வகை  |  odb

பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியாது

நீதிமன்ற விசாரணைகளில் சாட்சியாளர்கள் சாதாரண பார்வையாளர்களை விட முக்கியமானவர்கள். அவர்கள் வழக்கின் முடிவையே தீர்மானிக்கக்கூடிய முக்கிய பங்கை வகிப்பவர்கள். கிறிஸ்துவின் சாட்சியாக வாழக்கூடிய நாமும் அப்படிப்பட்டவர்கள்தான். மிக முக்கியமான இயேசுவின் மரணத்தையும் உயிர்தெழுதலின் சத்தியத்தையும் குறித்து சாட்சி பகருவதில் நாம் அதிக ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும். 

இயேசுவைப் பற்றி தான் என்ன அறிந்திருந்தானோ, அதையே யோவான் ஸ்நானகன் சாட்சியாய்க் கூறி, உலகின் மெய்யான ஒளியை அறிமுகப்படுத்தினார். இயேசுவின் சீஷராகிய யோவானும், “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” என்று சம்பவித்த காரியங்களையெல்லாம் பதிவு செய்து சாட்சியளித்தார் (யோவா. 1:14). இளைஞனான தீமோத்தேயுவிற்கு அறிவுரை கூறும்பொழுதும் இந்த கருத்தைத்தான் பவுல் விளக்கிக் கூறினார். “அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி” (2 தீமோ. 2:2). 

உலக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அனைத்து கிறிஸ்தவர்களும் அழைக்கப்படிருக்கிறோம். இங்கு நாம் வெறும் பார்வையாளர்கள் அல்ல, பங்காளர்களும் கூட என்று வேதாகமம் கூறுகின்றது. வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்று சொன்ன யோவான் ஸ்நானகனைப் போல இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி சாட்சிகூறவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நமது வேலை ஸ்தலத்தில், சுற்றுப்புறத்தில், சபையில், நண்பர் மற்றும் உறவினர் மத்தியில் நம்முடைய சத்தம் கேட்க வேண்டும். அவர்கள் மத்தியில், இயேசுவைக் குறித்து ஜாக்கிரதையுடன் சாட்சி பகரலாமே!

காத்திருப்பதின் சுமை

கடந்த இரண்டு வருடங்களில், என் குடும்பத்திலிருந்த இரண்டு நபர்கள் உயிருக்கு ஆபத்தான நோயினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெற்று வந்த போது அவர்களுக்குத் துணையாக நான் இருந்தபொழுது ஒரு நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வதுதான் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எப்பொழுதும் மருத்துவரிடமிருந்து ஒரு தெளிவான பதிலையே நான் எதிர்பார்த்தேன். ஆனால், அது அரிதாகத்தான் கிடைத்தது. ஒரு தெளிவான பதிலைக் கூறுவதற்குப் பதில் அநேகந்தரம் நம்மை காத்திருக்கும்படி கூறிவிடுகிறார்கள். 

அடுத்த மருத்துவ சோதனையில் என்ன நிகழுமோ என்று எண்ணத்துடன் ஒரு நிச்சயமற்ற நிலையின் பாரத்தை சுமப்பது மிகக் கடினமானது. மரணம் நம்மை பிரிப்பதற்கு முன் நம்மிடம் இருப்பது சில வாரங்களா, மாதங்களா அல்லது வருடங்களா? வியாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். வியாதியின் அறிகுறி அதை வெறுமனே வெளிக்கொண்டு வருகிறது. மனதிற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மரணத்தைப் பற்றிய எண்ணங்களை புற்றுநோய் போன்ற வியாதிகள் முன்னே கொண்டுவந்து நிலையற்ற வாழ்வை பற்றி சிந்திக்க தூண்டுகிறது. 

