வகை  |  odb

அலைகளின் அதிபதி

அரசனாகிய கன்யூட் (Canute) 11ஆம் நூற்றாண்டில் பூமியில் வாழ்ந்த மிக சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர். அவரைப்பற்றி புகழ்பெற்ற ஒரு கதை உண்டு. அதாவது, அவர் தன்னுடைய நாற்காலியை கடற்கரையோரமாக போடக் கட்டளையிட்டு, பின்பு சீறும் கடலைப் பார்த்து, “நீ என் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறாய். ஆகவே என்னுடைய தேசத்திலே நீ எழும்பவும் கூடாது என்னுடைய ஆடைகளையோ, கை, கால்களையோ நனைக்கவும் கூடாது என உனக்கு நான் ஆணையிடுகிறேன்” எனக் கூறியுள்ளார். ஆனால் அலை எழும்பி ராஜாவின் கால்களை நனைத்தது.

கன்யூட்டின் பெருமையை குறித்து உரைக்கவே இக்கதை அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இது தாழ்மையை குறித்ததான கதை. ஏனென்றால், “அவரையன்றி வானமும், பூமியும், கடலும் கீழ்ப்படியாது, ராஜாக்களின் வல்லமை வெறுமையானது என்று உலகமனைத்தும் அறிந்து கொள்ளட்டும்,” என அச்சம்பவத்திற்கு பின்பு கன்யூட் கூறினார். தேவன் ஒருவரே ஒப்பற்ற வல்லமை பொருந்தியவர் என்பதை கன்யூட்டின் கதை குறிப்பிடுகிறது.

இதைத்தான் யோபுவும் கண்டறிந்தான். பூமியின் அஸ்திபாரங்களை போட்டவரோடு (யோபு 38:4-7), காலைப்பொழுது தோன்றவும், இரவு நேரம் முடியவும் கட்டளையிட்டவரோடு (வச. 12-13), பனியை பண்டசாலையில் சேர்த்து வைப்பவரோடு (வச. 22), நட்சத்திரங்களை வழிநடத்துபவரோடு (வச. 31-33) நம்மை ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் மிகவும் அற்பமானவர்களே. அலைகளை அரசாளுபவர் ஒருவரே. கண்டிப்பாக அது நாமல்ல (வச. 11; மத். 8:23-27).

ஒருவேளை நம்மை நாமே மிஞ்சின அறிவாளியாகவோ, பெருமையாகவோ எண்ணத் தொடங்கினால், கன்யூட்டின் கதையை நமக்கு நாமே நடித்துக் காட்டிக்கொண்டால் நலமாயிருக்கும். கடலோரம் சென்று அலைகளை நிற்கச் சொல்லுங்கள் அல்லது சூரியனை சற்று நகரச்சொல்லுங்கள். அப்பொழுது எல்லோரிலும் மேன்மையானவரை நினைவுகூர்ந்து, நம்முடைய வாழ்வை அவர் அரசாளுவதற்காக நன்றி கூறுவோம்.

பரிபூரணமாக நேசித்தல்

தன் மகளுடன் தனக்கிருக்கும் பிரச்சனைகளை பகிர்ந்துகொண்ட பொழுது அவளுடைய குரல் தழுதழுத்தது. தன்னுடைய மகளின் கேள்விக்குரிய நண்பர்களை குறித்து கவலையுற்ற இத்தாய் அவளுடைய கைப்பேசியை பறித்துக்கொண்டு தன் மகள் செல்லும் இடமெங்கும் அவளுடைய மெய்க்காப்பாளர் போல கூடவே சென்றாள். இதனால் அவர்களுடைய உறவில் மேலும் விரிசல் அதிகமாகவே செய்தது.

நான் அப்பெண்ணின் மகளிடம் பேசிய பொழுது, அவள் தன் தாயாரை அதிகமாய் நேசிக்கிறாள் என்பதை அறிந்துகொண்டேன். ஆனால் தன் தாயாருடைய அதீத அன்பினால் மூச்சுத்திணறிக் கொண்டிருந்தபடியால், அத்தாயாரின் பிடியிலிருந்து வெளியேறவே விரும்பினாள்.

