம் பொருட்படுத்தாமல், தேவன் நம்மைக் குறித்து என்ன எண்ணுகிறார் என்பதையும் அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறார் என்பதையுமே நாம் கருத்தில்கொள்ள வேண்டும். 

எப்போதும் நம்பக்கூடியவர்

நான் அதிகமாய் கவலைப்படக்கூடியவன். நான் தனிமையில் வாழக்கூடிய நபர் என்பதினால் அதிகாலை நேரம் என்பது, பொல்லாத எண்ணங்கள் சிந்தையில் நிழலாடும் மிகவும் மோசமான தருணங்கள். எனவே ஹட்சன் டெய்லரின் (சீனாவிற்கான ஒரு பிரிட்டிஷ் மிஷனரி) மேற்கோளை எனது குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைத்தேன். என் எண்ணங்கள் பாதிக்கப்படும்போது, நான் அதைப் பார்க்க முடியும்: “ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வேதாகமத்தில் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார், வாக்குச்செய்த அனைத்தையும் செய்திருக்கிறார்” என்று அந்த வாசகம் நீளுகிறது. 

டெய்லரின் இந்த வார்த்தைகள், பல வருடங்களாக தேவனுடன் நடந்து, அவர் யார் என்பதையும், நோய், வறுமை, தனிமை மற்றும் துக்கத்தின் போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்பகமானவர் என்பதை அவர் சாதாரணமாய் அறியவில்லை; அவருடைய நம்பகத்தன்மையை அவர் அனுபவித்தார். அவர் தேவனின் வாக்குறுதிகளை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்ததால், ஆயிரக்கணக்கான சீன மக்கள் இயேசுவுக்கு தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர். 

தேவனையும் அவருடைய வழிகளையும் அனுபவிப்பதின் மூலம் தேவன் நம்பகமானவர் என்பதை தாவீது உணர்ந்தார். அவர் தேவனை நல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், அவர் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகவும் அனுபவித்ததால், சங்கீதம் 145ஐ துதி பாடலாக எழுதினார். நாம் தேவனை நம்பி பின்பற்றும்போது, அவர் தன்னை யார் என்று சொல்லுகிறாரோ அவர் அதுவே என்ற நம்பிக்கைக்கு நாம் பாத்திரவானாகிறோம். அப்போது, தாவீதைப் போல நாமும் தேவனை துதிகளின் மூலமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (வச. 10-12).

நான் கவலைப்படும் தருணங்களில், தேவன் உண்மையுள்ளவர் என்பதினால் அவரோடு நடக்கும் நம்முடைய அடிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மை அவர் நடத்தட்டும் (எபிரெயர் 10:23).

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார்.

தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது. 

வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார். 

சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே!

களைகளுக்கு நீர்ப்பாசனம்

இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள். 

களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம்.

பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார். 

பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

உள்ளான சுகத்திற்கான வேட்டை

அமெரிக்க மாநிலமான மிச்சிகனில் வசிக்கும் கார்சன், வேட்டையாடுவது, மீன்பிடிப்பது, பைக்குகள் ஓட்டுவது மற்றும் ஸ்கேட்போர்டில் செல்வது என்று எப்போதும் மும்முரமாகவே செயல்படுவார். அவர் வெளியே பொழுதைக் கழிப்பதில் அதிக பிரியப்பட்டார். ஆனால் அவர் திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி விபத்திற்குள்ளானதால், அவருடைய மார்புக்கு கீழ் அனைத்தும் செயலிழந்துபோனது. விரைவில் மனச்சோர்வுக்குள் மூழ்கினார். அவருடைய எதிர்காலம் இருண்டுபோனது. அவனுடைய சிநேகிதர்களில் சிலர் அவனை மீண்டும் வேட்டைக்கு கூட்டிச்சென்றனர். அந்த தருணத்தில் தன்னுடைய துயரங்கள் அனைத்தையும் மறந்து சுற்றியிருக்கும் அனைத்து அழகையும் ரசித்தான். இந்த அனுபவம் அவனுக்கு உள்ளான இருதய சுகத்தை ஏற்படுத்தி, அவனுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத்தது. அவனைப் போல் இருப்பவர்களும் அந்த அனுபவத்தை பெறும் நோக்கத்தோடு, “வேட்டையிலிருந்து சுகத்துக்கு” (ர்ரவெ 2 ர்நயட) என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்தான். அவன், “என்னுடைய விபத்தானது எனக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவந்தது... நான் எப்போதும் செய்ய விரும்பியதை இப்போது மற்றவர்களுக்கு செய்வதின் மூலம் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று சொல்லுகிறான். மிகவும் கடுமையான சரீர குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தேவையான இடவசதியை ஒழுங்குசெய்து அவர்களுக்கு உள்ளான சுகத்தை கொடுப்பதில் இப்போது அவர் மும்முரமாய் செயல்பட்டு வருகிறான்.  
நொருங்குண்ட இருதயங்களை காயங்கட்டும் ஒருவரின் வருகையைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்துள்ளார் (ஏசாயா 61). அவர் “இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும்... துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும்” கிரியை செய்வார் (வச. 1-2). இயேசு இந்த வேத வாக்கியங்களை தேவாலயத்தில் வாசித்த பின்பு, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று” (லூக்கா 4:21) என்றார். இயேசு நம்மை இரட்சிக்கவும் பூரணப்படுத்தவும் வந்தார்.  
உங்களுக்கு உள்ளான சுகம் அவசியப்படுகிறதா? இயேசுவிடம் வாருங்கள், அவர் “ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையை” (ஏசாயா 61:3) உங்களுக்குக் கொடுப்பார்.  

