அழகாய் உடைக்கப்பட்டது
நாங்கள் எதிர்பார்த்து காத்திருந்த, இஸ்ரவேல் தேசத்தில் எங்களின் அகழ்வாராய்ச்சி பணி நடந்துகொண்டிருந்த அந்த குறிப்பிட்ட இடத்திற்கு கடைசியாய் எங்கள் பஸ் வந்து சேர்ந்தது. அந்த இடத்தின் மேற்பார்வையாளர், அந்த ஸ்தலத்தில் நாம் எதைக் கண்டறிந்தாலும் அவைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு யார் கையும் படாமல் இருந்தவைகள் என்று எங்களுக்குச் சொன்னார். அங்கு கண்டெடுக்கப்பட்ட உடைந்த மண்பாண்டங்களைப் பார்க்கும்போது நாங்கள் சரித்திரத்தை கையில் தொடுவதுபோல் உணர்ந்தோம். அதன் பின்பு அந்த உடைந்த மண்பாண்டங்களை, பணி செய்யும் இடத்திற்கு கொண்டுபோய் அவைகளை ஒன்றிணைக்க முயற்சித்தோம்.
அவர்களின் பணி மிகத் தெளிவான ஒன்று. அந்த பணியாளர்கள் ஒருங்கமைத்த அந்த உடைந்த மண்பாண்டங்கள், உடைந்துபோனதை நேர்த்தியாய் ஒன்றுசேர்க்க விரும்பும் தேவனுடைய சிந்தையை அழகாய் பிரதிபலித்தது. சங்கீதம் 31:12ல் தாவீது, “செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்” என்கிறார். இந்த சங்கீதத்தை அவர் எந்த சூழ்நிலையில் எழுதினார் என்னும் தகவல் இல்லையென்றாலும், அவர் புலம்புவதை வைத்து அவருடைய வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலையை அறியமுடிகிறது. இந்த சங்கீதம், தாவீது மேற்கொண்ட அபாயம், சத்துருக்கள் மற்றும் விரக்தியினால் முற்றிலும் உடைக்கப்பட்டதை விவரிக்கிறது.
அவர் எங்கு உதவிக்காக நாடினார்? 16ஆம் வசனத்தில் தாவீது தேவனிடத்தில், “செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன்” என்று கதறுகிறார்.
அந்த சூழ்நிலையில் தாவீதின் நம்பிக்கையாய் நின்ற தேவன், இன்றும் உடைந்துபோனவைகளை ஒன்றிணைக்க போதுமானவராயிருக்கிறார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடவும், அவரை முழுமையாய் நம்பவும் வேண்டும் என்பதையே அவர் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.

தேவ பிள்ளைகள்
எஸ்தர் தன்னுடைய ஊனமுற்ற மகளுடன் துணிக்கடைக்கு சென்றாள். பில் கவுண்டரின் வரிசையில் நிற்கும்போது, அவர்களுக்கு பின்னால் நின்றிருந்த ஒரு நபர், அந்த பிள்ளை ஊனமாயிருப்பதைக் கண்டு மௌனமாய் தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இதுபோன்ற நபர்களின் இந்த காயப்படுத்தும் செய்கைகள் எஸ்தருக்கு புதியதல்ல. அவளுடைய நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களாலேயே பலவேளைகளில் மனம் உடைந்து போயிருக்கிறாள். இவைகள் அனைத்தும் அவளை ஒரு தாய்மைக்கு சற்று குறைவாய் எண்ணத் தூண்டியது. தன் மகளை தன்னிடமாய் அணைத்து, அக்கடையில் பணத்தைக் கட்டிவிட்டு, தன்னுடைய காருக்குச் சென்றாள்.
காரில் அமர்ந்துகொண்டு, தன்னுடைய மகளின் நிமித்தம் நிந்திக்கிறவர்களை மன்னிக்கக்கூடிய இருதயத்தைத் தரும்படிக்கு தேவனிடம் கேட்டாள். அவள் ஒரு தாயாய் தன்னை தகுதியற்றவளாய் எண்ணும் அந்த எண்ணத்தை மேற்கொள்ளும்படி தேவனிடம் விண்ணப்பித்தாள். மேலும் தேவனுக்கு பிரியமான பிள்ளை என்றும் அவளுடைய மெய்யான அங்கீகாரத்தை சார்ந்துகொள்வதற்கும் உதவும்படிக்கு கேட்டாள்.
இயேசுவின் விசுவாசிகள் அனைவரும் “விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே” என்னும் அவர்களின் அழகான வேற்றுமைகளோடு சம மதிப்புமிக்கவர்கள் என்று பவுல் கூறுகிறார். நாம் அனைவரும் இணைந்து செயலாற்றுவதற்கு உள்ளாக இணைக்கப்பட்டிருக்கிறோம் (கலாத்தியர் 3:26-29). தேவன் நம்மை விடுவிக்கும்பொருட்டு தன்னுடைய குமாரனை அனுப்பியபோது, அவர் நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் நாம் ஒரே குடும்பமாக்கப்பட்டுள்ளோம் (4:4-7). நாம் தேவனுடைய சாயலைத் தரித்தவர்கள். மற்றவர்களுடைய கருத்துக்கள், எதிர்பார்ப்புகள், பாரபட்சங்கள் ஆகியவைகள் நம்முடைய தரத்தைத் தீர்மானிப்பதில்லை.
நாம் யார்? நாம் தேவனுடைய பிள்ளைகள்.

