Archives: நவம்பர் 2017

குறைவுள்ளது என்றாலும் நேசிக்கப்பட்டது

ஜப்பானில் உணவுப்பொருட்கள் மிகவும் சுத்தமாகத் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டில் அடைப்பார்கள். அவைகள் ருசியாய் இருப்பதோடுகூட அழகாயும் காணப்பட வேண்டும். அநேக நேரங்களில் நான் பாக்கெட்டின் அழகிற்காக வாங்குகிறேனா அல்லது உணவிற்காக வாங்குகிறேனா என்ற சந்தேகம் எனக்கு வரும்! ஜப்பானியர்கள் தங்கள் பொருளின் தரத்தைக் காப்பதற்காகச் சிறிய குறை இருந்தாலும் அதை விற்காமல் நிராகரித்து விடுவார்கள். ஆனால் சமீபகாலத்தில் ‘’வாகீரி’’ என்றும் விற்பனைப் பொருட்கள் பிரபலமடைந்திருக்கின்றன. ‘’வாகீரி’’ என்றால் “ஒரு காணரமுண்டு” என்று ஜப்பானிய மொழியில் பொருள்படும். இந்த பொருட்கள் எறிந்துவிடப்படுவதில்லை. ஆனால், ஏதோ ஒரு குறையிருக்கும் காரணத்தால் (ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் ஒன்று உடைந்திருக்கலாம்) மலிவுலிலையில் விற்கப்படுகிறது.

ஜப்பானில் வசிக்கும் என் நண்பன் “வாகீரி” என்பது குறையுள்ள மனிதர்களையும் குறிக்கும் பழிச்சொல்லாகவும் பயன்படுகிறது என்றான்.

இயேசு அனைவரையும் நேசிக்கிறார் சமுதாயம் ஒதுக்கிவிடும் ‘’வாகீரி’’ மனிதர்களையும் இயேசு நேசிக்கிறார். பரிசேயனின் வீட்டில் இயேசு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட பாவியான பெண்ணொருத்தி, அந்த வீட்டிற்குள் வந்து, இயேசுவுக்குப் பின்னால் முழங்கால்படியிட்டு கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்தாள் (லூக். 7:37-38). பரிசேயன் அவளைப் ‘பாவி’ என்ற பட்டம் தீட்டினான் (39). ஆனால், இயேசுவோ அவளை ஏற்றுக்கொண்டார். அவளிடம் அன்பாகப் பேசி, அவள் பாவங்கெல்லாம் மன்னிக்கப்பட்டதென்று கூறினார் (வச. 48).

இயேசு குறையுள்ள “வாகீரி” மனிதர்களை அதாவது உங்களையும், என்னையும் நேசிக்கிறார். அவர் அன்பின் மாபெரும் வெளிபாடு என்னவென்றால் “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததே” (ரோம. 5:8). அவர் அன்பை ருசித்த நாம் நம்மை சுற்றியுள்ள குறைவுள்ள மனிதர்களுக்கு அவருடைய அன்பின் வாய்க்கால்களாயிருந்து, அவர்களும், தங்கள் குறைகளோடுகூட தேவனின் அன்பை ருசிக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளச் செய்வோம்.

