Archives: பிப்ரவரி 2018

காணாமல் போனது, கண்டு பிடிக்கப்பட்டது

என்னுடைய மாமியார் எனது உறவினர் ஒருவரோடு கடைக்குச் சென்றபோது, வழி தவறிவிட்டார்கள் என்பதைக் கண்டுபிடித்தோம். நானும் என் மனைவியும் பதறிப்போனோம். அம்மாவிற்கு நியாபக மறதியும் குழப்பமும் காணப்பட்டது. அவர்களால் என்ன செய்கிறார்களென்பதைச் சொல்ல முடியாது. அவர்கள் அந்தப் பகுதியில் அலைந்து கொண்டிருப்பார்களா? அல்லது ஏதாவது ஒரு பஸ்ஸில் அது அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் என்றெண்ணி ஏறியிருப்பார்களா? மிக மோசமான காட்சிகளின் எண்ணங்கள் எங்கள் மனதில் வட்டமிட, நாங்கள் தேவனிடம், தயவுகூர்ந்து அவர்களைக் கண்டுபிடித்துத் தாரும் என்று கதறிக் கொண்டே தேட ஆரம்பித்தோம்.

சில மணிகளுக்குப் பின்னர் பல மைல்களுக்குப்பால் ஒரு சாலையின் வழியே தடைபட்டு என் மாமியார் நின்றதைக் கண்டுபிடித்தோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் படியான ஆசீர்வாதத்தை தேவன் எங்களுக்குத் தந்ததை நினைத்துப் பார்த்தோம். பல மாதங்களுக்குப் பின்னர், அவர்களது எண்பதாவது வயதில், தேவனுடைய இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளும்படி இயேசுவிடம் திரும்பினார்கள்.

இயேசு மனிதர்களைக் காணாமல் போன ஆடுகளுக்கு ஒப்பிட்டு இந்த எடுத்துக்காட்டைக் குறிப்பிடுகிறார். உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து அவைகளில் ஒன்று காணாமல் போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித் திரியானோ? கண்டுபிடித்த பின்பு அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக் கொண்டு... தன் சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன். என்னோடே கூட சந்தோஷப்படுங்கள் என்பான்
(லூக். 15:4-6).

மேய்ப்பர்கள் தங்கள் ஆடுகளை எண்ணி எல்லாம் இருக்கின்றனவா என உறுதிப்பண்ணிக் கொள்வார்கள். அதே போலவே இயேசுவும் தன்னை ஒரு மேய்ப்பனாக பாவித்து ஆடுகளாகிய நாம் ஒவ்வொருவரையும் - இளம் வயதினரோ, முதியவர்களோ எல்லாரையும் அவர் அதிகமாய் மதிக்கிறார். நாம் நம் வாழ்வில் நம் நோக்கத்திற்காக தேடி அலைந்து கொண்டிருந்தாலும் கிறிஸ்துவிடம் திரும்புவதற்கு அது இன்னமும் பிந்தி விடவில்லை. தேவன் நம்மை அவருடைய அன்பையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க விரும்புகிறார்.

பயம் நீங்குதல்

நம்முடைய உடல் நம்முடைய உணர்வுகளான அச்சம் பயம் போன்றவற்றிற்கு எதிர் வினையைத் தரும். வயிறு கனத்தலும் இருதய படபடப்பும், மூச்சுத்திணறலும் நம்முடைய பதட்டத்தின் அடையாளங்கள். நம்முடைய உடலமைப்பு மூலம் இத்தகைய அமைதியற்ற உணர்வுகளைப் புறக்கணித்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது.

ஒரு நாள் இரவில் இயேசு ஐயாயிரம் பேருக்கும் மேலானோருக்கு உணவளித்த போது நடந்த அற்புதத்தைக் கண்ட சீடர்களை பயத்தின் அலைகள் சூழ்ந்து கொண்டன. தேவன் அவர்களை பெத்சாயிதா பட்டணத்திற்கு அனுப்பி விட்டு தேவனோடு தனித்து ஜெபம் பண்ணினார். அந்த இரவிலே அவர்கள் காற்றை எதிர்த்து தண்டு வலித்து தங்கள் படகை ஓட்டிக் கொண்டிருக்கையில் இயேசு தண்ணீர் மேல் நடந்து வருவதைக் கண்டனர். அவர்கள் இயேசுவை ஓர் ஆவேசம் என எண்ணி பயந்தனர் (மாற். 6:49-50).

