எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Jasmine Gohகட்டுரைகள்

பரலோகத்தில் எஜமானன்

இந்தியாவின் 1948 ஆம் ஆண்டின் 'தொழிற்சாலைகள் சட்டம்' அனைத்து தொழிலாளர்களுக்கும் வாரத்தில் ஒரு நாளாவது ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறது. எவ்வாறாயினும், அந்த நாட்களில் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று முதலாளிகள் கவலைப்பட்டனர். பராமரிப்புக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் இதை தீர்க்க கூடும் என்றாலும், ஓய்வின் அவசியத்தை பொருட்படுத்தாத அவர்களின் அணுகுமுறை அவ்வளவு சுலபமாகத் தீர்வு காணவில்லை.

மற்றவர்களை கவனமாக நடத்துவது ஒரு புதிய பிரச்சினை அல்ல. அப்போஸ்தலனாகிய பவுல், வேலையாட்கள் தங்கள் எஜமானர்களின் சொத்தாகக் கருதப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். ஆயினும்கூட, கிறிஸ்துவின் சாயலுள்ள குடும்பங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த சபைக்கான அவரது அறிவுறுத்தல்களின் கடைசி வரியில், எஜமானர்கள் தங்கள் ஊழியர்களை “செவ்வையாய்” நடத்த வேண்டும் என்று கூறுகிறார் (கொலோசெயர் 4:1). மற்றொரு மொழிபெயர்ப்பு, “அவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்” என்கிறது.

“மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே” (3:24) பணியாற்றும்படி வேலைகாரர்களுக்கு பவுல் சொல்வது போல், எஜமானர்களுக்கும் “பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று” (4:1) அவர்கள் மீதான இயேசுவின் அதிகாரத்தை நினைவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் அதிகாரமே இறுதியானது என்று வாழ கொலோசெய விசுவாசிகளை ஊக்குவிப்பதே அவரது நோக்கம். நாம் எஜமானாக அல்லது பணியாளனாக இருந்தாலும், நம் வீடுகள் அல்லது சமூகங்களில் மற்றவர்களுடன் நாம் நடப்பதில், “நீதியும் செவ்வையுமாய்” (வ.1) இருக்க நமக்கு உதவுமாறு தேவனிடம் கேட்கலாம்.

கிறிஸ்துவுக்கு பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார்.

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய அவசியமாகலாம்.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக. 

- ஜாஸ்மின் கோ

தேவனில் சாய்ந்துகொள்!

சில நண்பர்களுடன் நாங்கள் தண்ணீர் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, காற்றடைக்கப்பட்ட தளங்களால் செய்யப்பட்ட மிதக்கும் தடைப் பாதையில் நடக்க முயற்சித்தோம். துள்ளலான, வழுக்கும் தளங்கள் மீது நேராக நடந்துசெல்வது என்பது சாத்தியமற்றது. சரிவுகள், பாறைகள் மற்றும் பாலங்கள் வழியாக நாங்கள் தள்ளாடியபோது, நாங்கள் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்து கூச்சலிட நேரிட்டது. என் தோழிகளில் ஒருத்தி, முற்றிலும் களைத்துப்போய், மூச்சு விடுவதற்காக “கோபுரம்” ஒன்றில் சாய்ந்து இளைப்பாறினாள். அவளுடைய உடல் எடை தாங்க முடியாமல், மீண்டும் வழுக்கிக்கொண்டு வந்து தண்ணீரில் விழுந்தாள்.  
தண்ணீர் பூங்காக்களில் காணப்படும் இதுபோன்ற பெலனில்லாத கோபுரம் போலில்லாமல், வேதாகம காலகட்டங்களில் ஒரு கோபுரம் மிகவும் பாதுகாப்பானதாக திகழ்ந்தது. நியாயாதிபதிகள் 9:50-51, தேபேஸ் மக்கள் தங்கள் நகரத்தின் மீது அபிமெலக்கின் தாக்குதலிலிருந்து மறைந்து கொள்ள “பலத்த துருக்கத்திற்கு” எவ்வாறு விரைந்து ஓடினர் என்பதை விவரிக்கிறது. நீதிமொழிகள் 18:10இல், ஆசிரியர் தன்னை நம்புகிறவர்களை விடுவிக்கும் தேவனை பலத்த துருக்கமாய் உருவகப்படுத்துகிறார்.  
இருப்பினும், சில சமயங்களில், நாம் சோர்வாக இருக்கும்போது அல்லது காயப்படும்போது தேவனுடைய பலத்த துருக்கத்தின் மீது சாய்வதற்குப் பதிலாக, பாதுகாப்பு மற்றும் ஆதரவிற்காக - தொழில், உறவுகள் அல்லது உடல் வசதிகளுக்காக வேறு விஷயங்களைத் தேட நேரிடுகிறது. செல்வத்தில் பலம் தேடும் ஐசுவரியவான்களிடமிருந்து நாம் வேறுபட்டவர்கள் அல்ல (வச. 11). ஆனால் காற்றடைக்கப்பட்ட கோபுரம் எனது சிநேகிதியை தாங்க முடியாதது போல், இந்த விஷயங்கள் நமக்கு உண்மையில் தேவையானதை கொடுக்க முடியாது. ஆனால் சர்வ வல்லமையுள்ள, சகலத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தேவன் நமக்கு மெய்யான ஆறுதலையும் பாதுகாப்பையும் தருகிறார். 

