வகை  |  odb

சமாதானத்தின் ரகசியம்

சகோதரி கிரேஸ் ஒரு விசேஷமான மங்கை. அவளைக் குறித்து நான் நினைக்கும்போதெல்லாம் ஒரு வார்த்தை என் மனதில் எழும்பும்: சமாதானம். அவளுடைய முகத்தில் காணப்படும் அமைதியான, ஆரவாரமற்ற தோற்றம். நான் அவளை அறிந்த இந்த ஆறு மாதத்தில் அது மாறவேயில்லை. பயங்கரமான ஒரு நோயின் காரணமாக அவளுடைய கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இவளுடைய முகநாடி வேறுபடவில்லை.

சகோதரி கிரேஸிடம் அவளுடைய சமாதானத்தின் ரகசியம் என்னவென்று விசாரித்தபோது, அவள் சொன்னாள், “அது ரகசியமல்ல, அது ஒருவர், இயேசு, எனக்குள் இருப்பதே என்றாள். இந்தப் புயலின் நடுவில் நான் உணர்ந்திடும் இந்த அமைதியை விவரிக்க வேறு வார்த்தை இல்லை”

நம்முடைய சமாதானத்தின் ரகசியம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடுகூட உள்ள உறவு. அவரே நம் சமாதானம். இயேசு நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாய் இருக்கும்போது, நாம் மேன்மேலும் அவரைப் போல் மாறும்போது, சமாதானம் உண்மையானதாகிறது. வியாதி, பொருளாதார நெருக்கடி அல்லது ஆபத்துகள் நம்மை சந்திக்கலாம், ஆனாலும் தேவன் தம்முடைய கரங்களிலே நம்மைத் தாங்குகிறார் (தானி. 5:23) என்பதை சமாதானம் உறுதிசெய்கிறது. ஆதலால், காரியங்கள் நன்மையாகவே முடியும் என்று நம்பிடலாம்.

எல்லா அறிவுக்கும் புத்திக்கும் எட்டாத இந்த சமாதானத்தை நாம் அனுபவித்திருக்கிறோமா? சகலமும் தேவனுடைய கட்டுப்பாட்டிலேதான் உள்ளது என்கின்ற உள்ளான நம்பிக்கை நமக்குண்டா? இன்றைக்கும் நான் ஒவ்வொருவருக்கும் சொல்லவிரும்பும் வாழ்த்து அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளைப் பிரதிபலிக்கின்றது “சமாதானத்தின் கர்த்தர்தாமே உங்களுக்கு சமாதானத்தை தந்தருளுவாராக.” இந்த சமாதானத்தை நாம் “எல்லா வேளைகளிலும் எல்லா விதத்திலும்” உணர்ந்திடுவோமாக (2 தெச. 3:16).

சகலத்தையும் அறிந்த தேவன்

சாக்லேட் நிறம்கொண்ட என்னுடைய லாப்ராடர் நாய்க்குட்டிக்கு மூன்று மாதம் இருக்கையில், தடுப்புஊசி போடுவதற்கும் மருத்துவ பரிசோதனை செய்வதற்கும் நான் அதை ஒரு கால்நடை மருத்துவரிடம் அழைத்துசென்றேன். மருத்துவர் கவனமாக பரிசோதிக்கும்போது, அதன் இடது பாதத்திலிருந்த மென்மயிரின் மேல் சிறு வெள்ளைப் பகுதி ஒன்று காணப்பட்டது. அந்த மருத்துவர் புன்முறுத்துகொண்டு சொன்னது, “சாக்லேட்டில் உன்னை முக்கி எடுக்கும்வேளையில் தேவன் அந்த இடத்தில் உன்னை பிடித்திருப்பார்போல்” என்றார்.

அதைக்கேட்ட நானும் புன்முறுத்தேன். ஆனாலும், அவர்கள் அறியாமலேயே, தேவன் தம் ஒவ்வொரு சிருஷ்டிப்பின்மீதும் தனிப்பட்ட ஆர்வம் எடுக்கிறவராய் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது.

மத்தேயு 10:30-ல் இயேசு சொல்கிறார், “உன் தலையில் உள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது”. தேவன் எவ்வளவு பெரியவராக இருந்தும் நம்முடைய வாழ்க்கையின் நுணுக்கமான பகுதிகளிலும் அவர் அளவில்லா ஆர்வம் காட்டுகிறார். எந்தவொரு சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, அது அவருடைய கவனத்திலிருந்து தப்பமுடியாது, அவர் முன் கொண்டுவர தகுதியல்லாத அற்ப பிரச்சனைதான் என்று எதுவும் இல்லை. அவர் அவ்வளவாய் அக்கறை காட்டுகிறார்!