ஆனால் இயேசு அவர்களிடம் பயப்படாதிருங்கள். திடன் கொள்ளுங்கள் என்று மேலும் உறுதியளிக்கின்றார். இயேசு அவர்களுடைய படகில் ஏறியதும் காற்று அமர்ந்தது. அவர்களும் கரையை அடைந்தனர். அவர் தந்த சமாதானத்தைப்பெற்றபோது, அவர்களுடைய அச்ச உணர்வு அமைதியடைந்தது.

பதட்டத்தினால் நாம் மூச்சற்று உணரும் போது, நாம் இயேசுவின் உறுதியான வல்லமைக்குள் இளைப்பாறுவோம். அவர் நம்மைச் சுற்றியுள்ள அலைகளை அமைதிப்படுத்துவார் அல்லது நம்மை பெலப்படுத்தி அவற்றை எதிர் நோக்கச் செய்வார்.  அவர் நமக்கு அவருடைய சமாதானத்தை எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை (பிலி. 4:7) கொடுக்கிறார். நம்முடைய பயங்களிலிருந்து நம்மை விடுவித்து நம்முடைய ஆவியையும், உடலையும் அமைதிப்படுத்துகின்றார்.

பயமில்லாமல் கொடுத்தல்

என்னுடைய மகன் சேவியர் ஆறு வயதாயிருக்கையில் என்னுடைய சிநேகிதி தன்னுடைய தத்தித் தத்தி நடக்கும் குழந்தையைக் கூட்டிக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். சேவியர் தன்னுடைய விளையாட்டுப் பொருட்களில் சிலவற்றை அச்சிறுவனுக்குக் கொடுக்க விரும்பினான். சேவியரின் இந்த பெருந்தன்மையை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். அவன் பஞ்சடைக்கப்பட்ட மிருக பொம்மையொன்றைக் கொடுக்க முன் வந்தபோது, அப்பொம்மையை வாங்குவதற்கு என் கணவர் எத்தனை இடங்களுக்குச் சென்று அநேகக் கடைகளைத் தேடி அலைந்து வாங்கி வந்ததை நினைத்தேன். இப்படி கிடைப்பதற்கரிய அந்த பொம்மையை என் சிநேகிதியும் தாழ்மையுடன் நிராகரித்தாள். ஆனால் சேவியர் அந்த பரிசை சிறுவனின் கரங்களில் வைத்து என்னுடைய தந்தை எனக்கு நிறைய பொம்மைகளை பகிர்ந்து கொள்ளும்படி கொடுத்துள்ளார் என்றான்.

சேவியர் தன்னுடைய கொடுப்பதின் உறுதியை என்னிடமிருந்தே கற்றுக் கொண்டாலும் நான் தேவனிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் பெற்ற வளங்களை இறுகப் பற்றிக் கொள்பவளாக இருக்கின்றேன். ஆனால் என்னுடைய பரலோகத் தந்தை எனக்குத் தேவையான யாவற்றையும் எனக்குத் தருகிறார். எனவே நான் சுலபமாக பகிர்ந்து கொள்ள முடியும்.

பழைய ஏற்பாட்டில் தேவன் தங்களுக்குத் தந்தவற்றில் ஒரு பகுதியை லேவியர்களான ஆசாரியர்களுக்குக் கொடுப்பதன் மூலம் தேவனை நம்பும்படி கட்டளையிட்டார். ஆசாரியர்கள் அவற்றைக் கொண்டு தேவையுள்ளவர்களுக்கு தர வேண்டுமெனவும் கட்டளையிட்டார். ஜனங்கள் கொடுப்பதற்கு மறுத்த போது மல்கியா தீர்க்கதரிசி அவர்கள் தேவனை வஞ்சிக்கிறார்கள் (மல்கி. 3:8-9) எனக் குறிப்பிடுகிறார். ஆனால் அவர்கள் மனப்பூர்வமாய் கொடுக்கும்போது தேவன் வாக்களித்த ஆசீர்வாதங்களையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்வார்கள் என்ற உறுதியில் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர் (வச. 10-11) மற்றவர்களும் இவர்கள் பாக்கியவான்களென்பதைத் தெரிந்து கொள்வார்கள் (வச. 12).

