நொறுங்குண்ட நிலையின் அழகு!
கின்ட்சூகி (Kintsugi) என்பது உடைந்த மண்பாண்டங்களை சீரமைக்கும் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஒரு ஜப்பானிய கலை ஆகும். குங்கிலியம் (Resin) என்னும் ஒரு பிசின் வகையோடு பொன்துகள்களை கலந்து, உடைந்த துண்டுகளை அக்கலவையைக்கொண்டு ஒட்டிவிடுவார்கள். விரிசல்களிலும் இதை நிரப்பிடுவார்கள். விளைவு, மிக உறுதியான ஒரு இணைப்பு. உடைந்து போன மண்பாண்டத்தில் ஏற்பட்ட சேதத்தை வெறுமனே மறைப்பதற்கு பதில் ஒரு அற்புதமான கலையைக் கொண்டு அதை அழகான பாண்டமாக மாற்றிவிடுவார்கள்.
அதைப்போலவே, நாம் செய்த பாவத்திற்காக உண்மையாகவே மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பும் பொழுது, அந்நொறுங்குண்ட நிலையை தேவன் மிக உயர்வாகக் காண்கிறார் என்று வேதம் கூறுகிறது. தாவீது பத்ஷேபாளோடு விபசாரத்தில் ஈடுபட்டதுமன்றி அவளுடைய கணவனைத் திட்டமிட்டு கொலை செய்தான். இதைக்குறித்து தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதை எதிர்கொண்டு விசாரித்த பொழுது, தாவீது மனந்திரும்பினான். “பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்,” என்று பின்பு தாவீது செய்த ஜெபத்தின் மூலம், நாம் பாவம் செய்வோமானால் தேவன் எதை நம்மிடம் எதிர்பார்க்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம் (சங். 51:16-17).
பாவத்தினால் நம்முடைய இருதயம் உடைந்து போயிருக்கும்பொழுது, சிலுவையிலே நமது இரட்சகரால் நமக்கு மிக தாராளமாய் அளிக்கப்பட்ட விலையேறப்பெற்ற மன்னிப்பைக் கொண்டு தேவன் நம் இருதயத்தை சீர்ப்படுத்துவார். நாம் அவரிடம் நம்மை தாழ்த்தி அர்ப்பணிக்கும் பொழுது, அன்புடன் நம்மை வரவேற்று கிட்டிச் சேர்த்துக்கொள்வார்
தேவன் எவ்வளவாய் இரக்கமுள்ளவர்! தாழ்மையுள்ள இருதயத்தையே தேவன் விரும்புவதாலும், அவருடைய இரக்கங்கள் மகாசவுந்தர்யமுள்ளதாய் இருப்பதாலும், “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்து கொள்ளும்: என்னை சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்,” என்னும் இன்னொரு வேதாகம ஜெபம் இன்று நமதாகட்டும் (சங். 139:23-24).
இரக்கத்தை எதிர்பார்த்திடு இரக்கத்தை அளித்திடு!
என் தோழியின் தவறான தீர்மானங்களும் தேர்வுகளும் அவளை பாவத்திற்குள்ளாக மிக அதிகமாய் அழைத்துச் சென்றது மாத்திரமன்றி அவளுடைய செயல்கள் என்னையும் பாதித்தது. இதைக் குறித்து நான் ஒவ்வொரு வாரமும் என்னுடன் சேர்ந்து ஜெபிக்கும் பெண் ஒருவரிடம் முறையிட்டபொழுது, அவர் தன்னுடைய கரங்களை என் கரங்கள் மீது வைத்து, “சரி நாம் நம் அனைவருக்காகவுமே ஜெபிக்கலாம்” என்று கூறினார்.
அதற்கு நான், “நம் அனைவருக்காகவுமா?” என முகம் சுளித்து வினவினேன்.
“ஆம் எப்பொழுதும் இயேசுவே நம்முடைய பரிசுத்தத்தின் அளவுகோலாய் இருப்பதால், நம்முடைய பாவங்களை நாம் ஒருபோதும் மற்றவருடைய பாவங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது என்று நீயே கூறியிருக்கிறாயே?” என அவர் பதிலளித்தார்.
