Archives: ஜூன் 2022

தேவனுக்காக என் வேலையை செய்தல்

நான் எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையின் கட்டுரை மிக முக்கியமானது என்று உணர்ந்ததால், பத்திரிக்கையின் ஆசிரியருக்கு என்னால் இயன்ற சிறந்த கட்டுரையை வழங்குவதில் சிரமப்பட்டேன். அவருடைய எதிர்பார்ப்பை சந்திக்க தீர்மானித்த நான், மீண்டும் மீண்டும் என்னுடைய சிந்தனைகளை மாற்றி எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் என் பிரச்சனை என்ன? இது எனக்கு சவாலான ஒரு தலைப்பா? அல்லது ஆசிரியர் என்னுடைய வார்த்தைகளை விட்டுவிட்டு, என்னை அங்கீகரிக்க வேண்டும் என்னும் தனிப்பட்ட ஆதங்கமா?

நம் வேலைப் பளுவிற்கு, பவுல் நம்பகமான ஆலோசனையைக் கொடுக்கிறார். கொலோசெய திருச்சபைக்கு எழுதிய நிருபத்தில், மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாமல், தேவனுக்காக வேலை செய்ய பவுல் விசுவாசிகளுக்கு அறிவுறுத்துகிறார். அப்போஸ்தலர் அறிவுறுத்தியது போல, “நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோசெயர் 3:23-24).

பவுலின் ஆலோசனையின் பிரகாரம், நம்முடைய பூமிக்குரிய எஜமானர்களின் பார்வையில் நாம் நல்லவர்களாய் காண்பித்துக்கொள்வதற்கு பிரயாசப்பட வேண்டாம். அவர்களை மதித்து, நம்மால் முடிந்த நன்மையான காரியங்களை அவர்களுக்கு நிச்சயமாய் செய்யலாம். ஆனால் நாம் தேவனை முன்நிறுத்தி, நம் வேலையை ஆசீர்வதிக்கும்படிக்கு அவரை சார்ந்துகொண்டால், அவர் நம் முயற்சிகளுக்கு ஒளியூட்டுவார். நம்முடைய வெகுமதி? நம் வேலை அழுத்தங்கள் எளிதாகி, நம் பணிகள் நிறைவடைகின்றன. மேலும் “சிறப்பாய் செய்தீர்கள்” என்ற பாராட்டையும் அவரிடத்திலிருந்து நாம் ஒரு நாள் கேட்க முடியும்.

பாவத்திற்கு விலகி ஓடுதல்

இந்த கோடையில் இரண்டு முறை நான் காஜர் காஸ் (கேரட் புல்) என்று சொல்லப்படும் தாவரத்தினால் ஒருவகையான பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டேன். இரண்டு முறை எங்கள் முற்றத்தில் உள்ள தேவையற்ற தாவரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டேன். சிறு வெள்ளைப் பூக்களைக் கொண்ட இந்த காஜர் காஸ் செடிகள் ஓங்கி வளர்ந்திருந்ததை இரண்டு முறையும் பார்க்க நேர்ந்தது. அது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அதின் அருகில் சென்றுவிடலாம் என்று எண்ணினேன். விரைவில், நான் தவறு செய்தேன் என்பதை உணர்ந்தேன். இந்த சிறிய பச்சை விரோதியை நான் நெருங்குவதற்கு பதிலாக, நான் எதிர் திசையில் ஓட்டமெடுத்திருக்கவேண்டும்.

பழைய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள யோசேப்புக் கதையில், வளர்ந்து படரும் விஷ தாவரங்களைக் காட்டிலும் கொடிதான பாவத்திலிருந்து விலகியோட வேண்டியதின் அவசியத்தை நாம் பார்க்கிறோம். அவன் எகிப்தின் போத்திபாருடைய வீட்டில் தங்கியிருந்தபோது, போத்திபாரின் மனைவி அவனை இச்சையோடு அணுகுகிறாள். யோசேப்பு அவள் அருகாமையில் செல்ல முயலவில்லை. மாறாக, விலகியோடுகிறான்.
அவள் அவன் மீது பொய்யாகக் குற்றஞ்சாட்டி அவனை சிறையில் தள்ளினாலும், யோசேப்பு தன் வாழ்நாள் முழுவதும் சுத்தமனசாட்சியோடே இருந்தான். ஆதியாகமம் 39:21ல் நாம் பார்க்கிறபடி, “கர்த்தர் அவனோடிருந்தார்.”

தேவனிடத்திலிருந்து நம்மை விலகியோடச் செய்யும் செயல்கள் மற்றும் சூழ்நிலைகளில், பாவத்திற்கு எதிர் திசையில் நாம் ஓடுவதற்கு தேவன் நமக்கு உதவிசெய்ய முடியும். 2 தீமோத்தேயு 2:22ல் பவுல், “பொல்லாத இச்சைகளை விட்டு ஓடுங்கள்” என்று எழுதுகிறார். மேலும் 1 கொரிந்தியர் 6:18ல், “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்றும் அறிவுறுத்துகிறார்.
நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரியங்களிலிருந்து விலகியோடுவதற்கு, தேவனுடைய பெலத்தை நாம் சார்ந்துகொள்வோம்.

