வகை  |  odb

உண்மையோடு

பல ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு தேசத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொண்ட நிகழ்வில் கலந்து கொண்டேன். வெவ்வேறு கலாச்சாரங்கள் இணைவது அழகானது தான், ஆனால், இந்த வைபவத்தில் கிறிஸ்தவ பாரம்பரியம், அநேக தெய்வங்களை வணங்கும் நம்பிக்கையுடைய சடங்காச்சாரங்களோடு கலந்ததைக் கண்டேன்.

தீர்க்கதரிசி செப்பனியா, உண்மையான தேவன் மீதுள்ள நம்பிக்கை, மற்ற மதங்களோடு கலப்பதைக் கண்டிக்கின்றார். யூத ஜனங்கள் உண்மையான தேவனை ஆராதிப்பவர்கள், ஆனால், மல்காமின் என்ற பிற தெய்வத்தையும் சார்ந்து வாழ்ந்தனர் (செப்பனியா 1:5) செப்பனியா அவர்கள் கைக்கொள்ளுகின்ற, தேவன் இல்லை என்கின்ற கலாச்சாரத்தையும் (வச. 6,12) கண்டிக்கின்றார். அதன் விளைவாக தேவன் யூத ஜனங்களை அவர்களுடைய தேசத்திலிருந்து துரத்திவிட்டார்.

ஆனாலும், தேவன் தன் ஜனங்கள் மீது செலுத்தும் அன்பினை விட்டுவிடவில்லை. அவருடைய எண்ணமெல்லாம், அந்த ஜனங்கள் தன்னிடம் திரும்ப வேண்டும் என்பதே. எனவே “தாழ்மையைத் தேடுங்கள்” (2:3) என்கின்றார். அப்பொழுது தேவன் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைப் பேசி, மீண்டும் அவர்களைச் சேர்த்துக் கொள்வதாகக் கூறுகின்றார். “அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக் கொள்வேன். உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்புவேன்” (3:20) என்கின்றார்.

நான் சென்றிருந்த திருமணத்தில் நடந்த சமய இணைப்பை கண்டிப்பது எளிது. ஆனால், உண்மையில் நாம் அனைவரும் தேவனுடைய உண்மையை நம்முடைய கலாச்சார ஊகங்களோடு எளிதாக இணைத்து விடுகின்றோம். தேவனுடைய உண்மையான வார்த்தைகளுக்கு எதிரான நம்பிக்கைகளை நாம் சோதித்து அறியும்படி பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் நமக்குத் தேவை. பரிசுத்த ஆவியானவரின் உதவியால் தான் நாம் உண்மையினை உறுதியாகவும், உண்மையோடும் தொழுதுகொள்ளும் போது தேவன் நம்மை அன்போடு அரவணைத்துக் கொள்வார் (யோவா. 4:23-24).

ஒருவரோடொருவர் இணைந்து

பழங்காலத்தில் ஒரு பட்டணத்தின் சுற்றுச் சுவர் உடைக்கப்பட்டதாகக் காணப்படின், அது தோற்றுபோன மக்களையும், ஆபத்திற்கும் வெட்கத்திற்குமுள்ளாக்கப்பட்ட ஜனங்களையும் கொண்டுள்ளதாகக் கருதப்படும். எனவேதான் யூத ஜனங்கள் எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டுகின்றார்கள். எப்படி? ஒருவரோடொருவர் இணைந்து கட்டுகின்றார்கள். இது நெகேமியா 3 ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த 3ஆம் அதிகாரத்தை வாசிக்கும் போது முதலில் அது நமக்குச் சற்று ஆர்வமில்லாத பகுதியாகத் தோன்றும். யார், எந்த பகுதியை எடுத்துக் கட்டினான் எனத் தெரிவிக்கின்றது. ஆனால், சற்று ஆழந்து பார்ப்போமாகில், மக்கள் எவ்வாறு இணைந்து வேலை செய்தனர் என்பதைக் தெரிந்து கொள்வோம். ஆசாரியர்களும் பிரபுக்களோடு இணைந்து வேலை செய்கின்றனர். அருகிலுள்ள பட்டணங்களில் வாழ்பவர்களும் வந்து உதவுகின்றனர். மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு எதிரேயிருக்கிற பகுதியைப் பழுது பார்கின்றனர். சல்லூமின் குமாரத்திகளும் பிறரோடு இணைந்து வேலை செய்தனர் (3:11) தெக்கோவா ஊரார் இரண்டு பகுதிகளை பழுது பார்க்கின்றனர் (வச. 5,27).

