எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

டிம் கஸ்டாப்சன்கட்டுரைகள்

இயேசுவில் மறுமலர்ச்சி

திறன், பல படிப்புகள் மற்றும் கலைகளில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும், லியோனார்டோ பிரசித்தி பெட்ரா தனது வரிகளில் "நம்முடைய இந்த மோசமான நாட்கள்" என்றும், "மனிதர்களின் மனதில் நம்மைப் பற்றிய எந்த நினைவையும் விட்டுச் செல்லாமல்" நாம் இறந்துவிடுகிறோம் என்று புலம்பினார்.

"நான் வாழ கற்றுக்கொள்ளும்போதே, சாகவும் கற்றுக்கொள்கிறேன்" என்கிறார் லியோனார்டோ. அவர் புரிந்துகொண்டதை காட்டிலும் உண்மைக்கு அருகே இருந்தார். எப்படி மாிக்க வேண்டுமென்று கற்றுக்கொள்வதே வாழ்வுக்கான வழி. எருசலேமில் இயேசுவின் வெற்றி பவனிக்கு பின் (இப்போது நம் குருத்தோலை ஞாயிறென்று கொண்டாடுகிறோம்; பார்க்கவும் யோவான் 12:12–19), அவர், " கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்" (வ. 24) என்றார். அவர் தனது சொந்த மரணத்தைப் பற்றி இப்படி பேசினார், ஆனால் நம் அனைவரையும் உள்ளடக்கியதாக அதை விரிவுபடுத்தினார்: "தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்" (வ. 25).

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவுடன் "அடக்கம்" பண்ணப்படுவதை பற்றி, "மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்" (ரோமர் 6:4–5) என்று எழுதினார்.

அவரது மரணத்தின் மூலம், இயேசு நமக்கு மறுபிறப்பை வழங்குகிறார், அதுவே மறுமலர்ச்சியின் அர்த்தம். அவர் தனது பிதாவுடன் நித்திய வாழ்வுக்கான வழியை உருவாக்கினார்.

நித்திய மரபு

அமெரிக்காவின் பெரும் பொருளியல் வீழ்ச்சியின்போது, ஸ்ட் பெளவுல் எனப்பட்ட மணல் புயல்கள் அங்கு பேரழிவை ஏற்படுத்துகையில், கன்சாஸின் ஹியாவதாவில் வசிக்கும் ஜான்மில்பர்ன் டேவிஸ் தனக்கென ஒரு பெயரை சம்பாதிக்க முடிவு செய்தார். குழந்தைகள் இல்லாத அவர் தானே சம்பாதித்து கோடீஸ்வரர் ஆனார். டேவிஸ், சேவை அல்லது பொருளாதார வளர்ச்சியில் முதலீடு செய்திருக்கலாம். அதற்கு பதிலாக, பெரும் செலவில், அவர் தனக்கு ஒரு சிலையும் மற்றும் தனது இறந்த மனைவியின் பதினொரு பெரிய சிலைகளை உள்ளூர் கல்லறையில் நிறுவ ஏற்பாடு செய்தார்.

"கன்சாஸில் என்னை வெறுக்கிறார்கள்" என்று டேவிஸ் பத்திரிகையாளர் எர்னி பைலிடம் கூறினார். மருத்துவமனை, நீச்சல் குளம் அல்லது பூங்கா போன்ற பொது வசதிகளை கட்டுவதற்கு அவர் நிதியளிக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் விரும்பினர். ஆனால் அவர் சொன்னது என்னவென்றால், "இது என் பணம், நான் விரும்பியபடி செலவிடுகிறேன்."

சாலொமோன் ராஜா, அவருடைய காலத்தின் பெருஞ்செல்வந்தராக இவ்வாறு எழுதினார், "பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை" என்றும் "பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்" (பிரசங்கி 5:10–11). செல்வத்தின் கெடுக்கும் போக்குகளை சாலொமோன் நன்கு அறிந்திருந்தார். அப்போஸ்தலன் பவுலும் செல்வத்தின் சோதனையைப் புரிந்துகொண்டு, இயேசுவுக்குக் கீழ்ப்படிய தன் வாழ்க்கையை முதலீடு செய்யத் தேர்ந்தெடுத்தார். ரோமானிய சிறைச்சாலையில் மரணதண்டனைக்காகக் காத்திருந்த அவர், ஜெயம்பெற்றவராக, "நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்…. ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோத்தேயு 4:6-7) என்று எழுதினார்.