பிறர் உணர்வை நமதாக்கிக் கொள்ளுதலின் வல்லமை

R70i என்னும் ஆடை முதுமை எப்படியிருக்கும் என்பதை செயற்கையாகக் காட்டும் ஓர் வகை ஆடை. அதில் ஒரு விசேஷித்த தலைக்கவசம் உண்டு. அதிலுள்ள கண்ணாடிகள் அதை நீங்கள் அணிந்தவுடனேயே உங்கள் பார்வையை மங்கச் செய்யும். அதிலுள்ள ஒலிபெருக்கிகள் காதுகள் சரியாகக் கேட்க விடாது, நடமாட்டத்தையும் குறைத்து விடும். அந்த உடையைப் போட்டுக்கொண்டால் இன்னும் நாற்பது வருடங்களில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்தும். வயதானவர்களைப் பராமரிப்பவர்கள் முதியோரின் பலவீனங்களையும் பிரச்சனைகளையும் அனுபவிக்கச்செய்து, அதன்மூலம் வயதானவர்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்பட முடியும். பத்திரிக்கையாளர் “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்” நிருபர் ஜெப்ரி ஃபவுலர் ஒருமுறை இதை அணிந்து பார்த்து விட்டு “முதிர் வயதடைவது என்பது மறக்கமுடியாததும், சில வேளைகளில் சோர்வுக்குள்ளாக்கும் அனுபவம் மட்டுமல்ல, இந்தக் கருவி (ஆடை) முதுமையின் உண்மைத் தன்மையையும் அவர்களின் உணர்வுகளை நமதாக்கிக் கொள்ளும் பண்பைக் கற்றுத்தந்து, நம்மைச் சுற்றியுள்ள உலகை வேறு கண்ணோட்டத்துடன் பாக்கச் செய்கிறது என்றார்.

ஒருவரது உணர்வுகளைஅறிந்து அவரோடு அதைப் பகிர்ந்துகொள்வது என்பது ஓர் திறமை. இயேசுவைப் பின் பற்றினவர்களுக்கு கொடுமையான உபத்திரவம் வந்தபொழுது, எபிரெய நிருப ஆக்கியோன், விசுவாசிகளை “கட்டப்பட்டவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள் போல அவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கனுபவிக்கிறவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்:” என்று எழுதினார் (13:3).

இதைத்தான் நமது இரட்சகர் நமக்குச் செய்தார். இயேசு நம்மைப் போல் மாறினார் “…எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார் (எபி. 2:17-18).

நம்மைப்போன்ற மனிதனாக வந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாடுபடுகிறவர்களோடு, அவர்கள், பாடுபடுகையில் நாமும் பாடுபடுகிறவர்கள் போல அவர்களுடன் நிற்க நம்மை அழைக்கிறார்.

உண்மையிலேயே வேதாகமத்தை நாங்கள் நம்பலாமா?

இன்றைய நவீன உலகிலே, வேதாகமம் ஒரு அறிவற்ற பழைய புத்தகமே தவிர வேறொன்றுமில்லை என்றும், அது காலத்துக்குக் காலம் திரும்பத் திரும்ப எழுதப்பட்ட, தேவதைகள் பற்றிய கதைகள், சிறுவர் கதைகள் ஆகியவை சேர்ந்த ஒரு கட்டுக் கதையின் கலவை என்றும் பலர் நம்புகிறார்கள். வேதாகமம் மிகச் சரியானதும், நம்பக்கூடியதுமான புத்தகம் என்பதை நிரூபிப்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன?

நமது வல்லமையுள்ள தேவன்

ஒரு நாள் கடற்கரையில் நின்றுகொண்டு, கடலில் சறுக்குப்பலகைகளில், தங்கள் கைகளில் பாராசூட் போன்ற பட்டங்களைப் பிடித்துக்கொண்டு, காற்றினால் ஒவ்வொரு அலையாகத் தாண்டித்தாண்டி விளையாடியவர்களைக் கண்டு ரசித்தேன். கரைக்கு வந்த ஒருவனிடம், பெரிய பட்டத்தைப் பிடித்துக்கொண்டு சறுக்கும் அனுபவம் கடினமாக இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவன், “இல்லை, சறுக்குப்பலகைகளில் அலைகளைத் தாண்டுவதைவிட இது எளிதாக உள்ளது. ஏனென்றால், காற்றின் வலிமையைக் கட்டுப் படுத்துகிறேன்” என்றான்.

