இருளும் ஒளியும்
நான் நீதிமன்றத்தில் இருந்தபோது, உலகத்தினால் உடைக்கப்பட்ட பல பிரச்சனைகளை பார்த்திருக்கிறேன்: தாயிடமிருந்து பிரிந்த மகள்; அன்பைத் தொலைத்துவிட்டு கசப்பை மட்டுமே பகிரும் கணவன் மனைவி; பிள்ளைகளுடன் மீண்டும் இணைய மனைவியுடன் சமரசமாக ஏங்கும் கணவன். தேவனுடைய அன்பு மேம்பட அவர்களுக்கு மாற்றப்பட்ட இருதயங்களும், சுகமாகிய தழும்புகளும் தேவைப்படுகிறது.
சில நேரங்களில், நம்மைச் சுற்றியுள்ள உலகம் இருளையும், சோர்வையும் பற்றியிருக்கும்போது நாமும் நம்பிக்கையின்மையில் வாழ்கிறோம். இயேசு அந்த முறிவிற்காகவும் வலிக்காகவும் தான் மரித்தார் என்னும் உயரிய சத்தியத்தை அந்த தருணங்களில் பரிசுத்த ஆவியானவர் (யோவான் 14:17) நமக்கு விளங்கப்பண்ணுகிறார். இயேசு மனிதராய் இந்த உலகத்திற்கு வந்தபோது அவர் இருளிலே ஒளியைக் கொண்டுவந்தார் (1:4-5; 8:12). இயேசுவுக்கும் நிக்கொதேமுக்கும் நடைபெற்ற உரையாடலில் இதை நாம் காணமுடியும். நிக்கொதேமு இருளின் மறைவிலே இரகசியமாக வந்து ஒளியை உணர்ந்துகொண்டான் (3:1-2; 19:38-40).
இயேசு நிக்கொதேமுவுக்கு, “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று போதிக்கிறார் (3:16).
இயேசு ஒளியையும் அன்பையும் இவ்வுலகிற்கு கொண்டுவந்தாலும், பலர் பாவ இருளில் தொலைந்துவிட்டனர் (வச. 19-20). நாம் அவரைப் பின்பற்றினால், இருளை அழிக்கும் ஒளி நம்மிடம் இருக்கம். தேவன் நம்மை அவரின் அன்பின் கலங்கரை விளக்கமாக உருவாக்க நாம் நன்றியுடன் ஜெபிப்போம் (மத்தேயு 5:14-16).

மரணத்தின் மூலம் வாழ்வு
கார்ல் என்பவர் புற்றுநோயுடன் போராடினார். அவருக்கு இரண்டு நுரையீரல் மாற்று சிகிச்சை தேவைப்பட்டது. அவர் தேவனிடம் புதிய நுரையீரல் தருமாறு ஜெபித்தார். ஆனால் அவ்வாறு ஜெபிப்பது அவருக்கு சற்று விசித்திரமாய் தோன்றியது. ஏனெனில் “நான் உயிர்வாழ யாரோ ஒருவர் இறக்க வேண்டும்,” என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது.
கார்லினின் இக்கட்டான நிலை, வேதாகமத்தின் ஓர் அடிப்படைச் சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. தேவன் மரணத்தின் மூலம் புதிய வாழ்க்கையைத் தருகிறார். இதை யாத்திராகமத்தில் காண்கிறோம். அடிமைத்தனத்தில் பிறந்த இஸ்ரவேலர்கள், எகிப்தியர்களின் அடக்குமுறையால் சோர்ந்துபோயினர். தேவன் தனிப்பட்ட தீர்வைக் கொடுக்காவிட்டால் பார்வோன் தன் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கமாட்டான். ஒவ்வொரு குடும்பமும் ஒரு பழுதற்ற ஆட்டுக்குட்டியை அடித்து அந்த இரத்தத்தை வீட்டுவாசலின் நிலைக்கால்கள் சட்டத்தில் தெளித்தால் மட்டுமே, வீட்டின் தலைச்சன் பிள்ளைகள் உயிருடன் இருக்கும், இல்லையேல் மரித்துவிடும் என்ற நிலையை தேவன் அனுமதிக்கிறார் (யாத்திராகமம் 12:6-7).
இன்று நீங்களும் நானும் பாவத்தின் அடிமைத்தனத்தில் பிறந்துள்ளோம். தேவன் தனிப்பட்ட தீர்வு காண தம் பழுதற்ற ஒரேபேறான குமாரனை சிலுவையில் இரத்தம் சிந்த ஒப்புக்கொடுத்தார்.
