வகை  |  odb

கண்சிமிட்டி தேவனை எண்ணிப் பார்

என்னுடைய தோழி ரைலி (Ryley) “தேவன் கண் இமையைப் போன்றவர்” என்று கூறியதைக் கேட்டு ஒன்றும் புரியாமல் முழித்தேன். அவள் கூறியதின் பொருள் என்ன? 

வேதாகமத்தில் தேவனைக் குறித்து சித்தரிக்கப்பட்டுள்ள படங்களைக் கடந்த சில நாட்களாக நாங்கள் இருவரும் சேர்ந்து ஆராய்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். உதாரணத்திற்கு வேதத்தில் தேவனை பிரசவிக்கும் தாயாகவும் (ஏசா. 42:14), தேனீ வளர்ப்பவராகவும் (7:18) காணலாம். ஆனால் என் தோழி கூறியது எனக்கு புதிதாக இருந்தது. ஆகவே அவளைப் பார்த்து, “அதைப்பற்றி மேலும் கூறு”, என்றேன். உடனே உபாகமம் 32ஆம் அதிகாரத்தை அவள் சுட்டிக்காட்டினாள். தன் ஜனத்தை தேவன் பராமரிக்கும் விதத்தை எண்ணி மோசே தேவனை போற்றி துதிப்பதை அவ்வதிகாரத்தில் காணலாம். அவர்களை “தமது கண்மணியைப்போல” தேவன் பாதுகாத்து காத்தருளினார் என்று 10ம் வசனம் விவரிக்கிறது. 

கண்மணியைச் சூழ்ந்து பாதுகாப்பது எது? கண் இமை தானே! ஆம், தேவன் கண் இமையை போன்றவர். மென்மையான கண்களை பாதுகாப்பதையே தன் இயற்கையான பண்பாக கொண்ட கண்ணிமையை போன்றவர் நம் தேவன். கண்ணிமைகள் அபாயத்திலிருந்து கண்களை பாதுகாப்பது மட்டுமன்றி நாம் கண் சிமிட்டும்பொழுது, அழுக்கையும் தூசியையும் வெளியேற்றுகிறது. மேலும் வியர்வை உட்புகாமல் பாதுகாக்கிறது, கண்கள் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இறுதியாக கண்களை மூடி இளைப்பாற உதவி செய்கிறது. 

தேவனை கண்ணிமையாக சித்தரித்துப் பார்த்தபொழுது, அவர் நம்மீது வைத்துள்ள அன்பை நாம் அறிந்துகொள்ளும் பொருட்டு அவர் நமக்களித்த அநேக உருவகங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்தினேன். இரவிலே கண்களை மூடி காலையில் விழிக்கும்பொழுது, தேவனுடைய மென்மையான பாதுகாப்பையும் பராமரிப்பையும் எண்ணி அவரை போற்றித் துதிப்போமாக.

தேவனைக் காணும் விதம்

பொது இடங்களில், கேலிச்சித்திர ஓவிய கலைஞர்கள் சுமாரான விலையாவது கொடுத்து வாங்கக் கூடிய மக்களிடம் அவர்களுடைய உருவத்தை நகைச்சுவையான வடிவில் வரைந்து தருவார்கள். நம்முடைய தோற்றத்தின் ஏதாவது ஒரு அம்சத்தை சற்று மிகைப்படுத்தி, ஆனால் அதே சமயம் நாம் நம்மை அடையாளம் காணும் விதத்தில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்கள் நம்மை மகிழ்விக்கும். 