குறைவுள்ளவர்களாகிய நாம் அனைவரும் நம்முடைய உறவுகளில் போராடுகிறோம். நாம் பெற்றோராக இருப்பினும் பிள்ளையாக இருப்பினும், திருமணம் ஆனவரோ ஆகாதவரோ, யாராயிருப்பினும், நம்முடைய அன்பை சரியான விதத்திலே வெளிப்படுத்த போராடுகிறோம், சரியானதை சரியான நேரத்திலே கூறவும், செய்யவும் கூட போராடுகிறோம். நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் அன்பிலே வளர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.

1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்திலே பவுல் பூரணமான அன்பு எப்படி காணப்படும் என சுருக்கமாகக் கூறுகிறார். பரிபூரண அன்பின் தரநிலையை கேட்பதற்கு அற்புதமாகத்தான் உள்ளது. ஆனால், அவ்வன்பை கடைப்பிடிப்பது முற்றிலும் சவாலான காரியம். ஆனால் நல்லவேளை, இயேசு நமக்கு மாதிரியாக உள்ளார். அவர் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் தேவைகளோடு வந்த மக்களிடம் பழகிய விதம், பரிபூரண அன்பு செயலில் எப்படி காணப்படும் என்பதை நமக்கு காண்பித்துள்ளார். நாம் நம்மை அவருடைய அன்பில் நிலைநாட்டி, நம் மனதை அவருடைய வார்த்தையில் மூழ்கச்செய்து அவரோடு கூட நடப்போமானால், அவருடைய சாயலை நாம் அதிகதிகமாக பிரதிபலிப்போம். இருப்பினும் நாம் தவறுகள் செய்யக்கூடும். ஆனால் அவற்றையெல்லாம் சரிசெய்து எல்லா நிலையிலும் நன்மையைக் காணச்செய்வார். ஏனெனில், அவருடைய அன்பு “சகலத்தையும் தாங்கும் (பாதுகாக்கும்),” (வச. 7) “அது ஒருக்காலும் ஒழியாது” (வச. 8).

வரவேற்கும் வரம்!

ஐந்து நாடுகளிலிருந்து வந்திருந்த குடும்பங்களுக்கு இரவு விருந்தளித்தது எங்களுக்கு என்றும் நீங்கா ஒரு அற்புதமான நினைவு. எப்படியோ அன்று எங்கள் உரையாடல் ஜோடி ஜோடியாக பிரிந்து காணப்படாமல், லண்டன் மாநகரில் வசிப்பதைக் குறித்து உலகத்தின் வெவ்வேறு பகுதியிலிருந்து வந்தவர்கள் அவரவருடைய கண்ணோட்டத்தை பகிர்ந்துகொண்டனர். அன்றைய தினத்தின் முடிவிலே அக்கூடுகையை குறித்து நானும், என் கணவரும் சிந்தித்தபொழுது, நாங்கள் அவர்களுக்கு அளித்ததைக் காட்டிலும் பெற்றுக்கொண்டதே அதிகம் என்பதை உணர்ந்தோம். வெவ்வேறு கலாசாரங்களைப் பற்றி அறிந்துக்கொண்டது மட்டுமன்றி, பல புதிய நட்புகள் கிடைத்ததினால் சந்தோஷமும் மனநிறைவும் அடைந்தோம்.

எபிரெய புத்தகத்தின் ஆசிரியர் அப்புத்தகத்தின் முடிவிலே சமுதாய வாழ்விற்கு தேவையான புத்திமதிகளைக் கூறி முடிக்கிறார். அதில், முன்பின் அறியாதவர்களைக் கூட வரவேற்று உபசரிக்கும்படி தன் வாசகர்களுக்கு கூறுகிறார். ஏனெனில் அப்படிச் செய்யும்பொழுது, “சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு,” எனக் கூறுகிறார் (13:2). அவர் ஆபிரகாமையும், சாராளையும் மனதில் வைத்து அப்படிக் கூறியிருக்கலாம். ஏனென்றால் முன்பின் அறியாத மூன்று நபர்களை அவர்கள் வரவேற்று அக்கால வழக்கத்தின்படியே அவர்களுக்கு தாராளமாய் விருந்து அளித்து அனுப்புவதைக் குறித்து ஆதியாகமத்தில் காணலாம் (18:1-12). ஆபிரகாமும், சாராளும் தங்களுக்கு ஆசீர்வாதமான செய்தியைக் கொண்டுவந்த தேவதூதர்களை உபசரித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அவர்கள் அறியாதிருந்தார்கள்.

