வகை  |  odb

நரிகளைப் பிடித்தல்

கடலை ஒட்டி வசிக்கும் என் தோழியுடன் தொலைபேசியில் பேசும்போது, பின்னணியில் கேட்ட கடல் பறவைகளின் சத்தத்தைக் குறித்த என் சந்தோஷத்தை அவளிடம் தெரிவித்தேன். “அவற்றை நான் வெறுக்கிறேன்” என்றாள். ஏனென்றால் அவளுக்கு அந்தப் பறவைகள் தினமும் இடையூறு தருவதாக இருந்தன. லண்டன்வாசியான நான் நரிகளைப்பற்றி இதே மனப்பாங்கு கொண்டிருக்கிறேன். என் கண்களுக்கு அவை அழகிய விலங்குகளாகத் தெரிவதில்லை. மாறாக, தாங்கள் செல்லும் வழியில் அசிங்கம் செய்து நாற்றத்தை ஏற்படுத்தும் சுற்றித்திரியும் விலங்குகளாகப் பார்க்கிறேன்.

பழைய ஏற்பாட்டின் உன்னதப்பாட்டு புத்தகத்தில் நரிகளைப் பற்றிப் படிக்கிறோம். இதில் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான அன்பு வெளிப்படுகிறது. இது தேவனுக்கும் அவர் ஜனங்களுக்கும் இடையிலான அன்பை வெளிப்படுத்துவதாக சில வேதாகம விளக்க உரையாளர்கள் நம்புகிறார்கள். சிறு நரிகளைப் பற்றி எச்சரிக்கும் மணப்பெண், அவற்றைப் பிடிக்கும்படி மணமகனிடம் கூறுகிறாள் (2:15). ஏனென்றால் திராட்சப்பழங்களை விரும்பும் நரிகள், இளம் செடிகளை சேதப்படுத்தக்கூடும். தங்கள் திருமண வாழ்க்கையை எதிர்நோக்கி இருக்கும் மணப்பெண், தீங்கு விளைவிக்கும் எந்த விலங்கும் தங்கள் அன்பின் உடன்படிக்கைக்கு இடையூறு ஏற்படுத்துவதை விரும்பவில்லை.

“நரிகள்” எப்படி நமக்கும் ஆண்டவருக்கும் இடையிலான உறவை சேதப்படுத்தமுடியும்? என்னைப் பொறுத்தவரை, அநேக வேண்டுகோள்களுக்கு சரி  என்று சொல்லும்போது, என்னால் சமாளிக்க முடியாமல், மனதளவில் அதிக சோர்வுற்று மகிழ்ச்சியில்லாமல் இருப்பேன். அல்லது மனிதர்களுக்கு இடையிலான பிரச்சினைகளைப் பார்க்கும்போது, விரக்தி அல்லது கோபம் ஏற்படும். நான் அடைக்க மறந்த வாசல் வழியாக அல்லது வேறு ஏதோ வழியில் அவை உள்ளே நுழைந்துவிடும் இப்படிப்பட்ட “நரிகளின்” பின்விளைவுகளைக் கட்டுப்படுத்தும்படி நான் தேவனிடம் கேட்கும்போது – அவரது அன்பின் பிரசன்னத்தையும், வழிநடத்துதலையும் உணர்ந்து, அவரைக்குறித்த அன்பிலும், நம்பிக்கையிலும் வளர்கிறேன்.

நீங்கள் தேவனை கிட்டிச்சேராமல் தடுக்கும் விஷயங்களைக் குறித்து நீங்கள் எப்படி ஆண்டவரின் உதவியை நாடலாம்?

மனதுருக்க சோர்வு

ஆன் ஃப்ராங்க் என்ற சிறுபெண், இரண்டாம் உலகப்போரின்போது அவள் குடும்பத்தினர் எப்படி பல வருடங்கள் ஒளிந்து வாழ்ந்தார்கள் என்பது குறித்து எழுதிய நாள்குறிப்பின்மூலம் அதிக பிரபலமடைந்தவள். பின்னர் அவள் ஜெர்மானிய நாசிக்களின், மரணத்தை எதிர்நோக்கும் முகாமில் சிறைவைக்கப்பட்டாள். அப்போது அவளுடன் இருந்தவர்கள் அவள் எப்போதும் தங்கள்மேல் மனதுருக்கம் கொண்டவளாக இருந்தாள் என்று கூறினார்கள். “அவளை அறிந்தவர்களுக்கு அவள் அருகாமை ஆசீர்வாதமாக இருந்தது. இதனால் கென்னெத் பேய்லி என்ற அறிஞர், அவளுக்கு ஒருபோதும் “மனதுருக்க சோர்வு” ஏற்படவில்லை என்று குறிப்பிடுகிறார்.

