இந்த கோடையில் இரண்டு முறை நான் காஜர் காஸ் (கேரட் புல்) என்று சொல்லப்படும் தாவரத்தினால் ஒருவகையான பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டேன். இரண்டு முறை எங்கள் முற்றத்தில் உள்ள தேவையற்ற தாவரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டேன். சிறு வெள்ளைப் பூக்களைக் கொண்ட இந்த காஜர் காஸ் செடிகள் ஓங்கி வளர்ந்திருந்ததை இரண்டு முறையும் பார்க்க நேர்ந்தது. அது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அதின் அருகில் சென்றுவிடலாம் என்று எண்ணினேன். விரைவில், நான் தவறு செய்தேன் என்பதை உணர்ந்தேன். இந்த சிறிய பச்சை விரோதியை நான் நெருங்குவதற்கு பதிலாக, நான் எதிர் திசையில் ஓட்டமெடுத்திருக்கவேண்டும்.

பழைய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள யோசேப்புக் கதையில், வளர்ந்து படரும் விஷ தாவரங்களைக் காட்டிலும் கொடிதான பாவத்திலிருந்து விலகியோட வேண்டியதின் அவசியத்தை நாம் பார்க்கிறோம். அவன் எகிப்தின் போத்திபாருடைய வீட்டில் தங்கியிருந்தபோது, போத்திபாரின் மனைவி அவனை இச்சையோடு அணுகுகிறாள். யோசேப்பு அவள் அருகாமையில் செல்ல முயலவில்லை. மாறாக, விலகியோடுகிறான்.
அவள் அவன் மீது பொய்யாகக் குற்றஞ்சாட்டி அவனை சிறையில் தள்ளினாலும், யோசேப்பு தன் வாழ்நாள் முழுவதும் சுத்தமனசாட்சியோடே இருந்தான். ஆதியாகமம் 39:21ல் நாம் பார்க்கிறபடி, “கர்த்தர் அவனோடிருந்தார்.”

தேவனிடத்திலிருந்து நம்மை விலகியோடச் செய்யும் செயல்கள் மற்றும் சூழ்நிலைகளில், பாவத்திற்கு எதிர் திசையில் நாம் ஓடுவதற்கு தேவன் நமக்கு உதவிசெய்ய முடியும். 2 தீமோத்தேயு 2:22ல் பவுல், “பொல்லாத இச்சைகளை விட்டு ஓடுங்கள்” என்று எழுதுகிறார். மேலும் 1 கொரிந்தியர் 6:18ல், “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்றும் அறிவுறுத்துகிறார்.
நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரியங்களிலிருந்து விலகியோடுவதற்கு, தேவனுடைய பெலத்தை நாம் சார்ந்துகொள்வோம்.