நமக்காக நாம் சிலை வைப்பதும் அல்லது சேர்த்து வைப்பதும் நீடிக்காது. ஒருவருக்கொருவர் மற்றும் கிறிஸ்துவுக்காக கொடுப்பதே நீடிக்கும். எப்படி நேசிக்க வேண்டும் என்பதைக் காட்டுபவர் அவரே.

லேவியராகமம் கூட

அன்றைய வேத ஆராய்ச்சியின் தலைப்பு 'லேவியராகமம்'. நான் என் குழுவினரிடம், "லேவியராகமத்தின் பல பகுதிகளை வாசிக்கத் தவிர்த்துள்ளேன், நான் தோல் நோய்களைப் பற்றி மீண்டும் படிக்க விரும்பவில்லை" என்று காரணத்தையும் ஒப்புக்கொண்டு கூறினேன்.  என் நண்பர் டேவ், "அந்தப் பத்தியின் காரணமாக இயேசுவை விசுவாசித்த ஒருவரை எனக்குத் தெரியும்" என்றார். மேலும், "அவா் ஒரு நாத்திகர் ஆனால் மருத்துவரும்கூட, வேதாகமத்தை முற்றிலுமாக நிராகரிப்பதற்கு முன், தானே அதைப் படிப்பது நல்லது என்று அவர் முடிவு செய்தார். லேவியராகமத்தில் தோல் நோய்கள் பற்றிய பகுதி அவரை மிகவும் கவர்ந்தது" என்றார்.

அதில், தோல் தொற்று நோய் மற்றும் தொற்றாத தோல் புண்களைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருந்தது (13:1–46). மற்றும் அவற்றிற்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை பற்றிய ஆச்சரியமான விவரங்களைக் கொண்டிருந்தது  (14:8–9). அன்றைய நாட்களின் மருத்துவ அறிவை மிஞ்சும் அளவுக்கு இது உள்ளதை அறிந்துகொண்டார். ஆனால் அது லேவியராகமத்தில்தான் இருந்தது. மோசேக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்தார். மோசே உண்மையிலேயே தேவனிடமிருந்து தான் இந்த விபரங்களைப் பெற்றார் என்று கருதினார். இறுதியில் அவர் இயேசுவின் விசுவாசியானார்.

வேதாகமத்தின் சில பகுதிகள் உங்களைச் சங்கடப்படுத்தியிருக்கலாம். நானும் அதை அனுபவித்துள்ளேன். ஆனால் அப்படிக் கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. இஸ்ரவேலர்கள் தேவனுக்காகவும், தேவனோடும் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும்படி லேவியராகமம் எழுதப்பட்டது. தேவனாகிய கர்த்தருக்கும் அவருடைய மக்களுக்கும் இடையிலான இந்த உறவைப் பற்றி அறியும்போது,  நாம் இன்னும் அதிகமாகத் தேவனைப் பற்றி அறிகிறோம்.

"வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக" (2 தீமோத்தேயு 3:16) என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார் . ஆகவே வேதாகமத்தை, குறிப்பாக லேவியராகமத்தைக் கூட நாம் தொடர்ந்து படிக்கலாம்.

கண்ணியத்தை விரிவுபடுத்துதல்

மேகியின் இளம் நண்பர் தேவாலயத்திற்கு அணிந்து வந்த உடை அதிர்ச்சியைக் கொடுத்தது. ஆனால் யாரும் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டியதில்லை காரணம் அவள் ஒரு பாலியல் தொழிலாளி, அங்கே அசௌகரியத்துடன் தனது இருக்கையை மாற்றினாள். மாறி மாறி அவளது மிகக் குட்டையான கீழாடையை இழுத்து, தன் கைகளினால் சங்கடத்துடன் தன்னைச் சுற்றிக் கொண்டாள்.