ஏதாவதொரு ஆதாயத்தை பெற்றுக்கொள்ளலாம் என்கிற எண்ணத்தோடு நாம் பிறரை நம் வீட்டில் உபசரிக்கக்கூடாது, ஆனாலும் அநேகந்தரம், நாம் கொடுப்பதைக்காட்டிலும் அதிகமாகவே பெற்றுக்கொள்கிறோம். கர்த்தர் நமக்கு அளித்த நல்வரவை நாம் பிறர்க்கு அளிக்கும் பொழுது, அவர் தம்முடைய அன்பை நம்மூலம் பரந்து விரிந்திடச் செய்வார்.

அன்பும், பழைய காலணிகளும்

சில சமயங்களில் நானும், என்னுடைய மனைவியும் ஒருவர் மற்றொருவருடைய வாக்கியங்களை நிறைவு செய்வோம். எங்களுடைய 30 வருட திருமண வாழ்வில் ஒருவர் மற்றவர் எண்ணுவதையும், பேச நினைப்பதையும் அதிகதிகமாய் அறிந்து வைத்துள்ளோம். சொல்லப் போனால் சில சமயங்களில் ஒரு வாக்கியத்தை முடிக்கக்கூட தேவையில்லை; ஒரே வார்த்தை அல்லது சிறு பார்வை கூட போதும், எங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த.

நமக்கு மிகவும் சவுகரியமாக இருப்பதினால் நம்முடைய பழைய காலணிகளை தொடர்ந்து உபயோகிப்பது போல, இதிலும் ஒரு சவுகரியம் உண்டு. சில சமயங்களில் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து, “என் பழைய செருப்பே” என ஆசையாய்க் கூறிக்கொள்வோம். ஆனால் எங்களை நன்கு அறியாதவர்கள் இதைக்கேட்டால் ஒன்றும் புரியாமல் திகைப்பார்கள்! அநேக ஆண்டுகளைக் கடந்து வந்த எங்களுடைய உறவு அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் வெளிப்பாடுகளைக் கொண்ட ஒரு மொழியை தனக்கென உருவாக்கிக்கொண்டுள்ளது.

நம்மை ஆழ்ந்து அறிந்தவராய் தேவன் நம்மை நேசிக்கிறார் என்னும் வெளிப்பாடு நமக்கு ஆறுதல் அளிக்கிறது. “என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்,” என தாவீது எழுதியுள்ளான் (சங். 139:4). இயேசுவோடு கூட அமர்ந்து உங்களுடைய இருதயத்தின் ஆழத்திலுள்ள காரியங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்பொழுது அவற்றை வார்த்தைகளில் வெளிப்படுத்த நீங்கள் திணறும் பொழுது, அதை அறிந்தவராய் புன்னகை புரிந்து நீங்கள் கூற நினைத்ததை அப்படியே அவர் வெளிப்படுத்துவார். தேவனோடு உரையாட நாம் ஏற்ற வார்த்தைகளை கூற வேண்டிய அவசியமில்லை என்பது நமக்கு எவ்வளவு நிம்மதியளிக்கக்கூடிய விஷயம்! அவர் நம்மை நேசிப்பதுமட்டுமின்றி நம்மை முழுவதுமாக அறிந்தும் வைத்திருக்கிறார்.

இரண்டு புகைப்படங்கள்

ஆலய நுழைவாயிலில் இரண்டு புகைப்படங்களை இறுகப் பிடித்துக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி, அவற்றைப் பெருமையுடன் தன் நண்பர்களுக்குக் காட்டிக்கொண்டிருந்தாள். முதலாவது புகைப்படம் அவளது தாய்நாடாகிய புருன்டியில் (Burundi) எடுக்கப்பட்ட அவளுடைய மகளின் படம். இரண்டாவது புகைப்படம் அம்மகளுக்கு பிறந்த அவளது மகனின் புகைப்படம். ஆனால் அப்புகைப்படத்தில் மகள் இல்லை. ஏனெனில், அவனை பிரசவிக்கும் பொழுது அவள் இறந்துவிட்டாள்.

