எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

Jasmine Gohகட்டுரைகள்

பரலோகத்தில் எஜமானன்

இந்தியாவின் 1948 ஆம் ஆண்டின் 'தொழிற்சாலைகள் சட்டம்' அனைத்து தொழிலாளர்களுக்கும் வாரத்தில் ஒரு நாளாவது ஓய்வு வழங்கப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறது. எவ்வாறாயினும், அந்த நாட்களில் தங்கள் அன்புக்குரியவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று முதலாளிகள் கவலைப்பட்டனர். பராமரிப்புக்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்வதன் மூலம் இதை தீர்க்க கூடும் என்றாலும், ஓய்வின் அவசியத்தை பொருட்படுத்தாத அவர்களின் அணுகுமுறை அவ்வளவு சுலபமாகத் தீர்வு காணவில்லை.

மற்றவர்களை கவனமாக நடத்துவது ஒரு புதிய பிரச்சினை அல்ல. அப்போஸ்தலனாகிய பவுல், வேலையாட்கள் தங்கள் எஜமானர்களின் சொத்தாகக் கருதப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். ஆயினும்கூட, கிறிஸ்துவின் சாயலுள்ள குடும்பங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த சபைக்கான அவரது அறிவுறுத்தல்களின் கடைசி வரியில், எஜமானர்கள் தங்கள் ஊழியர்களை “செவ்வையாய்” நடத்த வேண்டும் என்று கூறுகிறார் (கொலோசெயர் 4:1). மற்றொரு மொழிபெயர்ப்பு, “அவர்களுக்கு நியாயம் செய்யுங்கள்” என்கிறது.

“மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே” (3:24) பணியாற்றும்படி வேலைகாரர்களுக்கு பவுல் சொல்வது போல், எஜமானர்களுக்கும் “பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று” (4:1) அவர்கள் மீதான இயேசுவின் அதிகாரத்தை நினைவுபடுத்துகிறார். கிறிஸ்துவின் அதிகாரமே இறுதியானது என்று வாழ கொலோசெய விசுவாசிகளை ஊக்குவிப்பதே அவரது நோக்கம். நாம் எஜமானாக அல்லது பணியாளனாக இருந்தாலும், நம் வீடுகள் அல்லது சமூகங்களில் மற்றவர்களுடன் நாம் நடப்பதில், “நீதியும் செவ்வையுமாய்” (வ.1) இருக்க நமக்கு உதவுமாறு தேவனிடம் கேட்கலாம்.

கிறிஸ்துவுக்கு பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார்.

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய அவசியமாகலாம்.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக. 

- ஜாஸ்மின் கோ

தேவனில் சாய்ந்துகொள்!

சில நண்பர்களுடன் நாங்கள் தண்ணீர் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, காற்றடைக்கப்பட்ட தளங்களால் செய்யப்பட்ட மிதக்கும் தடைப் பாதையில் நடக்க முயற்சித்தோம். துள்ளலான, வழுக்கும் தளங்கள் மீது நேராக நடந்துசெல்வது என்பது சாத்தியமற்றது. சரிவுகள், பாறைகள் மற்றும் பாலங்கள் வழியாக நாங்கள் தள்ளாடியபோது, நாங்கள் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் விழுந்து கூச்சலிட நேரிட்டது. என் தோழிகளில் ஒருத்தி, முற்றிலும் களைத்துப்போய், மூச்சு விடுவதற்காக “கோபுரம்” ஒன்றில் சாய்ந்து இளைப்பாறினாள். அவளுடைய உடல் எடை தாங்க முடியாமல், மீண்டும் வழுக்கிக்கொண்டு வந்து தண்ணீரில் விழுந்தாள்.  
தண்ணீர் பூங்காக்களில் காணப்படும் இதுபோன்ற பெலனில்லாத கோபுரம் போலில்லாமல், வேதாகம காலகட்டங்களில் ஒரு கோபுரம் மிகவும் பாதுகாப்பானதாக திகழ்ந்தது. நியாயாதிபதிகள் 9:50-51, தேபேஸ் மக்கள் தங்கள் நகரத்தின் மீது அபிமெலக்கின் தாக்குதலிலிருந்து மறைந்து கொள்ள “பலத்த துருக்கத்திற்கு” எவ்வாறு விரைந்து ஓடினர் என்பதை விவரிக்கிறது. நீதிமொழிகள் 18:10இல், ஆசிரியர் தன்னை நம்புகிறவர்களை விடுவிக்கும் தேவனை பலத்த துருக்கமாய் உருவகப்படுத்துகிறார்.  
இருப்பினும், சில சமயங்களில், நாம் சோர்வாக இருக்கும்போது அல்லது காயப்படும்போது தேவனுடைய பலத்த துருக்கத்தின் மீது சாய்வதற்குப் பதிலாக, பாதுகாப்பு மற்றும் ஆதரவிற்காக - தொழில், உறவுகள் அல்லது உடல் வசதிகளுக்காக வேறு விஷயங்களைத் தேட நேரிடுகிறது. செல்வத்தில் பலம் தேடும் ஐசுவரியவான்களிடமிருந்து நாம் வேறுபட்டவர்கள் அல்ல (வச. 11). ஆனால் காற்றடைக்கப்பட்ட கோபுரம் எனது சிநேகிதியை தாங்க முடியாதது போல், இந்த விஷயங்கள் நமக்கு உண்மையில் தேவையானதை கொடுக்க முடியாது. ஆனால் சர்வ வல்லமையுள்ள, சகலத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தேவன் நமக்கு மெய்யான ஆறுதலையும் பாதுகாப்பையும் தருகிறார். 