நான் தவறை உணர்ந்து, “இந்த உண்மை எனக்கு கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நீங்கள் கூறுவது சரியே. என்னுடைய நியாயந்தீர்க்கும் மனப்பான்மையும் ஆவிக்குரிய பெருமையும் அவளுடைய பாவங்களை விட சாதாரமானதும் இல்லை மோசமானதுமில்லை” எனக் கூறினேன்.
அதற்கு அவர் “மேலும், நாம் உன்னுடைய தோழியை பற்றி பேசுவதின் மூலம் புறங்கூறிக் கொண்டிருக்கிறோம். இதனால்...” என்று கூற…
“நாம் பாவம் செய்து கொண்டிருக்கிறோம்,” என பதிலளித்தேன். தவறை உணர்ந்து, தலையை தாழ்த்தி, “தயவு செய்து நமக்காக ஜெபம் செய்யுங்கள்,” என்றேன்.
தேவலாயத்திற்கு வந்து வெவ்வேறு விதமாக ஜெபித்த இரண்டு நபர்களைக் குறித்து உவமையாக இயேசு கூறியிருப்பதை லூக்கா 18ஆம் அதிகாரத்தில் காணலாம் (வச. 9-14). அந்த பரிசேயனைப் போல நாமும் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வட்டத்திற்குள் மாட்டிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி நாம் நம்மை பற்றியே பெருமை பாராட்டிக்கொள்ளவும் கூடும் (வச. 11-12). இந்த மனப்பான்மையினால், மற்றவர்களை நியாயந்தீர்க்க நமக்கு அதிகாரம் உண்டென்றும், அவர்களை சீர்படுத்த நமக்கு வல்லமை உண்டென்றும், அப்பொறுப்பு நம்முடையதே என்றும் நாம் எண்ணி ஜீவிப்போம்.
ஆனால், நாம் இயேசுவின் பரிசுத்த வாழ்வையே மாதிரியாகக் கொண்டு, அவருடைய நன்மைகளை நம் வாழ்வில் கண்டுணரும் பொழுது, நாமும் அந்த ஆயக்காரனைப்போல, தேவகிருபை நமக்கு இன்னும் எவ்வளவு அதிகமாய் தேவை என்பதை அறிந்துகொள்வோம் (வச. 13). தேவனுடைய இரக்கத்தையும் மன்னிப்பையும் நாம் நம் வாழ்வில் அனுபவிக்கும்பொழுது, நாம் மனமாற்றம் அடைந்து, இரக்கத்தை எதிர்பார்க்வும் அதையே பிறருக்கு அளிக்கவும் வல்லமைபெறுவோம். ஒருபோதும் நாம் பிறரை குற்றவாளியாக தீர்க்கமாட்டோம்.
கனம் கனத்தை சந்திக்கட்டும்
அர்லிங்டன் (Arlington) தேசிய கல்லறையிலுள்ள ‘அறியாதவர்களின் கல்லறையில்’ நடந்தேறும் காவலர் மாற்றம் என்னை எப்போதும் வெகுவாய் கவர்ந்ததுண்டு. மிக மரியாதையுடன் கம்பீரமாக அதே சமயம் எளிமையாகவும் அந்நிகழ்வு நடக்கும். ‘தேவன் மாத்திரமே அறிந்த’ அப்போர்வீரர்களையும் அவர்களுடைய தியாகத்தையும் எண்ணி மிக ஜாக்கிரதையாக வடிவமைத்து இயக்கப்பட்ட இந்நிகழ்வு நெஞ்சை
நெகிழ வைக்கும் அஞ்சலி ஆகும். அது மாத்திரமல்ல மக்கள் கூட்டம் ஏதுமில்லாத போதும், முன்னும் பின்னுமாக சீரான வேகத்தில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் மோசமான வானிலையிலும் அக்காவலர் நடந்துசெல்வது நெஞ்சை நெகிழச் செய்யும்.
2003ஆம் ஆண்டு வாஷிங்டன் மாநகரை இசபெல் (Isabel) சூறாவளி நெருங்கிக் கொண்டிருந்தபொழுது, அது அந்நகரை தாக்கக்கூடிய மிக மோசமான நேரத்தில் அக்காவலர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அவர்களுக்கு கூறப்பட்டது. ஆனால் ஆச்சரியம் என்னவெனில் கிட்டத்தட்ட அக்காவலர் அனைவரும் அவ்விடத்தை விட்டு நகரவே இல்லை. சூறாவளி வீசிய போதும் கூட மடிந்துபோன தங்களுடைய தோழர்களை கனப்படுத்தும் பொருட்டு எவ்வித சுயநலமுமின்றி அவரவர் இடத்திலேயே நின்றார்கள்.