தேவ சிநேகிதர்களின் சிநேகிதன்

இரண்டு நண்பர்களுக்கு பொதுவான இன்னொரு நண்பர் இருப்பதைக் கண்டறியும் போது, முதல் அறிமுகங்களில் சுவாரஸ்யமான அனுபவம் ஏற்படுவது இயல்பு. அதே போன்று, “உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. விஜயின் அல்லது ஹீனாவின் நண்பர்கள், எனக்கும் நண்பர்தான்" என்று நாம் சிநேகிதர்களின் சிநேகிதர்களை பெரிய மனதுடன் நம்முடைய வீட்டின் விருந்திற்கு வரவேற்கிறோம்.

இயேசுவும் இதே போன்று சொல்லியிருக்கிறார். அவர் பலரை வியாதியிலிருந்து குணமாக்கி, மக்களை கவர்ந்திருக்கிறார். ஆனால் அதே வேளையில், தங்களின் செல்வாக்கை தவறாய் பயன்படுத்தி, ஆலயத்தை வணிகமயமாக்கும் மதத் தலைவர்களின் செயல்களுக்கு ஒத்துப்போகாததால், அவர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். இந்த எதிர்ப்புகளின் மத்தியிலும், அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சி, செலவு மற்றும் ஆச்சரியத்தை பெருக்க தீர்மானித்தார். அவர் தம்முடைய சீஷர்களுக்கு வியாதியை குணமாக்கும் அதிகாரத்தைக் கொடுத்து, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கிக்க அவர்களை அனுப்புகிறார். “உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்” (10:40) என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறார்.

வாழ்க்கையை மாற்றும் ஒரு அழகான நட்பிற்கு இதை விட ஒரு நல்ல எடுத்துக்காட்டை கற்பனை செய்வது கடினம். சீஷர்களுக்கு தங்கள் வீட்டைத் திறந்துகொடுக்கும் எவருக்கும், அல்லது அவர்களில் ஒருவருக்கு ஒரு கலசம் தண்ணீரைக் கொடுக்கும் எவருக்கும், இயேசு தேவனின் இருதயத்தில் ஒரு இடத்தை வாக்கு செய்கிறார். அந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறினாலும், சிறியதோ அல்லது பெரியதோ, ஒரு தயவுள்ள விருந்தோம்பல் செய்கையானது இன்றும் தேவனுடைய சிநேகிதர்களின் சிநேகிதனாய் நம்மை மாற்றுகிறது.

தேவனின் நிறைவான ஆசீர்வாதம்

திருச்சபையின் பலசரக்கு வாகனத்திலிருந்து மளிகைப் பொருட்களை இறக்க உதவுவதற்காக மூன்று வயது சிறுவனும் அவனது அம்மாவும் ஒவ்வொரு வாரமும் திருச்சபைக்குச் சென்றனர். பலசரக்கு வாகனம் பழுதாகிவிட்டது என்று அவனது அம்மா, பாட்டியிடம் கூறுவதை சிறுவன் கேட்டான். “ஐயோ, அவர்கள் இனி எப்படி பலசரக்குக் கொண்டு வருவார்கள்?” என்று சிறுவன் கேட்க, ஒரு புதிய வாகனம் வாங்குவதற்கு திருச்சபை பணம் திரட்ட வேண்டும் என்று அவனுடைய அம்மா விளக்கினார். சிறுவன் சிரித்தான். “என்னிடம் பணம் இருக்கிறது,” என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினான். வண்ணமயமான ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டு நாணயங்களால் நிறைந்திருந்த பிளாஸ்டிக் ஜாடியுடன் அவன் திரும்பி வந்தான். அதில் தோராயமாக 2500 ரூபாய்க்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சிறுவனிடம் அதிகம் இல்லையென்றாலும், திருச்சபையின் நடவடிக்கைகள் தடைபடாமல் இருக்கும்பொருட்டு, திருச்சபையின் புதிய குளிர்பதன வாகனத்தை வாங்குவதற்கு தேவன் அந்த பணத்தையும் மற்றவர்களுடைய ஊக்கமான காணிக்கைகளோடு சேர்த்துக்கொண்டார்.

உற்சாகமாய் கொடுக்கப்படுகிற சிறிய தொகையானது, தேவனுடைய கரத்தில் வைக்கப்படும்போது, எப்போதும் தேவைக்கு அதிகமானதாய் மாறுகிறது. 2 இராஜாக்கள் 4 இல், ஒரு ஏழை விதவை எலிசா தீர்க்கதரிசியிடம் பொருளாதார உதவி கேட்கிறார். அவளிடம் என்ன இருக்கிறது என்று எலிசா தெரிந்துகொண்டு, அவளது அண்டை வீட்டாரிடத்திலிருக்கும் பாத்திரங்களை வாங்கி வரும்படி சொல்லுகிறார் (வச. 1-4). அவள் சேகரித்த ஜாடிகளில் அவளிடமிருந்த எண்ணெயை கொஞ்சமாய் வார்க்க, தேவன் அவள் வீட்டிலிருந்த அனைத்து பாத்திரங்களையும் எண்ணெயால் நிரப்புகிறார் (வச. 5-6). எலிசா அவளிடம், “நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்” (வச. 7).

நம்மிடம் இல்லாதவற்றில் நாம் கவனம் செலுத்தும்போது, நம்மிடம் இருப்பதைக் கொண்டு தேவன் செய்யும் பெரிய காரியங்களை நாம் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

குடும்பம் மிகவும் முக்கியமானது

எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்திற்காகவும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது. 

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).