தேவனிடம் கேட்டல்
என்னுடைய கணவன் டான், புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரென மருத்துவ அறிக்கை தெரிவித்த போது, சுகம் தரும்படி, தேவனிடம் எப்படி கேட்பது சரியாக இருக்கும் என குழம்பிப் போயிருந்தேன். என்னுடைய குறுகிய பார்வையில், இவ்வுலகில் அநேகம் பேர் யுத்தம், பஞ்சம், வறுமை, இயற்கை பேரழிவுகள் என பல்வேறு கொடுமையான துன்பங்களினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், அவர்களைப் போன்று நாங்களும் உள்ளோம் எனக் கருதினேன். ஒரு நாள் காலை ஜெபத்தில், என்னுடைய கணவன் மிகவும் தாழ்மையாக ஜெபிப்பதைக் கேட்டேன்,” அன்புள்ள தேவனே, தயவாய் என்னுடைய வியாதியை குணமாக்கும்“ என்றார்.
அது மிகவும் எளிமையாக, உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஏறெடுக்கப்பட்ட ஜெபம். அது, நான் செய்யும் சிக்கலான, நீண்ட ஜெப விண்ணப்பங்களை மாற்றிக்கொள்ளும்படி செய்தது, ஏனெனில் நம் தேவன், உதவி கேட்டு நாம் கெஞ்சும் அழுகையை நன்கு கேட்கிறார். தாவீது கேட்பதைப் போன்று, “திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.” (சங். 6:4) என்போம்.
தாவீதின் ஆத்துமா குழப்பத்திலும், விரக்தியிலும் இருக்கும் போது, இத்தகைய ஜெபத்தையே ஏறெடுக்கின்றார். அவர் எத்தகைய சூழலில் இருக்கின்றார் என்பது இச்சங்கீதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவருடைய உண்மையான கதறல், தேவனிடமிருந்து உதவியையும், மீட்பையும் பெற, அவருடைய உள்ளம் வாஞ்சிப்பதைக் காட்டுகின்றது. “என் பெருமூச்சினால் இளைத்துப் போனேன்” என்று எழுதுகின்றார். (வச. 6).
தாவீது, தன்னுடைய தேவைகளை தேவனிடம் எடுத்துச் செல்வதற்கு, தன்னுடைய குறைகளையும், பாவத்தையும் ஒரு தடையாகக் கருதவில்லை. தேவன் ஜெபங்களுக்கு பதில் தரும் முன்பே, அவரால் மகிழ்ச்சியாயிருக்க முடிந்தது. “கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்; கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.” (வச. 8-9) என்கின்றார்.
நம்முடைய குழப்பம், உறுதியற்றத் தன்மையின் மத்தியில், தேவன் அவருடைய பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்கின்றார், விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்கின்றார். அவருடைய உதவி மிகவும் தேவையான போது, அவர் நம்மைக் கேட்க ஆயத்தமாயிருக்கின்றார்.

பயத்தை மேற்கொள்ளல்
முப்பத்திரண்டு ஆண்டுகளாக பயம், ஒரு மனிதனுடைய வாழ்வை ஆண்டு கொண்டது. தான் செய்த ஒரு குற்றத்தினிமித்தம் பயந்து, தன்னுடைய சகோதரியின் பண்ணை வீட்டிலேயே, ஒருவரையும் சந்திக்காமலும், வேறிடம் எங்கும் செல்லாமலும் ஒளிந்து வாழ்ந்து வந்தான். அவன், தன்னுடைய தாயாரின் அடக்க வைபவத்தையும் தவிர்த்தான். ஆனால் தன்னுடைய அறுபத்திநான்காம் வயதில், தன் மீது எந்த குற்றச் சாட்டும் பதியப்படவில்லை என்பதை அறிந்தான், அவனும் இயல்பு வாழ்வுக்குத் திரும்பினான். அவனுக்குத் தண்டனையைக்குறித்த ஓர் அச்சம் இருந்தது உண்மைதான், ஆனால், அந்த பயம் அவனை கட்டுப்படுத்தும்படி, தன்னை ஒப்புக்கொடுத்திருந்தான்.
