Archives: செப்டம்பர் 2020

அன்பில் வேரூன்றி

“அவ்வளவுத்தான் எடுக்கும்” மேகி சொன்னாள். அவள் பூச்செடியிலிருந்து ஒரு தண்டை வெட்டி, அதன் நுனியை தேனில் நனைத்து ஒரு உரம் நிரப்பப்பட்ட தொட்டியில் சொறுகினாள். இந்தப் பூக்களை பரப்பவும், ஒரு ஆரோக்கியமான செடியிலிருந்து பல செடிகளை எவ்வாறு உருவாக்குவது என்றும் எனக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தாள். அதனால் நான் மற்றவர்களோடு பூக்களை பகிர்ந்து கொள்ள முடியும். தேன் இளம் வேர்களை திடப்படுத்தும் என்று அவள் கூறினாள்.

அவள் வேலையை கவனித்துக்கொண்டிருந்த நான் ஆவிக்குரிய வேர்களை நிலைநாட்ட நமக்கு எந்த காரியங்கள் உதவும் என்று யோசித்தேன். நாம் முதிர்ச்சியடைந்த வலுமையான மற்றும் விசுவாசத்தில் செழித்து வளருகிற ஜனமாய் இருக்க எது உதவுகிறது? வாடிவிடுவதிலிருந்தோ அல்லது வளருவதிலிருந்தோ நம்மை தடுப்பது எது? எபேசியருக்கு “அன்பில் வேரூன்றி நிலைப்பெற்றவர்களாகி” (எபே. 3:17) என்று பவுல் எழுதுகிறார். இந்த அன்பு, நமக்கு பரிசுத்த ஆவியானவரை அளித்து நம்மை பலப்படுத்தும் தேவனிடத்திலிருந்து வருகிறது. கிறிஸ்து நம் இருதயத்தில் வாசம் செய்கிறார். நாம் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்துக் கொள்ளும்போது, (வச. 18), நாம் முழுமையாக தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிரப்பப்படுவதால், தேவனின் பிரசன்னத்தினால் ஏற்படும் செழிப்பான அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். (வச. 19).

ஆவிக்குரிய காரியங்களில் வளருவதற்கு தேவை -  தேவனின் அன்பில் வேரூன்றுவதும்,  நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற (வ 20) தேவனுக்கு நாம் பிரியமானவர்கள் என்ற சத்தியத்தை தியானிப்பதுமே. நம் விசுவாசத்திற்கு என்ன ஒரு வியக்கத்தக்க அஸ்திபாரம்!

பார்ப்பதற்கு கண்கள்

‘போகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற’ என்ற அர்தத்தைக் கொண்ட அனமார்ஃபிக் கலையின் அற்புதத்தை கண்டுபிடித்தேன். முதலில் சீரற்ற பகுதிகளின் வகைப்படுத்தலாக தோன்றும் அனமார்ஃபிக் சிற்பம், ஒரு சரியான கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒரு பக்கத்தில் தொடர்ச்சியான செங்குத்தான வரிசையை ஒன்றுசேர்ந்து ஒரு புகழ்பெற்ற தலைவரின் முகத்தை வெளிப்படுத்துகிறது. மற்றொரு பக்கத்தில் கயிற்றின் தொகுப்பு ஒரு யானையின் வெளிப்புற உருவமாக மாறுகிறது. முற்றொரு கலைப்படைப்பான கம்பியில் தொங்கவிடப்பட்ட நூற்றுக்கணக்கான கருப்பு புள்ளிகள், சரியாக பார்க்கும்போது ஒரு பெண்ணின் கண்ணைப் போல் காட்சியளிக்கின்றன. அனமார்ஃபிக் கலையில், அதன் பொருள் வெளிப்படும் வரை அதை வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்த்தால் தான் விளங்கும்.

வரலாறு, கவிதை மற்றும் பல ஆயிரக்கணக்கான வசனங்களைக் கொண்ட வேதாகமம் சில நேரங்களில் புரிந்துக் கொள்வது சற்று கடினமாகவே இருக்கிறது.  ஆனால் அதன் அர்த்தத்தை அறிந்துக் கொள்ள வேதவசனமே கற்றுத்தருகிறது. அதை ஒரு அனமார்ஃபிக் சிற்பமாக நடத்தி: வெவ்வேறு கோணங்களிலிருந்து கவனித்துப் பார்த்து ஆழமாக தியானிக்கவும்.