சின்னாபின்னமாகியுள்ள உலகில் வாழ்வதால் ஏற்படும் விளைவுகளில் மனதுருக்க சோர்வும் ஒன்று. மனிதர்கள் படும் அளவுக்கடங்காத பாடுகளும், கஷ்டங்களும், அதிக நல்லெண்ணம் கொண்டவர்களின் உணர்ச்சிகளையும் மரத்துப்போக வைத்துவிடும். ஆனால் கிறிஸ்துவை மனதுருக்க சோர்வு ஒருபோதும் ஆட்கொள்ளவில்லை. “இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார். அவர், திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறடிக்கப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி(னார்)” என்று மத்தேயு 9:35-36 கூறுகிறது. 

உலகப்பிரகாரமான தேவைகள் மட்டுமல்லாமல், ஆத்துமாவும் நொறுங்குண்டதால் நம் உலகம் அதிக பாதிப்படைந்துள்ளது. இந்தத் தேவைகளை சந்திக்க இந்த உலகத்திற்கு வந்த இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களையும் இந்தப்பணியில் ஈடுபடச்சொல்கிறார் (வச. 37-38). தனிமை, பாவம், சுகவீனம் ஆகியவற்றால் மனிதர்கள் படும் கஷ்டம் மற்றும் தேவைகளை சந்திக்க பணியாட்களை எழுப்புமாறு அவர் பிதாவிடம் ஜெபித்தார். அவருடைய இருதயத்தைப் பிரதிபலிக்கும், மற்றவர்கள்மேல் கரிசனைகொள்ளும் ஒரு இருதயத்தை பிதா நமக்குத் தந்தருள்வாராக. அவருடைய ஆவியின் வல்லமையால் துன்பத்தில் இருப்பவர்களுக்கு அவருடைய மனதுருக்கத்தின் கரிசனையை நம்மால் வெளிப்படுத்தமுடியும்.

இருளில் நம்பிக்கை

சண்டையிடும் மாகாணங்கள் காலம் (கி மு 475-246) என்று அறியப்பட்ட காலக்கட்டத்தில் கு யுவான் என்ற விவேகமான, நாட்டுப்பற்றுள்ள சீன அரசு அதிகாரி வாழ்ந்தார் என்ற மரபுக்கதை ஒன்று உண்டு. நாட்டை அழிக்கக்கூடிய ஒரு ஆபத்து நெருங்கி வருவதாக அவர் அரசருக்கு அநேக முறை எடுத்துகூற முயன்றும், அரசர் அவர் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் கு யுவான் நாடு கடத்தப்பட்டார். தான் எந்த எதிரி குறித்து எச்சரித்தாரோ அந்த எதிரியால் தன் அன்புக்குரிய நாடு அழிந்தது என்று அறிந்தபோது, தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

சில விஷயங்களில் கு யுவானின் வாழ்க்கை எரேமியாவின் வாழ்க்கையை ஒத்திருக்கிறது. அவரது எச்சரிக்கையை ஏளனம் செய்த அரசர்களை அவரும் சேவித்தார். அவர் நாடும் சூறையாடப்பட்டது. ஆனால் கு யுவான் நம்பிக்கை இழந்துபோனார், எரேமியாவோ உண்மையான நம்பிக்கை கொண்டார். ஏன் இந்த வித்தியாசம்?

உண்மையான நம்பிக்கை அளிக்கும் ஆண்டவரை எரேமியா அறிந்திருந்தார். “உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள்” என்று கடவுள் அந்த தீர்க்கதரிசிக்கு உறுதியளித்தார். கி மு 586ல் எருசலேம் அழிக்கப்பட்டாலும், அது பின்னர் மீண்டும் கட்டப்பட்டது (நெகேமியா 6:15 பார்க்க).