அவருடன் சேர்ந்துகொள்ள இயேசு நமக்கு அழைப்பு கொடுக்கிறார். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலாத்தியர் 2:20) என்று பவுல் அறிவிக்கிறார். நாம் தேவனின் பழுதற்ற ஆட்டுக்குட்டியானவரின் மீது விசுவாசம் வைக்கும்போது, நம் பாவத்திற்கு மரித்து அவருடனே கூட நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் உயிர்த்தெழுவோம் (ரோமர் 6:4-5). நாம் ஒவ்வொருமுறையும் பாவத்தின் கட்டுகளுக்கு மறுத்து தெரிவித்து, கிறிஸ்துவின் மீட்பை அங்கீகரித்து நம் விசுவாசத்தை வெளிப்படுத்துவோம். நாம் இயேசுவுடன் மரித்தபோதுதான் மெய்யாகவே பிழைத்திருக்கிறோம்.

சொல்லுகிறபடி செய்யுங்கள்
என்னுடைய இளைய மகன் சேவியர், கிண்டர்கார்டனில் படிக்கும்போது நான் என் மகன்களுக்கு வேதாகமத்தை வாசித்துக் காண்பிக்கத் தொடங்கினேன். எங்கள் சூழ்நிலைகளுக்கேற்ப வசனங்களைப் பகிரவும், என்னோடு சேர்ந்து ஜெபிக்கவும் அவர்களை ஊக்குவித்தேன். சேவியர் வேதாகமத்தை எளிதாய் மனனம் செய்தான். நாங்கள் இக்கட்டான தருணங்களில் இருக்கும்போது சத்தியத்தை மிளிரச்செய்யும் அவன் நினைவில் வைத்திருக்கும் வேதாகமவசனங்களைக் கூறி எங்களை உற்சாகப்படுத்துவான்.
ஒரு நாள் எனக்கு கோபம் வந்து கடினமாய் பேசினேன். என் மகன் என்னைக் கட்டியணைத்துக் கொண்டு “நீங்கள் சொல்லுகிறபடி செய்யுங்கள் அம்மா,” என்றான்.
சேவியர் சொன்ன இந்த வார்த்தைகள், யூத விசுவாசிகளுக்கு போதனை செய்த யாக்கோபின் ஞானமான ஆலோசனையை எதிரொலிக்கிறது (யாக்கோபு 1:1). நாம் இயேசுவின் சாட்சிகளாய் இருக்கும்போது, பாவம் பல்வேறு வழிகளில் நம்முடைய வாழ்க்கையில் குறுக்கிடும் என்பதை வெளிப்படுத்தி, அவர்களை, “உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் இருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்" (வச. 21) என்று ஊக்கமளிக்கிறார். திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவர்கள், கண்ணாடியிலே தங்கள் முகத்தைப் பார்த்து, அதை உடனே மறந்துவிடுகிறவர்கள் போன்றவர்கள் (வச. 23-24). இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டு, அவர் சாயலைத் தரித்தவர்களுக்கென்று கிடைக்கும் சலுகைகளை நாம் இழக்க நேரிடலாம்.
சுவிசேஷத்தை பறைசாற்றுவதற்கு விசுவாசிகளுக்கு கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆவியானவர் நம்மை மாற்றுகிறார். ஆளுமையைத் தருகிறார். நாம் நற்செய்தியைப் பரப்பும் தூதர்களாகவும் முன்னேறுவோம். தேவன் நம்மை எங்கெல்லாம் அனுப்புகிறாரோ அங்கேயெல்லாம் நம்முடைய அன்பான தேவனின் சத்தியத்தையும் அன்பையும் வெளிச்சமாய் பிரதிபலிப்போம். நாம் பிரசங்கிப்பதை வாழ்க்கையில் வாழ்ந்தால் மற்றவர்களை இயேசுவிடம் அழைத்துச் செல்லலாம்.

ஒரு மதியீனமான முதலீடு
ஐடா ஸ்கட்டர், தமிழ்நாட்டிலுள்ள வேலூர் கிராமத்தில் மருத்துவ சிகிச்சை கொடுப்பதற்கு ஒரு சிறிய இடத்தை வாங்கினார். அவர்களுடைய இந்த முயற்சி மதியீனமானது என்று பலர் கருதினர். இளமையான, திருமணமாகாத ஐடா ஸ்கட்டர், அமெரிக்காவிலிருந்த தன்னுடைய சொந்த வீட்டின் சுகத்தை விட்டுவிட்டு, தற்போது கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை என்று அறியப்படுகிற நிறுவனத்தை ஸ்தாபிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் வீணாய் கருதப்பட்ட, அவர்களின் நேரம், மூலதனம், மற்றும் முயற்சிகள், இன்று மருத்துவ சிகிச்சையின் முன்னோடியாகவும், இந்திய சுகாதார அமைப்பிற்கு ஓர் கலங்கரை விளக்காகவும் திகழ்கிறது.