கிறிஸ்துவின் உவமைகள் இந்த வகையில் தான் செயல்படுகின்றன.  அவைகளைக் குறித்து அதிகமாக சிந்திக்க அக்கரை உள்ளவர்கள்  அதன் அர்த்தத்தை “பார்ப்பதற்க்கு கண்களைப்” பெற்றுக்கொள்ளுகிறார்கள். (மத். 13:10-16).  கர்த்தர் புத்தியை தந்தருளும்படியாய் தான் சொல்லுகிற காரியங்களை சிந்தித்துக்கொள்ள பவுல் தீமோத்தேயுவுக்கு கூறினார். (2 தீமோ. 2:7). சங்கீதம் 119ம் அதிகாரத்தை மீண்டும் மீண்டும் படிப்பது –  வேதத்தை தியானிப்பது ஞானத்தையும் புத்தியையும் தரும். அதன் அர்த்தத்தை அறிந்துக்கொள்ள நம் கண்களைத் திறக்கும். (119:18, 97-99).

ஒரு உவமையை ஒரு வாரத்திற்கு தியானிப்பதும் ஒரு சுவிசேஷ புத்தகத்தை ஒரு அமர்விலேயே வாசிப்பதும் எப்படி இருக்கும் ? ஒரு வசனத்தை எல்லா கோணங்களிலிருந்தும் வாசிக்க நேரத்தை செலவிடுங்கள். ஆழமாய் தியானிக்கவும். வேதத்தை வாசிப்பதன் மூலமாக அல்ல, வேதத்தை தியானிப்பதின் மூலமாகவே நமக்கு வேத அறிவு கிடைக்கும்.

தேவனே, நாங்கள் பார்க்கும்படி எங்களுக்கு கண்களைத் தாரும்.

ஒருபோதும் போதாது

சந்திரனை வட்டமிட்ட முதல் விண்வெளி பயணத்தை ஃபிராங்க் போர்மேன் நடத்திச் சென்றார். அவருக்கு அது திருப்திகரமாய் இல்லை. போய் வருவதற்கு இரண்டு நாட்கள் எடுத்தது. ஃபிராங்குக்கு பயண நோய் வந்ததினால் இதை கைவிட்டுவிட்டார். முப்பது நிமிடங்கள் எடை இல்லாமல் இருந்தது நன்றாகவே இருந்தது என்று அவர் கூறினார். பிறகு அதற்கு பழக்கப்பட்டுவிட்டார். அருகில் சென்ற போது நிலவு மங்கியிருப்பதையும் குழி குழியாய் இருப்பதையும் கண்டார். அவரது குழுவினர் சாம்பல் நிற தரிசு நிலத்தை படமெடுத்த பின்னர் சலித்துவிட்டனர்.

இதற்கு துன்பு வேறு யாரும் போகாத இடத்திற்கு ஃபிராங்க் சென்றார். அது போதாததாயிருந்தது. இந்த உலகத்திற்கு வெளியே நடந்த அனுபவத்தால் அவர் விரைவில் சோர்வடைந்ததால் இந்த விஷயத்தில் நமக்கு இருக்கும் எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த பூமிக்குரிய எந்த அனுபவமும் நமக்கு இறுதியான மகிழ்ச்சியைத் தர முடியாது என்று பிரசங்கியை எழுதியவர் கவனித்தார். “காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை. கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை” (1:8). நாம் பரவசத்தின் தருணங்களை உணரலாம் ஆனால் அந்த உற்சாகம் தொய்ந்துப்போய் அடுத்த உணர்ச்சியூட்டும் காரியத்தை நாடுகிறோம்.

சந்திரனுக்குப் பின்னால் இருளிலிருந்து பூமி எழுவதைக் கண்ட காட்சி,  ஃபிராங்கிற்கு ஒரு மகிழ்ச்சியான தருணமாயிருந்தது. நீல மற்றும் வெள்ளை சுழல் பளிங்கு போல நம் உலகம் சூரிய ஒளியில் பிரகாசித்தது. அதே போல உண்மையான மகிழ்ச்சி நம்மேல் பிரகாசிக்கும் குமாரன் - நம்முடைய ஜீவன், நம் வாழ்வின் மூலாதாரணம், அன்பு, மற்றும் அழகிற்கு இறுதி ஆதாரமயிருக்கிற இயேசுவிடமிருந்து வருகிறது. நம்முடைய ஆழ்ந்த திருப்தி இந்த உலகத்தின் வெளியிலிருந்து வருகிறது. நம்முடைய பிரச்சனை? நாம் இங்கிருந்து சந்திரனுக்கு செல்லலாம், ஆனாலும் நாம் வெகு தூரம் செல்லவில்லை.