அவள் உடுத்தியிருக்கிற உடை மீதில் உள்ள கவனத்தைத் திசை திருப்ப "ஓ, குளிர்கிறதா?" என்று மேகி கேட்டபின். "இதோ! என் சால்வையை எடுத்துக்கொள் என்றாள்."  மேகி பலரைத் தேவாலயத்திற்கு வருமாறு அழைப்பதன் மூலமும், அவர்கள் சங்கோச்சப்படாமல் ஆலயத்தில் ஆராதிக்க உதவுவதின் மூலமும் அநேகரை கிறிஸ்துவுக்குள் நடத்தியிருக்கிறார். நற்செய்தியானது அவளது அற்புதமான முறைகள் மூலம் மேலும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அனைவரையும் கண்ணியமாக நடத்தினாள்.

விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும், பரிசேயரும் இயேசுவிடம் கொண்டுவந்து, அவா் முன் அவளை நடுவே நிறுத்தி குற்றச்சாட்டினாா்கள். ஆனால் கிறிஸ்து குற்றம் சாட்டுபவர்களை அங்கிருந்து அனுப்பும் வரை தன் கவனத்தை அவள் மீது வைக்கவில்லை. அவர்கள் போனதும் அவளைத் திட்டியிருக்கலாம். மாறாக, " இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்." (யோவான் 8:10). பிந்தைய கேள்விக்கான பதில், நிச்சயமாக இல்லை. எனவே இயேசு அவளுக்கு ஒரு சுருக்கமாகச் சுவிசேஷமாகக் கூறியது: "....நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே." (வ. 11) என்ற அழைப்பாகும்.

மக்கள் மீதான உண்மையான அன்பின் வல்லமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உண்மையான அன்பு, தீர்ப்பிடாமல் கண்ணியத்தையும் மன்னிப்பையும் வழங்குகிறது.

வெள்ளைப்போலத்தின் அர்த்தம்

இன்று சாஸ்திரிகள் இயேசுவை தரிசித்த நாள். “நாங்கள் மூவரும் கிழக்கத்திய ராஜாக்கள்” என்று மூன்று சாஸ்திரிகளும் இயேசுவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்மஸ் கேரள் பாடல் ஒன்று விவரிக்கிறது. ஆனால் அவர்கள் மூவரும் ராஜாக்கள் இல்லை. அவர்கள் கிழக்கிலிருந்து வந்தவர்களும் இல்லை. அவர்கள் மூன்றுபேராகவும் இருக்க வாய்ப்பில்லை. 

இருப்பினும், மூன்று பரிசுகள் இருந்தன. அந்த கேரள் பாடல், அவை ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. சாஸ்திரிகள் பெத்லெகேமுக்கு வந்தபோது, “அவர்கள்... தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்த்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்” (மத்தேயு 2:11). இந்த பரிசுகள் இயேசுவின் ஊழியத்தை விவரிக்கிறது. பொன், ராஜாவாக அவரது பாத்திரத்தை பிரதிபலிக்கிறது. பலிபீடத்தில் எரிக்கப்படும் தூபத்துடன் கலந்த தூபவர்க்கம் அவரது தெய்வத்துவத்தைக் குறிக்கிறது. இறந்த உடல்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் வெள்ளைப்போலம், நமக்கு இடைநிறுத்தம் தருகிறது.

கேரள் பாடலின் நான்காவது வரி, “வெள்ளைப்போலம் என்னுடையது; அது கசப்பான வாசனை திரவியம். இருளில் சூழ்ந்த ஒரு வாழ்க்கையை அது சுவாசிக்கிறது. துக்கம், பெருமூச்சு, இரத்தஞ்சிந்துதல், மரணம் என்ற கல்லறையில் வைத்து மூட்டப்பட்டது” என்று இடம்பெறுகிறது. நாம் கதையில் அத்தகைய காட்சியை எழுத மாட்டோம், ஆனால் தேவன் அதைச் செய்தார். இயேசுவின் மரணம் நமது இரட்சிப்பின் மையமானது. ஏரோது, இயேசு குழந்தையாக இருக்கும்போதே அவரைக் கொல்ல முயன்றான் (வச. 13).