ஆனால் தேவனைக் குறித்த கேலிச்சித்திரங்கள் வேடிக்கைக்குரியதல்ல. ஏனெனில், அவருடைய ஏதாவது ஒரு பண்பை மிகைப்படுத்தி காட்டும்பொழுது திரிக்கப்பட்ட அக்கண்ணோட்டத்தை எளிதாக மக்கள் ஒதுக்கி விடுவார்கள். ஒரு கேலிச்சித்திரத்திற்கு நாம் எப்படி அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ அதேபோலவே, தேவனைக்குறித்து மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டத்திற்கும் நாம் முக்கியத்துவம் அளிப்பதில்லை. தேவனை கோபாக்கினை நிறைந்த இரக்கமற்ற நியாயதிபதியாகவே காணும் மக்கள், அவருடைய இரக்கங்களையே வலியுறுத்தும் ஒருவரால் எளிதாக கவரப்படுவார்கள். தேவனைக் கனிவான உள்ளம் கொண்ட தாத்தாவாக காணும் இவர்களோ, நீதியை சரிகட்டும் நியாயாதிபதியாகவும் தேவனைக் காண மறுத்துவிடுவார்கள். இன்னொரு பக்கம், தேவனை அன்பு நிறைந்த, ஜீவனுள்ள நபராகச் காணாமல், அறிவார்த்தமான கருத்தாகவோ, எண்ணமாகவோ காணும் சிலர் அவர்களை வசீகரிக்கக்கூடிய வேறு கருத்துகளினால் இழுக்கப்பட்டு இறுதியில் விலகிச்சென்று விடுவார்கள். தேவனை உற்ற நண்பராக கருதும் வேறு சிலர், தங்கள் விருப்பத்திற்கேற்ற நண்பர்களைக் கண்டடைந்தால், தேவனை அநேகமாய் மறந்து விட்டுவிடுவார்கள். 

தம்மை இரக்கமும் கிருபையும் நிறைந்தவராக மாத்திரமல்லாமல் நீதியை விசாரிக்கிறவராகவே தேவன் வெளிப்படுத்துகிறார் (யாத். 34:6-7). 

நாம் நம்முடைய விசுவாசத்தை செயல்படுத்த முனையும்பொழுது, தேவனை பிடித்தமான பண்புகளை மாத்திரமே உடையவராக சித்தரிப்பதை நாம் தவிர்த்துவிட வேண்டும்.

வெளிவர வழியைக் கண்டுபிடித்தல்!

கலிபோர்னியாவிலுள்ள சாண்டா பார்பரா (Santa Barbara) என்னும் ஊரில் “சால்ஸிபுடெஸ்” (Salsipuedes) என்னும் விசித்திர பெயர் கொண்ட ஒரு தெரு உண்டு. அதன் அர்த்தம் “முடிந்தால் சென்று விடுங்கள்,” என்பதே. அப்பகுதியை ஒட்டி சதுப்பு நிலம் இருந்ததால் சில சமயம் வெள்ள அபாயம் ஏற்படுவதுண்டு. ஆகவே அப்பட்டணத்தை திட்டமிட்டு கட்டிய ஸ்பானிஷ் மொழி பேசும் நபர்கள் மக்களை எச்சரிக்கும் விதமாக வெளிப்படையாக அப்படியொரு பெயரை அத்தெருவிற்கு சூட்டினார்கள். 

“அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே, அதை விட்டு விலகிக் கடந்துபோ”, என்று பாவமும் சோதனைகளும் நிறைந்த “தவறான பாதையை” விட்டு விலகி இருக்குமாறு தேவனுடைய வார்த்தை நம்மை எச்சரிக்கிறது (நீதி. 4:15). ஆனால் “உங்களால் முடிந்தால் அவ்வழியில் செல்லாதே” என வேதம் கூறவில்லை. மாறாக, “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட, அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்,” என வேதம் நமக்கு நம்பிக்கையளித்து தேவனையே நோக்கச் செய்கிறது (1 கொரி. 10:13). 

நம்முடைய திராணிக்கு மேலாக தேவன் ஒருபோதும் நம்மைச் சோதிக்க மாட்டார் என்கிற வாக்குத்தத்தம் நமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. நாம் சோதனையை எதிர் கொள்ளும்பொழுது தேவனையே நோக்கினால் நாம் அச்சோதனையின்று தப்பிக்கொள்ளும்படி உதவிட ஆவலாய் இருக்கிறார்.

“நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்(கூடிய) பிரதான ஆசாரியர் நமக்கு(உண்டு)”, என்று இயேசுவைக் குறித்து வேதம் உறுதியளிக்கிறது (எபி. 4:15). அவர் “எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராய் இருப்பதனால் எல்லா சோதனையினின்றும் தப்பித்துக்கொள்ளும் வழியை அவர் அறிவார். ஆகவே அவரிடம் நாம் செல்லும்பொழுது தப்பிச்செல்ல வழியைக் காண்பித்தருளுவார்!