அதன் பின், சறுக்குபவர்களைத் தள்ளுவது மட்டுமன்றி, என் முடியையும் கலைத்து முகத்தில் அறைகிற காற்றின் வலிமையை நினைத்துக்கொண்டே கடற்கரையில் நடந்தேன். தீடீரென்று நின்று நமது வல்லமையுள்ள சிருஷ்டிகரை நினைத்து அதிசயித்தேன். ஆமோஸ் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி “தேவன் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றை சிருஷ்டித்தவரும் விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவருமாயிருக்கிறார்” (வச. 13)

இந்தத் தீர்க்கதரிசியின் மூலம், தேவன் தம்முடைய ஜனங்களைத் தம்மிடத்தில் திரும்பி வர அழைக்கும் பொழுது தம்முடைய வல்லமையை அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (வச. 13). அவர்கள் அவருக்குக் கீழ்படியாமற்போனாலும், தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன் என்று கூறுகிறார். இந்த இடத்தில் அவருடைய நியாயாத்தீர்ப்பை அறிந்தாலும் வேதத்தின் மற்ற பகுதிகளில் தம்முடைய குமாரனை பலியாக அனுப்பின அவருடைய தியாகமான அன்பைக்குறித்து வாசிக்கிறோம் (யோவா. 3:16).

தெற்கு இங்கிலாந்து கடற்கரையில் வீசிய காற்றின் வலிமை தேவனுடைய மகத்துவத்தை எனக்கு உணர்த்தியது. இன்றைக்கு அப்படியொரு காற்று வீசுமானால் நாம் இன்று வல்லமையுள்ள தேவனை  ஏன் தியானிக்கக்கூடாது?

இன்னும் மேலாக அறிதல்

நாங்கள் ஒரு பையனை வெளிநாட்டிலிருந்து தத்தெடுத்து கடல் கடந்து எங்கள் வீட்டிற்கு கொண்டுவந்தபொழுது. அவனிடத்தில் அளவு கடந்த அன்பை பொழிந்து, கடந்த காலத்தில் அவன் அனுபவித்திராத விதவிதமான உணவுகளையும், அவனுக்குக் கொடுத்தோம். உணவு பற்றாக்குறையினால் அவனுக்கு ஒரு குறையிருந்தது. குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர்களிடம் காட்டியும் அவன் வளர்ச்சியடையவில்லை. மூன்று வருடங்களுக்குப்பின் அவனுக்கு சில உணவுகள் ஒவ்வாமை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படிப்பட்ட உணவுகளை விலக்கியவுடன், சில மாதங்களுக்குள் அவன் ஐந்து அங்குலம் வளர்ந்துவிட்டான். அவன் வளர்ச்சியை தடைசெய்த உணவுகளைத் தெரியாமல் கொடுத்ததற்காக வருந்தினாலும், அவனுடைய வளர்ச்சியினால் சந்தோஷப்பட்டோம்.

அநேக ஆண்டுகளாக ஆலயத்தில் காணாமற்போயிருந்த நியாயப்பிரமாண புத்தகம் கிடைத்தவுடன் யோசியா ராஜாவும் என்னைப்போலவே சந்தோஷப்பட்டிருப்பான்; என்று நினைக்கிறேன். நான் அறியாமலேயே என் மகனின் வளர்ச்சிக்கு தடையாய் இருந்ததால் வேதனையுற்றது போல யோசியாவும், தன் அறியாமையினால், தேவன் தன் மக்களுக்காகக் கொண்ட மிகச்சிறந்ததும், பூரணமானதுமான விருப்பங்களை இழந்ததற்காக மனம் வருந்தினான் (2 இரா. 22:11). தேவனுடைய பார்வையில் செம்மையானதைச் செய்ததற்காக அவன் புகழப்பட்டாலும் (வச. 2), நியாயப்பிரமாண புத்தகம் கிடைத்தபின் தேவனை எப்படி இன்னும் அதிகமாக கனம் பண்ணவேண்டுமென்று அறிந்துகொண்டான். இப்பொழுது புதிதாகப் பெற்ற அறிவினால் தேவன் கற்பித்தபடியே தேவனை ஆராதிக்க ஜனங்களை வழிநடத்தினான் (23:22-23).