தேவனுக்கு விலையேறப்பெற்றது

சிறுவனாக இருந்தபோது, ஜீவன் தனது தந்தையை மிகவும் கடுமையானவராகவும் தூரமாகவும் கண்டான். ஜீவன் உடல்நிலை சரியில்லாமல், குழந்தை மருத்துவரைப் பார்க்க நேரிட்டபோதும், அவனுடைய அப்பா, தொந்தரவாய் கருதி முணுமுணுத்தார். ஒருமுறை அவனுடைய பெற்றோர் சண்டையிடும்போது, அவனை கருக்கலைப்பு செய்ய தீர்மானித்ததை அவன் தகப்பன் சொல்ல கேட்டான். அவன் ஒதுக்கப்பட்ட குழந்தை என்னும் உணர்வு அவன் வளர்ந்த பிறகும் அவனை நெருக்கியது. ஜீவன் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபோது, தேவனை தகப்பனாய் அடையாளப்படுத்துவதற்கு அவனுக்கு கடினமாகவே இருந்தது.  
ஜீவனைப் போல, நம்முடைய மாம்ச தகப்பனை நாம் நேசிக்காவிடில், தேவனுடனான நம்முடைய உறவில் நமக்கு அவ்வப்போது சந்தேகங்கள் எழக்கூடும். நான் அவருக்கு பாரமாயிருக்கிறேனா? அவர் என்னைப் பற்றி கவலைப்படுகிறாரா? என்று ஒருவேளை நாம் ஆச்சரியப்படலாம். ஆனால் நமது பூமிக்குரிய தகப்பன்மார்கள் மௌனமாகவும் தூரமாகவும் இருந்திருக்கையில், பரலோகத் தகப்பனாகிய தேவன் நம் அருகில் வந்து, “நானும் உன்னைச் சிநேகித்தேன்” (ஏசாயா 43:4) என்று கூறுகிறார். 
ஏசாயா 43இல், தேவன் நம்முடைய சிருஷ்டிகராகவும் தந்தையாகவும் பேசுகிறார். அவருடைய குடும்பத்தின் அங்கத்தினராய் நீங்கள் வாழவேண்டும் என்று அவர் விரும்புவாரோ என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், அவர் தன்னுடைய ஜனங்களைப் பார்த்து என்ன சொல்கிறார் என்பதைக் கேளுங்கள்: “தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்... கொண்டுவா என்பேன்.” எந்த விதத்தில் அவருடைய அழைப்பிற்கு நாம் தகுதியானவர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்பட்டால், அவருடைய உறுதிமொழியைக் கேளுங்கள்: “நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்” (ஏசாயா 43:4).  
தேவன் நம்மை அதிகமாய் நேசித்தபடியினால், அவருடைய குமாரனாகிய இயேசுவை நமக்காக மரிக்க ஒப்புக்கொடுத்து, அவரை விசுவாசிக்கிற நாம் என்றென்றும் அவருடையவர்களாய் வாழ தயை செய்தார் (யோவான் 3:16). அவர் சொன்னதையும் அவர் நமக்காய் செய்ததையும் வைத்து, அவர் நம்மை விரும்பகிறார் என்று நாம் உறுதியாய் நம்பமுடியும்.  

இயேசுவின் மீது நம் கண்களைப் பதித்தல்

வினிதாவின் கண்கள் அவள் அருகே இருந்த சாம்பல் நிற காரின் மீதே பதிந்திருந்தன. நெடுஞ்சாலையிலிருந்து வெளியேற அவள் பாதையை மாற்ற வேண்டியிருந்தது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவள் வாகனத்தை முந்திச் செல்ல முயலும்போது, ​​மற்ற ஓட்டுநரும் வேகத்தைக் கூட்டியதாகத் தோன்றியது. இறுதியாக, அவள் முன்னால் முந்த முடிந்தது. தன் அற்பமான வெற்றியின் தருணத்தில், வினிதா பின் கண்ணாடியில் பார்த்துச் சிரித்தாள். அதே சமயம், அவள் செல்லவேண்டிய இடத்தை, தான் கடந்து செல்வதைக் கவனித்தாள்.