பிள்ளையை ஆயத்தப்படுத்து!

“கடந்து செல்ல வேண்டிய பாதைக்கு ஏற்றவாறு பிள்ளையை ஆயத்தப்படுத்து, பாதையை அல்ல” என்னும் சொற்றொடரை அநேக குழந்தைவளர்ப்பு வலைத்தளங்களில் காணலாம். நம்முடைய பிள்ளைகள் செல்லும் பாதையில் உள்ள தடைகளை எல்லாம் நாம் அகற்றிவிட முனைவதைக்காட்டிலும் அப்பாதையில் உள்ள சிரமங்களை எல்லாம் அவர்கள் தைரியத்தோடு எதிர்கொண்டு முன்னேறிச்செல்ல அவர்களை நாம் ஆயத்தப்படுத்த வேண்டும். 

“பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். அவர்... வேதத்தை ஸ்தாபித்து, அவைகளை தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்... பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு... தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படி...” என சங்கீதக்காரன் எழுதியுள்ளான் (சங். 78:4-6). “தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கு,” (வச. 7) அவர்களை ஆயத்தப்படுத்துவதே அதன் நோக்கம். 

பிறர் தங்களுடைய சொல்லாலும் செயலாலும் நம்மீது ஏற்படுத்திய வல்லமையான ஆவிக்குரிய தாக்கத்தை எண்ணிப்பாருங்கள். அவர்களுடைய உரையாடல்களும் செயல்களும் நம்முடைய கவனத்தை ஈர்த்து, கிறிஸ்துவை அவர்கள் பின்பற்றுவது போலவே நாமும் அவரை பின்பற்றும்படி நம்முடைய இருதயங்களை கொளுந்துவிட்டு எரியச்செய்தன. தேவனுடைய வார்த்தையையும் அவருடைய திட்டங்களையும் அடுத்த தலைமுறையினரோடு பகிர்ந்துகொள்வது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய சிலாக்கியமும் கடமையுமாகும். அதன் மூலம் நாம் அநேக தலைமுறைகளை சந்திக்கக்கூடும். அவர்களுடைய வாழ்வில் அவர்கள் செல்லப்போகும் பாதையில் உள்ள அனைத்தையும் தேவ பெலத்தோடு அவர்கள் எதிர்கொள்ள அவர்களை ஆயத்தப்படுத்தி பெலப்படுத்த வேண்டும்.

தேவனால் உடுத்துவிக்கப்பட்டு!

என்னுடைய பிள்ளைகள் சிறுவர்களாய் இருந்தபொழுது, எங்களுடைய தோட்டத்தில் விளையாடும் சமயம், கொஞ்ச நேரத்திலேயே சேறும் மண்ணும் அவர்கள்மீது ஒட்டிக்கொள்ளும். ஆகவே அவர்கள் விளையாடிவிட்டு வீட்டுக்குள் வரும்பொழுது, வாசலில் வைத்து அவர்களுடைய ஆடைகளைக் கழற்றிவிட்டு ஒரு துண்டைச் சுற்றி குளியலறைக்கு அவர்களை கொண்டு சென்று விடுவேன். இல்லையென்றால் தரையெல்லாம் அழுக்காகிவிடும். சிறிது நேரத்திலேயே, தண்ணீர் மற்றும் சோப்பின் உதவியோடு அழுக்கெல்லாம் நீங்கி அவர்கள் சுத்தமாகி விடுவார்கள். 

பாவத்தையும் தப்பிதங்களையும் குறிக்கும் அழுக்கான ஆடையைப் பிரதான ஆசாரியனாகிய யோசுவா உடுத்தியிருப்பதை ஒரு தரிசனத்தில் சகரியா கண்டான் (சக. 3:3). ஆனால், தேவன் அவனை சுத்திகரித்து, அவனுடைய அழுக்கான வஸ்திரங்ககளை களைந்து சிறந்த வஸ்திரங்களினால் அவனை உடுத்துவித்தார் (3:5). தேவன் அவனுடைய பாவத்தை எல்லாம் நீக்கி விட்டார் என்பதையே அவனுடைய புதிய தலைப்பாகையும் ஆடையும் பறைசாற்றியது.