நம்முடைய பணம் நம்முடைய திட்டங்கள். தேவன் நமக்களித்த கொடைகள் யாவற்றையும் நாம் கையாண்டாலும் தேவனுக்குக் கொடுத்தல் என்பது ஒரு வகை ஆராதனையாகும். தாராளமாகவும் தைரியமாகவும் கொடுப்பது அன்புள்ள நம் தேவன் பேரிலுள்ள நம்முடைய நம்பிக்கையைக் காட்டுகிறது - அவர் நம்முடைய தாராளமான கொடையாளர்.

நம்முடைய உறுதியான அஸ்திபாரம்

அநேக ஆண்டுகளாக எங்கள் பட்டணத்தின் மக்கள் நிலச்சரிவுக்குள்ளாகக் கூடிய பகுதியில் வீடுகள் கட்டவும் வீடுகள் வாங்கவும் செய்தனர். சிலருக்கு அந்த நிலப்பகுதியின் நிலையற்றத் தன்மை தெரியும். வேறு சிலருக்கு அதைப் பற்றியே தெரியாது. புவியியலாளர்களும் பட்டணத்தின் ஒருங்கமைப்பாளர்களும் பாதுகாப்பான எச்சரிப்பு விளக்கப்படவில்லை அல்லது அலட்சியப்படுத்தப்பட்டது (த கெசட் கொலோரடோ ஸ்பிரிங்ஸ், ஏப்ரல் 27, 2016) அங்குள்ள வீடுகளிலிருந்து காணக்கூடிய காட்சி பிரமிக்கச் செய்யும். ஆனால் வீட்டின் கீழேயுள்ள நிலமோ அதன் அமைப்பின்படி அழிவுக்குள்ளாகக் கூடியது, ஆபத்தானது.

முந்தைய இஸ்ரவேலரில் அநேகர் விக்கிரக வணக்கத்தை விட்டு விடும்படி ஜீவனுள்ள தேவன் கொடுத்த எச்சரிப்பை அலட்சியப்படுத்தினர். அவர்களின் கீழ்படியாமையால் கிடைத்த சோக முடிவை பழைய ஏற்பாடு தெரிவிக்கின்றது. நம்மைச் சுற்றியுள்ள உலகம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற போதிலும், தேவன் தம்மிடம் திரும்பி, தம்முடைய வழிகளைப் பின்பற்றும் தன்னுடைய ஜனங்களுக்கு மன்னிப்பு நம்பிக்கை என்ற செய்தியை தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்.

ஏசாயா தீர்க்கதரிசி பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும். கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம் (ஏசா. 33:6) எனக் கூறுகிறார்.

இன்றைக்கும் பழைய ஏற்பாட்டுக் காலங்களிலிருந்தது போல, தேவன் நாம் தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார். நம் வாழ்வை எதின் மீது கட்டப் போகிறோம்? நம்முடைய சொந்த வழிகளில் நடக்கப் போகிறோமா? அல்லது வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள என்றும் நிலைத்திருக்கும் அவருடைய கொள்கைகளைத் தழுவிக் கொள்ளப் போகிறோமா?

நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான் வேறஸ்திபாரம் மணல் தான் (எட்வர்ட் மோட்)

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் கொடுத்த சுபாவம் மற்றும் வரங்கள்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் ஓர் கல்லூரி ஓய்வு விடுதிக்குச் சென்றேன், அங்கு எல்லோரும் ஆளுமைத் தேர்வைப் பற்றி பேசினர். சில ஆங்கில குறியீட்டு எண்களைச் சொல்லி, இது தான் தங்களுடைய ஆளுமை என்று சொல்லிக்கொண்டனர். நானும் விளையாட்டிற்காய், வாய்க்கு வந்த சில எழுத்துக்களைச் சொல்லி, இது தான் என்னுடைய ஆளுமை என்று கிண்டலடித்தேன். 