தேவனுக்கு விலையேறப்பெற்றது

சிறுவனாக இருந்தபோது, ஜீவன் தனது தந்தையை மிகவும் கடுமையானவராகவும் தூரமாகவும் கண்டான். ஜீவன் உடல்நிலை சரியில்லாமல், குழந்தை மருத்துவரைப் பார்க்க நேரிட்டபோதும், அவனுடைய அப்பா, தொந்தரவாய் கருதி முணுமுணுத்தார். ஒருமுறை அவனுடைய பெற்றோர் சண்டையிடும்போது, அவனை கருக்கலைப்பு செய்ய தீர்மானித்ததை அவன் தகப்பன் சொல்ல கேட்டான். அவன் ஒதுக்கப்பட்ட குழந்தை என்னும் உணர்வு அவன் வளர்ந்த பிறகும் அவனை நெருக்கியது. ஜீவன் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது, தேவனை தகப்பனாய் அடையாளப்படுத்துவதற்கு அவனுக்கு கடினமாகவே இருந்தது.  
ஜீவனைப் போல, நம்முடைய மாம்ச தகப்பனை நாம் நேசிக்காவிடில், தேவனுடனான நம்முடைய உறவில் நமக்கு அவ்வப்போது சந்தேகங்கள் எழக்கூடும். நான் அவருக்கு பாரமாயிருக்கிறேனா? அவர் என்னைப் பற்றி கவலைப்படுகிறாரா? என்று ஒருவேளை நாம் ஆச்சரியப்படலாம். ஆனால் நமது பூமிக்குரிய தகப்பன்மார்கள் மௌனமாகவும் தூரமாகவும் இருந்திருக்கையில், பரலோகத் தகப்பனாகிய தேவன் நம் அருகில் வந்து, “நானும் உன்னைச் சிநேகித்தேன்” (ஏசாயா 43:4) என்று கூறுகிறார். 
ஏசாயா 43இல், தேவன் நம்முடைய சிருஷ்டிகராகவும் தந்தையாகவும் பேசுகிறார். அவருடைய குடும்பத்தின் அங்கத்தினராய் நீங்கள் வாழவேண்டும் என்று அவர் விரும்புவாரோ என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், அவர் தன்னுடைய ஜனங்களைப் பார்த்து என்ன சொல்கிறார் என்பதைக் கேளுங்கள்: “தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்... கொண்டுவா என்பேன்.” எந்த விதத்தில் அவருடைய அழைப்பிற்கு நாம் தகுதியானவர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், அவருடைய உறுதிமொழியைக் கேளுங்கள்: “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்” (ஏசாயா 43:4).  
தேவன் நம்மை அதிகமாய் நேசித்தபடியினால், அவருடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க ஒப்புக்கொடுத்து, அவரை விசுவாசிக்கிற நாம் என்றென்றும் அவருடையவர்களாய் வாழ தயை செய்தார் (யோவான் 3:16). அவர் சொன்னதையும் அவர் நமக்காய் செய்ததையும் வைத்து, அவர் நம்மை விரும்பகிறார் என்று நாம் உறுதியாய் நம்பமுடியும்.  

