கலிபோர்னியாவிலுள்ள சாண்டா பார்பரா (Santa Barbara) என்னும் ஊரில் “சால்ஸிபுடெஸ்” (Salsipuedes) என்னும் விசித்திர பெயர் கொண்ட ஒரு தெரு உண்டு. அதன் அர்த்தம் “முடிந்தால் சென்று விடுங்கள்,” என்பதே. அப்பகுதியை ஒட்டி சதுப்பு நிலம் இருந்ததால் சில சமயம் வெள்ள அபாயம் ஏற்படுவதுண்டு. ஆகவே அப்பட்டணத்தை திட்டமிட்டு கட்டிய ஸ்பானிஷ் மொழி பேசும் நபர்கள் மக்களை எச்சரிக்கும் விதமாக வெளிப்படையாக அப்படியொரு பெயரை அத்தெருவிற்கு சூட்டினார்கள். 

“அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே, அதை விட்டு விலகிக் கடந்துபோ”, என்று பாவமும் சோதனைகளும் நிறைந்த “தவறான பாதையை” விட்டு விலகி இருக்குமாறு தேவனுடைய வார்த்தை நம்மை எச்சரிக்கிறது (நீதி. 4:15). ஆனால் “உங்களால் முடிந்தால் அவ்வழியில் செல்லாதே” என வேதம் கூறவில்லை. மாறாக, “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட, அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்,” என வேதம் நமக்கு நம்பிக்கையளித்து தேவனையே நோக்கச் செய்கிறது (1 கொரி. 10:13). 

நம்முடைய திராணிக்கு மேலாக தேவன் ஒருபோதும் நம்மைச் சோதிக்க மாட்டார் என்கிற வாக்குத்தத்தம் நமக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. நாம் சோதனையை எதிர் கொள்ளும்பொழுது தேவனையே நோக்கினால் நாம் அச்சோதனையின்று தப்பிக்கொள்ளும்படி உதவிட ஆவலாய் இருக்கிறார்.

“நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்(கூடிய) பிரதான ஆசாரியர் நமக்கு(உண்டு)”, என்று இயேசுவைக் குறித்து வேதம் உறுதியளிக்கிறது (எபி. 4:15). அவர் “எல்லா விதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராய் இருப்பதனால் எல்லா சோதனையினின்றும் தப்பித்துக்கொள்ளும் வழியை அவர் அறிவார். ஆகவே அவரிடம் நாம் செல்லும்பொழுது தப்பிச்செல்ல வழியைக் காண்பித்தருளுவார்!