தேவன் நம்மை சிருஷ்டித்தவர் மாத்திரமல்ல; அவர் நம்மை போஷிக்கிறவரும்கூட ஒவ்வொரு நொடியும் அவர் நம்மை காக்கிறவராய் உள்ளார். சிலவேளைகளில் நாம், “பிசாசு என் எல்லாக் காரியங்களையும் அறிந்து செயல்படுகிறான்” என்று சொல்வதுண்டு. ஆனாலும், தேவன் எல்லாவற்றிலும் இருக்கிறார், நாம் கவனிக்கத் தவறிய காரியங்களையும் அவர் கவனிக்கத் தவறுவதில்லை. சம்பூரண ஞானமும் அன்பும் கொண்ட நம் பரமபிதா நம்மை – மற்ற எல்லா சிருஷ்டிப்புகளுடன் – அவருடைய பரிவான, பலமுள்ள கரங்களில் எப்படித் தாங்குகிறார் என்பதை அறிவது எவ்வளவாய் நம்மை தேற்றுகிறது?

எங்கிருந்தாலும்

எங்களுடைய திருமண புகைப்படங்களை நான் எடுத்து பார்க்கும்போது, என் விரல்கள் என் கணவரும் நானும் மணம்முடிந்தவுடன் முதலாவது எடுத்த படத்தை தொட்டது. உண்மையில் அன்றைக்கு நான் என்னை முழுவதுமாய் அவருக்கு ஒப்படைத்தேன். அவரோடு எங்கு வேண்டுமானாலும் செல்வேன்.

நாற்பது ஆண்டுகள் கழித்தும், நன்மையோ தீமையோ, எப்படி இருந்தாலும் சரி, அன்பும் பொறுப்புணர்வும் ஒருங்கே பிணைக்கப்பட்ட உறுதியான நூலினால் என் வாழ்க்கை இறுக்கமாகப் பின்னப்பட்டிருந்தது, ஒவ்வொரு வருடமும், நான் அவரோடுகூட எங்கும் செல்லுவேன் என்கின்ற என் பிரதிஷ்டையையும் புதுப்பித்தேன்.

எரேமியா 2:2-ல், வழிதப்பிய இஸ்ரவேல் என்னும் பிரியமானவளுக்காய் தேவன் ஏங்குகிறார், “நீ என்னை பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” அங்கே ‘பக்தி’ என்று சொல்லப்படும் எபிரேய வார்த்தை உன்னத ராஜவிசுவாசம் மற்றும் ஒப்படைப்பைக் காண்பிக்கிறது. ஆதியில் இஸ்ரவேல் தேவனிடம் இந்த மாசற்ற விசுவாசத்தை வெளிப்படுத்தினாள். ஆனாலும், நாளாக நாளாக அவள் பின்மாற்றம் அடைந்தாள்.

ஒப்படைப்பின் ஆரம்ப நிலையில் இப்படிப்பட்ட ஊக்கமும், உற்சாகமும் நம்மை பிடித்தாலும், பின்னர் ஒரு சாங்கோபாங்கமான மனநிலை அன்பின் கூர்முனையை மந்தமாக்குவதால், நமக்குள் காணப்படும் வைராக்கியம் குறைந்து விசுவாச துரோகத்திற்கு நேராக நம்மை நடத்துகிறது. நம்முடைய திருமணங்களிலே அப்படிப்பட்ட குறைவுகளுக்கு எதிராக போராடுவதன் முக்கியத்தை நாம் அறிந்திருக்கிறோம். தேவனோடு உள்ள அன்பின் உறவில் நம்முடைய ஆவல் எப்படிபட்டது? இந்த விசுவாசத்திற்குள் நாம் வந்தபோது நமக்கிருந்த பக்தி நீடிக்கிறதா?

கர்த்தர் உண்மையாய் தம்முடைய மக்கள் தம்மிடம் திரும்ப அனுமதிக்கிறார் (3:14-15). இன்றும் நாம் நம்முடைய பொருத்தனைகளைப் புதுப்பிக்கலாம்-எங்கிருந்தாலும் சரி!