தேவன் எரேமியாவிடம் முற்றிலும் மதியீனமான ஒரு முதலீட்டைச் செய்யும்படிக்கு கட்டளையிடுகிறார்: “பென்யமீன் நாட்டு ஆனத்தோத் ஊரில் உள்ள நிலத்தை வாங்கிக்கொள்ளும்” (எரேமியா 32:8). அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கை போட்டிருந்தது (வச. 2). எரேமியா நிலத்தை வாங்கினாலும் அது கூடிய சீக்கிரத்திலேயே பாபிலோனுக்குச் சொந்தமாகிவிடும். எல்லாம் இழக்கப் போகிற நேரத்தில் எந்த முட்டாளாவது முதலீடு செய்வானா?
தேவனுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கிற ஒரு நபர், எதிர்காலத்தைக் குறித்து எவருக்கும் இல்லாத ஒரு பார்வையோடு இருப்பார். “ஏனெனில் இனி இந்த தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்” (வச. 15). தேவன் அழிவை விட அதிகமான நன்மையைக் காண்கிறார். தேவன் மீட்பு, சுகம் மற்றும் மறுசீரமைப்பு ஆகியவற்றை நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவருவதாக வாக்குப் பண்ணுகிறார். தேவனுடைய ஊழியத்திலோ அல்லது தனிப்பட்ட உறவுகளிலோ நாம் செய்யும் மதியீனமான முதலீடுகள் வீணாய் போவதில்லை. மற்றவர்களுடைய வாழ்க்கையில் தேவனுடைய நடத்துதலின் பேரில் நாம் செய்யும் மதியீனமான முதலீடுகள் இவ்வுலகத்திலேயே அர்த்தமுள்ளதாய் மாறும்.

பரலோகத்திலிருந்து செவிகொடுப்பவர்
மெய்சன் என்னும் பதினெட்டு மாத குழந்தை தன் தாயின் குரலைக் கேட்டதேயில்லை. மருத்துவர்கள் அவனுக்கு முதன்முதலாய் செயற்கைக் காது கேட்கும் கருவியைப் பொருத்தினர். அதைப் பொருத்தியவுடன், அவன் தாய் லாரின், அவனிடம் “என் குரல் கேட்கிறதா?" என்றார். அந்தக் குழந்தையின் கண்கள் ஒளிர்ந்தது, “ஹாய் பேபி” என்று லாரினின் பேச்கைக் கேட்டு, மென்மையாய் புன்னகைத்த மெய்சன் தன் மென்மையான குரலால் பதிலளித்தான். லாரின் கண்ணீருடன் அந்த அற்புதத்தை சாட்சியிட்டார். ஒரு பிரச்சனையில் அவரை சிலர் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டதால், லாரின் மெய்சனை உரிய காலத்திற்கு முன்னரே பெற்றெடுத்தார். ஒரு பவுண்ட் எடை மட்டுமே இருந்த மெய்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் 158 நாட்கள் இருந்தான். அவன் பிழைப்பான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் கேட்கும் திறனை மட்டும் இழந்துவிட்டான்.
அந்த மனதை உருகச்செய்யும் சம்பவம் எனக்கு தேவன் செவிகொடுக்கிறவர் என்பதை நினைவுப்படுத்தியது. மக்களின் கடினமான காலங்களில் சாலமோன் ராஜா தேவனின் செவிகளில் கேட்கும்படி ஆர்வத்துடன் ஜெபித்தார். “மழை பெய்யாதிருக்கும்போது" (1 இராஜாக்கள் 8:35), “பஞ்சம் அல்லது கொள்ளை நோய்," வாதை அல்லது வியாதி, (வச. 37), யுத்தம் (வச. 44), பாவம், ஆகிய இவற்றில் “பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக" (வச. 45) என்று வேண்டிக்கொண்டார்.
தேவன் பதில் அளித்ததை நினைக்கும்போது நம் இருதயங்கள் அசைகிறது. “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளை விட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்” (2 நாளாகமம் 7:14). பரலோகம் தூரத்தில் இருக்கலாம்; ஆனால் இயேசு அவரை நம்பிக்கையோடு தேடுகிறவர்களின் கூடவே இருக்கிறார். தேவன் நம் வேண்டுதல்களைக் கேட்டருளி பதில் கொடுப்பவராயிருக்கிறார்.