Archives: ஏப்ரல் 2019

பரிசுத்தவான்களும் பாவிகளும்

யோவான் ஸ்நானனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி பாலைவனத்தில் வாழ்ந்து வந்த, எகிப்தைச் சேர்ந்த மேரி (கி.பி. 344-421). தன்னுடைய வாலிப வயதில் ஆண்களை மயக்கி தவறான இன்பம் அனுபவித்துவந்தாள். அவளுடைய கேவலமான வாழ்வின் உச்சக்கட்டத்தில் அவள் எருசலேமிற்குப் புனித பயணம் செய்பவர்களையும் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எருசலேம் சென்றாள். ஆனால், அங்கு அவள் தன்னுடைய பாவங்களைக் குறித்து குத்தப்பட்டவளாய் மன மாற்றம் பெற்றாள். அதன் பின்னர் மனந்திரும்பியவளாய் தனிமையில் பாலைவனங்களில் வாழ்ந்தாள். மேரியின் இத்தகைய முழு மாற்றம் தேவனுடைய கிருபையின் மகத்துவத்தையும், சிலுவையின் மீட்கும் வல்லமையையும் விளங்கச் செய்கின்றது.

இயேசுவின் சீடனான பேதுரு மூன்று முறை இயேசுவை மறுதலித்தான். இந்த மறுதலித்தலுக்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் பேதுரு இயேசுவுக்காகத் தான் மரிக்கவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தான். (லூக். 22:33) அவனுடைய தோல்வியைக் குறித்த உணர்வு அவனைக் கசக்கிப் பிழியும் அடியாக அமைந்தது (வச. 61-62) இயேசுவின் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்னர் பேதுரு சில சீடர்களோடு சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது இயேசு அவர்களுக்குத் தரிசனமானார். இயேசுவை மறுதலித்த மூன்று முறைகளுக்குப் பதிலாக, (யோவா. 21:1-3) அவன் இயேசுவின் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்த மூன்று வாய்ப்புகளைக் கொடுக்கின்றார். அவன் ஒவ்வொரு முறை வெளிப்படுத்தியபோதும் இயேசு தன்னுடைய ஜனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பினைக் கொடுக்கின்றார் (வச. 15-17). இயேசுவினுடைய இந்த அதிசயிக்கச் செய்யும் கிருபைதான் பேதுருவை கிறிஸ்துவின் சபையைக் கட்டும் படி முக்கிய பங்காற்றக் செய்தது. அவரை கிறிஸ்துவுக்காக தன் வாழ்வையே கொடுக்கச் செய்தது.

நம்மில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைச் சரித்திரமும் வாழ்வின் தோல்விகளும், ஏமாற்றங்களும் நிறைந்ததாக ஜெபஙகளாக ஆரம்பிக்கலாம். ஆனால். தேவனுடைய கிருபை வேறு வகையான முடிவையே கொண்டு வரும். அவருடைய கிருபையால் அவர் நம்மை விடுவித்து நம் வாழ்வை மாற்றுகின்றார்.

வாழ்வின் சோதனைகளைப் புரிந்து கொள்ளல்

என்னுடைய நண்பனின் தந்தையுடைய மருத்துவ ஆய்வு அறிக்கை, அவருக்கு புற்று நோயிருப்பதாகத் தெரிவித்தது. ஆனாலும் கீமோ சிகிச்சையின் போது அவர் இயேசுவின் மீது விசுவாசம் வைத்தார். அத்தோடு குணமடைந்த நிலையையும் அடைந்தார். அவர் பதினெட்டு மாதங்கள் புற்று நோயிலிருந்து விடுதலை பெற்றவராக வாழ்ந்தார். ஆனால், அது திரும்பவும் வந்தது. முன்னிலைமையையும் விட மோசமாகத் தாக்கப்பட்டார். அப்போதும் அவரும் அவருடைய மனைவியும்  கரிசனையோடும், ஏன் என்ற கேள்வியோடும் சந்தித்தபோதும் தேவன் மீதுள்ள நம்பிக்கையை விட்டுவிடவில்லை. ஏனெனில், முதல்முறை நோய் தாக்கிய போது தேவன் அவரை எவ்வாறு காத்துக் கொண்டார் எனக் கண்டு கொண்டனர்.

நாம் ஏன் சோதனைகளின் வழியே கடந்து செல்கின்றோம் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதுவே யோபுவின் நிலையும் கூட, அவர் மிகவும் கொடுமையான விவரிக்க இயலாத துயரத்தையும், நஷ்டத்தையும் சந்தித்தார். ஆனாலும் அவருடைய அநேகக் கேள்விகளுக்கிடையே யோபு 12ல் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துகின்றார். “இதோ, அவர் இடித்தால் கட்ட முடியாது. அவர் மனுஷரை அடைத்தால் விடுவிக்க முடியாது” (வச. 14) “அவரிடத்தில் பெலனும் ஞானமும் உண்டு (வச. 16) “அவர் ஜாதிகளை பெருகவும் அழியவும் பண்ணுகிறார்” (வச. 23). இந்த நீண்ட பட்டியலில் யோபு, தேவன் ஏன் வேதனையையும் துன்பங்களையும் அனுமதித்தார், அவருடைய நோக்கம் என்ன என்பதைக் குறித்து குறிப்பிடவேயில்லை. யோபுவிடம் அதற்கு பதிலும் இல்லை. ஆனாலும் இவை அனைத்தின் மத்தியிலும் அவன் தைரியமாகச் சொல்கின்றான். “தேவனிடத்தில் ஞானமும், வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும். அவருக்குத்தான் ஆலோசனையும், புத்தியும் உண்டு” (12:13).