இந்த பகுதியிலிருந்து இரண்டு காரியங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். ஓன்று அவர்களெல்லாரும் ஒரு பொதுவான நோக்கத்திற்காக இணைந்து வேலை செய்கிறார்கள். இரண்டாவதாக எவ்வளவு வேலை செய்தனர், மற்றவர்களைக் காட்டிலும் குறைவாகத்தான் வேலை செய்தனர் என்பதான பாகுபாடின்றி, அவர்கள் அனைவரும் இந்த வேலையில் பங்கு பெற்றதற்காகப் பாராட்டப்படுகின்றனர். செய்த வேலையின் அளவல்ல; பங்கெடுத்தலே போற்றத்தக்கது.

இன்றைய நாட்களில் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், உடைந்துபோன சமுதாயத்தையும் பார்க்கின்றோம். வாழ்வு மாற்றத்தைக் கொடுப்பதன் மூலம் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கட்டும்படியாக இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். நாம் நம்முடைய அண்டை வீட்டாரின் வாழ்வை மாற்றும்படி, அவர்களுக்கு இயேசு தரும் புதிய வாழ்வையும், நம்பிக்கையையும் காட்டுவோம். நாம் அனைவரும் ஏதாவது ஒன்றைச் செய்யும்படி இடம் இருக்கிறது. எனவே நாம் ஒருவரோடொருவர் இணைந்து பெரிதோ, சிறிதோ நம்முடைய வேலையைச் செய்து, ஓர் அன்பான சமுதாயத்தை உருவாக்கும்படி, ஒவ்வொருவரும் இயேசுவைக் கண்டுகொள்ள உதவுவோம்.

வேத வார்த்தைகளை நாம் புரிந்துகொள்ளும்படிச் செய்ய தேவனாலேயே முடியும்.

சில  வருடங்களுக்கு முன் என்னோடு பயணம் செய்த ஒருவர், நான் தூரத்துப் பொருட்களைப் பார்க்கச் சிரமப்படுவதைக் கவனித்து ஒன்று செய்தார். அவர் செய்தது ஒரு சிறிய காரியமாயினும் அது என் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் தன்னுடைய கண்ணாடியை கழற்றி அதை என்னைப் போட்டுப் பார்க்கும்படி கூறினார். நான் அவற்றை பயன்படுத்திய போது, என்ன ஆச்சரியம்! என்னுடைய மங்கலான பார்வை மறைந்து தெளிவாகப் பார்க்க முடிந்தது. உடனடியாக நான் ஒரு கண் மருத்துவரை அணுகினேன். அவர் என் பார்வையை சரிசெய்யக் கூடிய ஒரு கண்ணாடியை எனக்குப் பரிந்துரைத்தார்.

இன்றைய வேதாகமம் பகுதி லூக்கா 18, முற்றிலும் பார்வையிழந்த ஒரு மனிதனைப் பற்றி குறிப்பிடுகிறது. முழுவதும் இருளிலேயே வாழ்ந்து வருகின்ற அவன் தன்னுடைய வாழ்வுக்காக வேண்டும்படி தூண்டப்படுகின்றான். பிரசித்திப் பெற்ற போதகர், அற்புதம் நிகழ்த்துபவர் என்று இயேசுவைக் குறித்த செய்தி அந்த குருட்டுப் பிச்சைக்காரனின் செவிகளை அடைகிறது. அந்த குருடன் அமர்ந்திருக்கின்ற வழியே இயேசு வந்தபோது, அவனுடைய இருதயத்தினுள் நம்பிக்கை எரியத் துவங்குகிறது. “இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்!” (வச. 37) எனக் கூப்பிடுகின்றான். அவன் வெளியுலகைப் பார்க்கக்கூடாதிருந்தும், அவனுடைய ஆவியின் கண்கள் இயேசுவின் உண்மையான அடையாளத்தை கண்டு கொண்டன. அவனுக்குள்ளிருந்த நம்பிக்கை அவனுடைய தேவையைச் இயேசு சந்திப்பார் என்றது. அவனுடைய நம்பிக்கையின் தூண்டுதலால், இன்னும் சத்தமாக கூப்பிடுகின்றான். “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்!” (வச. 38) விளைவு என்ன? அவனுடைய குருட்டுத் தன்மை மாறியது. தன்னுடைய வாழ்விற்காகப் பிச்சையெடுத்தலை விட்டுவிட்டு, தேவனை மகிமைப்படுத்திக் கொண்டே அவருக்குப் பின் சென்றான் (வச. 43), ஏனெனில், இப்பொழுது அவனால் பார்க்க முடிகிறது.