நம்பிக்கை இழக்கவைக்கும் சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரலாம். அது மோசமான தகவலைத் தரும் மருத்துவ ஆய்வு அறிக்கையாகவோ, பறிபோன வேலையாகவோ, சிதைந்துபோன குடும்பமாகவோ இருக்கலாம். ஆனால் வாழ்க்கை நம்மை கீழே தள்ளும்போதும், நாம் நிமிர்ந்து பார்க்கமுடியும் – ஏனென்றால் கடவுள் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்! நம்முடைய நாட்கள் அவர் கைகளில் இருக்கிறது. நம்மை அவர் இருதயத்திற்கு அருகில் வைத்திருக்கிறார்.

வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளுதல்

வேதாகமத்தை வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதால் ஏற்படும் முடிவில்லாத விவாதங்களில் பங்கேற்காமல் வெளியேறுவது எவ்வளவு கடினமானது என்று என் தந்தை கூறக்கேட்டிருக்கிறேன். அதே சமயம், இரண்டு தரப்பினரும் அவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது நன்றாக இருக்கும் என்றார்.

ஆனால் சமரசமடையாத வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது சாத்தியமா? புதிய ஏற்பாட்டில், பவுல் ரோமருக்கு எழுதும் கடிதத்தில் இதற்கான பதிலைத் தருகிறார். சமூக, அரசியல், மத பிணக்கங்களில் சிக்கியிருந்த வாசகர்களுக்கு எழுதும்போது, எதிர் எதிர் நிலைமையில் உள்ளவர்கள்கூட எப்படி ஒரு பொதுவான தளத்தில் சேரலாம் என்று பரிந்துரை செய்கிறார் (14:5-6).

கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது குறித்து, நம்முடைய கருத்துக்களுக்காகவும், நம்முடைய வேறுபாடுகளில்  நாம் ஒருவரை ஒருவர் எப்படி நடத்துகிறோம் என்பதற்காகவும், நாம் கடவுளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார் (வச. 10).

நம்முடைய கருத்துக்களைவிட முக்கியமான விஷயங்கள் – நம்முடைய வேதாகம விளக்கங்களையும்விட – உண்டு என்பதை நாம் நினைவுகூர பிணக்கங்கள் உதவும். கிறிஸ்து நம்மை நேசித்ததைப்போல நாம் ஒருவரை ஒருவர் நேசித்தோமா, நம்முடைய எதிரிகளையும்கூட நேசித்தோமா என்று நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.

இப்போது யோசித்துப் பார்த்தால்,  இரண்டு தரப்பினரும், பரஸ்பர அன்பு மற்றும் மரியாதையோடு, அவர்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வது நன்றாக இருக்கும் என்று என் தந்தை கூறியது நினைவுக்கு வருகிறது.

நன்றி மனப்பான்மையைப் பற்றிகொளல்

தீராத வலி, நடக்க முடியாமல் பட்ட கஷ்டம் ஆகியவற்றால், பல ஆண்டுகளாக நான் அடக்கி வைத்திருந்த சலிப்பும், விரக்தியும் வெளிவரத் தொடங்கின. என்னுடைய அதிருப்தியின் காரணமாக அதிகமாக அதிகாரம் செய்பவளாக, நன்றி இல்லாதவளாக மாறினேன். என்னுடைய கணவர் என்னை நன்றாக கவனித்துக்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினேன். அவர் வீட்டை சுத்தம் செய்தது சரியில்லை என்று குறை சொன்னேன். அவர் மிக அருமையாக சமைப்பார் என்றாலும், வித விதமாக சமைக்கவில்லை என்று புலம்பினேன். நான் அதிருப்தியாக இருப்பது அவரை அதிகமாக காயப்படுத்துகிறது என்று அவர் சொன்னபோது, நான் கோபம் கொண்டேன். நான் படும் அவஸ்தை அவருக்குப் புரியவில்லை. ஆனால் கடைசியில் கடவுள் என் தவறுகளை எனக்குப் புரியவைத்தார். நான் கடவுளிடமும், என் கணவரிடமும் மன்னிப்புக் கேட்டேன்.