கேரள் பாடலின் கடைசி சரணம் மூன்று கருப்பொருள்களை ஒன்றாக இணைக்கிறது: “இதோ மகிமையயின் ராஜா எழுந்தருளியிருக்கிறார். ராஜா, தேவன் மற்றும் தியாகம்.” இது கிறிஸ்மஸின் கதையை நிறைவு செய்கிறது. நமது பதிலை எதிர்பார்க்கச்செய்கிறது” “அல்லேலூயா, அல்லேலூயா என்று வானம் பூமியெங்கும் ஒலிக்கிறது.”

குமாரனும் உயிர்த்தெழுந்தார்

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் முதல் நாவல், சமீபத்தில் முதலாம் உலகப் போரைச் சந்தித்த கடும் குடிபழக்கத்திற்கு ஆளான நண்பர்களைப் பற்றியது. அவர்கள் சமீபத்தில் நடந்த போரின் வடுக்களை எதோ ஒரு விதத்தில் மறக்க எண்ணி, விருந்துகள், சாகச நிகழ்வுகள் மற்றும் தூக்கத்தின் மூலம் ஆகியவற்றில் நேரம் செலவழிப்பவர்கள். வலியை மறப்பதற்கு மதுபானம் எப்போதும் இருக்கிறது. ஆனால் யாரும் மகிழ்ச்சியாயில்லை. 

ஹெமிங்வேயின் “தி சன் ஆல்சோ ரைசஸ்” என்ற புத்தகத்திற்கான தலைப்பு பிரசங்கி புத்தகத்தின் பக்கங்களில் இருந்து வந்தது (1:5). பிரசங்கியில், சாலெமோன் ராஜா தன்னை “பிரசங்கி" என்று குறிப்பிடுகிறார் (வச. 1). “எல்லாம் மாயை” (வச. 2) என்று அவர் கவனித்து, “மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?” (வச. 3) என்று கேட்கிறார். மேலும் சாலெமோன், சூரியன் எவ்வாறு உதயமாகிறது மற்றும் மறைகிறது, காற்று அங்குமிங்குமாக வீசுகிறது, ஆறுகள் முடிவில்லாமல் ஒருபோதும் திருப்தியடையாத கடலில் பாய்கின்றன (வவ. 5-7) என்ற பார்க்கிறார். ஆனால் எல்லாம் மறந்துபோய்விடுகிறது (வச. 11).

ஹெமிங்வே மற்றும் பிரசங்கி, இருவரும் இந்த வாழ்க்கைக்காக மட்டுமே வாழ்வதன் அப்பட்டமான பயனற்ற தன்மையுடன் நம்மை எதிர்கொள்கிறார்கள். இருப்பினும், சாலெமோன் தனது புத்தகத்தில் தெய்வீகத்தின் பிரகாசமான குறிப்புகளை விதைக்கிறார். மெய்யான நம்பிக்கை என்று ஒன்று இருக்கிறது. பிரசங்கி நாம் இருக்கும் நிலையை மாத்திரமல்லாமல், தேவன் யார் என்பதையும் நமக்கு அறிவிக்கிறார். “தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும்” (3:14) என்று நம்முடைய நம்பிக்கையின் அஸ்திபாராமாய் சாலேமோன் தேவனை அடையாளப்படுத்துகிறார். ஏனென்றால், தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை நமக்குப் ஈவாகக் கொடுத்திருக்கிறார்.

நாம் தேவனில்லாமல், முடிவேயில்லாத, திருப்பதியடையாத ஒரு கடலில் நீந்திக்கொண்டேயிருக்கிறோம். அவருடைய உயிர்த்தெழுந்த குமாரனாகிய இயேசுவின் மூலம் நாம் நம்முடைய வாழ்வில் அர்த்தத்தையும் நோக்கத்தையும் கண்டறிகிறோம்.

