“நீ ஆழ்கடலுக்குள் செல்லும் போது, ஒவ்வொருமுறையும் ஒரு மாதிரியை எடுத்துவா. ஒவ்வொருமுறையும் ஒரு புதிய படைப்பைக் காண்பாய்” என்று கடல் உயிரின உயிரியலாளர் வார்ட் ஆப்பிள்டன்ஸ் கூறுகின்றார். சமீப காலத்தில் அறிவியலார் 1,451 புதிய வகை கடலடி உயிரினங்களைக் கண்டுபிடித்துள்ளனர். நாம் இதுவரை அங்குள்ளவற்றில் பாதியையாகிலும் தெரிந்துகொள்ளவில்லை.

யோபு 38-40ல் தேவன் தன் படைப்புகளை யோபுவிற்கு நினைப்பூட்டுகின்றார். இந்த மூன்று அதிகாரங்களிலும் தேவன் காலநிலைகளின் அதிசயங்களையும், பரந்து விரிந்த அண்டத்தையும், அதில் வாழும் வகை வகையான உயிரினங்களையும் விவரிக்கின்றார். இந்தக் காரியங்களை நாம் காண முடியும். பின்னர் தேவன் ஓர் அதிகாரம் முழுவதும் வினோதமான லிவியாதானைப் பற்றி விளக்குகின்றார். லிவியாதான் ஒரு வினோத உயிரினம், அது எரியப்படும் அம்புகளையும் தடுக்க வல்லன, (யோபு 41:7,13), அதின் உடல் அசைவு நேர்த்தியாயும் (வச. 12) அதின் பற்கள் பயங்கரமானதாயும் (வச.14) உள்ளன. “அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்படும்… அதின் நாசியிலிருந்து புகை புறப்படும்” (வச. 19-20) “பூமியின் மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை” (வச. 33).

எனவே தேவன் நாம் இதுவரைக் கண்டிராத ஒரு உயிரினத்தைப்பற்றி பேசுகின்றார். ஆனால், இதுதான் யோபு 41ஆம் அதிகாரத்தின் நோக்கமா? இல்லை. யோபு 41 தேவனின் ஆச்சரியமான குணாதிசயங்களைப் பற்றிய நம் புரிந்துகொள்ளலை விரிவாக்குகின்றது. சங்கீதக்காரன் இதையே விரிவாக, “பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும்… அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கலங்களும் உண்டு (சங். 104:25-26) என விளக்குகின்றார். யோபுவில் கொடுக்கப்பட்டுள்ள பயங்கரமான விளக்கத்திலிருந்து எல்லா உயிரினங்களையும் விட மிக பயங்கரமான இந்த படைப்பு விளையாடும் இடத்தையும் கொடுத்துள்ளார் என தெரிந்துகொள்கிறோம். அதுதான் லிவியாதானின் விளையாட்டு.

நம்முடைய வாழ்நாளில் நாம் இந்த சமுத்திரத்தை ஆராய்கின்றோம். நமக்கு ஒரு நித்திய ஸ்தலமுள்ளது. அங்கு நாம் நம்முடைய, பிரமிக்கத்தக்க, விநோதமான தேவனின் விளையாட்டுகளை ஆராய்வோம்.