அப்பொழுது அங்கு வந்த அவளுடைய தோழி அப்புகைப்படங்களைப் பார்த்துவிட்டு உடனே அம்மூதாட்டியின் முகத்தை அன்பாய் தன் கரங்களில் ஏந்தி கண்ணீரோடு, “எனக்குத் தெரியும். எனக்கு தெரியும்,” எனக் கூறினாள்.

அவளுக்குத் தெரியும்தான். ஏனெனில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தன் மகனை அவள் அடக்கம் செய்தாள்.

நம்முடைய வலி வேதனைகளை தானும் அனுபவித்தவர்கள் கூறும் ஆறுதல் விசேஷமானது. ஏனெனில் அவர்கள் எல்லாவற்றையும் அறிவார்கள். இயேசு கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு, தன் சீஷர்களைப் பார்த்து, “நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்,” என்று கூறினார்: ஆனால் அவ்வார்த்தைகளோடு நிறுத்திக்கொள்ளாமல், “நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்,” என்னும் ஆறுதலான வார்த்தைகளையும் கூறினார் (யோவா. 16:20). இன்னும் சில மணி நேரங்களில், இயேசுவின் கைதும், சிலுவை மரணமும் அவருடைய சீஷர்களை நிலைகுலையச் செய்யும். ஆனால் தாங்கொண்ணா துயரத்தில் மூழ்கியிருந்த அவர்கள் இயேசுவை உயிரோடு கண்டவுடன் எதிர்பாராத மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மேசியாவைக் குறித்து, “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்,” என ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார் (ஏசா. 53:4). நம்முடைய இரட்சகர் நம்முடைய
வலி, வேதனைகளை அறிந்தவர் மட்டுமன்று அவைகளை அனுபவித்தவரும் கூட. அவர் எல்லாவற்றையும் அறிவார். அவரே நம்மை விசாரிக்கிறவராய் இருக்கிறார். ஒரு நாள் நம்முடைய துக்கம் சந்தோஷமாக மாறும்.

நம்மில் ஒருவர்!

நமக்கு மிகவும் பிடித்தமான பீனட்ஸ் (Peanuts) என்னும் காமிக் தொடரின் படைப்பாளருமான சார்ல்ஸ் ஷல்ஸின் (Charles Schulz 1922-2000) நினைவுநாள் ஆராதனையில் அவருடைய நண்பரும் நகைச்சுவை சித்திரப்படைப்பாளருமான கேத்தி கைஸ்வைட் (Cathy Guisewite) அவருடைய இரக்க குணத்தையும், மனிதநேயத்தையும் பற்றிப் பேசினார். “நாம் அனைவரும் ஒருபோதும் தனிமையாக உணராதபடி இவ்வுலகத்திலுள்ள அனைவருடைய உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் பல கதாபாத்திரங்களை படைத்தார். நாங்கள் ஒருபோதும் தனிமையாக உணராதபடி தன்னையே எங்களுக்கு தந்தருளினார். எங்களுக்கு  பரிவுகாட்டி எங்களை உற்சாகப்படுத்தினார். எங்களில் ஒருவராகவே அவரைக் கருதும்படி உணரச்செய்தார்” எனக் கூறினார்.

நம்மை ஒருவரும் புரிந்துகொள்ளவில்லையே அல்லது நமக்கு ஒருவராலும் உதவி செய்ய முடியாதே என நாம் நினைக்கலாம். ஆனால் தம்மையே நமக்காகக் கொடுத்த இயேசு, நம்மை முற்றிலும் அறிந்தவராயும், இன்றைய தினம் நாம் எதிர்கொள்ளும் அனைத்தையும் அறிந்தவராயும் இருக்கிறார்.

எபிரேயர் 2:9-18 வசனங்கள் இயேசு இப்பூமியிலே வாழ்ந்த பொழுது மனித சாயலை முற்றிலும் தரித்தவராய் வாழ்ந்தார் (வச. 14) என்னும் ஒப்பற்ற அதிசயத்தக்க சத்தியத்தை எடுத்துரைக்கிறது. அவர் “ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசி (பார்த்தார்)” (வச. 9), பிசாசின் வல்லமையை அழித்தார் (வச. 14), “ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலையாக்கினார்”(வச. 15). இயேசு “இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்து (வச. 17).