மன்னிக்கும் கலை

ஒரு மதியநேரம், தகப்பனும் இரண்டு மகன்களும்: மன்னிக்கும் கலை எனும் தலைப்பில் அமைந்த கலைக்கண்காட்சி ஒன்றில் இரண்டு மணிநேரம் செலவிட்டேன். இயேசு சொன்ன கெட்ட குமாரன் (லூக். 15:11-31) உவமையே அதன் கருபொருள். மற்ற சித்திரங்களை காட்டிலும் என்னை எட்வர்டு ரியோஜாஸ் அவர்களின், “கெட்ட குமாரன்” கலைவண்ணம் அதிகமாய் கவர்ந்தது. முன்னொரு நாளில் வீட்டைவிட்டு வெளியேறிய குமாரன், கிழிந்த அழுக்குபடிந்த உடைகளுடன் தலையை தொங்கவிட்டு வீடுதிரும்பும் காட்சி.. மரித்தோரின் தேசம் அவனுக்கு பின்னால் இருக்க, அவனுடைய தகப்பன் ஏற்கனவே அவனை நோக்கி ஓடிவரும் அந்த பாதையில் மகன் அடியெடுத்து வைக்கிறான். அந்த சித்திரத்தின் கீழ், இயேசு சொன்ன வார்த்தைகள் “அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி…” (வச. 20).

தேவனுடைய மாறாத அன்பு என்னுடைய வாழ்கையை எப்படி மாற்றியது என்பதை சிந்தித்தேன். நான் அவரைவிட்டு விலகினாலும், அவர் என்னைக் கைவிடவில்லை. என் வருகையை எதிர்நோக்கினார், கூர்ந்து கவனித்தார், அதற்காக காத்திருந்தார். அவருடைய அன்பிற்கு நான் தகுதியற்றவன் என்றாலும், அந்த அன்பு ஒருபோதும் மாறாதது. அன்பைக் குறித்த கரிசனை நமக்கு இல்லாமல்போனாலும், அந்த அன்பு நம்மைவிட்டு நீங்காதது.

எப்படி இந்த உவமையில் வழிதவறின மகன் திரும்பிவந்தபோது தகப்பன் அரவணைத்து ஏற்றுக்கொள்கிறாரோ, அதுபோல நாம் குற்றவாளிகள் என்றாலும், நம்முடைய பரமதந்தை நம்மையும் வரவேற்கக் காத்திருக்கிறார். “என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்” (வச. 23-24).

இன்றும் அவரிடம் திரும்புவோரின் நிமித்தம் கர்த்தர் களிகூருகிறார்-உண்மையில் அது ஒரு கொண்டாடதக்க நிகழ்வு!

அவசரம் வேண்டாம்

“அவசரகுணத்தை எப்படியாகிலும் விட்டுவிடு” எனும் சிந்தனையாளர் டாலஸ் விலாரட் அவர்களின் கூற்றை என்னுடைய இரண்டு நண்பர்கள் எனக்கு ஞாபகப்படுத்தினபோது, அதனைக் கவனிக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். நான் எங்கே சுற்றுகிறேன், எங்கே என் நேரத்தையும், சக்தியையும் வீணடிக்கிறேன்? எல்லாவற்றிற்கும் மேலாக, தேவனுடைய ஆலோசனை மற்றும் உதவியை நாடாமல், எங்கே நான் அவசர அவசரமாக ஓடுகிறேன்? தொடர்ந்து வந்த வாரங்கள் மற்றும் மாதங்களில், அந்த வார்த்தைகளை நான் நினைவுகூர்ந்து தேவன் மற்றும் தேவனுடைய ஞானத்தின் பக்கமாய் என் மனதை திசைத்திருப்பினேன். என்னுடைய வழிகளை நான் சார்ந்திராமல், அவரை நம்புவதற்கு என்னை ஒப்புக்கொடுத்தேன்.

சொல்லப்போனால், அவசர அவசரமாக ஓடுவது தீர்க்கதரிசி ஏசாயாவின் “பூரண சமாதானத்துக்கு” எதிரான ஒன்றாகவே தோன்றுகிறது. “உறுதியான மனதையுடைய அவர்கள் தேவனையே நம்பியிருப்பதால், தேவன் அவர்களுக்கு இந்த பரிசைக் கொடுக்கிறார். (வச. 3). நேற்றோ, இன்றோ, நாளையோ அல்லது நித்தியகாலமோ ஆனாலும் சரி அவரே நம்பிக்கைக்கு உரியவர். ஏனெனில் வேதம் சொல்லுகிறது, “கர்த்தரே நித்திய கன்மலையாக இருக்கிறார் (வச. 4). நம்முடைய முழுமனதுடனும், அவரை நம்புவதே, அவசர வாழ்க்கைக்கான மாற்று மருந்து.

