நாங்கள் பயணம் செய்யும் படகு புறப்பட்டதும், என்னுடைய சிறிய மகள் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறினாள். கடல் பயண நோய் அவளைத் தாக்கியது. சிறிது நேரத்தில் எனக்கும் வயிற்றினைப் புரட்டியது. “அந்த அடிவானத்தை கவனித்துப் பார்” என நான் எனக்குள்ளாகச் சொல்லிக் கொண்டேன். கடல் மாலுமிகள் தங்களின் உள்ளுணர்வுகளை உற்சாகப்படுத்த இதனைக் கூறுவதுண்டு.

இந்த அடிவானத்தை உருவாக்கியவருக்கு (யோபு 26:10) நாம் நம்முடைய வாழ்வின் சில வேளைகளில் பயத்திலும், அமைதியற்ற நிலையிலும் இருக்கின்றோம் என்பது தெரியும். நாம் நம்முடைய பார்வையை தொலைவிலுள்ள இலக்கிற்கு நேராகத் திருப்புவோமாகில் சரியான கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.

எபிரெயரை எழுதியவர் இதனை நன்கு புரிந்து கொண்டுள்ளார். அவர் தம் எழுத்துக்களை வாசிப்பவர்களிடம் தோன்றும் மனச் சோர்வை கண்டு கொண்டார். துன்புறுத்தப்பட்ட பலர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். விசுவாசத்திலிருக்கும் வேறு சிலர் மிக அதிகமான சோதனைகளைச் சகிக்கின்றனர். அவர்கள் வீடற்றவர்களாயினர் என எடுத்துக் கூறுகின்றார். அவர்கள் இவற்றையெல்லாம் பொறுமையாகச் சகித்தனர், ஏனெனில் அவர்கள் மேலான ஒன்றை எதிர்பார்த்தனர்.

எனவே வாசகர்கள் இந்த வீடற்ற அகதிகளைப் போல் தேவன் தாமே ஆயத்தம் பண்ணியிருக்கிற நகரத்தை, அந்த பரம தேசத்தில் காணும்படி அதையே வாஞ்சிப்பார்களாக. (எபிரெயர் 11:10 ; 14, 16) தன்னுடைய கடைசி ஆலோசனையாக எழுத்தாளர் தன்னுடைய வாசகர்களை தேவனுடைய வாக்கின்மேல் உறுதியாயிருக்கும்படித் தெரிவிக்கின்றார். “நிலையான நகரம் நமக்கு இங்கேயில்லை. வரப் போகிறதையே நாடித் தேடுகிறோம்.” (13:14).

இக்கால பாடுகள் நிரந்தரமானவையல்ல. ‘‘இந்த பூமியின் மேல் நாம் அந்நியரும் பரதேசிகளுமாய்” இருக்கின்றோம். (11:13) தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை தூரத்திலே கண்டு அதையே நோக்கி நம் பயணத்தைத் தொடர்வோம்.