நம்முடைய நிலையற்ற வாழ்வை எண்ணிப் பார்த்ததும், நான் மோசே ஜெபித்ததுபோல் ஜெபிக்கத் துவங்கினேன். நம் வாழ்க்கை காலையிலே முளைத்துப்பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்து போகும் புல்லுக்கு ஒப்பான போதிலும் (வச. 5-6), தேவனே நம் நித்திய அடைக்கலமாக இருக்கிறார் (வச. 1) என்று சங்கீதம் 90 சொல்கிறதை அறிந்து, நம்முடைய நாட்களை எண்ணும் அறிவில் வளரும்படியாகவும், ஞான இருதயமுள்ளவர்களாகும்படியும் மோசேயை போல் நாமும் ஜெபிக்கலாம். அப்படிச் செய்யும் பொழுது புல் போன்று குறுகியகால வாழ்க்கை இருந்தாலும், நம்முடைய கைகளின் கிரியைகளை அவரே உறுதிப்படுத்துவார் (வச. 17).  

கடைசியாக, நம்முடைய நம்பிக்கை மருத்துவரின் ஆய்வறிக்கையில் இல்லை, “தலைமுறை தலைமுறையாக” நமக்கு அடைக்கலமாக இருக்கின்ற தேவன் மீதே இருக்கின்றது.

இருளிலும் துதிப்போம்

என்னுடைய நண்பன் மிக்கி(Mickey) தனது கண் பார்வையை இழந்து கொண்டிருந்த நிலையிலும், “நான் தேவனை தினந்தோறும் போற்றித் துதிக்கப் போகிறேன். ஏனெனில் அவர் எனக்காக அநேக காரியங்களை செய்துள்ளார்” என்று சொன்னான். 

முடிவில்லா துதியை ஏறெடுப்பதற்கான அற்புதமான காரணத்தை இயேசு நமக்கும் மிக்கிக்கும் தந்துள்ளார். சிலுவையில் அறையப்படுவதற்கு முந்திய நாள் இரவு, இயேசு தமது சீஷர்களோடு பஸ்கா உணவு உண்பதை மத்தேயு 28ஆம் அதிகாரத்தில் காணலாம். உணவருந்தி முடிந்ததும், “அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடி பின்பு ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்” என்று 30ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த இரவு அவர்கள் ஏதோ ஒரு பாடலைப் பாடவில்லை – அது ஒரு துதிப் பாடலாகும். பல நூற்றாண்டுகளாக, ‘ஹல்லேல்’(Hallel) என்று குறிப்பிடப்பட்ட சில சங்கீதங்களை பஸ்கா பண்டிகையின்போது எபிரேயர்கள் பாடி வந்தனர் (எபிரேய மொழியில் ஹல்லேல் என்றால் “துதி” என்று அர்த்தம்). சங்கீதம் 113-118ல் இடம்பெற்றுள்ள ஹல்லேல் பாடல்கள், நமது இரட்சிப்பாகிய தேவனை கனம்பண்ணுவதை காணலாம் (118:21). தள்ளப்பட்ட கல் மூலைக்கல் ஆனதையும் (வச. 22) தேவனுடைய நாமத்தில் வருபவரைப் பற்றியும் இந்தப் பாடல்கள் குறிப்பிடுகின்றன (வச. 26). அப்படியென்றால், “இது கர்த்தர்  உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்” என்று அவர்கள் அந்த இரவிலே பாடியிருக்கவேண்டும் (வச. 24). 

இயேசுவும் அவரது சீஷர்களும் பஸ்கா இரவில் தேவனைப் பாடித் துதித்ததின் மூலம், நாம் நம்முடைய சூழ்நிலைகளை விட்டு நமது கண்களை திருப்பி தேவனையே நோக்கும்படி நம்மை அழைக்கிறார். தேவனுடைய முடிவில்லா அன்பையும் நம்பிக்கையையும் நாம் என்றென்றும் போற்றும்படியாக அவர் நமக்கு முன் சென்று அன்றிரவு பாடித் துதித்தார்.