நாம் எப்படி அவசரப்படுகிறோம் அல்லது ஆத்திரப்படுகிறோம் என்பதை உணருகிறோமா? பார்க்கப்போனால், அதற்குமாறாக, நாம் ஒருவித சமாதானத்தை அனுபவிக்கலாம் அல்லாவிட்டால், நாம் இந்த இரண்டிற்கும் இடையே மாட்டிக்கொண்டுள்ளோம்.

நாம் எங்கே இருந்தாலும் சரி, நம்மை ஒருபோதும் கைவிடாதவரும் நமக்கு சமாதானத்தை தருகிறவருமாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையாய் உள்ள நாம் எல்லாவித அவசரத்தையும் களைந்துபோட்டிட வேண்டுகிறேன்.

பிறப்புகளின் ஆராய்ச்சி

நாம் ஒரு நபரைச் சந்திக்கும்போது, “நீங்க யாரு, எங்கிருந்து வருகிறீர்கள்?” என்றெல்லாம் கேட்பது வழக்கம். ஆனாலும், நம்மில் அநேகருக்கு, அந்தக் கேள்விக்கான விடையளிப்பது வில்லங்கமாய் இருக்கும். சிலசமயம், முழுவிவரங்களை சொல்ல விரும்பவும் மாட்டோம்.

நியாயாதிபதிகள் புத்தகத்தில், யெப்தா அந்தக் கேள்விக்கான பதிலை தர விரும்பியிருக்கமாட்டான். அவனுடைய பிறப்பில் குற்றம் கண்டுபிடித்த அவன் ஒன்றுவிட்ட சகோதரர்கள் அவனை அவனுடைய சொந்த ஊரான கீலேயாத்திலிருந்து துரத்திவிட்டார்கள். “நீ அந்நிய ஸ்திரியின் மகன்” (நியாயாதிபதிகள் 11:2) என்று அவனை பழித்தார்கள். அந்த வேதபகுதி அப்பட்டமாக, “அவனுடைய தாய் ஒரு பரஸ்திரி (வேசி) என்றே குறிப்பிடுகிறது” (வச. 1).

ஆனால் யெப்தா சுபாவத்தின்படியே ஒரு தலைவனாக இருந்தான். கீலேயாத்துக்கு விரோதமாக பகைஞர் எழும்பினபோது அவனை துரத்திவிட்டவர்கள் அவனைத் தேடிப்போய், “நீ எங்கள் சேனாதிபதியாக இருக்கவேண்டும்” (வச. 6) என்று கேட்டார்கள். அதற்கு யெப்தா, “நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்?” (வச. 7) என்று கேட்டதற்கு காரியங்கள் சுமூகமாய் மாறும் என்ற ஒரு உத்தரவாதம் பெற்றபின் அவர்களைத் தலைமைதாங்க ஒப்புக்கொண்டான். வேதம் நமக்கு சொல்லுகிறது “அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின் மேல் இறங்கினார்…” (வச. 29). விசுவாசத்துடன் முன்னேறிய யெப்தா பெரிய வெற்றிக்கு நேராக அவர்களை நடத்தினான். புதிய ஏற்பாட்டு விசுவாச வீரர்களின் பட்டியலில் அவனுடைய பெயரும் இடம்பெறுவதைப் பார்க்கிறோம் (எபி. 11:32).

அநேக வேளைகளில் தேவன் பொருத்தமில்லாத மக்களையே தம் பணிக்காகத் தெரிந்தெடுக்கிறார். நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி வந்தோம் அல்லது என்ன செய்தோம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகாது. அவருடைய அன்பில் நம்பிக்கை வைத்து எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம்.