இயேசுவின் மீது நம் கண்களைப் பதித்தல்

வினிதாவின் கண்கள் அவள் அருகே இருந்த சாம்பல் நிற காரின் மீதே பதிந்திருந்தன. நெடுஞ்சாலையிலிருந்து வெளியேற அவள் பாதையை மாற்ற வேண்டியிருந்தது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் வாகனத்தை முந்திச் செல்ல முயலும்போது, ​​மற்ற ஓட்டுநரும் வேகத்தைக் கூட்டியதாகத் தோன்றியது. இறுதியாக, அவள் முன்னால் முந்த முடிந்தது. தன் அற்பமான வெற்றியின் தருணத்தில், வினிதா பின் கண்ணாடியில் பார்த்துச் சிரித்தாள். அதே சமயம், அவள் செல்லவேண்டிய இடத்தை, தான் கடந்து செல்வதைக் கவனித்தாள்.

ஒரு கசப்பான புன்னகையுடன், அவள்: "நான் முந்திச் செல்வதிலேயே நோக்கமாய் இருந்தேன், ஆகவே நான் வெளியேறும் வழியைத் தவறவிட்டேன்" என்று சொல்லிக்கொண்டாள்.

தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டும் என்ற நமது விருப்பத்திலும் இப்படிப்பட்ட சறுக்கல் ஏற்படலாம். யூத நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்காததற்காக மதத் தலைவர்கள் இயேசுவை நெருக்குகையில் (யோவான் 5:16), நியாயப்பிரமாணம் சுட்டிக்காட்டிய நபரைக் கவனிக்காமல்,  அவர்கள் நியாயப்பிரமாணத்தை படிப்பதிலும் செயல்படுத்துவதிலும் மிகவும் உறுதியாகிவிட்டனர் என்று எச்சரித்தார்: “என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (வ.39-40).

தேவனுக்கு முன்பாக நீதிபரராய் இருக்க முயன்றதில், மதத் தலைவர்கள் யூத நியாயப்பிரமணத்தை தாங்கள் பின்பற்றுவதுமின்றி, மற்றவர்களும் பின்பற்றுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தினர். அவ்வாறே, தேவனுக்கேற்ற வைராக்கியத்தில் சபை கூடுதல், வேத வாசிப்பு, சமூக சேவை போன்ற நல்ல காரியங்களை நாமும் செய்து, பிறரையும் நம்முடன் சேரச் செய்யலாம். ஆனால் நாம் அவைகளின் மீது அதிக கவனம் செலுத்தி, அவற்றை நாம் யாருக்காகச் செய்கிறோமோ, அந்த இயேசுவானவரையே கவனிக்கத் தவறக்கூடும்.

நாம் செய்யும் அனைத்திலும், கிறிஸ்துவின் மீதே நம் கண்களைப் பதிந்திருக்க உதவும்படி தேவனிடம் கேட்போம் (எபிரெயர் 12:2). அவர் ஒருவரே "வழியும் சத்தியமும் ஜீவனும்" (யோவான் 14:6) ஆனவர்.

என் இருதயத்தை கண்டுபிடியும் என் தேவனே

உணவு வீணாவதைக் குறைப்பதற்காக, சிங்கப்பூரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி, சிறிதளவு பாதிப்புள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. ஒரு வருடத்தில், இந்த முன்முயற்சியானது 850 டன்களுக்கும் (778,000 கிலோ) விளைபொருட்களை சேமித்தது. இது அழகியல் தரநிலைகளை பூர்த்தி செய்யாததால் தூக்கி எறியப்பட்டிருக்கக்கூடும். வெளிப்புற தோற்றங்கள்-வடுக்கள் மற்றும் நகைச்சுவையான வடிவங்கள் - சுவை மற்றும் ஊட்டச்சத்து அவைகளின் மதிப்பைப் பாதிக்காது என்பதை கடைக்காரர்கள் விரைவில் அறிந்து கொண்டனர். வெளிப்புற தோற்றங்கள் உள்ளே இருப்பதை எப்போதும் தீர்மானிப்பதில்லை.