இயேசுவுக்கு ஒப்புவித்தல்

1951 ஆம் ஆண்டில், ஜோசப் ஸ்டாலினின் மருத்துவர், அவரது உடல்நிலையைப் பாதுகாப்பதற்காக அவரது பணிச்சுமையைக் குறைக்குமாறு அறிவுறுத்தினார். சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியாளர், அந்த மருத்துவர் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி அவரை கைது செய்தார். பொய்களால் பலரை ஒடுக்கிய கொடுங்கோலன் உண்மையைக் கடைப்பிடிக்க முடியவில்லை. மேலும் அவர் வழக்கம்போல, உண்மையைச் சொல்கிறவர்களை பணியை விட்டு அகற்றினார். ஆனால் உண்மை கடைசியில் வென்றது. ஸ்டாலின் 1953இல் இறந்தார்.

எரேமியா தீர்க்கதரிசி, தனது துணிகரமான தீர்க்கதரிசனங்களுக்காக கைது செய்யப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டார் (எரேமியா 38:1-6; 40:1). அவர் எருசலேமுக்கு என்ன சம்பவிக்கும் என்பதை யூதாவின் ராஜாவிடம் கூறினார். “நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடும். அப்பொழுது... உம்முடைய ஆத்துமா பிழைக்கும்” (எரேமியா 38:20) என்று அவர் சிதேக்கியா ராஜாவிடம் கூறினார் (38:20). நகரைச் சூழ்ந்திருக்கும் இராணுவத்திடம் சரணடையத் தவறினால், அது நிலைமையை மோசமாக்கும். “உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டுபோவார்கள். நீரும் அவர்கள் கைக்கு தப்பிப்போகாமல்...” (வச. 23) என்று எரேமியா எச்சரிக்கிறார்.

அந்த உண்மையைச் செயல்படுத்த சிதேக்கியா தவறிவிட்டார். இறுதியில் பாபிலோனியர்கள் யூதேயாவின் ராஜாவைப் பிடித்து, அவனது குமாரர்கள் அனைவரையும் கொன்று, நகரத்தை தீக்கிரையாக்கினர் (அதி. 39).

ஒரு வகையில், ஒவ்வொரு மனிதனும் சிதேக்கியாவின் இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறான். பாவம் மற்றும் தவறான தீர்மானங்கள் என்ற நமது சொந்த வாழ்வின் சுவர்களுக்குள் நாம் சிக்கிக் கொள்கிறோம். பெரும்பாலும், நம்மைப் பற்றிய உண்மையைச் சொல்பவர்களைத் தவிர்ப்பதன் மூலம் விஷயங்களை மோசமாக்குகிறோம். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொன்னவரின் சித்தத்திற்கு நாம் சரணடைவது மட்டுமே நம்முடைய அடிப்படை தேவை.

அதிர்ஷ்ட காலணிகள்

மிகவும் தாமதமாக, டாம் தனது போர் காலணியின் அடியில் குளிர்ந்த உணர்வை அடைந்தார். பாய்ந்தோடிய அட்ரினலின் என்னும் எரிபொருளின் தாக்கத்திலிருந்து விலகிச்சென்றார். பூமிக்கடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொடிய வெடிகுண்டு வெடிக்கவில்லை. பின்னர், வெடிகுண்டு அகற்றும் குழுவினர் சம்பவ இடத்தில் இருந்து 36 கிலோ எடையுள்ள வெடிபொருட்களை கண்டெடுத்தனர். டாம் அவருடைய அந்த காலணி கிழியும் வரை அணிந்திருந்தார். அவர் அதை தன்னுடைய அதிருஷ்ட காலணி என்று சொல்லிக்கொள்கிறார். 