தேவனை அறியும் அறிவு

எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்தே ஒரு தாயாக வேண்டும் என்று அதிகமாய் வாஞ்சித்தேன். திருமணமாகும், கருத்தரிப்பேன், குழந்தை பிறக்கும், கையிலெடுத்து கொஞ்சுவேன் என்றெல்லாம் கனவு காண்பேன். ஒருவழியாக எனக்கு திருமணமும் ஆனது. நானும் என் கணவரும் கர்ப்பத்தின் கனி பிறக்க ஆவலாய் இருந்தோம். ஆனாலும், ஒவ்வொரு முறையும் கர்ப்பப் பரிசோதனையின் முடிவு எதிர்மறையாக வரும்போது, மலட்டுத்தன்மையோ என்னவோ? என்று பயந்தோம். மாதக்கணக்கில் மருத்துவமனை சந்திப்புகளுக்குப்பின் அடுத்தடுத்து மிஞ்சியது கண்ணீரே. சூறாவளிக்குள் இருந்தது போன்ற உணர்வு. இந்த நிலையை ஜீரணிக்கமுடியாத எங்களுக்கு தேவனுடைய நன்மை மற்றும் உண்மையின் மேல் இருந்த விசுவாசம் தடுமாறியது.

எங்களுடைய பயணத்தைப் பார்க்கும்போது, யோவான் 6-ஆம் அதிகாரத்தில், புயலின் நடுவே சிக்கின சீடர்களின் கதை தான் ஞாபகம் வருகிறது. புயல்வீசும் இரவில் அலைமோதும் படகில் அவர்கள் தவிக்கையில், எதிர்பாராதவிதமாக கொந்தளிக்கும் அலைகளின்மேல் இயேசு அவர்களிடமாய் நடந்துவந்தார். தம்முடைய பிரசன்னத்தின் மூலம் அவர்களை அமைதியாக்கி, “நான்தான், பயப்படாதிருங்கள்” என்றார் (வச. 20).

சீடர்களைப் போன்றே, எங்களுடைய வாழ்க்கையில் வீசிக்கொண்டிருந்த இந்தப் புயலின் நடுவே என்ன நடக்குமென்றும் அறியாதிருந்தோம். ஆனாலும், எப்போதும் சத்தியம் நிறைந்தவராய், உண்மையுள்ளவராய் அவரை இன்னும் ஆழமாக அறிந்துகொண்டோம். ஒருவேளை எங்களுடைய எதிர்பார்ப்பின்படி எங்களுக்கென்று ஒரு குழந்தை இல்லாதுபோனாலும், எங்களுடைய எல்லா போராட்டங்களிலும் எங்களை அமைதிப்படுத்தும் அவருடைய வல்ல பிரசன்னத்தை உணர்ந்திடமுடியும் என்பதை புரிந்துகொண்டோம். எங்களுடைய வாழ்க்கையில் அவர் வல்லமையாய் இடைபடுவதால், நாங்கள் கலங்கவேண்டியதில்லை.

ஒரேயொரு நொடி

விஞ்ஞானிகள் நேரத்தைப் பற்றி அதிக கவனம் கொண்டிருப்பார்கள். 2016-ஆம் ஆண்டின் இறுதியில், மேரிலாண்ட் பட்டணத்தின் கோட்டார்ட் விண்வெளி மையத்தைச் சார்ந்த பிரமுகர்கள் அந்த வருடத்துடன் ஒரு வினாடியை கூட்டினார்கள். அந்த வருடம் ஒருவேளை உங்களுக்கு சற்றே நீண்டதாய் இருந்திருந்தால், உங்கள் கணிப்பு சரியே.

அவர்கள் ஏன் அப்படிச் செய்யவேண்டும்? ஏனெனில், பூமியின் சூழற்சி வேகம் காலத்தின் ஓட்டத்தில் குறைவதால், வருடங்கள் வழக்கத்தைவிட சற்றே நீண்டதாய் அமையும். மனிதனால் விண்வெளிக்கு அனுப்பப்படும் கருவிகளை கவனிக்க விஞ்ஞானிகள் நேரத்தை மில்லி செகன்ட் அளவுக்கு துல்லியமாய் கணக்கிடவேண்டும். ஒன்றோடு ஒன்று மோதுவதை தவிர்க்கவே இவர்கள் இப்படி துல்லியமாய் செயல்படவேண்டியுள்ளது என்று ஒரு விஞ்ஞானி குறிப்பிடுகிறார்.