அலைந்து திரிவது

கால்நடை பண்ணைக்கு அருகில் வசித்து வந்த மைக்கேல் என்ற நகைச்சுவை நடிகர், மேய்ச்சலின் போது, மாடுகள் தன்னைப் போலவே எப்படி அலைந்து திரிகிறது என்பதை கவனித்தார். மாடு பசுமையான மேய்ச்சல் நிலங்களைத் தேடி நகர்ந்துக் கொண்டே இருக்கும். பண்ணையின் ஓரத்தில் ஒரு நிழல் மரத்தின் கீழ் பசுமையான புற்களை கண்டுபிடிக்கும். உடைந்துப்போன வேலிக்கு அப்பால் சுவையான பசுமையான ஒரு கொத்து இருந்தது. பின்னர் மாடு வேலிக்கு அப்பால் சென்று பிறகு சாலையிலிருந்தே வெளியேறக்கூடும். பின்னர் அது மெதுவாக தன் வழியிலிருந்து காணாமல் போய்விடும்.

இந்த சுற்றித் திரிகிற பிரச்சனை மாடுகளுக்கு மட்டும் இல்லை, ஆடுகளும் சுற்றித் திரிகின்றன, ஆனால் மனிதர்களும் வழியை விட்டு விலகுகிப் போகிற போக்குள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

இதனால் தான் வேதாகமத்தில் தேவன் நம்மை ஆடுகளோடு ஒப்பிடுகிறார். பொறுப்பற்ற சமரசங்கள் மற்றும் முட்டாள்தனமான முடிவுகளை எளிதாக எடுத்து நாம் அலைந்து திரிந்தும், வழியைவிட்டு விலகியும் விடுகிறோம். ஆனால், சத்தியத்தை விட்டு எவ்வளவோ விலகி சென்று விட்டோம் என்பதை நாம் கவனிக்கிறதில்லை.

பரிசேயர்களுக்கு, இயேசு காணாமல் போன ஆட்டின் கதையை கூறினார். தன்னிடமிருந்த தொண்ணூற்று ஒன்பது ஆடுகளை விட்டுவிட்டு காணாமல் போன ஒரு ஆட்டை தேடிச் சென்ற மேய்ப்பனுக்கு அந்த ஒரு ஆடு மிகவும் மதிப்புள்ளதாய் இருந்தது. காணாமல் போன அதை அவன் கண்டுப்பிடித்த போது அவன் சந்தோஷப்பட்டான் (லூக். 15:6).

மனந்திரும்பி அவரிடம் வருபவர்களினிமித்தம் தேவனும் அப்படியே சந்தோஷப்படுவார். காணாமல் போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன். என்னோடேகூட சந்தோஷப்படுங்கள் (வ 6) என்று இயேசு கூறுகிறார். நம்மை பாவத்திலிருந்து மீட்கவும் பாரலோகம் சேர்க்கவும் தேவன் நமக்காக ஒரு இரட்சகரை அனுப்பினார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும். 

 

இணைந்து இயேசுவுக்கு ஊழியம் செய்தல்

மைக்ரோனேசியாவில் உள்ள ஓர் தீவில் சிக்கித்தவிக்கும் இரண்டு ஆண்களுக்கு உதவ மீட்புப் பணியாளர்கள் பிரயாசப்பட்டனர். அவர்களுக்கு சுகாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு அவர்களை விரைந்து காப்பாற்றுவதற்கு குழுவாய் செயல்படவேண்டியது அவசியமாய் தோன்றியது. அவர்களை முதலில் கண்டுபிடித்த விமானி, அவர்களின் அருகாமையிலிருந்த ஆஸ்திரேலிய கப்பலுக்கு செய்தியனுப்பினார். கப்பல், இரண்டு ஹெலிகாப்டர்களை அனுப்பியது, அவை உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கின. பின்னர், அமெரிக்க கடலோர காவல்படை அங்கு வந்து ஆட்களை சரிபார்த்து தகவல் அளித்தனர். இறுதியாக, ஓர் மைக்ரோனேசிய ரோந்துப் படகு அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்துவிட்டது.