நான் மன்னிக்க வேண்டுமா?

ஓர் நிகழ்ச்சிக்காக ஆயத்தம்செய்யும்படி ஆலயத்திற்கு நான் சீக்கிரமாக வந்திருந்தேன். அப்போது ஆலயத்தின் ஓர் ஓரத்திலே ஒரு பெண் நின்று அழுதுகொண்டிருந்தாள். கடந்த காலத்தில் அவள் என்னைப்பற்றி மிகமோசமாக புறங்கூறியதை நான் அறிந்ததினால், அவளைக் கண்டுகொள்ளாமல் ‘வாக்யூம் கிளீனரின்’(vacuum cleaner) சத்தத்தில் அவள் அழுகையின் சத்தத்தை மூழ்கடித்துவிட்டு இடத்தை சுத்தப்படுத்த தொடங்கினேன். என்னை விரும்பாத ஒருவரைப்பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும் என்று எண்ணினேன்.

ஆனால், தேவன் என்னை எவ்வளவாக மன்னித்திருக்கிறார் என்பதை ஆவியானவர் நினைவுபடுத்தியவுடன், நான் அவளருகே சென்றேன். தன்னுடைய குழந்தை மருத்துவ மனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வருவதாக அவள் கூறினாள். நாங்கள் அழுதோம், அரவனணத்துக் கொண்டோம், பின்பு அவளது குழந்தைக்காக ஜெபித்தோம். எங்களுக்கு இடையே இருந்த பிரச்சனைகளை நாங்கள் சரிசெய்து கொண்டபின், இப்பொழுது நல்ல நண்பர்களாக மாறிவிட்டோம். 

மத்:18ஆம் அதிகாரத்தில், கணக்குவழக்கை சரிபார்க்கத் தொடங்கும் ஒரு ராஜாவுடன் பரலோகராஜ்ஜியத்தை இயேசு ஒப்பிடுகிறார். தன்னிடம் ஒரு மிகப்பெரிய தொகையை கடனாகப் பெற்றிருந்த ஓர் வேலைக்காரன் இரக்கத்திற்காக மன்றாடினபொழுது. ராஜா அவனது கடனை ரத்து செய்தார். ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே சென்று, தன்னிடம் மிக சொற்ப தொகை கடன் வாங்கியிருந்த ஓர் நபரை கண்டுபிடித்து அவனிடம் இரக்கமின்றி மிகக் கடினமாக நடந்து கொண்டான். ராஜாவிடம் இவன் வாங்கியிருந்த கடனோடு அதை ஒப்பிட்டுப் பார்த்தால் அது மிகவும் சிறிய தொகையே. இதை அறிந்த ராஜா, மன்னிக்காத சுபாவத்தையுடைய அந்த கொடிய வேலைக்காரனை கைது செய்து சிறையிலடைக்கும்படி உத்தரவிட்டார் (வச. 23-24). 

மன்னிக்கும்படியான தீர்மானத்தை நாம் எடுப்பதினால், பாவத்தை ஆதரிக்கலாம் என்றோ, நமக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடவேண்டும் என்றோ, அல்லது நம்முடைய காயங்களின் வலி குறைந்து போகும் என்றோ நினைக்கக்கூடாது. மன்னிப்பதின் மூலம் நம் வாழ்விலும், நமது உறவுகளின் மத்தியிலும் சமாதனம் உண்டுபண்ணும் அழகிய கிரியைகளை செய்யும்படியாக தேவனை அழைக்கிறோம். மன்னிப்பை அளிப்பதினால் நாம் விடுதலையடைந்து கிருபையினால் தேவன் நமக்களித்த இரக்கத்தினை அனுபவிக்கத் தொடங்குகிறோம்.

நினைவுகள் செய்யும் ஊழியம்!