ஒரு கசப்பான புன்னகையுடன், அவள்: "நான் முந்திச் செல்வதிலேயே நோக்கமாய் இருந்தேன், ஆகவே நான் வெளியேறும் வழியைத் தவறவிட்டேன்" என்று சொல்லிக்கொண்டாள்.

தேவனுடைய வழிகளில் நடக்க வேண்டும் என்ற நமது விருப்பத்திலும் இப்படிப்பட்ட சறுக்கல் ஏற்படலாம். யூத நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்காததற்காக மதத் தலைவர்கள் இயேசுவை நெருக்குகையில் (யோவான் 5:16), நியாயப்பிரமாணம் சுட்டிக்காட்டிய நபரைக் கவனிக்காமல்,  அவர்கள் நியாயப்பிரமாணத்தை படிப்பதிலும் செயல்படுத்துவதிலும் மிகவும் உறுதியாகிவிட்டனர் என்று எச்சரித்தார்: “என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை” (வ.39-40).

தேவனுக்கு முன்பாக நீதிபரராய் இருக்க முயன்றதில், மதத் தலைவர்கள் யூத நியாயப்பிரமணத்தை தாங்கள் பின்பற்றுவதுமின்றி, மற்றவர்களும் பின்பற்றுவதை உறுதி செய்வதிலும் கவனம் செலுத்தினர். அவ்வாறே, தேவனுக்கேற்ற வைராக்கியத்தில் சபை கூடுதல், வேத வாசிப்பு, சமூக சேவை போன்ற நல்ல காரியங்களை நாமும் செய்து, பிறரையும் நம்முடன் சேரச் செய்யலாம். ஆனால் நாம் அவைகளின் மீது அதிக கவனம் செலுத்தி, அவற்றை நாம் யாருக்காகச் செய்கிறோமோ, அந்த இயேசுவானவரையே கவனிக்கத் தவறக்கூடும்.

நாம் செய்யும் அனைத்திலும், கிறிஸ்துவின் மீதே நம் கண்களைப் பதிந்திருக்க உதவும்படி தேவனிடம் கேட்போம் (எபிரெயர் 12:2). அவர் ஒருவரே "வழியும் சத்தியமும் ஜீவனும்" (யோவான் 14:6) ஆனவர்.

என் இருதயத்தை கண்டுபிடியும் என் தேவனே

உணவு வீணாவதைக் குறைப்பதற்காக, சிங்கப்பூரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடி, சிறிதளவு பாதிப்புள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. ஒரு வருடத்தில், இந்த முன்முயற்சியானது 850 டன்களுக்கும் (778,000 கிலோ) விளைபொருட்களை சேமித்தது. இது அழகியல் தரநிலைகளை பூர்த்தி செய்யாததால் தூக்கி எறியப்பட்டிருக்கக்கூடும். வெளிப்புற தோற்றங்கள்-வடுக்கள் மற்றும் நகைச்சுவையான வடிவங்கள் - சுவை மற்றும் ஊட்டச்சத்து அவைகளின் மதிப்பைப் பாதிக்காது என்பதை கடைக்காரர்கள் விரைவில் அறிந்து கொண்டனர். வெளிப்புற தோற்றங்கள் உள்ளே இருப்பதை எப்போதும் தீர்மானிப்பதில்லை.

இஸ்ரவேலின் அடுத்த ராஜாவை அபிஷேகம் செய்ய தேவனால் அனுப்பப்பட்ட சாமுவேல் தீர்க்கதரிசி இதேபோன்ற பாடத்தைக் கற்றுக்கொண்டார் (1 சாமுவேல் 16:1). ஈசாயின் மூத்த மகனான எலியாபைப் பார்த்தபோது, அவனே தெரிந்துகொள்ளப்பட்டவன் என்று சாமுவேல் நினைத்தார். ஆனால் “கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரிர வளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்” (வச. 7). தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த (வச. 11), ஈசாயின் எட்டு மகன்களில், இளையவரான தாவீதை அடுத்த ராஜாவாக தேவன் தேர்ந்தெடுத்தார்.

நாம் எந்த பள்ளியில் படித்தோம், என்ன சம்பாதிக்கிறோம் அல்லது எவ்வளவு தன்னார்வத் தொண்டு செய்கிறோம் என்பதை விட, தேவன் நம் மீது கரிசணையுள்ளவராயிருக்கிறார். சுயநலம் மற்றும் தீய எண்ணங்களிலிருந்து தங்கள் இதயங்களைத் தூய்மைப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு இயேசு தம் சீஷர்களுக்குக் கற்பித்தார். ஏனெனில் “மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்” (மாற்கு 7:20). சாமுவேல் வெளித்தோற்றத்தைக் கருத்தில் கொள்ளக் கூடாது என்று கற்றுக்கொண்டது போலவே, தேவனுடைய உதவியோடு, நாம் செய்யும் எல்லாவற்றிலும் நம்முடைய இருதயங்களை, நம் எண்ணங்களையும் நோக்கங்களையும் ஆராய்வோமாக.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.