நாம் இணைந்து செயல்பட்டால் நிறைய சாதிக்க முடியும். பிலிப்பிய விசுவாசிகள் அப்போஸ்தலர் பவுலை ஆதரிக்க தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்தனர். லீதியாளும் அவரது குடும்பத்தினரும் அவரை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றனர் (அப்போஸ்தலர் 16:13-15). கிலேமெந்து, எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் (இவர்கள் ஒத்துப்போகவில்லை) அனைவரும் நற்செய்தியைப் பரப்புவதற்கு அப்போஸ்தலருடன் நேரடியாக வேலை செய்தனர் (பிலிப்பியர் 4:2-3). பின்னர், பவுல் ரோமில் சிறையில் அடைக்கப்பட்டபோது, தேவாலயம் (விசுவாசிகள்) அவரது பராமரிப்புக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை சேகரித்து, எப்பாபிராத்து மூலம் (வச. 14-18) விநியோகித்தது. பவுல் அப்போஸ்தலரின் ஊழியத்திற்காக பிலிப்பிய திருச்சபை தொடர்ந்து ஜெபத்தில் தரித்திருந்திருக்கக் கூடும் (1:19).

இந்த பண்டைய திருச்சபை விசுவாசிகள் ஒன்றாக இணைந்து ஊழியம் செய்ததற்கான எடுத்துக்காட்டுகள் இன்று நம்மை ஊக்குவிக்கும். தேவன் நம்மை வழிநடத்தி, நமக்கு அதிகாரம் கொடுத்ததால், ஜெபிக்கவும் மற்றவர்களுக்கு ஊழியம்செய்யவும், சக விசுவாசிகளுடன் ஒத்துழைக்கவும், நம்மால் இயன்றதைவிட அதிகமாக செய்யமுடிகிறது. “தனித்து வேலை செய்தால் நாம் ஒரு துளி, ஆனால் இணைந்து வேலை செய்தால் நாம் சமுத்திரம்.”

 

தேவனே என் துணையாளர்

என் நண்பர் ராலே தனது எண்பத்தைந்தாவது பிறந்தநாளை நோக்கி விரைகிறார்! அவரை நான் முதன்முதலில் சந்தித்ததிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக எனக்கு ஊக்கமளிக்கக்கூடிய ஆதாராமாக அவர் இருந்துள்ளார். பணி ஓய்வு பெற்ற பிறகு, அவர் ஓர் புத்தகம் எழுதும் பணியை நிறைவுசெய்துவிட்டு, வேறொரு வேலையை செய்வதாக என்னிடம் கூறினார். அவற்றைக் கேட்க எனக்கு ஆர்வமாயிருந்தது ஆனால் ஆச்சரியப்படவில்லை. 

தனது எண்பத்தைந்து வயதில், வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள காலேப் தன் ஓட்டத்தை நிறுத்த தயாராக இல்லை. தேவன் இஸ்ரவேலுக்கு வாக்களித்த கானான் தேசத்தை சுதந்தரிப்பதற்காக பல சகாப்தங்களாக வனாந்தர வாழ்க்கை மற்றும் யுத்தங்கள் ஆகியவற்றின் மத்தியிலும், தேவபக்தியும் விசுவாசமும் அவரை தாங்கியது. அவர், “மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது” (யோசுவா 14:11) என்று உரைக்கிறார். அவர் எந்த வழிகளில் ஜெயங்கொள்வார்? “கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன்” (வச. 12) என்று காலேப் பதிலளிக்கிறார். 

வயது, வாழ்க்கையின் நிலை அல்லது சூழ்நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், தேவனை முழுமனதோடு பற்றிகொள்ளும் யாவருக்கும் தேவன் உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். நமக்கு உதவும் நம் இரட்சகராகிய இயேசுவில், தேவன் வெளிப்பட்டார். சுவிசேஷங்கள், கிறிஸ்துவிடத்திலிருந்து தேவன்மீது விசுவாசம் வைப்பதை நமக்கு போதிக்கிறது. உதவிக்காக தேவனை அண்டிய யாவருக்கும் தேவன் தன் அக்கறையையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். எபிரெய நிருப ஆசிரியர் “கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்” (எபிரெயர் 13:6) என்று அறிக்கையிடுகிறார். இளைஞரோ அல்லது வயதானவரோ, பலவீனமானவரோ அல்லது பலவானோ, கட்டுண்டவரோ அல்லது சுதந்திரவாளியோ, வேகமாக ஓடுகிறவரோ அல்லது முடவனோ, யாராக இருந்தாலும் இன்று அவருடைய உதவியைக் கேட்பதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?