தேவனிடத்தில் மனந்தளராத தன்னலமற்ற பக்தியுடன் நாம் வாழ வேண்டும் என்பதே அவருடைய விருப்பம் என்று மத்தேயு 6ஆம் அதிகாரத்தில் உள்ள இயேசுவின் போதனை நமக்கு தெரிவிப்பதாக நான் விசுவாசிக்கிறேன் (வச. 1-6). நற்கிரியைகளுக்கும் பரிசுத்த ஜீவியத்திற்கும் நேராக வேதாகமம் நம்மை அழைக்கிறது. ஆனால் இவை ஆராதனைக்கும் கீழ்ப்படிதலுக்குமுரிய காரியங்களாக இருக்க வேண்டுமே அன்றி (வச. 4-6), நம்முடைய சுய மகிமைக்காக திட்டமிட்டு செயல்படுத்தபட்ட காரியங்களாக இருக்கக்கூடாது (வச. 2). நம்முடைய ஜீவியம் முழுவதும் உண்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய சரீரங்களை “ஜீவ பலியாக” ஒப்புக்கொடுக்கும்படி நம்மை நோக்கி மன்றாடுகிறார் (ரோம. 12:1)
தேவனே, எங்களுடைய தனிமையான தருணங்களும் தனிமையற்ற தருணங்களும் நாங்கள் எங்கள் முழு இருதயத்தோடு உம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பையும், பக்தியையும் பறைசாற்றுவதாக.
ஒரு அடைக்கலான் குருவியாகிலும்!
தன் வாழ்நாள் முழுவதும் கம்பீரமாகவும் கண்ணியமாகவும் இருந்த என் தாயார், இப்பொழுது முதிர்வயதினால் சிறைப்பட்டு தளர்ந்து பலவீனமடைந்து ஒரு நலவாழ்வு மையத்தின் படுக்கையிலே படுத்திருந்தார். மூச்சுவிடவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவர்களுடைய நிலை மேலும் மோசமாகிக் கொண்டிருந்த பொழுது, அதற்கு நேர் எதிர்மாறாக அவ்வறையின் ஜன்னலுக்கு வெளியே அழகான வசந்தகால நாள் நம்மை இனிதாய் வரவேற்றது.
உணர்ச்சிமிக்க வழியனுப்புதலின் அப்பட்டமான உண்மை நிலைக்கு ஏற்றாற் போல நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள இவ்வுலகத்தில் உள்ள எப்பேர்பட்ட ஆயத்தமும் நம்மை தயார் படுத்த இயலாது. இதை சிந்தித்தபொழுது சாவு என்பது எவ்வளவு வெட்கக்கேடான ஒன்று! என நான் எண்ணினேன்.
அப்பொழுது நான் என் பார்வையைத் திருப்பி ஜன்னலுக்கு வெளியே பறவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த விதை தட்டில் உள்ள விதையை உண்ணும்படி சிறகடித்தவாறு ஒரு சிறு பறவை அதை உண்டுகொண்டிருந்ததை கண்டேன். அக்காட்சியை கண்ட உடனே “உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது”, என்று நான் நன்கு அறிந்த இவ்வசனம் என் மனதிலே தோன்றியது (மத். 10:29). இவ்வார்த்தைகளை இயேசு தம்முடைய சீஷர்கள் யூதேயாவுக்கு சென்று ஊழியம் செய்யும்படி கட்டளையிட்டு அனுப்பி வைத்தபொழுது கூறினார். மேலும், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்”, என்றும் அவர்களிடம் கூறினார் (வச. 31). இந்நியமனம் அவர்களுக்கு மாத்திரமல்ல நமக்கும் பொருந்தும்.
என் தாய் சற்று அசைந்து தன் கண்களைத் திறந்து பார்த்தார். அப்பொழுது அவர் தன் பால்ய வயதில் மிகுந்த அன்போடு அவரது தாயை கூப்பிடும் ஒரு டச்சு மொழிச் சொற்றொடரை கூறி, “மூயுட்டி இறந்துவிட்டார்!” என தன் தாயை குறித்து தெரிவித்தார்.