அதைப்போலவே சிலுவையின் மூலம் இயேசு நமக்களித்த இரட்சிப்பினால் நம்முடைய பாவம் கழுவப்பட்டு நாமும் விடுதலை பெறலாம். அவருடைய சிலுவை மரணத்தின் மூலம், நம்மை பற்றிக்கொண்டிருக்கும் பாவக்கறைகளெல்லாம் நீங்கி தேவனுடைய குமாரர் குமாரத்திகள் என்ற ஆடையை தரித்து கொள்கிறோம். இனி ஒருபோதும் நாம் செய்த பாவங்களினால் (பொய், திருட்டு, புறங்கூறுதல், இச்சை மற்றும் இதர பாவங்கள்) எண்ணப்படாமல், தேவன் தான் நேசிப்பவர்களுக்கு கொடுத்த நாமங்களினால் அறியப்படுவோம். அதாவது இனி நாம் மீட்கப்பட்டவர்கள், மறுரூபமாக்கப்பட்டவர்கள், பரிசுத்தமாக்கப்பட்டவர்கள், விடுதலையானவர்கள் என அழைக்கப்படுவோம். 

நீங்கள் உங்களுக்கென்று தேவன் வைத்துள்ள ஆடையை அணிந்துகொள்ளும்படி, உங்களுடைய அழுக்கான ஆடையை களைந்து விடும்படி தேவனிடம் கேளுங்கள்.

சிங்கங்களோடு ஜீவித்தல்!

சிக்காகோவிலுள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு நான் சென்றிருந்தபொழுது, பண்டைக்கால பாபிலோன் தேசத்து சிங்கத்தின் வரைபடம் ஒன்றைக் கண்டேன். அது மூர்க்கமான முகபாவத்தையுடைய சிறகுள்ள ஒரு சிங்கத்தின் பெரிய அளவிலான சுவர் சித்திரம். அன்பையும் யுத்தத்தையும் குறிக்கும் பாபிலோனிய தேவதையாகிய இஷ்தாருக்கு அடையாளமாகிய இச்சிங்கம், கி.மு 6௦4-562 காலக்கட்டத்தில் ஒரு பாபிலோனிய பாதையில் அணி வகுத்து நின்ற 12௦ சிங்கங்களுக்கு உதாரணமாக உள்ளது. 

பாபிலோனிய சாம்ராஜ்ஜியம் எருசலேமைத் தோற்கடித்தபின்பு, சிறைபிடிக்கப்பட்டு நெபுகாத்நேசாரின் ராஜ்ஜியத்திற்கு கொண்டு செல்லப்பட்ட எபிரேயர்கள், அச்சிங்கங்களைக் கண்டிருப்பார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். மேலும் இஸ்ரவேலின் தேவனை இஷ்தார் தேவதை தோற்கடித்துவிட்டதாக சில இஸ்ரவேலர் எண்ணியிருக்கக்கூடும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் எபிரேய கைதியான தானியேலோ மற்ற இஸ்ரவேலரை சஞ்சலப்படுத்திய சந்தேங்களுக்கு இடங்கொடுக்கவில்லை. தேவனைக் குறித்த தன்னுடைய கண்ணோட்டத்திலும் அர்ப்பணிப்பலும் அவன் உறுதியாய் இருந்தான். இஸ்ரவேலின் தேவனைச் சேவிப்பதினால் குகையிலே தன்னை போட்டுவிடுவார்கள் என அறிந்திருந்தும், ஜன்னல்களை திறந்து வைத்து, அனுதினமும் மூன்று வேளை ஜெபித்து வந்தான். பின்பு தேவன், சிங்கத்தின் குகையிலிருந்து தானியேலைப் பத்திரமாக மீட்டதை கண்ட ராஜாவாகிய தரியு, “தானியேலின் தேவன்.... ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருகிறவர்... அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும்” (தானி. 6:26-27) எனக் கூறினான். தானியேலுடைய உண்மையும் விசுவாசமும் பாபிலோனிய தலைவர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

நாம் நெருக்கடி மத்தியில் சோர்வுற்று இருப்பினும், தேவனிடத்திலுள்ள விசுவாசத்தில் நிலைத்திருந்தால், அதைக் கண்டு மற்றவர்கள் தேவனை மகிமைப்படுத்தும்படி நல்ல தாக்கத்தை பிறர் மனதில் நாம் ஏற்படுத்தலாம்.