இஸ்ரவேலின் அடுத்த ராஜாவை அபிஷேகம் செய்ய தேவனால் அனுப்பப்பட்ட சாமுவேல் தீர்க்கதரிசி இதேபோன்ற பாடத்தைக் கற்றுக்கொண்டார் (1 சாமுவேல் 16:1). ஈசாயின் மூத்த மகனான எலியாபைப் பார்த்தபோது, அவனே தெரிந்துகொள்ளப்பட்டவன் என்று சாமுவேல் நினைத்தார். ஆனால் “கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரிர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்” (வச. 7). தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த (வச. 11), ஈசாயின் எட்டு மகன்களில், இளையவரான தாவீதை அடுத்த ராஜாவாக தேவன் தேர்ந்தெடுத்தார்.

நாம் எந்த பள்ளியில் படித்தோம், என்ன சம்பாதிக்கிறோம் அல்லது எவ்வளவு தன்னார்வத் தொண்டு செய்கிறோம் என்பதை விட, தேவன் நம் மீது கரிசணையுள்ளவராயிருக்கிறார். சுயநலம் மற்றும் தீய எண்ணங்களிலிருந்து தங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு இயேசு தம் சீஷர்களுக்குக் கற்பித்தார். ஏனெனில் “மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” (மாற்கு 7:20). சாமுவேல் வெளித்தோற்றத்தைக் கருத்தில் கொள்ளக் கூடாது என்று கற்றுக்கொண்டது போலவே, தேவனுடைய உதவியோடு, நாம் செய்யும் எல்லாவற்றிலும் நம்முடைய இருதயங்களை, நம் எண்ணங்களையும் நோக்கங்களையும் ஆராய்வோமாக.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை.

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார்.

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது? 

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார்.

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம்.

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26). 

 

ஒன்றுபட்டு வாழ்வோம்

எனது அமெரிக்கத் தோழி கேரல், 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வந்தாள். அவள் வருவதற்கு முன்னர், இதன் பல்வேறு கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் மொழிகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். இருப்பினும், அவள் பெங்களூருவில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டபோது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒரு அன்பான சமூகத்தை உருவாக்குவதைக் கண்டு வியந்தாள். தேவன் எப்படி ஜனங்களை ஒன்றிணைத்தார் என்பதை கேரல் பார்த்தாள்.

ஒரு சமூகமாக ஒற்றுமையாக வாழ்வது என்றால் என்ன என்பதை ஆதி விசுவாசிகள் புரிந்துகொண்டனர். லூக்கா, "அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்" (வ.42) என்றெழுதினார். அவர்கள் வெவ்வேறு ஊர்கள், நகரங்கள் மற்றும் பின்னணியிலிருந்து வந்தவர்கள், எனினும் அவர்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அவர்களின் சமூகத்தை அழகாக்கிய சில விஷயங்களில் ஒன்று அவர்களின் அன்றாட நடவடிக்கைகளாகும். அவர்கள் அப்போஸ்தலரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவிடுவதற்கும், கர்த்தரின் பந்தியை அனுசரிப்பதற்கும், ஒன்றாக ஜெபிப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தனர் (வ.42). அவர்கள் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்துகொண்டு, "மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி" எப்போதும் தேவனைத் துதித்தனர் (வ.44-46). இதன் விளைவாக, தேவன் ஒவ்வொரு நாளும் புதிய மக்களை அவர்களின் சமூகத்தில் சேர்த்தார் (வ.47).

இயேசுவின் ஆதி சீடர்கள், ஒரு சமூகத்தின் மாதிரியை நமக்கு வழங்குகிறார்கள். வறுமை, துன்புறுத்தல் மற்றும் மரணத்தின் மத்தியிலும் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு சமூகம் என்றால் என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். சபை ஆராதனைகள் அல்லது ஐக்கிய கூட்டங்களின் போது மட்டுமல்ல, நாம் ஏக கருத்துடையவர்களாய் இருக்கும்போது மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் கிறிஸ்துவின் மூலம் ஒன்றுபடுவதற்கு நாமும் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட நமது ஒற்றுமையை நாம் உலகிற்கு சாட்சியிடுகையில், தேவன் நம் அன்பின் சமூகத்தில் புதியவர்களைக் கொண்டுவருவார்.