இழப்பும், ஏமாற்றமும் நம் வாழ்வில் ஏற்படும்பொழுது, கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் குழப்பத்தை அது நம்மிடம் விட்டுச்செல்கிறது. நம்முடைய தீர்மானங்களினால் சில கதவுகள் அடைபட்டுப்போயிருக்கலாம் அல்லது நம்முடைய தவறேதுமின்றி சூழ்நிலையால் துயரத்தை சந்தித்திருக்கலாம். எதுவாக இருப்பினும், அந்நினைவுகளின் முடிவில் சோகமே மிஞ்சியிருக்கும். “ஒருவேளை இப்படி நடந்திருந்தால்’ என்ற எண்ணத்தினால் உண்டான அளவிடமுடியாத சோகம்” என்று ஆஸ்வல்ட் சேம்பர்ஸ் (Oswald Chambers) அந்த நிலையை அழைக்கின்றார். அப்படிப்பட்ட வேதனையான நினைவுகளை நாம் மறக்க முயன்றும், முடியாமல் தவிக்கிறோம். 

அப்படிப்பட்ட நேரங்களில், தேவன் இன்றைக்கும் நம் வாழ்வில் கிரியை செய்து கொண்டிருக்கிறார் என்பதை சேம்பர்ஸ் நமக்கு நினைவுபடுத்துகிறார். “கடந்தகால நினைவுகளை தேவனே திரும்ப கொண்டுவரும் பொழுது பயப்படாதீர்கள். ஏனெனில் அது தேவனுடைய ஊழியக்காரனாய் இருந்து நம்மை கடிந்தும் திருத்தியும், துக்கத்தை ஏற்படுத்தியும் ஊழியம் செய்கிறது. அதன் மூலம் “ஒருவேளை இப்படி நடந்திருந்தால்’ என்ற எண்ணத்தை மாற்றி எதிர்காலத்தை சரியாக எதிர்கொள்ள, அதே இடத்தில்
நல்வளர்ச்சியை காணச்செய்வார். ஆகவே நினைவுகளை அதன் போக்கிலே விட்டுவிடுங்கள்” என்று கூறுகிறார்.

பழைய ஏற்பாட்டின் காலத்தில், இஸ்ரவேல் ஜனம் பாபிலோனுக்கு சிறைப்பட்டுச் சென்றபோது மீண்டும் அவர்களை தேவன் தங்கள் சொந்த நாட்டிற்கு அழைத்து வரும் வரை, அந்நிய தேசத்தில் அவரை சேவித்து, விசுவாசத்தில் வளரும்படியாக அவர்களிடம் கூறினார். “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன், அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே’’ என்று கர்த்தர் கூறினார் (எரே. 29:11). 

கடந்த கால சம்பவங்களை எண்ணி தங்களையே வருத்திக்கொள்ளவும் வேண்டாம், அல்லது அதை அசட்டை செய்துவிடவும் வேண்டாம் என்று தேவன் அறிவுறுத்துகிறார். மாறாக, அவர்மேல் நம்பிக்கை வைத்து, முன்னோக்கிச் செல்லச் சொல்கிறார். தேவனுடைய மன்னிப்பு நம்முடைய துக்கமான நினைவுகளை மாற்றி, அவரது நிலையான அன்பில் உறுதியுடன் நிலைத்து நிற்க உதவி செய்கிறது.

ஐந்து நிமிட விதி

தன் பிள்ளைகளிடத்தில் ஐந்து-நிமிட விதியை உபயோகித்து வந்த ஓர் தாயைப் பற்றி நான் புத்தகத்தில் படித்தேன். தன் பிள்ளைகள் தினமும் பள்ளிக்குச் செல்ல தயாரானவுடன் செல்வதற்கு முன், அனைவரும் ஐந்து நிமிடங்கள் ஒன்று கூட வேண்டும் என்பதே அந்த விதி.