பெலிஸ்தனான கோலியாத், ஏலா பள்ளத்தாக்கில் இஸ்ரவேலரிடம் சவால் விட்ட போது, அவர்களும் இத்தகைய பயத்தினால் இழுக்கப்பட்டனர். அவர்களுக்கிருந்த பயம் உண்மையானது தான். அவர்களின் எதிரியான கோலியாத் ஒன்பது அடி, ஒன்பது அங்குலம் உயரம் இருந்தான், அவனுடைய போர் ஆயுதங்கள் மட்டும் 125 பவுண்டு எடையுள்ளனவாயிருந்தன (1 சாமு. 17:4-5). நாற்பது நாட்கள், காலையும், மாலையும், இஸ்ரவேலரின் படைகளைத் தன்னோடு யுத்தம் செய்ய வருமாறு சவால் விட்டான். ஆனால், அவனுக்கு எதிராக யுத்தம் செய்ய ஒருவனும் முன்வரவில்லை. இஸ்ரவேலரின் சேனைகளின் அணிவகுப்பண்டை தாவீது வரும் வரை, ஒருவனும் அவனை எதிர் கொள்ள முன்வரவில்லை. தாவீது கோலியாத்தைப் பார்த்தான், அவனுடைய இகழ்ச்சி வார்த்தைகளைக் கேட்டான், அவனை எதிர்த்துப் போர் செய்ய முன் வந்தான்.
இஸ்ரவேலர் அனைவரும், கோலியாத்தை தாங்கள் எதிர்த்து நிற்க கூடாதபடி, மிகப் பெரியவனாகப் பார்த்தனர், சிறிய பையனாகிய தாவீதோ, அவனை, தனக்குள் இருக்கும் தேவனைக் காட்டிலும் மிகச் சிறியவனாகக் கண்டான். அவன், “யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுப்பார்’’ என்றான் (வச. 47).
நம்மையும் பயம் ஆட்கொள்ளும் போது, தாவீதைப் போன்று நம்முடைய கண்களை தேவனுக்கு நேராகத் திருப்பி, நம்முடைய பிரச்சனையைக் குறித்த சரியான கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம். நமக்கிருக்கும் அச்சுறுத்தல் உண்மையானதாக இருக்கலாம், ஆனால் நமக்கெதிராக இருக்கும் பிரச்சனையைக் காட்டிலும், நம்மோடிருக்கும் தேவன், நமக்காக யுத்தம் செய்யும் தேவன், பெரியவர்.

தள்ளப் பட்ட கடன்கள்
2009 ஆம் ஆண்டு, லாஸ் ஏஞ்சலஸ் தேசம், பிள்ளைகளின் சிறையிருப்பிற்கான செலவுத் தொகையை அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து வசூலிப்பதை நிறுத்தியது. புதிதாக கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை என்றாலும், இந்த கொள்கை மாற்றம் வருவதற்கு முன்பிருந்தே செலுத்தாத தொகை, கடனாகவே இருந்தது. 2018 ஆம் ஆண்டு, அத்தேசம், எல்லா கடன் தொகைகளையும் ரத்து செய்தது.
இவ்வாறு, கடனை ரத்து செய்தது, பிழைப்பதற்குப் போராடிக் கொண்டிருந்த சில குடும்பங்கள் வாழ்வதற்கு உதவியாக இருந்தது. அவர்களின் சொத்துக்கள் அல்லது கூலியின் மீதிருந்த கடன் சுமை நீக்கப்பட்டதால், அவர்களின் அனுதின சாப்பாட்டிற்கு ஒரு வழி பிறந்தது. இத்தகைய கஷ்டங்களினாலேயே, தேவனாகிய கர்த்தர், ஏழாம் வருஷத்தின் முடிவில் கடன் யாவையும் விடுதலை பண்ணும் படி சொல்கின்றார். (உபா. 15:2). கடன் சுமையால் ஜனங்கள் குறுகிப் போவதை தேவன் விரும்பவில்லை.
