நான் குழந்தையாயிருந்தபோது, தனிமையையும், யாவராலும் புறக்கணிக்கப்பட்டவளாகவும் உணர்ந்து என்னைக் குறித்து நானே வருந்திக் கொள்ளும்போது, என் தாயார் என்னை மகிழ்விப்பதற்காக ஓர் எளிய பிரசித்திப் பெற்ற பாடலைப் பாடுவதுண்டு. ‘‘என்னை யாரும் விரும்புவதில்லை, எல்லாரும் என்னை வெறுக்கின்றனர், நான் புழுக்களைத் தான் தின்னப் போகிறேன்” என்பது அப்பாடல். என்னுடைய தளர்ந்த முகத்தில் புன்சிரிப்பு வந்ததும், என் தாயார் எனக்குள்ள உண்மையான உறவினர்களையும், நான் அதற்கு எத்தனை நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துரைப்பார்கள்.

தாவீது ராஜாவும் தன்னைப் பற்றிக் கரிசனைக் கொள்ள யாருமில்லை என கூறுவதை நான் வாசித்த போது, என் காதினுள் அந்த எளிய பாடல் ஒலித்தது. தாவீது தன் வேதனைகளை மிகைப்படுத்திக் கூறவில்லை. ஆனால் என்னுடைய தனிமையுணர்வு என் போன்ற வயதினர் அநேகருக்கு ஏற்படுவதுதான். தாவீது கைவிடப்பட்டவராக உணர்வதற்கு காரணமிருக்கிறது. சவுல் ராஜா, தாவீதைக் கொல்வதற்குத் தேடிக் கொண்டிருக்கையில் இந்த வார்த்தைகளை எழுதுகின்றார் (1 சாமு. 22:1, 24:3-10). தாவீது இஸ்ரவேலரின் எதிர்கால அரசனாக அபிஷேகிக்கப்பட்டான் (16:13). அவன் அநேக வருடங்கள் சவுல் ராஜாவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான். ஆனால் இப்போது பயத்தினால் தன் ஜீவனைத் தப்புவிக்க ஓடிக் கொண்டிருக்கிறான். தனிமையின் மத்தியில் தாவீது தேவனை நோக்கி, ‘‘நீரே என் அடைக்கலமும் ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர்” (சங். 142:5) எனக் கதறுகின்றார்.

நாமும் தனிமையையுணரும் போது தாவீதைப் போன்று தேவனை நோக்கிக் கூப்பிடுவோம். அவருடைய அன்பின் அடைக்கலத்தினுள் நம்முடைய கூப்பிடுதலுக்கு பதிலளிக்கமாறு கேட்போம். தேவன் நம் தனிமையை மாற்றுவதில்லை. மாறாக நம்முடைய வாழ்வின் இருண்ட குகையில் நம்முடைய துணையாயிருக்கின்றார். நம்மைக் கவனிப்பார் யாருமில்லை என உணரும் வேளைகளில், தேவன் நம்மைக் கவனிக்கின்றார்.