அவர்கள் தங்கள் தாயைச் சுற்றி நின்றுகொள்வர். அப்போது அவர் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி, தேவனுடைய ஆசீர்வாதம் அவர்கள் மேல் அன்று நிலைத்து இருக்கும்படியாக ஜெபிப்பார். பின்னர், முத்தமிட்டு, அவர்களை வழியனுப்பி வைப்பார். சுற்றுப்புறத்திலிருக்கும் பிள்ளைகள் அந்நேரம் அங்கு வந்தால் அவர்களும் ஜெபத்திலே கலந்து கொள்வார்கள். அப்பிள்ளைகளில் ஒருவர், அந்த அனுபவம் ஜெபத்தின் முக்கியத்துவத்தை தனக்கு கற்றுத் தந்ததாக பல வருடங்களுக்குப் பின்னர் பகிர்ந்துகொண்டார். 

102ஆம் சங்கீதத்தை எழுதியவருக்கு ஜெபத்தின் முக்கியத்துவம் நன்கு தெரிந்திருந்தது. “பலவீனம் அடைந்து பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் ஒரு நபர், தேவனிடம் தன் புலம்பல்களை கொட்டும் சங்கீதம்” என்று அதன் தலைப்பு இருகின்றது. “கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்.. நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்” (வச. 1-2) என்று அவர் அழுகின்ற பொழுது, தேவன் “தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்நோக்கமாக” இருக்கிறார் (வச.19). 

தேவன் உங்கள் மீது அக்கறையுடன் இருக்கிறார், உங்களுடைய குரலைக் கேட்க விரும்புகிறார். நீங்கள் ஐந்து-நிமிட விதியைப் பின்பற்றி ஆசீர்வாதங்களை பெற விரும்பினாலும் சரி அல்லது கொடுந்துயரத்தினால் பல மணிநேரம் தேவனுடைய பாதத்தில் அழுது புலம்பினாலும் சரி, எப்படியோ ஒவ்வொரு நாளும் தேவனிடம் பேசுங்கள். உங்களது செயல், உங்கள் குடும்பத்தினர் மீது அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்கள் மீது பெரிய தாக்கத்தை நிச்சயமாக ஏற்படுத்தும்.

பிரபஞ்சத்தில் தனிமையாக!

அப்போலோ 15 (Apollo 15) என்னும் விண்வெளிக்கப்பலில் பயணித்த விண்வெளி வீரரான அல் வோர்டன் (Al Worden) சந்திரனிலிருந்து தொலைதூரத்தில் தனியாக வசிக்கும் அனுபவத்தை நன்கு அறிந்தவர். இவர் 1971ஆம் ஆண்டு, விண்கலத்தின் கட்டளை மையமாகிய என்டவோரில் (endeavor), மூன்று நாட்கள் தனியாக இருக்கவேண்டியதாயிற்று. இவருடன் வந்த இரண்டு பேரும் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த சந்திரனின் மேற்பரப்பில் வேலை செய்துகொண்டிருந்தனர். தலைக்கு மேல் தெரிந்த நட்சத்திரங்கள் மாத்திரமே அவருக்குத் துணையாக இருந்தன. நட்சத்திரங்கள் மிகுதியாக இருந்ததால் ஒளிவீசும் போர்வை ஒன்று அவரைச் சுற்றி வளைத்து கொண்டிருந்தது போல இருந்ததாக நினைவுகூருகிறார்.  