அப்போதிருந்து, மேயர்-பிரிக்ஸ் மதிப்பீடு எனப்படும் ஆளுமைத் தேர்வைப் பற்றி நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவைகள் நம்மையும் மற்றவர்களையும் புரிந்துகொள்வதற்கு உதவமுடியும் என்பதால், அதை கவர்ச்சிகரமானதாக நான் காண்கிறேன். நாம் அவற்றை அதிகமாய் பயன்படுத்த அவசியம் இல்லை எனினும், அவை நம்மை உருவாக்கி வளர்ப்பதற்கு தேவன் பயன்படுத்தும் ஓர் கருவியாய் நிச்சயமாய் இருக்கக்கூடும். 

நம் ஆளத்துவத்தை கண்டறியும் சோதனைகளை வேதம் வழங்கவில்லை. ஆனால் தேவனுடைய பார்வையில் ஒவ்வொரு நபரின் தனித்துவத்தையும் இது உறுதிப்படுத்துகிறது (சங்கீதம் 139:14-16; எரேமியா 1:5 ஐப் பார்க்கவும்). மேலும் சிறந்த ஆளத்துவத்தையும் வரங்களையும் தேவன் நமக்கு அருளிசெய்து அவருடைய இராஜ்யத்தில் மற்றவர்களுக்கு ஊழியம்செய்ய நம்மை ஊக்குவிக்கிறதையும் இது காண்பிக்கிறது. ரோமர் 12:6ல், பவுல், “நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே..” என்று இக்கருத்தை ஆமோதிக்கிறார். 

அந்த வரங்கள் நம்முடைய சுய ஆதாயத்திற்காக அல்லவென்றும், கிறிஸ்துவின் சரீரமான திருச்சபைக்கு ஊழியம் செய்யும் நோக்கத்தோடே நமக்கு அருளப்படுகிறது என்று பவுல் வலியுறுத்துகிறார் (வச. 5). இது நமக்குள் உள்ளும் புறம்பும் கிரியை நடப்பிக்கும் அவருடைய கிருபை மற்றும் நன்மையின் வெளிப்பாடாகும். தேவனுடைய ஊழியத்தின் பயன்படும் பாத்திரமாய் திகழுவதற்கு அவை நமக்கு அழைப்புவிடுக்கிறது. 

 

அன்பான கீழ்ப்படிதல்

எங்கள் திருமணத்தின்போது, எங்கள் போதகர் என்னிடம், “உன் கணவரை நேசிக்கவும், மதிக்கவும், கீழ்ப்படிவதாகவும் உறுதியளிக்கிறீர்களா? நீங்கள் இறக்கும் வரை இணைந்திருப்பீர்களா?” என்று கேட்டார். என் கணவரைப் பார்த்து, “கீழ்ப்படிதலா?”  என்று நான் கிசுகிசுத்தேன். நாங்கள் எங்கள் உறவை அன்பு மற்றும் மரியாதையின் அடிப்படையில் கட்டியெழுப்பினோம். நான் உறுதியயெடுக்கவேண்டும் என்று கேட்கப்பட்ட குருட்டுத்தனமான கீழ்ப்படிதல் அல்ல. நான் கீழ்படிதல் என்ற வார்த்தையை புரிந்துகொண்டு, மனப்பூர்வமாய் சம்மதம் தெரிவித்தபோது, அந்த நிகழ்வை என்னுடைய மாமனார் தன்னுடைய கேமராவில் படம்பிடித்தார். 

பல ஆண்டுகளாக, கீழ்ப்படிதல் என்ற வார்த்தைக்கான எனது எதிர்ப்பும், கணவன்-மனைவி இடையே உள்ள நம்பமுடியாத சிக்கலான உறவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தேவன் எனக்குக் காண்பித்தார். கீழ்ப்படிதல் என்றால் “அடிபணிக்கப்பட்ட” அல்லது “கட்டாயமான சமர்ப்பணம்” என்று நான் புரிந்திருந்தேன். இந்த புரிதலை வேதாகமம் ஆதரிக்கவில்லை. மாறாக, வேதாகமத்தில் உள்ள கீழ்ப்படிதல் என்ற வார்த்தை, நாம் தேவனை நேசிக்கக்கூடிய பல வழிகளை வெளிப்படுத்துகிறது. நானும் என் கணவரும் முப்பது வருட திருமண வாழ்க்கையை கொண்டாடிய போது, பரிசுத்த ஆவியின் வல்லமையால் நாங்கள் இன்னும் இயேசுவையும், ஒருவரையொருவரையும் அதிகமாய் நேசிக்க கற்றுக்கொண்டிருக்கிறோம்.

“நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்” (யோவான் 14:15) என்று இயேசு சொன்னதின் மூலம், வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிவது அவருடன் தொடர்ந்து அன்பான மற்றும் நெருக்கமான உறவின் விளைவாக இருக்கும் என்று அவர் நமக்குக் காண்பித்துள்ளார் (வச. 16-21).

இயேசுவின் அன்பு தன்னலமற்றது, நிபந்தனையற்றது; ஒருபோதும் வலுக்கட்டாயமானதோ அல்லது தவறானதோ அல்ல. நம்முடைய எல்லா உறவுகளிலும் நாம் அவரைப் பின்பற்றி கனப்படுத்தும்போது, அவருக்குக் கீழ்ப்படிவதை ஞானமான, அன்பான நம்பிக்கை மற்றும் ஆராதனையின் விளைவாகக் காண பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுவாராக. 

 

ஆனந்த கண்ணீர்

ஓர் நாள் காலையில் வீட்டை விட்டு வெளியேறிய டீன், தன்னுடைய சில நண்பர்கள் பலூன்களுடன் காத்திருந்ததைக் கண்டார். அவனுடைய நண்பன் ஜோஷ் முன்பாக வந்து, அவனிடத்தில் ஒரு கவரை கொடுப்பதற்கு முன்பாக, “உன்னுடைய கவிதைகளை ஓர் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்” என்றான். அந்த கவரின் உள்ளே “முதல் பரிசு” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை இருந்தது. விரைவில் அனைவரும் சேர்ந்த ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். டீனின் நண்பர்கள் ஓர் அழகான காரியத்தைச் செய்து, அவருடைய எழுத்துத் திறமையை உறுதிப்படுத்தினர்.

மகிழ்ச்சிக்காக அழுவது ஓர் முரண்பாடான அனுபவம். கண்ணீர் பொதுவாக வலிக்கான பதில், மகிழ்ச்சி அல்ல. மகிழ்ச்சி பொதுவாக சிரிப்புடன் வெளிப்படுத்தப்படுகிறது, கண்ணீரினால் அல்ல. இத்தாலிய உளவியலாளர்கள், நாம் ஆழமாக நேசிக்கப்படுவதை உணரும்போது அல்லது ஓர் முக்கிய இலக்கை அடையும்போது, ஆழ்ந்த தனிப்பட்ட அர்த்தத்தின்போது மகிழ்ச்சியின் கண்ணீர் வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்வின் அர்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது என்ற முடிவுக்கு இது வழிவகுத்தது.

இயேசு சென்ற இடமெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதை நான் கற்பனை செய்கிறேன். குருடனாகப் பிறந்தவனின் பெற்றோர் இயேசு அவனைக் குணமாக்கியபோது (யோவான் 9:1-9), அல்லது மரியாள் மற்றும் மார்த்தாள், தங்கள் சகோதரனை மரணத்திலிருந்து எழும்பிய பிறகு (11:38-44) மகிழ்ச்சியில் அழாமல் எப்படி இருந்திருக்கக்கூடும்? தேவனுடைய ஜனம் ஓர் மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு கொண்டுவரப்படும்போது, “அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்” (எரேமியா 31:9) என்று தேவன் சொல்லுகிறார். 

மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்குக் காட்டினால், வரவிருக்கும் அந்த மகிமையான நாளை கற்பனை செய்துபாருங்கள். நம் முகங்களில் கண்ணீர் வழியும்போது, அவருடன் நெருக்கமாக வாழ்வதே வாழ்க்கையின் அர்த்தம் என்பதை சந்தேகமின்றி அன்று நாம் அறிவோம்.