அவருடைய உயிரைக் காப்பதற்கு அந்த காலணி பயன்பட்டதினால் உணர்ச்சிவசப்பட்டு டாம் அந்த காலணிகளை அணிந்திருக்கலாம். ஆனால் பொருட்களை “அதிர்ஷ்டம்” என்று கருதுவதற்கு அல்லது “ஆசீர்வதிக்கப்பட்டவைகள்” என்ற ஆன்மீக முத்திரையைக் கொடுக்க மக்கள் அடிக்கடி ஆசைப்படுகின்றனர். நாம் ஒரு பொருளையோ அல்லது அடையாளத்தையோ தேவனுடைய ஆசீர்வாதத்தின் ஆதாரமாக வைக்கும்போது அங்கே அபாயம் நிகழுகிறது. 

இஸ்ரவேலர்கள் இந்த பாடத்தை தங்களுடைய வாழக்கையின் கடினமான தருணத்தில் கற்றுக்கொண்டனர். பெலிஸ்தியப் படை அவர்களை யுத்தத்தில் வீழ்த்தியது. ஏன் தோல்வியடைந்தோம் என்று யோசிக்கும்வேளையில், நாம் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச்செல்லலாம் என்று யாரோ ஒருவர் ஆலோசனை சொல்கின்றனர் (1 சாமுவேல் 4:3). அது நல்ல யோசனையாகத் தோன்றியது (வச. 6–9). எல்லாவற்றிற்கும் மேலாக, உடன்படிக்கைப் பெட்டி பரிசுத்தமான ஒன்றாகக் கருதப்பட்டது.

ஆனால் இஸ்ரவேலர்களின் புரிதல் தவறானது. உடன்படிக்கைப் பெட்டியைக்கொண்டு அவர்களால் எதையும் திருப்பிக்கொண்டுவரமுடியவில்லை. தங்களுடைய விசுவாசத்தை தேவன் மீது வைப்பதற்கு பதிலாக ஒரு பொருளின் மீது வைத்ததினால் யுத்தத்தில் இஸ்ரவேலர்கள் மோசமான தோல்வியை சந்திக்க நேரிட்டது. பெலிஸ்தர்கள் பேழையையும் கைப்பற்றி கொண்டுபோய்விட்டனர் (வச. 10-11).

தேவன் நம்முடைய வாழ்க்கையின் செய்த நன்மைகளை நினைப்பூட்டும் நினைவுச்சின்னங்கள் நமக்கு அவசியப்படலாம். ஆனால் அவைகள் ஒருபோதும் ஆசீர்வாதத்தின் ஆதாரமாக இருப்பதில்லை. தேவன் மாத்திரமே ஆசீர்வாதத்தின் ஆதாரம்.

இயேசுவைப் பின்பற்றுவது மதிப்பு

ரோனிட் ஒரு ஆன்மீக குடும்பத்திலிருந்து வந்தவள். ஆனால் கிறிஸ்தவர் அல்ல. ஆன்மீக விஷயங்களைப் பற்றிய அவர்களின் விவாதங்கள் வறண்டதாகவும் கல்விசார்ந்ததாகவும் இருந்தன. “நான் எல்லா பிரார்த்தனைகளையும் தொடர்ந்து ஜெபித்தேன், ஆனால் நான் கடவுளிடமிருந்து எந்த சத்தத்தையும் கேட்டதில்லை" என்று அவர் கூறினாள்.

அவள் வேதாகமத்தைப் படிக்க ஆரம்பித்தாள். மெதுவாக, சீராக, அவள் இயேசுவை மேசியா என்று நம்பினாள். அந்த தருணத்தை, “என் இதயத்தில் ஒரு தெளிவான குரல் கேட்டது – ‘நீ கேட்டது போதும்; நீ பார்த்தது போதும; நம்ப வேண்டிய நேரம் இது’” என்று ரோனிட் விவரிக்கிறார். ஆனால் ரோனிட் ஒரு சிக்கலை எதிர்கொண்டார். அது அவளுடைய தந்தையின் எதிர்ப்பு. “ஒரு மலை வெடித்தது போல் என் அப்பா பதிலளித்தார்," என்று அந்த நிகழ்வை அவள் நினைவு கூர்ந்தாள்.