வித்தியாசமான சூழலுக்காக ஏங்குவது, குறைசொல்லும் குணத்தை அல்லது, உறவுகளை சிதைக்கும் சுயநலத்தை நம்மில் ஏற்படுத்தும். இஸ்ரவேலர்களுக்கு இந்தத் தடுமாற்றம் பரிச்சயமான ஒன்று. அவர்கள் எப்போதும் திருப்தி அடையாமல், கடவுள் கொடுத்ததைக்குறித்து முறுமுறுத்தார்கள் (யாத்திராகமம் 17:1-3). கடவுள் “வானத்திலிருந்து அப்பம்” (16:4) வருஷிக்கப்பண்ணி, தம் ஜனங்களை போஷித்தாலும், அவர்கள் மற்ற உணவுகளுக்காக ஏங்க ஆரம்பித்தார்கள் (எண்ணாகமம் 11:4). கர்த்தரின் அன்பையும், பராமரிப்பையும் வெளிப்படுத்தும் அன்றாட அற்புதங்களைக் குறித்து சந்தோஷப்படாமல், இஸ்ரவேலர்கள் இன்னும் அதிகமாக, நல்லதாக, வித்தியாசமானதாக, தாங்கள் முன்னே சாப்பிட்டதுகூட (வச. 4-6) வேண்டும் என்றார்கள். தங்களுடைய விரக்தியை அவர்கள் மோசேயிடம் காண்பித்தார்கள் (வச. 10-14).

கர்த்தரின் நற்குணத்தையும், விசுவாசத்தையும் நம்புவது, நமக்கு நன்றி மனப்பான்மையைத் தரும். எண்ணற்ற வழிகளில் நம் மேல் அக்கறை காட்டி, நம்மை பாரமரிப்பதற்காக அவருக்கு நாம் இன்று நன்றி சொல்வோம்.

என் சித்தம் அல்ல, உம் சித்தம்

கமில், ஜோயெல் தம்பதியின் எட்டு வயது மகள் ரீமா ஒரு அரிய வகை இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்தபோது அவர்கள் உள்ளம் உடைந்துபோனார்கள். இந்த புற்றுநோயின் காரணமாக, ரீமாவுக்கு மூளைக்காய்ச்சல் வந்து, பின்னர் பக்கவாதம் வந்து, இறுதியில் கோமா என்ற ஆழ்மயக்க நிலைக்குச் சென்றாள். மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழு, அவள் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி, அவள் பிழைப்பதற்கான சாத்தியம் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவு என்று சொல்லி, ரீமாவின் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார்கள்.

கமிலும், ஜோயெலும் ஒரு அற்புதத்திற்காக உபவாசம் இருந்து ஜெபம் செய்தார்கள். “முடிவு எதுவாக இருந்தாலும், நாம் கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளவேண்டும். மேலும் ‘என் சித்தமல்ல, உம் சித்தம்’ என்று இயேசுவைப்போல ஜெபிக்கவேண்டும்” என்று கமில் சொன்னார். “ஆனால் கடவுள் அவளை சுகப்படுத்த வேண்டும் என்றே நான் மிகவும் வாஞ்சிக்கிறேன்” என்று ஜோயெல் கூறினார். “ஆம்! நாம் கேட்போம். ஆனால் இயேசு செய்ததுபோல, நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுப்பது மிகவும் கடினம் என்றாலும், அப்படிச் செய்வதே கடவுளை கனம்பண்ணுவதாகும்” என்று கமில் கூறினார்.

சிலுவையில் அறையப்படும் முன், “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்” (லூக்கா 22:42). “இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்” என்று ஜெபித்ததால், சிலுவையில் அறையப்பட வேண்டாம் என்றார்; ஆனால் பிதாவின்மேல் உள்ள அன்பின் காரணமாக, பிதாவின் சித்தத்துக்கு தன்னை ஒப்புவித்தார்.

நம்முடைய ஆசைகளை கடவுளிடம் ஒப்புவிப்பது எளிதல்ல. கஷ்டமான தருணங்களில், அவருடைய ஞானத்தை புரிந்துகொள்வதும் எளிதல்ல. கமில், ஜோயெல் தம்பதியின் ஜெபத்திற்கு மிகவும் விசேஷித்த வகையில் பதில் கிடைத்தது. ரீமா இன்று ஆரோக்கியமான 15 வயது பெண்ணாக இருக்கிறாள்.

கடவுள் நம்முடைய ஒவ்வொரு கஷ்டத்தையும் புரிந்துகொள்கிறார். அவருடைய வேண்டுதல் நமக்காக கேட்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு தேவையின்போதும், எப்படி கடவுள்மேல் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று நமக்குக் காண்பித்தார்.