நன்றியுள்ள இருதயம்

 ஹான்ஸ்லி பார்ச்மென்ட், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டார். டோக்கியோவில் நடைபெறும் தன்னுடைய அரையிறுதி ஒலிம்பிக் போட்டிக்கு செல்லுவதற்கு தவறான பேருந்தில் ஏறிவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக விளையாட்டில் உதவிசெய்யும் டிரிஜானா ஸ்டோஜ்கோவிச்சைச் சந்தித்தார். அவர் டாக்ஸியில் செல்லுவதற்கு சிறிது பணத்தைக் கொடுத்து உதவினாள். பார்ச்மென்ட், சரியான நேரத்திற்கு அரையிறுதிக்கு சென்று, 110 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். அதற்கு பின்பதாக, அவர் ஸ்டோஜ்கோவிச்சைக் கண்டுபிடித்து அவளது உதவிக்கு நன்றி தெரிவித்தார். 
லூக்கா 17ஆம் அதிகாரத்தில், சமாரியவைச் சேர்ந்த குஷ்டரோகியை இயேசு சுகமாக்கியதின் நிமித்தம் அவருக்கு நன்றி சொல்லுவதற்கு ஒருவன் மாத்திரம் திரும்பி வந்த சம்பவத்தைக் குறித்து நாம் வாசிக்கிறோம் (வச. 15-16). இயேசு ஒரு கிராமத்திற்குள் பிரவேசிக்கிறார். அங்கு பத்து குஷ்டரோகிகளை சந்திக்கிறார். அவர் அனைவரும் சுகமடையும்படிக்கு விரும்பி, அனைவரும் கிருபையையும் வல்லமையையும் பெற்றுக்கொண்டனர். தாங்கள் சுகமானதைக் கண்டு பத்துபேரும் ஆச்சரிப்பட்டாலும், அதில் ஒருவன் மாத்திரம் திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்தினான். அவன் “உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்” (வச. 15-16).  
தேவனுடைய ஆசீர்வாதத்தை நாம் ஒவ்வொரு நாளும் பல விதங்களில் அனுபவிக்கிறோம். உபத்திரவப்படும் சரியான நேரத்தில் பதில் பெறுவது என்பது, எதிர்பாராத விதமாய் அந்நியரிடத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் ஆச்சரியமான பலனாய் இருக்கும். சிலவேளைகளில் அவருடைய ஆசீர்வாதங்கள் என்பது நல்ல தட்பவெப்ப நிலை, வெளியரங்கமான சில காரியங்களாய் கூட இருக்கலாம். அந்த நன்றியுள்ள சமாரியனைப் போல் நாமும் தேவனுடைய கிருபைகளுக்காய் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.

கிருபையும் மாற்றமும்

குற்றம் அதிர்ச்சியூட்டக்கூடிய வகையில் இருந்தது. அதைச் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்வந்த ஆண்டுகளில் சிறையில் கழித்த அந்த மனிதன், தன்னுடைய சிந்தையையும் ஆவிக்குரிய சுகத்தையும் நாடினான். அது அவனை மனந்திரும்புதலுக்கு வழிநடத்தி, இயேசுவுடனான ஜீவியத்தை புதுப்பித்தது. இந்த நாட்களில் அவன் தன்னுடைய சக சிறைக் கைதிகளிடம் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டான். தேவனுடைய கிருபையினாலும் அவனுடைய சாட்சியினிமித்தமும் உடன் இருந்த கைதிகளில் சிலர் இயேசுவை சொந்த இரட்சகராய் ஏற்றுக்கொண்டு அவரிடம் மன்னிப்பைப் பெற்றனர்.  
விசுவாச வீரனாய் கருதப்படும் மோசேயும் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு குற்றத்தை செய்துவிட்டான். ஒரு எகிப்தியன் எபிரேயனை அடித்து துன்புறுத்துவதைப் பார்த்த மோசே, அவனை கொன்றுவிட்டான் (யாத்திராகமம் 2:11-12). அவன் பெரிய பாவத்தை செய்தபோதிலும், தேவன் அதை கிருபையாய் சரிகட்டினார். பின்பாக, தேவன் தன்னுடைய ஜனத்தை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும்பொருட்டு மோசேயை தெரிந்துகொண்டார் (3:10). ரோமர் 5:14இல், “மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது” என்று நாம் வாசிக்கிறோம். தொடரும் வரிகளில், எங்களுடைய கடந்தகால பாவம் எப்படியிருந்தாலும் அதை மாற்றி அவரோடு ஒப்புரவாக்குதலை கர்த்தருடைய கிருபை சாத்தியமாக்கிற்று என்று பவுல் சொல்லுகிறார் (வச. 15-16). 
நாம் செய்த தப்பிதங்களின் அடிப்படையில் தேவனுடைய மன்னிப்பை பெற்றுக்கொண்டு அவருடைய நாம மகிமைக்காய் செயல்படுவது சாத்தியமில்லாதது என்று ஒருவேளை நாம் எண்ணலாம். ஆனால் அவருடைய கிருபையினிமித்தம், நாம் மறுரூபமாக்கப்பட்டு, மற்றவர்களையும் அந்த மறுரூப அனுபவத்திற்குள் பிரவேசிக்கச் செய்யலாம்.