உன் வாழ்வின் இருண்ட காலங்களில் நீ எங்கே செல்கின்றாய்? எதை நோக்கி அல்லது யாரைக் கூப்பிடுகின்றாய்? கண் கண்ணாடிக்கான பரிந்துரை ஒருவரின் பார்வையை மேம்படுத்திக்கொள்ள உதவலாம். ஆனால், இயேசுவின், தேவனுடைய குமாரனின் கிருபை நிறைந்த தொடுதல் மக்களை ஆவியின் இருளிலிருந்து வெளிச்சத்திற்குள் கொண்டு வருகிறது.

என் கண்களைத் திறந்தருளும்

நான் முதன்முதலாக இஸ்டான்புல் என்ற இடத்திலுள்ள, மிக அழகான சோரா தேவாலயத்திற்குச் சென்றேன். அந்த தேவாலயத்தின் கூரையில் அமைந்துள்ள சித்திரவேலைகள், கற்களிலுள்ள வேலைப்பாடுகளின் மூலம் சில வேதாகமக் கதைகளைப் புரிந்து கொண்டேன். ஆனால், அநேகக் காரியங்களை என்னால் யூகிக்க முடியவில்லை. இரண்டாவது முறை நான் அங்கு சென்ற போது என்னோடு ஒரு வழிகாட்டியும் இருந்தார். அவர் நான் முந்தின முறை பார்க்கத் தவறியவற்றையெல்லாம் காட்டி விளக்கினார். அப்பொழுதுதான் அவையெல்லாம் எத்தனை அர்த்தமுள்ளவையெனப் புரிந்துகொண்டேன். எடுத்துக்காட்டாக, முதல் நுழையும் பகுதியில் லூக்கா சுவிசேஷத்தில் குறிப்பிட்டுள்ளபடி இயேசுவின் வாழ்வு படங்கள் மூலம் விளக்கிக் காட்டப்பட்டுள்ளன.

சில வேளைகளில் நாம் வேதாகமத்தை வாசிக்கும் போது அடிப்படை கதையைமட்டும் புரிந்து கொள்வோம். ஆனால், வேதாகமத்தின் வெவ்வேறு பகுதிகளிலுள்ள விளக்கங்களைக் சரியாகப் பிணைத்து முழுமையான ஒரு சரித்திரத்தைத் தருவது யார்? நமக்கு வேதாகம விளக்கவுரைகளும் கற்பிக்கும் கருவிகளும் இருக்கின்றன. ஆனால், ஒரு வழிகாட்டியால் தான் நம்முடைய அகக் கண்களைத் திறந்து தேவனைப் பற்றிய அதிசயங்களை வெளிப்படுத்திக் காட்ட முடியும். நம்முடைய வழிகாட்டி பரிசுத்த ஆவியானவரே, அவரே நமக்கு “எல்லாவற்றையும்” (யோவா. 14:26) கற்றுத் தருவார். “ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கின்றோம்” (1 கொரி. 2:13) என பவுல் எழுதியுள்ளார்.

புத்தகத்தை எழுதியவரே அவற்றை விளக்கிக் காண்பிப்பதென்பது எத்தனை ஆச்சரியமானது. தேவன் நமக்கு அவருடைய வார்த்தைகளையும் வெளிப்பாடுகளையும் தந்துவிட்டு, அத்தோடு விட்டு விடவில்லை. அவற்றைப் புரிந்துகொள்ள, அவர் நமக்குக் கற்றும் தருகிறார். எனவே நாமும் சங்கீதக்காரனோடு சேர்ந்து கோள்வோம். “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும் (சங். 119:18).

கடிகாரங்களும், நாட்காட்டிகளும்

என்னுடைய தந்தை தன்னுடைய 58வது வயதில் மரித்தார். அதிலிருந்து நான் அந்த நாளைக் கடக்கும் போதெல்லாம் அவரையும், அவர் என் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைக்கத் தவறியதில்லை. நான் என் வாழ்க்கையை நினைத்துப் பார்த்தபோது, நான் அவரோடு செலவிட்ட நாட்களை விட அவரில்லாமல் வாழ்ந்த நாட்களே அதிகம். நான் எனது குறுகியகால வாழ்க்கையைக் குறித்துக் சிந்திக்கலானேன்.

நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, ஒரு காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளும், அது ஏற்படுத்திய உணர்வுகளும் நமக்குள்ளே போராட்டங்களை ஏற்படுத்தி நம்மைக் கலங்கச் செய்கின்றன. நாம் காலத்தை கடிகாரம் மற்றும் நாட்காட்டிகள் மூலம் அறிந்தாலும், சில காலங்களை, அதில் ஏற்பட்ட நிகழ்வுகள் மூலமாகவே நினைவுகூருகின்றோம். நம்முடைய வாழ்க்கையில் ஆழமான உணர்வுகள் தூண்டப்படுகின்ற வேளைகளில் நாம் மகிழ்ச்சி, இழப்பு, ஆசீர்வாதம், வலி, வெற்றி, தோல்விகளை அநுபவித்திருக்கலாம்.

வேதாகமம் நம்மை ஊக்குவிப்பதென்னவெனின், “ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள், தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்” (சங். 62:8) இந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைத் தாவீது இலேசான நேரத்தில் எழுதவில்லை. தாவீது தன்னை எதிரிகள் சூழ்ந்து கொண்டபோது இவற்றை எழுதுகின்றார் (வச. 3-4). அவர் தேவ சமூகத்தில் அமைதியாகக் காத்திருக்கின்றார். (வச. 1,5). நாம் எதிர்நோக்குகின்ற போராட்டம் நிறைந்த நேரங்களை விட அவருடைய மாறாத அன்பு பெரிதென்று நினைவுபடுத்துகின்றார் (வச. 12).

தேவன் நம்மோடு இருக்கிறார், வாழ்வின் எல்லா நேரங்களிலும் நம்மைச் சுமந்து, வழிநடத்த அவர் போதுமானவராக இருக்கின்றார் என்ற நம்பிக்கை நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் நமக்கு உறுதியைத் தருகிறது. ஒருவேளை வாழ்வில் சில நேரங்கள் நம்மை மேற்கொள்ளுவது போல பயமுறுத்தினாலும் அவருடைய உதவி சரியான நேரத்தில் நமக்கு வரும்.

அசைபோடும் வருடங்கள்

என்னுடைய மனைவி சமீபத்தில் எனக்கு ஒரு லேபரேடார் வகை நாய்க்குட்டியொன்றைக் கொடுத்தார். நாங்கள் அதற்கு மேக்ஸ் என்று பெயரிட்டோம். ஒரு நாள் நான் என்னுடைய படிக்கும் அறையிலிருந்தபோது மேக்ஸும் என்னோடிருந்தது. நான் என்னுடைய எழுத்தில் கவனமாயிருந்தபோது, சில காகிதங்கள் கிழிக்கப்படும் சத்தம் என் பின்னாலிருந்து கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது, குற்றவுணர்வோடிருந்த என்னுடைய நாய்க்குட்டியின் வாயிலிருந்து ஒரு திறந்த புத்தகத்தின் சில பக்கங்கள் நொங்கி கொண்டிருந்தன.

எங்களுடைய கால்நடை மருத்துவர், மேக்ஸ், அதனுடைய அசைபோடும் வருடங்களிலிருக்கிறது எனக் சொல்லியிருந்தார். நாய்க்குட்டிகளின் பால்பற்கள் விழுந்து, நிரந்தரபற்கள் தோன்றும்போது, அவை தங்கள் ஊன்களை உறுதிப்படுத்த எதையாகிலும் மென்று கொண்டேயிருக்கும். மேக்ஸ் தனக்கு ஒவ்வாத எதையாகிலும் விழுங்கிவிடாதபடி நான்தான் கவனமாகப் பார்த்திருக்க வேண்டும். நல்ல சுகாதாரமான எதையாகிலும் கடிப்பதற்கு நான் கொடுத்திருக்க வேண்டும்.