தன் ஜனங்களில் சிறுமைப் பட்டிருந்த ஒருவனுக்குப் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், அவனிடத்தில் வட்டி வாங்க வேண்டாம் என (யாத்திராகமம் 22:25) கூறுகின்றது. தனக்கு சரியான விளைச்சல் இல்லாததினால், கஷ்டத்தை அநுபவிக்கின்ற தன்னுடைய அயலானுக்கு உதவும் படி கொடுக்கின்ற கடன் தொகையில், லாபம் சம்பாதிக்க எண்ண வேண்டாம். ஒவ்வொரு ஏழு ஆண்டுகளிலும் கடனை முற்றிலும் விட்டு விடுவாயாக, எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும் படியாக இப்படிச் செய்ய வேண்டும் என்கின்றார். (உபா. 15:4).
இந்நாட்களில், இயேசுவின் விசுவாசிகள் கூட இந்த கட்டளைக்கு கட்டுப்பட்டு நடப்பதில்லை. கடன் நிமித்தம் போராடிக்கொண்டிருப்பவர்களும் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழும்படி, அவர்களுடைய கடனைத் தள்ளுபடி செய்யும் படி, தேவன் அவ்வப்போது நம்மை தூண்டிக்கொண்டேயிருக்கின்றார். நாம் இத்தகைய கருணையையும், தாராள குணத்தையும் மற்றவர்களுக்கு காண்பிக்கும் போது, நாமும் தேவனுடைய குணத்தைப் பிரதிபலித்து, மற்றவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பவர்களாகின்றோம்.

கடைசி வேளையில் கிருபை
டக் மெர்க்கி என்ற சிற்ப கலைஞரின் சிறந்த வடிவமைப்பான ஒரு சிற்பம் நம்பிக்கையற்ற நிலையிலும் விசுவாசத்தோடிருப்பதை காட்டும்படியாக உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மனிதன், வால்நட் மரத்தால் செய்யப்பட்ட ஒரு சிலுவையை, நம்பிக்கையை இழந்த நிலையில் கட்டிப் பிடித்து, பற்றிக் கொண்டிருப்பது போன்று அமைந்துள்ளது. அதனைக் குறித்து அவர் எழுதும் போது,” இது, நம் வாழ்வில், நாம் சந்திக்கின்ற ஒரு நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எந்த தடங்கலும் இன்றி, கிறிஸ்துவையும், சுவிசேஷத்தையும் ஆத்மீகமாக சார்ந்திருத்தலை அது காண்பிக்கின்றது.” என்றார்.
இத்தகைய ஒரு நம்பிக்கையை, தன் வார்த்தையாலும், செயலாலும் காண்பித்த, பெயர் குறிப்பிடப்படாத, ஒரு பெண்ணை மாற்கு 5:25-34 ல் காண்கின்றோம். பன்னிரண்டு ஆண்டுகளாக, அவளுடைய வாழ்வு குழப்பம் நிறைந்ததாகவுள்ளது.(வ.25) அவள்,” அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப் படுகிறபொழுது,” இயேசுவைக் குறித்து கேள்விப் படுகின்றாள், இயேசுவை நோக்கிச் செல்கின்றாள், அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள், “அவளுடைய வேதனை நீங்கி, ஆரோக்கியமடைந்தாள்.” (வச. 27-29)
நீயும் உன்னுடைய நம்பிக்கையின் கடைசி எல்லைக்கு வந்து விட்டாயா ? உன்னுடைய ஆதாரங்கள் எல்லாம் செலவழிந்து விட்டனவா? எதிர்பார்ப்பு, நம்பிக்கையின்மை, இழப்பு, மற்றும் துயரத்தில் இருக்கும் மக்கள் பதட்டம் அடைய வேண்டாம். வேதனையிலிருந்த இந்த பெண்ணுக்கு இரங்கியதைப் போன்றும், மெர்க்கியின் சிற்பம் வெளிப்படுத்துவதையும் போன்றும், பதட்டமிகுந்த விசுவாசத்தையும் தேவன் கனப்படுத்துகின்றார். சார்ல்ஸ் வெஸ்லியின் பாடல் கூறுவதைப் போன்று, ”அப்பா, நான் என் கரங்களை உமக்கு நேராக நீட்டுகின்றேன், வேறே எந்த உதவியும் எனக்குத் தெரியவில்லை,” என்பதான விசுவாசம் நம்மிடம் உள்ளதா? இத்தகைய விசுவாசத்தைத் தரும் படி தேவனிடம் கேள். வெஸ்லி தன் பாடலை ,”விசுவாசத்தின் காரணரே, என்னுடைய சோர்ந்து போன, ஏக்கம் நிறைந்த கண்களை உமக்கு நேராக உயர்த்துகிறேன்; ஓ, நான் இப்பொழுதே இந்த ஈவைப் பெற்றுக்கொள்வேனாக. இல்லையென்றால், என் ஆத்துமா மரித்துப் போகுமே.” என்ற ஜெபத்தோடு முடிகின்றார்.