எதிர்பாராத இரக்கம்

ஒரு பெரிய அங்காடியில், தான் வாங்கிய பொருள்களுக்குக் கட்டணம் செலுத்துவதற்காக என் தோழி வரிசையில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது அவளுக்கு முன்னால் நின்றவர் அவளுடைய கட்டணத்தில் 14 டாலர் குறையும் விதமாக ஒரு ரொக்கச்சீட்டைக் கொடுத்தார். சரியாக தூக்கம் இல்லாமல் நின்ற என் தோழிக்கு இந்த நற்செயல் அழுகையை வரவழைத்தது. பின்னர் அழுததை நினைத்து சிரிக்கத் தொடங்கினாள். அதிகம் சோர்வாயிருந்த தருணத்தில், எதிர்பாராத இந்த இரக்கம், அவள் மனதைத் தொட்டு, அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது. வேறொரு நபர் மூலமாக கடவுள் அவளுக்குக் காட்டிய கிருபைக்காக கடவுளுக்கு நன்றி செலுத்தினாள்.

எபேசுவில் உள்ள புறஜாதியாரான கிறிஸ்தவர்களுக்கு எழுதிய கடிதத்தில், பவுல் கொடுப்பது குறித்து எழுதுகிறார். கிருபையால் இரட்சிக்கப்பட்டதால், அவர்களுடைய பழைய வாழ்க்கையை ஒழித்து, புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். நாம் கடவுளுடைய சாயலாக உருவாக்கப்பட்டு, அவர் “செய்கையாக” இருப்பதால், இந்த இரட்சிக்கும் கிருபையில் இருந்து நற்கிரியைகளைச் செய்ய நமக்கு ஆர்வம் பிறக்கிறது (2:10). அந்த அங்காடியில் உள்ள மனிதனைப்போல, நாமும் நம்முடைய அன்றாட செயல்களின்மூலம் கடவுளின் அன்பைப் பகிர முடியும்.

அவருடைய கிருபையைப் பகிர நாம் பொருள்களாகக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய செயல்களின்மூலமும் நாம் அவருடைய அன்பைப் பகிர முடியும். ஒருவர் நம்மோடு பேசும்போது அவர்கள் சொல்வதை கவனமாகக் கேட்க நேரம் ஒதுக்கலாம். நம்மிடம் பணி புரிபவர்களிடம் ‘எப்படி இருக்கிறீர்கள்’ என்று கேட்கலாம். தேவையில் இருக்கும் ஒருவருக்கு உதவலாம். மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது, நாம் சந்தோஷத்தைப் பெறுகிறோம் (அப்போஸ்தலர் 20:35).

அழகிய உச்சம்

நாட்டுப்புற பாடல்கள், பாரம்பரிய சங்கீதம் என்று எல்லா விதமான பாடல்களையும் ரசிக்க என் பெற்றோர் எனக்குக் கற்றுக்கொடுத்தனர். எனவே மாஸ்கோ தேசிய இசைக்குழுவின் (Moscow National Symphony) இசை விருந்தைக் கேட்க, ரஷ்யாவின் புகழ்பெற்ற சங்கீத சபைகளில் ஒன்றான மாஸ்கோ கான்ஸர்வேடரியில் (Moscow Conservatory) நான் அடி எடுத்து வைத்தபோது, என் மனம் படபடத்தது. சைக்கோவ்ஸ்கி இயற்றிய ஒரு அழகிய பாடலை சங்கீத வித்துவான்கள் இசைக்கும்படி நடத்துனர் செய்தார்.  நிகழ்ச்சியின் மையக் கருத்துக்களின் சிறிது சிறிதாக உயர்ந்து, ஆழ்ந்த, வியப்பைத் தரக்கூடிய உச்ச ஸ்தாயினைத்தை எட்டியது. பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்து அந்த அழகிய தருணத்தைப் பாராட்டினார்கள்.