இயேசு இந்த உலகத்தில் நடந்துவந்துபோது, ஜனத்திரள் அவளை பின்பற்றியது (லூக்கா 14:25). அவர்கள் எதை எதிர்பார்த்து அவரை பின்பற்றினார்கள் என்பது தெரியாது, ஆனால் அவர் சீஷர்களை தேடினார். ஆனால் அது கிரயம் செலுத்தப்படவேண்டியது. இயேசு சொல்லும்போது, “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (வச. 26) என்று சொல்லுகிறார். அவர் கோபுரம் கட்டும் ஒரு உவமையைச் சொல்லுகிறார். “அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு... கணக்குப் பாராமலிருப்பானோ?” (வச. 28) என்று கேட்கிறார். நாம் உண்மையில் குடும்பத்தை வெறுக்க வேண்டும் என்பது இயேசுவின் கருத்து அல்ல; மாறாக, எல்லாவற்றிலும் நாம் அவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். “அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (வச. 33) என்று வலியுறுத்துகிறார். 

ரோனிட் தனது குடும்பத்தை ஆழமாக நேசிக்கிறார், ஆனால் “எவ்வளவு விலையானாலும், அது மதிப்புக்குரியது என்று நான் நினைத்தேன்” என்று சொல்லுகிறாள். இயேசு உங்களை வழிநடத்தும்போது அவரைப் பின்பற்ற நீங்கள் எதை விட்டுக்கொடுக்க வேண்டும்?

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விசுவாசத்தின் ஜெயம்

நான்கு வயது சிறுவனான கால்வினின் வழக்கமான சரீர ஆரோக்கிய சோதனையில் அவனது உடலில் சில எதிர்பாராத புள்ளிகள் கண்டறியப்பட்டன. அவனுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, ஊசி போடப்பட்டு, அந்த இடத்தை கட்டுகட்டி அனுப்பினர். அந்த கட்டை அகற்றும் நாளில், அவனுடைய தந்தை கட்டை பிரிக்க முயன்றபோது, கால்வின் பயத்துடன் சிணுங்கினான். மகனுக்கு ஆறுதல் கூற முயன்று, அவனது தந்தை, “கால்வின், உன்னைக் காயப்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உனக்குத் தெரியும்!" என்று சொன்னார். கட்டை அகற்றும் பயத்தைவிட, தன் மகன் தன்னை நம்பவேண்டும் என்று அவனது தந்தை விரும்பினார்.

அசௌகரியத்தினால் நான்கு வயது குழந்தைகள் மட்டும் பயம் அடைவதில்லை. அறுவைசிகிச்சைகள், அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிதல், மன அல்லது உளவியல் சவால்கள் மற்றும் பலவிதமான பயங்கள், பெருமூச்சுகள், அழுகைகள் மற்றும் கூக்குரல்களை சந்திக்கும் அனைத்து தரப்பினர்களும் பயத்தினால் சூழப்படுகின்றனர். 

தாவீது, தன்மீது பொறாமைகொண்டு தன்னை கொல்ல வகைதேடிய சவுலிடமிருந்து தப்பித்து பெலிஸ்திய தேசத்திற்கு ஓடியபோதிலும், அங்கு அவர் கண்டுபிடிக்கப்பட்ட தருணம், வாழ்க்கையின் பயம் மிகுந்த ஓர் தருணமாயிருந்துள்ளது. அவர் அடையாளம் காணப்பட்டபோது, அவருக்கு என்ன நேரிடும் என்று கவலைப்பட்டார். (1 சாமுவேல் 21:10-11): “தாவீது... காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டான்.” இந்த சங்கடமான சூழ்நிலையைப் பற்றி யோசித்து, தாவீது “நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்” (சங்கீதம் 56:3-4) என்று எழுதுகிறார். 

வாழ்க்கையின் அசௌகரியங்கள் நமக்கு அச்சத்தைத் தூண்டும்போது நாம் என்ன செய்வோம்? நம்முடைய பரலோகத் தகப்பன்மீது நம்பிக்கை வைக்கலாம்.

 

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார்.