“உண்மைதான். அவர் இப்பொழுது இயேசுவுடன் இருக்கிறார்,” என்று என் மனைவி பதிலளித்தாள். அதைக் கேட்ட என் தாயார் நிச்சயமின்றி, “ஜாய்ஸ் மற்றும் ஜிம்?” என்று தன்னுடைய சகோதரியை குறித்தும் சகோதரனை குறித்தும் கேட்டார். அதற்கு என்னுடைய மனைவி, “ஆம், அவர்களும் இயேசுவோடுதான் இருக்கிறார்கள். நாமும் சீக்கிரத்தில் அவர்களோடு இருப்போம்!” என்று பதிலளித்தார்.
“ஆனால், காத்திருப்பது மிகக் கடினமாக உள்ளது,” என அமைதியாக என் தாயார் கூறினார்.
செயல்பாடற்று!
பல சமயங்களில் தனிநபர்களை அல்லது குடும்பங்களை, உறவுமுறைகளை, நிறுவனங்களை மற்றும் அரசாங்கங்களைப் விவரிப்பதற்கு கூட செயல்பாடற்ற என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. நன்றாகப் பயன்பாட்டில் இருக்கக்கூடியதை ‘செயல்படுகிற’ என்றும், தன்னுடைய வடிவமைப்புக்கு ஏற்றவாறு செயல்பட இயலாமல் பழுதாகி இருக்கிறதை ‘செயல்பாடற்றது’ என்றும் பொருள்படும்.
அப்போஸ்தலனாகிய பவுல், ரோமருக்கு எழுதின நிருபத்தில் ஆவிக்குரிய செயல்பாடற்ற மனித குலத்தைப் பற்றி விவரித்து தன் கடிதத்தை துவங்குகிறார் (ரோம. 1:18-32). “எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை... எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி,” என்று அம்முரட்டாட்டமான கூட்டத்தில் நம் அனைவருக்கும் பங்குண்டு என்பதை பவுல் விவரித்துள்ளார் (3:12,23).
நற்செய்தி என்னவெனில், “இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு.... விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறார்...” (வச. 24-25). நாம் கிறிஸ்துவை நம்முடைய வாழ்வில் வரவேற்று, தேவன் அளிக்கும் மன்னிப்பையும் புதிய வாழ்வையும் ஏற்றுக்கொண்டால், நாம் எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணி தேவன் நம்மை சிருஷ்டித்தாரோ, அப்பரிபூரணத்திற்கு நேராக நாம் கடந்து செல்வோம். உடனடியாக நாம் பரிபூரணமடைந்து விட மாட்டோம் என்றாலும், இனி ஒருபோதும் நாம் மனமுடைந்தவர்களாய் நொறுங்குண்டவர்களாய் செயலற்று இருக்கத் தேவையில்லை.
சொல்லாலும் செயலாலும் நாம் தேவனைக் கனப்படுத்தும்படி தினந்தோறும் பரிசுத்த ஆவியானவரின் மூலம் பெலன் பெற்று “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை (நாம்)களைந்துபோட்டு... (நம்முடைய)உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத் தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்(வோம்)” (எபே. 4:22-24).
கொந்தளிக்கும் தண்ணீர்களைக் கடந்து
முதல் முறையாக காற்றடைக்கப்பட்ட படகில் சவாரி செய்தபோது, கொந்தளிக்கும் நீரோட்டத்தின் கர்ஜனையை கேட்கும்வரை சந்தோஷமாக அத்தருணத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். உரத்த அச்சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில் என்ன நடக்குமோ என்ற ஐயமும், பயமும், பாதுகாப்பின்மையையும் ஒரே சமயத்தில் உணர்ந்தேன். கொந்தளிக்கும் தண்ணிரீல் கடந்து வந்தது, இரத்தத்தை உறைய வைக்கும் ஓர் அனுபவமாகும். ஒரு வழியாக திடீரென அக்கொந்தளிப்பு நின்றது. படகிலிருந்த எங்கள் வழிகாட்டி படகை செவ்வையாய் செலுத்தி எங்களை வழிநடத்தி வந்தார். ஆகவே அடுத்த கொந்தளிப்பு ஏற்படும் வரையேனும் நான் பத்திரமாக உணர்ந்தேன்.