உற்ற நண்பனாய் இருத்தல்

“சாலையோரத்திலே உள்ள வீடு” என்னும் கவிதைத் தொகுப்பில், “சாலையோரத்திலே நான் வாழ்ந்து மனுஷருக்கு நண்பனாய் இருக்கவேண்டும்”, என கவிஞர் சாமுவேல் ஃபாஸ் (Samuel Foss) எழுதியுள்ளார். நானும் அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். அதாவது மக்களின் நண்பனாக. சோர்ந்துபோன பயணிகளுக்காக சாலையோரத்திலே நான் காத்திருக்க விரும்புகிறேன். மற்றவர்களால் தீங்கு இழைக்கப்பட்டு, அடிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இருதயத்தில் நொறுங்குண்டு, காயப்பட்டு, பாரத்தோடு கடந்து வருபவர்களை வார்த்தையினால் உற்சாகமூட்டி பெலப்படுத்தி அனுப்ப விரும்புகிறேன். அவர்களையோ அல்லது அவர்களுடைய பிரச்சினைகளையோ முழுமையாக என்னால் சரிசெய்ய இயலாதிருப்பினும் ஆசீர்வதித்து அவர்களை வழியனுப்பலாம். 

யுத்தம் முடிந்து களைப்போடு திரும்பிக்கொண்டிருந்த ஆபிரகாமை, சாலேமின் ராஜாவும் ஆசாரியனுமாகிய மெல்கிசேதேக்கு ஆசீர்வதித்தான் (ஆதி. 14). தும்மலின் போது அனிச்சையாக கூறும் வாய்மொழியல்ல “ஆசீர்வாதம்”. ஆசீர்வாதத்தின் ஊற்றாகிய தேவனிடத்தில் பிறரை அழைத்து வருவதே உண்மையான ஆசீர்வாதம். “வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிரகாமுக்கு உண்டாவதாக”, என்று மெல்கிசேதேக்கு ஆபிரகாமை ஆசீர்வதித்தான் (வச. 9). 

நாம் பிறரோடு சேர்ந்து ஜெபிக்கும்பொழுது அவர்களை ஆசீர்வதிக்கிறோம். ஏனெனில் அவர்களுடைய தேவைகள் சந்திக்கப்படுவதற்கான ஒத்தாசையை பெற்றுக்கொள்ள கிருபையின் சிங்காசனத்தண்டை அவர்களை நாம் அழைத்துச்செல்லலாம் (எபி. 4:16) நம்மால் அவர்களுடைய சூழ்நிலைகளை மாற்றமுடியாமல் போகலாம், ஆனால் சூழ்நிலைகளை மாற்றவல்ல தேவனை அவர்களுக்கு காண்பிக்கலாம். ஒரு உண்மையான நண்பன் செய்யும் காரியம் அதுவே.

பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியாது

நீதிமன்ற விசாரணைகளில் சாட்சியாளர்கள் சாதாரண பார்வையாளர்களை விட முக்கியமானவர்கள். அவர்கள் வழக்கின் முடிவையே தீர்மானிக்கக்கூடிய முக்கிய பங்கை வகிப்பவர்கள். கிறிஸ்துவின் சாட்சியாக வாழக்கூடிய நாமும் அப்படிப்பட்டவர்கள்தான். மிக முக்கியமான இயேசுவின் மரணத்தையும் உயிர்தெழுதலின் சத்தியத்தையும் குறித்து சாட்சி பகருவதில் நாம் அதிக ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்க வேண்டும். 