மேக்ஸ் அசைபோடுவதற்குத் தள்ளப்படுகிறது. அதனை கவனித்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு. இவ்வாறு நான் நினைத்துக் கொண்டபோது, நான் என்னுடைய மனதிலும் இருதயத்திலும் எவற்றைக் குறித்து அசைபோடுகிறேன், மீண்டும் மீண்டும் சிந்திக்கின்றேன் என்பதைக் குறித்து யோசனைசெய்தேன். நாம் புத்தகங்களை வாசிக்கும் போதும், வலைதளங்களில் நுழையும் போதும், அல்லது டெலிவிஷன் காட்சிகளைப் பார்க்கும் போதும் நம்முடைய ஆன்மாவிற்கு எவற்றைக் கொடுக்கிறோம் என்பதை நாம் கருத்தாய் கவனிக்கின்றோமா? “இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால்… நீங்கள் வளரும்படி புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருங்கள்” (1 பேது. 2:1,3) என வேதாகமம் நம்மை ஊக்குவிக்கின்றது. நாம் நம்மை தேவனுடைய வார்த்தைகளால் ஒவ்வொரு நாளும் நிரப்பிக் கொள்வோம் அப்படிச் செய்யும்போது நாம் அவரில் வளர்ந்து முதிர்ச்சி பெறுவோம்.

நில்

கடலலையின் ஓசையை ரசித்தவாறே நானும் என்னுடைய சிநேகிதியும் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தோம். தூரத்தில் சூரியன் மறைவதையும், அலைகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சுருண்டு மெதுவாக எங்களின் நீட்டிய பாதங்களைத் தொடாமல் சற்று தள்ளி நின்றதையும் பார்த்து மகிழ்ந்தோம். "நான் கடலையை நேசிக்கின்றேன்" என்று புன்சிரிப்போடு கூறினாள். “அது அசைந்து கொண்டேயிருப்பதால் நாம் அசையத் தேவையில்லை” என்றாள்.

என்ன சிந்தனை! நம்மில் அநேகர் நிறுத்துவதற்குக் கஷ்டப்படுகின்றோம். நாம் முயற்சிக்கின்றோம். செல்கின்றோம். நம் முயற்சிகளிலிருந்து தளர்ந்துவிடாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறோம். நம் முயற்சிகளை விட்டு விட்டால் நாம் வாழமுடியாது என்று எண்ணிவிடுகின்றோம். சற்று நின்று கவனிப்போமாகில் நாம் எப்பொழுதும் தூரத்திலேயே வைத்துவிட நினைத்திருக்கும் சில உண்மைகளைக் கண்டு கொள்வோம்.

சங்கீதம் 46:8-9 தேவனுடைய சர்வ வல்லமையையும், அவருடைய வல்லமை வெளிப்படுவதையும் விளக்குகின்றது. “கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். …அவர் பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார். வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார், இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.” குழப்பங்கள் நிறைந்த நம்முடைய நாட்களில் அமைதியைக் கொண்டு வர அவர் ஓயாமல் செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறார்.

10 ஆம் வசனத்தில் நாம் வாசிக்கிறோம், “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்.”

நாம் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேயிருந்தாலும் தேவனைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், சங்கீதக்காரன் வேறோரு முறையில் தேவனை அறிந்துகொள்ள அழைக்கின்றார். நம்முடைய முயற்சிகளையெல்லாம் விட்டு விட்டு, தேவனை அறிந்துகொள்ள அழைக்கின்றார். நாம் நின்று அமர்ந்திருந்து தேவனை அறிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், தேவன் நின்று விடவில்லை, நமக்கு நிலையான, மாறாத பாதுகாவலையும், சமாதானத்தையும் தருகின்ற தேவனுடைய வல்லமையை வந்து பாருங்கள் என்கின்றார்.

ஐக்கியத்தில் ஏற்பட்ட தடங்கல்

உரத்த சத்தமான, வேதனை நிறைந்த குரல் அந்த மதிய வேளையின் இருளைக் கிழித்துக் கொண்டு வந்தது. அது இயேசுவின் பாதத்தினருகில் இருந்த அவருக்கன்பானவர்கள், நண்பர்களின் புலம்பலின் சத்தத்தையும் மேற்கொண்டது. அது, இயேசுவின் அருகில் சிலுவையின் இருபுறமும் இருந்த இரு குற்றவாளிகளின் குமுறலையும் மேற்கொண்டது. அக்குரலைக் கேட்ட யாவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி?” இயேசு வேதனையில் நம்பிக்கையிழந்தவராய், கொல்கொதா மலை மேல், அவமானத்தின் சின்னமான சிலுவையில் தொங்கியபடி இவ்வாறு கூப்பிடுகின்றார் (மத். 27:45-46).