இப்படகு சவாரி போல நம்முடைய வாழ்வில் ஏற்படும் நிலைமாறுதல்களும் கொந்தளிப்பாக காணப்படலாம். கல்லூரியிலிருந்து வேலைக்கு, ஒரு வேலையிலிருந்து வேறொரு வேலை, பெற்றோரோடு வாழ்ந்த காலம் முடிந்து தனியாகவோ அல்லது நம்முடைய துணையோடு வாழ்தல், பணியிலிருந்து ஓய்வு, இளமை காலத்திலிருந்து வயது முதிர்ந்து போனது ஒரு காலக்கட்டத்திலிருந்து இன்னொரு காலக்கட்டத்திற்கு நாம் பாய்ந்து செல்வது தவிர்க்க முடியாத ஒன்று. இந்நிலை மாறுதல்கள் அனைத்திலும் நிச்சயமின்மையும் பாதுகாப்பின்மையும் காணப்படுகின்றன.
பழைய ஏற்பாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நிலைமாற்றம், சாலொமோன் தாவீதின் ராஜ்ஜிய பாரத்தை ஏற்றுக்கொண்டதாகும். நிச்சயமாக சாலொமோன் தன் எதிர்காலத்தைக் குறித்து கலங்கியிருக்கக் கூடும் என்றே நான் நினைக்கிறேன். அப்போது தன் தந்தையிடமிருந்து அவன் பெற்ற ஆலோசனை என்ன? “நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி... தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்”, என்று தாவீது கூறினான் (1 நாளா. 28:20).
நம்முடைய வாழ்விலும் அநேக கடினமான நிலைமாற்றங்கள் ஏற்படும். ஆனால் நம்முடைய படகில் தேவன் இருப்பதால் நாம் ஒருபோதும் தனிமையாக இல்லை. ஆகவே கொந்தளிக்கும் தண்ணீர்கள் ஊடாய் நம்மை நடத்திச்செல்லும் தேவன் மீது நமது கண்களை பதிய வைக்கும்பொழுது, நமக்கு பாதுகாப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். ஏனெனில் நமக்கு முன்பே அவர் அநேகரைப் பத்திரமாக வழிநடத்திச் சென்றுள்ளார்.
பொறாமைக்குரிய மருந்து
நான் என் பேரக்குழந்தைகளோடு சந்தோஷமாக ஒரு சாயங்கால வேளையைக் கழிக்க நேர்ந்தது. அவர்களுடைய பெற்றோர் அன்று வெளியே சென்றதால், அவர்களை என்னுடைய பொறுப்பில் விட்டுச் சென்றார்கள். சந்தோஷத்தோடு அவர்களை கட்டி அனணத்து முத்தம் கொடுத்த பிறகு, கடந்த வார விடுமுறை நாளை எப்படிக் கழித்தார்கள் எனக் கேட்டேன். உடனே மூன்று வயதாகிய பிரிட்ஜர் (Bridger) தன் அத்தை, மாமாவுடன் இருந்ததைக் குறித்து விவரித்தான். அவன் ஐஸ்கிரீம் சாப்பிட்டதையும் இராட்டினத்தில் சுற்றியதையும், சினிமா பார்த்ததைக் குறித்தும் மூச்சுவிடாமல் உற்சாகமாய் நினைவுகூர்ந்தான்! அடுத்து ஐந்து வயது நிரம்பிய சாமுவேலை பார்த்து நீ என்ன செய்தாய் எனக் கேட்ட பொழுது, “காம்பிங்” (Camping) என்று ஒற்றைச் சொல்லில் பதிலளித்தான். “குதுகலமாக இருந்ததா?” என்று நான் கேட்டதற்கு, “அவ்வளவாக இல்லை”, என சோகமாகக் கூறினான்.
தன்னுடைய தம்பி அவனுடைய அனுபவங்களை உற்சாகமாக கூறியதைக் கேட்ட சாமுவேல் தன் தந்தையோடு அவன் காம்பிங் சென்றபொழுது அனுபவித்த சந்தோஷத்தை மறந்து போனான். அப்பொழுது பொறாமை என்னும் பழமையான உணர்வு அவனை ஆட்கொண்டது.