இயேசுவைப் பற்றி தான் என்ன அறிந்திருந்தானோ, அதையே யோவான் ஸ்நானகன் சாட்சியாய்க் கூறி, உலகின் மெய்யான ஒளியை அறிமுகப்படுத்தினார். இயேசுவின் சீஷராகிய யோவானும், “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” என்று சம்பவித்த காரியங்களையெல்லாம் பதிவு செய்து சாட்சியளித்தார் (யோவா. 1:14). இளைஞனான தீமோத்தேயுவிற்கு அறிவுரை கூறும்பொழுதும் இந்த கருத்தைத்தான் பவுல் விளக்கிக் கூறினார். “அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி” (2 தீமோ. 2:2). 

உலக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அனைத்து கிறிஸ்தவர்களும் அழைக்கப்படிருக்கிறோம். இங்கு நாம் வெறும் பார்வையாளர்கள் அல்ல, பங்காளர்களும் கூட என்று வேதாகமம் கூறுகின்றது. வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்று சொன்ன யோவான் ஸ்நானகனைப் போல இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி சாட்சிகூறவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். நமது வேலை ஸ்தலத்தில், சுற்றுப்புறத்தில், சபையில், நண்பர் மற்றும் உறவினர் மத்தியில் நம்முடைய சத்தம் கேட்க வேண்டும். அவர்கள் மத்தியில், இயேசுவைக் குறித்து ஜாக்கிரதையுடன் சாட்சி பகரலாமே!

காத்திருப்பதின் சுமை

கடந்த இரண்டு வருடங்களில், என் குடும்பத்திலிருந்த இரண்டு நபர்கள் உயிருக்கு ஆபத்தான நோயினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெற்று வந்த போது அவர்களுக்குத் துணையாக நான் இருந்தபொழுது ஒரு நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வதுதான் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எப்பொழுதும் மருத்துவரிடமிருந்து ஒரு தெளிவான பதிலையே நான் எதிர்பார்த்தேன். ஆனால், அது அரிதாகத்தான் கிடைத்தது. ஒரு தெளிவான பதிலைக் கூறுவதற்குப் பதில் அநேகந்தரம் நம்மை காத்திருக்கும்படி கூறிவிடுகிறார்கள். 

அடுத்த மருத்துவ சோதனையில் என்ன நிகழுமோ என்று எண்ணத்துடன் ஒரு நிச்சயமற்ற நிலையின் பாரத்தை சுமப்பது மிகக் கடினமானது. மரணம் நம்மை பிரிப்பதற்கு முன் நம்மிடம் இருப்பது சில வாரங்களா, மாதங்களா அல்லது வருடங்களா? வியாதி இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். வியாதியின் அறிகுறி அதை வெறுமனே வெளிக்கொண்டு வருகிறது. மனதிற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மரணத்தைப் பற்றிய எண்ணங்களை புற்றுநோய் போன்ற வியாதிகள் முன்னே கொண்டுவந்து நிலையற்ற வாழ்வை பற்றி சிந்திக்க தூண்டுகிறது. 

நம்முடைய நிலையற்ற வாழ்வை எண்ணிப் பார்த்ததும், நான் மோசே ஜெபித்ததுபோல் ஜெபிக்கத் துவங்கினேன். நம் வாழ்க்கை காலையிலே முளைத்துப்பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்து போகும் புல்லுக்கு ஒப்பான போதிலும் (வச. 5-6), தேவனே நம் நித்திய அடைக்கலமாக இருக்கிறார் (வச. 1) என்று சங்கீதம் 90 சொல்கிறதை அறிந்து, நம்முடைய நாட்களை எண்ணும் அறிவில் வளரும்படியாகவும், ஞான இருதயமுள்ளவர்களாகும்படியும் மோசேயை போல் நாமும் ஜெபிக்கலாம். அப்படிச் செய்யும் பொழுது புல் போன்று குறுகியகால வாழ்க்கை இருந்தாலும், நம்முடைய கைகளின் கிரியைகளை அவரே உறுதிப்படுத்துவார் (வச. 17).  

கடைசியாக, நம்முடைய நம்பிக்கை மருத்துவரின் ஆய்வறிக்கையில் இல்லை, “தலைமுறை தலைமுறையாக” நமக்கு அடைக்கலமாக இருக்கின்ற தேவன் மீதே இருக்கின்றது.