தேவன் ஏன் சில போராட்டங்களை நம் வாழ்வில் அனுமதிக்கின்றாரென நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. என்னுடைய நண்பனின் பெற்றோரைப் போன்று நாமும் நம்முடைய நம்பிக்கையை அவர் மீது வைப்போம். தேவன் நம்மை நேசிக்கின்றார். மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கின்றது (வச. 10) அவர் நம்மை விசாரிக்கின்றவர் (1 பேது. 5:7) ஞானமும், வல்லமையும், புத்தியும் கொள்ளலும் அவருக்கேயுரியது.

தேவன் தரும் பணி ஓய்வுத் திட்டம்

பழங்காலப் பொருட்களைப்பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த முனைவர். வார்விக் ராட்வெல் தன்னுடைய பணி ஓய்விற்காகத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து தேசத்தில், லிச்பீல்டிலுள்ள பேராலயத்தில் ஓர் அரிய காரியத்தைக் கண்டுபிடித்தார். கட்டடக் கலைஞர்கள் அந்த தேவாலயத்தின் தளத்தின் ஒரு பகுதியை மிகவும் கவனத்தோடு தோண்டியெடுத்து, அதில் நகரக்கூடிய ஒரு தளத்தை அமைக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது அங்கு பிரதான தூதனான காபிரியேல் தூதனின் சிலையைக் கண்டெடுத்தனர். அது ஏறத்தாள 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கண்டு கொண்டனர். எனவே முனைவர் ராட்வெல்வின் பணி ஓய்வுத்திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. அவருடைய கண்டுபிடிப்பு ஒரு புதிய ஆர்வத்தோடு, ஒரு புதிய கோணத்தில் அவரைச் செயல்படவைத்தது.

மோசேயும் எண்பது வயதான போது ஓர் அனல்மூட்டும் கண்டுபிடிப்பிற்குள் இழுத்துக் கொள்ளப்பட்டான். அவனுடைய வாழ்வே மாறியது. எகிப்து ராஜகுமாரியின் வளர்ப்பு மகனாக இருந்தபோதும் அவன் தான் ஓர் எபிரெயரின் வழிவந்தவன் என்பதை மறக்கவேயில்லை. தன்னுடைய உறவினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைகக் கண்ட போது அவன் கொதித்தெழுந்தான் (யாத். 2:11-12) எபிரெயனை அடித்த ஓர் எகிப்தியனை மோசே கொன்று போட்டான் எனப் பார்வோன் கேள்வியுற்ற போது, மோசேயைக் கொன்று போட திட்டம் செய்தான். எனவே மோசே மீதியான் தேசத்திற்கு தப்பி சென்று அங்கு தங்கினான் (வச. 13-15).

நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அவன் எண்பது வயதான போது, தன்னுடைய மாமனாரின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, “அங்கே கர்த்தருடைய தூதனானவர் முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினி ஜீவாலையிலே நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான். முட்செடி அக்கினியால் ஜூவாலித்து எரிந்தும், வெந்து போகாமல் இருந்தது” (3:2). முட்செடியின் நடுவிலிருந்து தேவன் மோசேயைக் கூப்பிட்டார். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்து வழிநடத்துமாறு அவனிடம் கூறினார் (வச. 3-25).

உன் வாழ்வின் இந்த வேளையில் தேவன் எத்தகைய நோக்கத்திற்காக உன்னை அழைக்கின்றார்? உன்னுடைய பாதையில் தேவன் என்ன புதிய திட்டத்தை வைத்திருக்கின்றார்?

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனை அறியச்செய்தல்

தேவன் மீதும் மக்கள் மீதும் கேத்ரின் கொண்டிருந்த அன்பானது வேதாகம மொழிபெயர்ப்பு பணியில் அவரை ஈடுபடச்செய்தது. இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் தாய்மொழியில் வேதாகமத்தைப் படித்து, அதை ஆழமாகப் புரிந்துகொண்டபோது அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் சொல்லும்போது, “அவர்கள் வேதத்தை படித்து புரிந்துகொள்ளும்போது அடிக்கடி கைதட்டவோ மற்ற விதங்களிலோ தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் இயேசுவைப் பற்றி வாசித்து, ‘ஆஹா அற்புதம்!’ என்று சொல்கிறார்கள்” என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

அதிகமான மக்கள் தங்கள் சொந்த மொழியில் வேதத்தை வாசிக்க வேண்டும் என்று கேத்ரின் ஏங்குகிறார். இந்த விதத்தில், பத்மூ தீவில் இருந்த வயதான சீஷனான யோவானின் பார்வையை அவர் தத்தெடுக்கிறார். ஆவியின் மூலம், தேவன் அவரை பரலோகத்தின் சிம்மாசன அறைக்குள் கொண்டு சென்றார். அங்கு அவர் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்க” (வெளிப்படுத்தல் 7:9) காண்கிறார். அவர்களெல்லாரும் “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்” (வச. 10). 

தேவன் தன்னை ஆராதிக்கும் ஏராளமான ஜனங்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்களுக்காக ஜெபிப்பவர்களை மட்டும் பயன்படுத்துவதில்லை. இயேசுவின் நற்செய்தியை அன்புடன் தங்கள் அண்டை வீட்டாரிடத்தில் கொண்டுசெல்பவர்களையும் பயன்படுத்துகிறார். “எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” (வச. 12) என்று அவரை துதித்து இந்த பணியில் நாமும் கைகோர்க்கலாம். 

 

தேவனால் அழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுதல்

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன். 

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார். 

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

 

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.