நாம் அனைவருமே பொறாமைக்கு இரையாகக்கூடும். “சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்”, என்று தன்னைக் காட்டிலும் தாவீதை அதிகமாய் போற்றிப் புகழ்ந்த பொழுது ராஜாவாகிய சவுல் பொறாமையினால் ஆட்கொள்ளப்பட்டான் (1 சாமூ. 18:7). ஆத்திரமடைந்த சவுல், “அந்நாள் முதற்கொண்டு தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான்” (வச. 9). தாவீதை கொல்ல முயற்சிக்கும் அளவிற்கு சவுல் சீற்றமடைந்தான்!
பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது முட்டாள்தனமானது மட்டுமன்று, அது சுய அழிவிற்கும் வித்திடும். எப்பொழுதும் நம்மிடம் இல்லாத ஒன்றை வேறு யாராவது வைத்திருப்பார்கள் அல்லது நாம் அனுபவிக்காத நல்ல அனுபவங்களை அவர்கள் அனுபவித்திருப்பார்கள். ஆனால் தேவன் நமக்கு அநேக ஆசீர்வாதங்களை ஏற்கனவே அளித்துள்ளார். அதில் இம்மைக்குரிய வாழ்வு மாத்திரம் அன்றி, தம்மை விசுவாசிக்கிற அனைவருக்கும் நித்திய ஜீவனுக்குரிய வாக்குத்தத்தத்தினால் ஆசீர்வதித்துள்ளார். ஆகவே, அவருடைய உதவியைப் பெற்று, எல்லாவற்றிலும் நன்றியுள்ள இருதயத்தோடு அவருக்கு நன்றி செலுத்துவோமானால் நாம் பொறாமையை மேற்கொள்ளலாம்.
ஒத்த உருவம் உள்ளவர்கள்
நமக்கு எவ்விதத்திலும் இரத்த சம்பந்தமில்லாத ஆனால் அதேசமயம் உருவத்தில் நம்மைப்போலவே இன்னொரு நபர் இவ்வுலகத்தில் உண்டு என்று கூறுவார்கள். அதாவது ஒத்த உருவமுள்ளவர்கள்.
அப்படி என்னைப்போல இருப்பவர் இசைத்துறையிலுள்ள ஒரு பிரபலமான நட்சத்திரம். நான் ஒருமுறை அவருடைய இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபொழுது, இடைவேளை சமயத்தில், உடனிருந்த ரசிகர் கூட்டத்தில் அநேகர் என்னை ஒன்றிற்கு இரண்டு முறை திரும்பிப் பார்த்தனர். ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில், உருவத்தில் மாத்திரமே நான் ஜேம்ஸ் டெய்லர் (James Taylor) போல் இருந்தேனே தவிர அவரைப்போல பாடவோ, கிட்டார் வாசிக்கவோ தெரியாது.
நீங்கள் யாரைப்போல உள்ளீர்கள்? இக்கேள்வியைச் குறித்து நீங்கள் சிந்திக்கும் அதே வேளை, “(கர்த்தருடைய) சாயலாகத்தானே மகிமையின் மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்,”(2 கொரி. 3:18) என்று பவுல் கூறியதை ஆழ்ந்து சிந்திப்பீர்களாக. நம்முடைய வாழ்வின் மூலம் நாம் இயேசுவைக் கனப்படுத்த விரும்பினால், அவருடைய சாயலை நாம் தரித்துக் கொள்வதே நம்முடைய ஓர் இலக்காக இருக்க வேண்டும். அதாவது பரிசுத்த ஆவியானவரின் உதவியைப் பெற்று கிறிஸ்துவின் பண்புகளை நம்முடைய வாழ்வில் வெளிப்படுத்த வேண்டுமே அன்றி அவரைப் போலவே தாடி வளர்த்துக் கொண்டும் செருப்பு அணிந்து கொண்டும் வாழ்வது கிறிஸ்துவின் சாயலை தரிப்பது ஆகாது. உதாரணத்திற்கு இயேசுவைப் போல நாம் நம்முடைய மனப்பான்மையில் தாழ்மை யோடும், குணத்தில் அன்பாகவும், ஒடுக்கப்பட்டு கைவிடப்பட்டவர்களிடத்தில் இரக்கத்தோடும் காணப்படும்படி அவரையே பின்பற்றி பிரதிபலிக்க வேண்டும்.