எனது எல்லாவற்றையும்!

இளம் ஐசக் வாட்ஸ் (Issac Watts) தன்னுடைய சபையின் பாடல்கள் நிறைவற்றதாக இருப்பதை எண்ணி வருந்தினான். அப்பொழுது அவனுடைய தகப்பன் சிறப்பான பாடல்களை உண்டாக்குமாறு அவனுக்கு அன்பாக ஆணையிட்டார். அப்படியே ஐசக் செய்தான். “என் அருள் நாதா இயேசுவே” (When I survey the wondrous cross) என்னும் அவருடைய பாடல் ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. அப்பாடல் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அப்பாடலின் ஆராதனை ததும்பும் மூன்றாவது சரணம் கிறிஸ்துவின் சிலுவைக் காட்சிக்குள் நம்மை பிரவேசிக்கச் செய்கிறது.

கை, தலை, காலிலும், இதோ!
பேரன்பும் துன்பம் கலந்தே
பாய்ந்தோடும் காட்சி போல் உண்டோ?
முள்முடியும் ஒப்பற்றதே!

உலக வரலாற்றின் மிக மோசமான தருணமாகிய சிலுவைக் காட்சியை வாட்ஸ் மிக நேர்த்தியாக விவரித்துள்ளார். அன்று அச்சிலுவையின் அருகே நின்றிருந்தவர்களோடு நாமும் சற்று நேரம் சிலுவையின் அருகே செல்வோமாக. தம்முடைய சரீரத்தில் சொரசொரப்பான பெரிய ஆணிகள் பாய்ந்து, சிலுவையில் அறையப்பட்டிருந்த தேவகுமாரனாகிய இயேசு மூச்சுவிட சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். சில மணிநேர சித்திரவதைகளுக்குப் பின்பு, அவ்விடமெங்கிலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட இருள் சூழ்ந்தது. அண்டசராசரங்களின் தேவனாகிய கர்த்தர் இறுதியாக கடும் வேதனை அடைந்து, தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுத்தார். அப்பொழுது அவ்விடமெங்கிலும் நிலநடுக்கத்தின் ஆரவார சத்தம் ஒலித்தது. அதேவேளை பட்டணத்திலுள்ள ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. கல்லறைகள் திறந்து, அதிலிருந்த மரித்தோர் உயிர்பெற்று பட்டணத்திலே உலாவினார்கள் (மத். 27:51-53). இச்சம்பவங்களை எல்லாம் கண்ட அதிபதி “மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன்!” என ஒப்புக்கொண்டான் (வச. 54).

இருளில் ஒரு நமுட்டுச் சிரிப்பு

வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) பத்திரிக்கையில், பீட்டர் தையிலே (Peter Thiele) மற்றும் பிற தொழில்நுட்ப வல்லுநர்கள் மனித வாழ்வை காலவரையின்றி நீடிக்கச் செய்யும் முயற்சிகளைக் குறித்து, “தொழில்நுட்ப ஜாம்பவான்களின் சமீபத்திய திட்டப்பணி: மரணத்தை மீறிடு” என்ற தலைப்பில் ஆரியானா சா (Ariana Cha) ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இந்த திட்டப்பணிக்காக பல கோடிகளைச் செலவழிக்க அவர்கள் தயாராக இருந்தனர்.

ஆனால், அவர்கள் சற்று காலதாமதமாக வந்து விட்டனர். ஏனென்றால் மரணம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது. “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்,” என்று இயேசு கூறியுள்ளார் (யோவா. 11:25-26). தன் மீது விசுவாசம் வைக்கிற எவனும் ஒருபோதும், எச்சூழ்நிலைமையிலும் சாகவே சாவதில்லை என்று இயேசு உறுதியளிக்கிறார்.

ஆனால் ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதாவது நம்முடைய சரீரங்கள் மரித்துப்போகும். அதைக்குறித்து நாம் ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் “நான்” என்று நாம் கூறும் நம்முடைய சுயம், அதாவது சிந்தித்தல், பகுத்தறிதல், நினைவுகூறுதல், நேசித்தல் போன்ற சாகச பகுதி ஒருபோதும் சாகவே சாவதில்லை.