வீட்டைவிட்டு வந்த யாக்கோபு, சூரியன் அஸ்தமித்து இரவு நேரம் வந்தபொழுது அவனும் தனிமையை உணர்ந்தான். ஆனால் அவன் தனியாக இருந்ததற்கு காரணம் வேறு. முதற்குமாரனுக்குரிய ஆசீர்வாதத்தை தன் மூத்த சகோதரனிடமிருந்து யாக்கோபு தந்திரமாக திருடிக்கொண்டதால், அவன் இவனை கொலை செய்ய நினைத்தான். ஆகவே யாக்கோபு தன் சகோதரனிடமிருந்து தப்பித்துக் கொள்ளும்படி வீட்டைவிட்டு ஓடிவந்தான். தனிமையில் யாக்கோபு தூங்க ஆரம்பித்தவுடன், அவனுக்கு ஓர் கனவு வந்தது. கனவில் பரலோகமும் பூமியும் ஓர் படிக்கட்டினால் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். அதில் தூதர்கள் ஏறுவதையும், இறங்குவதையும் கண்டபொழுது, தேவனுடைய சத்தத்தை கேட்டான். அவர் அவனோடிருந்து, அவன் பிள்ளைகளின் வாயிலாக முழு உலகையும் ஆசீர்வதிக்கப்போவதாக அவனுக்கு வாக்களித்தார். பின்பு தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட யாக்கோபு “மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன்” என்று கூறினான் (ஆதி. 28:16). 

வஞ்சகம் செய்ததினால் யாக்கோபு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டான். அவனுடைய தோல்விகளின் மத்தியிலும், இருண்ட இரவின் மத்தியிலும், அவன் தேவனின் பிரசன்னத்தினால் சூழப்பட்டிருந்தான். அவருடைய நோக்கங்கள் நம்முடைய திட்டங்களைவிட மேன்மையானதாகவும் நீண்டகால விளைவு உடையதாகவும் இருக்கின்றது. பரலோகம் நாம் நினைப்பதைவிட மிக அருகில்தான் இருக்கின்றது. “யாகோபின் தேவனும்” நம்மோடுதான் இருக்கின்றார்.

ஒரே ஒரு தொடுதல்

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு தொலைவான பகுதியில் மருத்துவ ஊழியம்செய்யும் வாய்ப்பு வந்தபொழுது கைலீ(Kiley) உற்சாகமடைந்த போதிலும் மருத்துவ அனுபவம் எதுவும் தனக்கில்லையே என்று சற்றே கலக்கமடைந்தாள். ஆனாலும் அடிப்படை மருத்துவ உதவியை அவளால் தரமுடியும் என்பதை எண்ணி தைரியமடைந்தாள். 

அங்கு சென்றபொழுது, மிகவும் கொடுமையான ஓர் வியாதியையுடைய ஒரு பெண்ணை சந்தித்தாள். உருக்குலைந்து அழுகிய நிலையிலிருந்த காலைக் கண்டவுடன் கைலீயிக்கு அருவருப்பாக இருந்தது, ஆனாலும் தான் ஏதாவது செய்யவேண்டும் என்பதை அறிந்திருந்தாள். ஆகவே அப்பெண்ணின்  காலைத் தொட்டு காயங்களை சுத்தப்படுத்தி கட்ட ஆரம்பித்தாள். அதைக் கண்ட அப்பெண் அழஆரம்பித்தாள். கவலை அடைந்த கைலீ, தான் வலியை ஏற்படுதிவிட்டேனோ என்று அப்பெண்ணிடம் கேட்டபொழுது, “இல்லை, கடந்த ஒன்பது வருடங்களில் இன்றைக்குத் தான் என்னை ஒருவர் தொட்டிருக்கிறார்” என்று அவள் கூறினாள்.

தொழுநோயும் அப்படிப்பட்ட ஒரு வியாதிதான். அதனால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டாலே மக்கள் முகஞ்சுழிப்பதுண்டு. அந்நோய் பரவுவதை தடுக்கும் பொருட்டு “அவர்கள் தனித்து வாழவேண்டும். அவர்கள் கூடார முகாம்களுக்கு வெளியேதான் இருக்கவேண்டும்” என்று பண்டைய யூத கலாச்சாரத்தில் பல கடுமையான சட்டங்கள் இருந்தது (லேவி. 13:46). 