நாம் இயேசுவின் மீது நம்முடைய கண்களை பதிய வைத்து “தேவ மகிமையை ஆழ்ந்து சிந்திப்போமானால்”, நாமும் அவரைப் போலவே மகிமையின் மேல் மகிமை அடைந்து காணப்படுவோம். மனுஷர் நம்மைக் கண்டு கவனித்து, “நான் இயேசுவை உன்னிலே காண்கிறேன்!” என்று கூறினால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்!
தேவனுக்கு ஆதரவாக!
ஒரு காரில் ஒட்டியிருந்த பம்பர்-ஸ்டிக்கர் ஓர் பல்கலைக்கழகப் பேராசிரியரின் கவனத்தை ஈர்த்தது. அக்காரின் சொந்தக்காரர் விசுவாசிகளை கோபமடையச் செய்யும்படியாகவே தேவனைக்குறித்து எதிர்மறையான காரியங்களை கொண்ட ஸ்டிக்கரை ஒட்டியிருக்கக்கூடும் என அப்பேராசிரியர் எண்ணினார். மேலும் “விசுவாசிகளின் கோபம் கடவுள் இல்லை எனக்கூறும் அந்நாத்திகனின் கொள்கையை நியாயப்படுத்தும்படி உதவுகிறது,” என விளக்குகிறார். கூடவே, “அநேகங்தரம் தான் எதிர்பார்த்ததையே அவன் பெற்றுக்கொள்ளவும் செய்கிறான்”, என அவர் எச்சரிக்கிறார்.
இப்பேராசிரியர் தன்னுடைய விசுவாச பாதையைக்குறித்து நினைவுக்கூரும்பொழுது, கிறிஸ்துவைகுறித்ததான சத்தியத்தை எண்ணி அவருடைய கிறிஸ்தவ நண்பர் ஒருவர் அக்கறையுடன் தன்னை அணுகியதை நினைவுகூருகிறார். தன் நண்பனிடம் “சத்தியத்தை எப்படியாவது தெரிவித்துவிட வேண்டும் என்கிற ஒரு அவசர உணர்வு காணப்பட்டாலும், அதை கோபத்தின் சுவடே இல்லாமல் தெரிவித்தால்,” அன்று தான் பெற்ற உண்மையான மரியாதையையும் கிருபையையும் ஒருபோதும் மறப்பதில்லை என அப்பேராசிரியர் கூறுகிறார்.
இயேசுவைப் பிறர் நிராகரிக்கும்பொழுது அநேகமாய் விசுவாசிகள் காயமடைந்து மனக்கசப்புக்குள்ளாகிறார்கள். ஆனால் பிறர் தன்னை நிராகரிப்பதைக்குறித்து இயேசு என்ன நினைக்கிறார்? எப்பொழுதும் பல அச்சுறுத்தல்களையும் வெறுப்பையும் இயேசு எதிர்கொண்டபொழுதும், அவர் தன்னுடைய தெய்வசாயலை குறித்து சந்தேகித் ததேயில்லை. ஒரு சமயம் இயேசு ஒரு கிராமத்திற்கு சென்றபொழுது, அவரை ஏற்றுக்கொள்ள அக்கிராமத்தினர் மறுத்துவிட்டனர். உடனே யாக்கோபும், யோவானும் அவர்களுக்குப் பதிலடி கொடுக்க எண்ணி, “ஆண்டவரே, எலியா செய்தது போல வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா?” என்று இயேசுவிடம் கேட்டனர் (லூக். 9:54). இயேசு அப்படி ஒன்றும் செய்ய விரும்பாததால், “திரும்பிப் பார்த்து (அவர்களை) அதட்டி(னார்)” (வச. 55). சொல்லப்போனால், “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்” (யோவா. 3:17).
நம்முடைய சொல்லாலோ (அல்லது) செயலாலோ தேவனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்கிற அவசியம் அவருக்கில்லை என்கிற செய்தி நமக்கு வியப்பளிக்கலாம். அவருடைய பிரதிநிதியாக அவரை பிரதிபலிப்பதையே அவர் விரும்புகிறார்! அதற்கு நம்முடைய நேரமும், முயற்சியும், நிதானமும், அன்பும் தேவைப்படும்.