வேதத்திலிருந்து தேவனை எவ்வாறு கனம் பண்ணவேண்டும் என்று தெரிந்து கொண்டபின் நாம் அவ்வாறே தேவனுடைய சித்தத்தின்படி செய்யாமற் போனதற்காக வருத்தப்படுவோம். ஆனாலும் அவர் நம்மை குணப்படுத்தி, திரும்ப உயிர்ப்பித்து, இன்னும் ஆழமாக அவரை அறிகிற அறிவிற்குள் நடத்துகிறபடியால் ஆறுதல் அடைய முடியும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஆனந்த கண்ணீர்

ஓர் நாள் காலையில் வீட்டை விட்டு வெளியேறிய டீன், தன்னுடைய சில நண்பர்கள் பலூன்களுடன் காத்திருந்ததைக் கண்டார். அவனுடைய நண்பன் ஜோஷ் முன்பாக வந்து, அவனிடத்தில் ஒரு கவரை கொடுப்பதற்கு முன்பாக, “உன்னுடைய கவிதைகளை ஓர் போட்டிக்கு அனுப்பி வைத்தோம்” என்றான். அந்த கவரின் உள்ளே “முதல் பரிசு” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை இருந்தது. விரைவில் அனைவரும் சேர்ந்த ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். டீனின் நண்பர்கள் ஓர் அழகான காரியத்தைச் செய்து, அவருடைய எழுத்துத் திறமையை உறுதிப்படுத்தினர்.

மகிழ்ச்சிக்காக அழுவது ஓர் முரண்பாடான அனுபவம். கண்ணீர் பொதுவாக வலிக்கான பதில், மகிழ்ச்சி அல்ல. மகிழ்ச்சி பொதுவாக சிரிப்புடன் வெளிப்படுத்தப்படுகிறது, கண்ணீரினால் அல்ல. இத்தாலிய உளவியலாளர்கள், நாம் ஆழமாக நேசிக்கப்படுவதை உணரும்போது அல்லது ஓர் முக்கிய இலக்கை அடையும்போது, ஆழ்ந்த தனிப்பட்ட அர்த்தத்தின்போது மகிழ்ச்சியின் கண்ணீர் வரும் என்று குறிப்பிட்டுள்ளனர். மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்வின் அர்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது என்ற முடிவுக்கு இது வழிவகுத்தது.

இயேசு சென்ற இடமெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பெருகுவதை நான் கற்பனை செய்கிறேன். குருடனாகப் பிறந்தவனின் பெற்றோர் இயேசு அவனைக் குணமாக்கியபோது (யோவான் 9:1-9), அல்லது மரியாள் மற்றும் மார்த்தாள், தங்கள் சகோதரனை மரணத்திலிருந்து எழும்பிய பிறகு (11:38-44) மகிழ்ச்சியில் அழாமல் எப்படி இருந்திருக்கக்கூடும்? தேவனுடைய ஜனம் ஓர் மறுசீரமைக்கப்பட்ட வாழ்க்கைக்கு கொண்டுவரப்படும்போது, “அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்” (எரேமியா 31:9) என்று தேவன் சொல்லுகிறார். 

மகிழ்ச்சியின் கண்ணீர் நம் வாழ்க்கையின் அர்த்தத்தை நமக்குக் காட்டினால், வரவிருக்கும் அந்த மகிமையான நாளை கற்பனை செய்துபாருங்கள். நம் முகங்களில் கண்ணீர் வழியும்போது, அவருடன் நெருக்கமாக வாழ்வதே வாழ்க்கையின் அர்த்தம் என்பதை சந்தேகமின்றி அன்று நாம் அறிவோம்.

 

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.