அதனால்தான் இயேசுவை நோக்கி வந்த குஷ்டரோகி சொன்ன வார்த்தைகள் மிகவும் விசேஷமானது. அவன் “ஆண்டவரே உமக்கு சித்தமானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும்,” என்றான் (மத். 8:2). இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: ‘எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு’ என்றார்” (வச. 3). 

தனிமையில் வாழ்ந்துவந்த ஓர் பெண்மணியின் வியாதியுற்ற காலைத் தொட்டதினால் ஓரு இணைப்பை ஏற்படுத்தும் இயேசுவின் பயமற்ற அன்பை கைலீ வெளிப்படுத்தத் தொடங்கினாள். ஓர் சிறிய தொடுதல்தான் இவற்றையெல்லாம் செய்தது.

தேவனிடம் சில கேள்விகள்

நீங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென தேவன் ஓர் செய்தியுடன் தோன்றினால் என்ன செய்வீர்கள்? இஸ்ரவேலனாகிய கிதியோனின் வாழ்வில் அப்படி ஓர் சம்பவம் நடந்தது. “கர்த்தருடைய  தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: ‘பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்’ என்றார்.” எதுவும் பேசாமல் தலையசைத்துவிட்டு சும்மா இருக்க கிதியோனால் முடியவில்லை. தேவன் ஏன் தம் ஜனத்தை கைவிட்டுவிட்டார் என்பதற்கான பதிலை அறிந்துகொள்ள விரும்பினான். ஆகவே, “ஆ என் ஆண்டவனே,  கர்த்தர்  எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்?” என்று கேட்டான் (நியா. 6:12-13).

தேவன் அந்த கேள்விக்கான பதிலைக் கூறவில்லை. ஏழு வருடங்களாக, எதிரியின் தாக்குதல்கள், குகைக்குள் வாசம்செய்யும் அனுபவங்கள், பசி பட்டினி போன்றவற்றை சந்தித்து வந்த கிதியோனிடம் அவர் இடைபட்டதற்கான நோக்கத்தை தேவன் தெரிவிக்கவில்லை. இஸ்ரவேலின் பாவங்களைக் குறித்து தேவன் பேசியிருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்யாமல் எதிர்காலத்தை குறித்த நம்பிக்கையை மாத்திரம் தேவன் கிதியோனிடம் தந்தார். “உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்... நான் உன்னோடேகூட இருப்பேன்”
(வச. 14,16) என்று சொல்லி கிதியோனை உற்சாகப்படுத்தினார்.

உங்களுடைய வாழ்வில் துன்பங்களைச் சந்திக்க தேவன் ஏன் அனுமதிக்கிறார் என்று எண்ணியுள்ளீர்களா? அந்த கேள்விக்கான பதிலை இன்றைக்கு அவர் தராமல் போகலாம், ஆனால் உங்கள் அருகில் வந்து தமது பிரசன்னத்தால் உங்களை நிறைத்து, சோர்ந்து போகும் நாளில் அவரது பலத்தினால் உங்களை தாங்குவார் என்ற உறுதியை உங்களுக்கு தருகிறார். தேவன் நிச்சயமாகவே அவனோடிருந்து அவனுக்கு உதவிசெய்வார் என்று கிதியோன் நம்பியவுடன், அவருக்காக ஓர் பலிபீடத்தை கட்டி “யெகோவா ஷாலோம்” (சமாதானத்தின் தேவன் – வச. 24) என்று அதற்கு பெயரிட்டான்.

தம்மைப் பின்பற்றுபவர்களை விட்டு விலகுவதுமில்லை, கைவிடுவதுமில்லை என்று வாக்குறுதியை அளித்த தேவன், நாம் என்ன செய்தாலும் எங்கு சென்றாலும், எப்பொழுதும் நம்மோடு இருந்து நம் கூடவே வருகிறார் என்பதை நினைக்கும்பொழுது சமாதானத்தினால் மனம் நிறைகின்றதே.