வேத வசனங்கள், வரலாற்றின் உச்சமான சிலுவை மற்றும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நோக்கி முன்னேறுகின்றன. ஏதேன் தோட்டத்தில் ஆதாம், ஏவாளின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஒரு மீட்பர் வருவார் என்று கடவுள் வாக்குக் கொடுத்தார் (ஆதியாகமம் 3:15). பழைய ஏற்பாடு முழுவதும் இந்த மையக்கருத்து முன்னோக்கிச் செல்வதைப் பார்க்கிறோம். பஸ்கா ஆட்டுக்குட்டியிலும் (யாத்திராகமம் 12:21), தீர்க்கதரிசிகளின் நம்பிக்கையிலும் (1 பேதுரு 1;10), கடவுளின் ஜனங்களின் வாஞ்சையிலும் இந்த வாக்குறுதியைப் பார்க்கிறோம்.

இந்தக் கருத்து முன்னோக்கிச் செல்வதை 1 யோவான் 4:14 உறுதிப்படுத்துகிறது: “பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம்”. எப்படி? நம்மை மன்னித்து, நம்மைப் படைத்தவரிடம் நம்மை மீட்டுக்கொடுக்க இயேசு மரித்து, உயிர்த்தெழுந்தார். இதன் மூலமாக சிதைந்த உலகை மீட்பதாக தான் கொடுத்த வாக்குறுதியை கடவுள் நிறைவேற்றினார். ஒரு நாள் மீண்டும் வந்து, தன்னுடைய படைப்பு அனைத்தையும் சேர்த்துக்கொள்வார்.

கடவுளின் குமாரன் நமக்காக மரித்ததை நினைவுகூரும்போது, கடவுளின் அருள் மற்றும் மீட்பராகிய இயேசு என்ற அழகிய உச்சத்தைக் கொண்டாடுகிறோம்.

எங்கே சமாதானம்?

1984 ஆம் ஆண்டு, பாடகர் பாப் டைலனிடம் “இன்னும் சமாதானத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?” என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார்.

“சமாதானம் என்பதே கிடையாது,” என்று டைலன் பதில் கூறினார். அவர் பதில் சர்ச்சைக்குள்ளானாலும், எளிதில் கிடைக்காத அரிய விஷயமாகவே சமாதானம் இருக்கிறது.

கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன், பெரும்பாலான தீர்க்கதரிசிகள் சமாதானத்தை முன் அறிவித்தார்கள். ஆனால் கடவுளின் தீர்க்கதரிசி அவர்களில் ஒருவராக இருக்கவில்லை. “என் வாக்குக்குச் செவி கொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்” (எரேமியா 7:23) என்று கடவுள் கூறியதை எரேமியா ஜனங்களுக்கு நினைவுபடுத்தினார். கள்ளத் தீர்க்கதரிசிகள் “சமாதானம், சமாதானம்” (8:11) என்று கூறினார்கள். ஆனால் எரேமியா பேரழிவை முன் அறிவித்தார். எருசலேம் கிமு 586ல் வீழ்ந்துபோனது.

சமாதானம் என்பது அரிய விஷயம். ஆனால் பயங்கரமான தீர்க்கதரிசனங்களைக் கொண்ட எரேமியாவின் புத்தகத்தில், நம்மை இடைவிடாமல் நேசிக்கும் ஆண்டவரைப் பற்றி அறிந்துகொள்கிறோம். “அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்” என்று கடவுள் கீழ்ப்படியாத தம் ஜனங்களிடம் கூறினார். “மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன்” (31:3-4).

ஆண்டவர், அன்பு மற்றும் சமாதானத்தின் கடவுள். அவரை நாம் மீறும்போது முரண்பாடுகள் ஏற்படுகின்றன. பாவம் உலகின் சமாதானத்தை அற்றுப்போகப்பண்ணி, நம் ஒவ்வொருவருடைய உள்ளான மனச் சமாதானத்தையும் குலைத்துப்போடுகிறது. கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கி, நமக்கு மன சமாதானத்தைத் தரும்படியாக இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். “நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்” (ரோமர் 5:1) என்று பவுல் எழுதுகிறார். இதுவரை எழுதப்பட்டவற்றில், பவுலின் வார்த்தைகளே அதிக நம்பிக்கை தரும் வார்த்தைகள்.

நாம் போர் நிறைந்த பகுதியில் வாழ்ந்தாலும், போர் என்ற வார்த்தைகூட காதில் விழாத அமைதியான சூழலில் வாழ்ந்தாலும், அவரில் சமாதானம் பெற கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.