மேலும் இதன் சிறப்பு என்னவெனில், இது நமக்கு இலவசமாகக் கொடுக்கப்படுகிற ஒரு ஈவு. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று, இயேசு நமக்களிக்கும் இரட்சிப்பை நாம் பெறுவதே. இவ்வன்பளிப்பைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கும்பொழுது, இவ்வளவு பெரிய காரியத்திற்கு இவ்வளவு எளிமையானதொரு பதிலா என்கிற உணர்வு ஏற்படுகிறது என்று சி. எஸ். லூயிஸ் தெரிவிக்கிறார். ஆகவே அதை “இருட்டில் ஒரு நமுட்டுச்சிரிப்பு” போல என விவரிக்கிறார்.

சிலர் இதைக்குறித்து, “இது மிகவும் எளிமையாக உள்ளதே,” என்கின்றனர். நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன், நீங்கள் பிறப்பதற்கு முன்பே தேவன் உங்களை நேசித்து நீங்கள் என்றென்றும் அவரோடே வாழ வேண்டும் என்று அவர் விரும்பும்பொழுது, எதற்காக அவ்வழியை கடினமாக அமைத்திடுவார்?

கண்களால் காண முடியாத மோதிரம்

கிரேக்க தத்துவஞானியாகிய பிளாட்டோ (கி.மு. 427 - கி.மு. 348) மனித இருதயத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட ஓர் கற்பனை வழியை கையாண்டார். பூமியின் ஆழத்திலே நன்கு புதைந்து மறைந்து கிடந்த ஒரு தங்க மோதிரத்தை எதேச்சையாக கண்டுபிடித்த மேய்ப்பனைப் பற்றிய ஒரு கற்பனைக் கதையை கூறினார். ஒரு நாள் ஓர் பயங்கர நிலநடுக்கம் பழங்கால மலைக்கல்லறை ஒன்றை பிளந்து அந்த மோதிரத்தை அம்மேய்ப்பனுக்கு வெளிப்டுத்தியது. அதுமட்டுமன்றி, அந்த மோதிரத்திற்கு மந்திர சக்தி உள்ளதையும் அதை அணிபவர் மற்றவர் கண்களுக்கு தெரியாவண்ணம் மாயமாய் மறைந்து போக முடியும் என்பதையும் எதேச்சையாக அம்மேய்ப்பன் அறிந்துகொண்டான். மாயமாய் மறைந்து போவதைக் குறித்து எண்ணும் பொழுது பிளாட்டோ ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது மனிதர்கள் தாங்கள் பிடிபட்டு, தங்கள் தவறுகளுக்காக தண்டனை அனுபவிக்கக் கூடும் என்கிற கவலை அவர்களுக்கு இல்லாதிருந்தால், தீமை செய்ய அவர்கள் தயங்குவார்களா என்பதே கேள்வி.

யோவான் சுவிசேஷத்திலே இக்கருத்தை இயேசு வேறொரு கோணத்தில் சொல்வதை நாம் காணலாம். நல்ல மேய்ப்பன் என அழைக்கப்படும் இயேசு, தங்களுடைய செயல்கள் வெளியரங்கமாகிவிடாதபடி தங்களுடைய இருதயங்களை இருளின் போர்வைக்குள் மறைத்துக்கொண்டிருப்பவர்களைக் குறித்துப் பேசுகிறார் (யோவா. 3:19-20). தங்களுடைய தவறுகளை மூடி மறைத்து வைக்க நினைப்பதை சுட்டிக்காட்டி நம்மை குற்றப்படுத்த அவர் விரும்பவில்லை, மாறாக அவர் மூலமாக அவர் அளிக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொண்டு, அவரின் வெளிச்சத்திற்குள் நம்மை அழைக்கிறார் (வச. 17). நம்முடைய இருதயங்களின் மேய்ப்பவராகிய அவர் மனுஷ இருதயங்களில் உள்ள மிக மோசமான காரியங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதின் மூலம் தேவன் நம்மீது எவ்வளவாய் அன்புகூர்ந்துள்ளார் என்பதையும் வெளிப்படுத்துகிறார் (வச. 16).

தேவன் தம்முடைய இரக்கத்தின் ஐஸ்வரியத்தினாலே இருளில் இருக்கும் நம்மை ஒளியிலே அவரைப் பின்பற்றி நடக்க அழைக்கிறார்.