திருச்சபையின் பலசரக்கு வாகனத்திலிருந்து மளிகைப் பொருட்களை இறக்க உதவுவதற்காக மூன்று வயது சிறுவனும் அவனது அம்மாவும் ஒவ்வொரு வாரமும் திருச்சபைக்குச் சென்றனர். பலசரக்கு வாகனம் பழுதாகிவிட்டது என்று அவனது அம்மா, பாட்டியிடம் கூறுவதை சிறுவன் கேட்டான். “ஐயோ, அவர்கள் இனி எப்படி பலசரக்குக் கொண்டு வருவார்கள்?” என்று சிறுவன் கேட்க, ஒரு புதிய வாகனம் வாங்குவதற்கு திருச்சபை பணம் திரட்ட வேண்டும் என்று அவனுடைய அம்மா விளக்கினார். சிறுவன் சிரித்தான். “என்னிடம் பணம் இருக்கிறது,” என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினான். வண்ணமயமான ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டு நாணயங்களால் நிறைந்திருந்த பிளாஸ்டிக் ஜாடியுடன் அவன் திரும்பி வந்தான். அதில் தோராயமாக 2500 ரூபாய்க்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சிறுவனிடம் அதிகம் இல்லையென்றாலும், திருச்சபையின் நடவடிக்கைகள் தடைபடாமல் இருக்கும்பொருட்டு, திருச்சபையின் புதிய குளிர்பதன வாகனத்தை வாங்குவதற்கு தேவன் அந்த பணத்தையும் மற்றவர்களுடைய ஊக்கமான காணிக்கைகளோடு சேர்த்துக்கொண்டார்.

உற்சாகமாய் கொடுக்கப்படுகிற சிறிய தொகையானது, தேவனுடைய கரத்தில் வைக்கப்படும்போது, எப்போதும் தேவைக்கு அதிகமானதாய் மாறுகிறது. 2 இராஜாக்கள் 4 இல், ஒரு ஏழை விதவை எலிசா தீர்க்கதரிசியிடம் பொருளாதார உதவி கேட்கிறார். அவளிடம் என்ன இருக்கிறது என்று எலிசா தெரிந்துகொண்டு, அவளது அண்டை வீட்டாரிடத்திலிருக்கும் பாத்திரங்களை வாங்கி வரும்படி சொல்லுகிறார் (வச. 1-4). அவள் சேகரித்த ஜாடிகளில் அவளிடமிருந்த எண்ணெயை கொஞ்சமாய் வார்க்க, தேவன் அவள் வீட்டிலிருந்த அனைத்து பாத்திரங்களையும் எண்ணெயால் நிரப்புகிறார் (வச. 5-6). எலிசா அவளிடம், “நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்” (வச. 7).

நம்மிடம் இல்லாதவற்றில் நாம் கவனம் செலுத்தும்போது, நம்மிடம் இருப்பதைக் கொண்டு தேவன் செய்யும் பெரிய காரியங்களை நாம் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.