நம்மில் அநேகருக்கு, ஒரு நொடி கூடுவதும் குறைவதும் பெரிய வித்தியாசத்தை உண்டாக்குவதில்லை. ஆனாலும், வேதத்தின் அடிப்படையில், நம்முடைய நேரமும் அதனை நாம் பயன்படுத்தும் விதமும் மிகவும் முக்கியமானது. 1 கொரிந்தியர் 7:29-ல், பவுல் “இனிவரும் காலம் குறுகினது” என்றே நமக்கு நினைப்பூட்டுகிறார். தேவனுடைய பணியைச் செய்வதற்கான நேரம் “குறைவானது”, ஆகையால் நாம் நம் நேரத்தை ஞானமாய் செலவிடவேண்டும். “நாட்கள் பொல்லாதவைகளானதால், காலத்தைப் சிறந்த முறையில் பயன்படுத்துங்கள் (எபே. 5:16)” என்று பவுல் வலியுறுத்துகிறார்.

விஞ்ஞானிகளைப் போல் நாமும் ஒவ்வொரு வினாடியையும் கணக்கிடவேண்டும் என்பதல்ல அதன் பொருள். வாழ்க்கையின் நிலையற்றத் தன்மையைப் (சங். 39:4) பார்க்கும்போது, நம்முடைய நேரத்தை ஞானமாய் செலவிடவேண்டியதின் முக்கியத்துவத்தை அது நமக்கு நினைப்பூட்டுகிறது.

பாடுவதற்கான காரணம்

எனக்கு பதிமூன்று வயதிருக்கும்போது, என் பள்ளி மாணவர்கள் இல்லற பொருளாதாரம், கலை, பாடகர்குழு மற்றும் தச்சுவேலை எனும் தலைப்புகளில் நான்கு ஆராய்ச்சி பாடங்களை படிக்கவேண்டியதாயிருந்தது. பாடகர்குழு பாடத்தின் முதல்நாளில், பயிற்றுனர் ஒவ்வொரு மாணவனையும் பியானோ இசைக்கு பாடவைத்து அவர்களுடைய குரலை கேட்டு அவரவரின் சுருதிக்குத் தக்க அவர்களை பிரித்து ஒரு அறையில் அமர்த்தினார். என்னுடைய முறை வந்தபோது, பியானோவில் அவர்கள் திரும்ப திரும்ப வாசித்த இசைக்குறிப்புகளுக்கு நான் பாடினாலும், எந்த ஒரு பிரிவிற்கும் நேராக என்னை அவர் நடத்தவில்லை. மாறாக, பல முயற்சிகளுக்குப் பின், ஆலோசனை மையத்திற்கு சென்று வேறொரு பாடத்தை தெரிந்தெடுக்கச் சொன்னார். அந்த நிமிடத்திலிருந்து, நான் இனி பாடக்கூடாது, என் குரல் எந்த பாடலிலும் தொனிக்கக்கூடாது என்று தீர்மானித்தேன்.

ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கும் மேலாக இதே எண்ணத்தை கொண்டவனாக இருந்த நான் என் வாலிப வயதில் ஒருமுறை சங்கீதம் 98-ஐ வாசிக்கலானேன். அதன் ஆக்கியோன் “கர்த்தருக்குப் பாடுங்கள்” (சங். 98:1) என்கின்ற அழைப்புடன் அதனை ஆரம்பிக்கிறார். பாடவேண்டிய காரணத்திற்கும் நம் குரலின் தரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. துதியோடும் ஸ்தோத்திரத்தோடும் தம் பிள்ளைகள் பாடும் பாடல்களிலே அவர் பிரியப்படுகிறார். “அவர் செய்த அதிசயங்களுக்காக” (வச. 1) நாம் அவரைப் பாடவேண்டும் என்று நம்மை அழைக்கிறார்.

கர்த்தரை நாம் நம் முழுசிந்தையோடும், பாடல்களோடும் ஆனந்தகளிப்புடன் துதிப்பதற்கு இரண்டு அற்புதமான காரணங்களை சங்கீதக்காரர் குறிப்பிடுகிறார். நம்முடைய வாழ்க்கையில் தேவன் நிறைவேற்றும் இரட்சிப்பின் கிரியை மற்றும் இடைவிடாமல் தொடரும் அவருடைய உண்மைக்காகவும் அவரைப் பாடவேண்டும். தேவனுடைய பாடகர்குழுவில், அவர் நமக்காய் செய்த அதிசயங்களைப் பாடுவதற்கு நம் ஒவ்வொருவருக்கும் இடமுண்டு.