நம்மை வழிநடத்தும் வெளிச்சம்
ஒரு அருங்காட்சியகத்தில், பழங்கால விளக்குகள் வைக்கப்பட்டிருந்த பகுதியைச் சுற்றி வந்த போது, அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு குறிப்பு, அவை இஸ்ரவேல் தேசத்திலிருந்தவை என்பதைக் காட்டியது. செதுக்கப் பட்ட வடிவுகளால் அலங்கரிக்கப்பட்ட, நீள் வளைய, களிமண்ணாலான குவளைகளில் இரண்டு துளைகள் இருந்தன. ஒன்று, எரிபொருளுக்காகவும், மற்றொன்று, திரி வைப்பதற்காகவும் அமைக்கப்பட்டிருந்தது. இஸ்ரவேலர் இத்தகைய விளக்குகளைச் சாதாரணமாக மாடங்களில் வைப்பர். இவை, மனிதனின் உள்ளங்கையளவு சிறியதாக இருந்தது.
இத்தகைய விளக்குகள், தாவீது அரசனை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும், அவர் தேவனைப் போற்றிப் பாடும் போது, “கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்” (2 சாமுவேல் 22:29) என்கின்றார். தேவன், யுத்தங்களில் வெற்றியைக் கொடுத்த போது, தாவீது இப்பாடலைப் பாடுகின்றார். அவனுடைய தேசத்திலும், புறதேசத்திலும் உள்ள எதிரிகள், அவனைக் கொல்லும் படி பின் தொடர்ந்த போதும், அவன் தேவனோடு கொண்டுள்ள ஐக்கியம் அவனைப் பெலப்படுத்தியதால், மறைவிடங்களில் முடங்கிக் கிடக்காமல், தேவப் பிரசன்னம் கொடுத்த நம்பிக்கையோடு, முன்னோக்கிச் சென்று, எதிரிகளைச் சந்திக்கின்றான். தேவன் அவனுக்கு உதவி செய்தபடியால், அவனால் காரியங்களைத் தெளிவாகக் காணவும், தனக்கும், தன்னுடைய படைகளுக்கும், தன்னுடைய தேசத்திற்கும் சரியான முடிவுகளை எடுக்கவும் முடிந்தது.
தாவீதின் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள இருள் என்பது, பெலவீனம், தோல்வி, மற்றும் மரணத்தைக் குறித்த பயத்தைக் காட்டுகின்றது. நம்மில் அநேகர் இத்தகைய கவலைகளோடு வாழலாம், அது, நமக்குள் பதட்டத்தையும், மன அழுத்தத்தையும் உருவாக்கும். இந்த இருள் நம்மை அழுத்தும் போது, தேவன் நம்மோடு இருக்கின்றார் என்பதை நாமறிவதால், நாம் சமாதானத்தைப் பெற்றுக்கொள்கின்றோம். பரிசுத்த ஆவியானவரின் அக்கினி நமக்குள் பிரகாசித்து, நாம் இயேசுவை முக முகமாய் சந்திக்கும் வரை, நம் பாதைக்கு வெளிச்சம் காட்டுவார்.