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கேட்கின்றார். இதனையும் விட வேதனை தரும் வார்த்தைகள் என்ன இருக்கின்றது? நித்திய இராஜ்ஜியத்தில் இயேசுவானவர் தேவனாகிய பிதாவோடு நல்ல ஐக்கியத்தில் இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்தே இந்த உலகத்தைப் படைத்தனர். இருவரும் சேர்ந்தே மனிதனை தங்களின் சாயலாகப் படைத்தனர். அவர்கள் இருவரும் இரட்சிப்பைக் குறித்து திட்டமிட்டனர். அவர்கள் இருவரும் கடந்த நீண்ட காலங்களில் முற்றிலும் ஐக்கியமாகவேயிருந்தனர்.

இப்பொழுது இயேசு சிலுவையில் வேதனைகளையும் வலியையும் தொடர்ந்து சகித்தார். உலகத்தின் பாவங்களனைத்தும் தன் மீது சுமத்தப்பட்டதால், முதல் முறையாக தேவ பிரசன்னத்தை இழக்கின்றார்.

இதுவே ஒரே வழி. இந்த ஐக்கியத்தில் ஏற்பட்ட இடைவெளி மூலமாகவே நமக்கு இரட்சிப்பு அருளப்பட்டது.  இயேசு கிறிஸ்து சிலுவையில் கைவிடப்பட்ட அனுபவத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாலேயே மனிதர்களுக்கு தேவனோடுள்ள ஐக்கியம் கிடைத்தது.

இயேசுவே, நாங்கள் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக, மிகவும் அதிக வேதனைகளைச் சிலுவையில் சகித்ததற்காக உமக்கு நன்றி சொல்கின்றோம்.

வார்த்தைகள் தவறாகும்போது

சமீபத்தில் நான் என் மனைவி கேரிக்கு ஒரு குறுஞ்செய்தியை, ஒலி வழிச் செய்தியாக அனுப்பினேன். அவள் வேலையை முடித்ததும் வீட்டிற்கு அழைத்து வரும்படி என் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், இந்த வார்த்தைகளை அனுப்பினேன். ‘‘நான் உன்னை எவ்விடத்தில் வந்து அழைத்துச் செல்ல விரும்புகின்றாய், என் வயதான பெண்மணியே?” என்பதே அச்செய்தி.

கேரியை நான் வயதான பெண்மணி என்று அழைப்பதை அவள் பொருட்படுத்துவதில்லை. அது எங்கள் வீட்டிற்குள்ளே நாங்கள் பயன்படுத்தும் புனைப் பெயர்களில் ஒன்று. ஆனால் அது என் அலைபேசிக்குப் புரியவில்லை. எனவே அது ‘‘வயதான மாடு” என்றனுப்பிவிட்டது.

நல்ல வேளையாக கேரி உடனடியாக என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொண்டாள். அதனை வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டாள். பின்னர் அவள் என்னுடைய குறுஞ்செய்தியை சமூக வலை தளத்தில் பதித்து விட்டு “நான் இதற்காக வருத்தப்படுவேனோ?” எனவும் கேட்டிருந்தாள். நாங்கள் இருவருமே அதனைக் குறித்து சிரித்துக் கொண்டோம்.

என்னுடைய அவலட்சணமான வார்த்தைகளுக்கு என்னுடைய மனைவியின் அன்பான அணுகுமுறை, அன்று என்னை நம்முடைய ஜெபங்களைக் குறித்து தேவனுடைய புரிந்து கொள்ளலைப் பற்றி எண்ண வைத்தது. நாம் ஜெபிக்கும் போது எவற்றைக் கேட்க வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதை அறியவில்லை. ஆனால் நாம் கிறிஸ்துவினுடையவர்களாகும் போது, நமக்குள்ளே வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியானவர் தாமே வாக்குக்கடங்கா பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26). அன்போடு நமக்குதவி செய்து நம்முடைய ஆழ்ந்த தேவைகளைத் தேவனிடம் எடுத்துரைக்க உதவுகின்றார்.

நம்முடைய பரம தந்தை ஒருபோதும் தூர நின்று கொண்டு நம்முடைய சரியான வார்த்தைகளுக்காக காத்திருக்கின்றவரல்ல. நாம் நம்முடைய தேவைகளோடு அவரிடம் வரலாம். அவர் நம்மைப் புரிந்து கொண்டு அன்போடு அரவணைக்கின்றார் என்ற உறுதியைத் தந்துள்ளார்.