நான் அவருடைய கைகளில்
2000ஆம் ஆண்டு ஜியா ஹைக்சியா தன்னுடைய பார்வையை இழந்தான். அவனுடைய நண்பன் ஜியா வெங்கி தான் குழந்தையாயிருக்கும்போது அவனுடைய கைகளை இழந்தான். ஆனால் அவர்களின் ஊனத்தை மேற்கொள்ளும் வழியை அவர்கள் கண்டுபிடித்தனர். “நான் அவனுடைய கைகள், அவன் என்னுடைய கண்கள்” என்று ஹைக்சியா சொல்லுகிறான். இருவரும் இணைந்து சீனாவிலுள்ள அவர்களுடைய சிறிய கிராமத்தையே மாற்றத்திற்குள்ளாக்கினர்.
2002ஆம் ஆண்டிலிருந்து இந்த நண்பர்கள் இருவரும் தங்கள் வீட்டின் அருகாமையிலிருக்கும் தரிசு நிலத்தை புதுப்பிக்க பிரயாசப்பட்டனர். ஒவ்வொரு நாளும் ஹைக்சியா, வெங்கியின் முதுகில் ஏறிக்கொண்டு இருவரும் ஆற்றைக் கடந்து செல்வர். பிறகு வெங்கி, ஹைக்சியாவின் கரத்தில் ஒரு பள்ளம்தோண்டும் கருவியைக் கொடுத்து, அவன் தோண்ட தோண்ட அந்த குழியில் இவன் மரத்தை நடுவது வழக்கம். ஒருவர் குழிதோண்ட, மற்றவர் அதில் மரக்கன்றை நட, இருவரும் இணைந்து 10,000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டிருக்கின்றனர். “நாங்கள் இணைந்து வேலை செய்யும்போது, நாங்கள் ஊனமுற்றவர்களாய் ஒருபோதும் எண்ணியதில்லை” என்று ஹைக்சியா கூறுகிறான். “நாங்கள் குழுவாய் செயல்படுகிறோம்.”
பவுல் அப்போஸ்தலர் திருச்சபையை சரீரமாய் ஒப்பிடுகிறார். அதின் ஒவ்வொரு அவயத்திற்கும் மற்ற அவயத்தின் உதவி தேவை. திருச்சபை முழுவதும் கண்களாயிருந்தால், அங்கு எதுவும் கேட்காது. எல்லா அவயங்களும் காதுகளாய் இருந்தால், அங்கு வாசனை இருக்காது (1 கொரி. 12:14-17). “கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்று... சொல்லக்கூடாது” என்று பவுல் சொல்லுகிறார் (வச. 21). அவரவருடைய ஆவிக்குரிய வரங்களுக்கேற்ப ஒவ்வொருவரும் திருச்சபையில் பங்கேற்கிறோம் (வச. 7-11,18). ஜியா ஹைக்சியா மற்றும் வெங்கியைப் போல நாமும் நம்முடைய பலத்தை இணைத்தால், உலகத்திற்கு ஒரு மாற்றத்தைக் கொண்டுவரலாம்.
ஒரு புறம்போக்கு நிலத்தை சீர்செய்ய இருவர் தங்களுடைய திறமைகளை ஒன்றுசேர்த்தனர். இது செயல்படும் திருச்சபையை விளக்கும் என்ன அருமையான ஒரு உருவகம்.

நான் என்ன சொல்ல வேண்டும்?
பழைய புத்தகக்கடையொன்றில் நான் புத்தகங்களை பார்வையிடுவதை நிறுத்தியபின்பு, அந்த கடையின் முதலாளி வந்தார். அவரிடத்தில் இருக்கும் புத்தகங்களின் தலைப்புகளைக் குறித்து நாங்கள் விவாதித்துக்கொண்டிருக்கும்போது, அவர் சத்தியத்தைக் கேட்க விரும்புவாரா என்று என் உள்மனதில் எண்ணிக்கொண்டேன். நான் ஆண்டவருடைய வழிநடத்துதலுக்காக மௌனமாக ஜெபித்தேன். கிறிஸ்தவ ஆசிரியர்களின் சரிதை புத்தகங்களைக் குறித்து விவாதிக்கும் எண்ணம் எனக்கு உதித்தது. அதைக் குறித்து விவாதிக்கும்போது, அப்படியே தேவனைக் குறித்தும் பேசினோம். ஒரு சிறிய ஜெபம் எங்களுடைய விவாதத்தை ஆவிக்குரிய ரீதியில் திசைதிருப்பியதற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினேன்.
அர்தசஷ்டா ராஜாவின் முன் நின்று பேசுவதற்கு முன்பு நெகேமியாவும் தேவனிடம் ஜெபித்துவிட்டு போகிறான். எருசலேமின் அழிவைக் குறித்து கலக்கமடைந்திருந்த நெகேமியாவுக்கு எப்படி உதவமுடியும் என்று ராஜா கேட்கிறார். நெகேமியா ராஜாவின் வேலைக்காரனாயிருக்கிறான், ஆகையால் ராஜாவின் தயவை அவன் எதிர்பார்க்கமுடியாது. ஆனால் அவனுக்கு பெரிய தேவை ஒன்று உள்ளது. அவன் எருசலேமை மீட்க விரும்புகிறான். ஆகையால் அவன் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு தன் பட்டணத்தை ஸ்தாபிக்க அனுமதி கேட்பதற்கு முன்பு “பரலோகத்தின் தேவனை நோக்கி” ஜெபிக்கிறான் (நெகேமியா 2:4-5). ராஜா அதற்கு சம்மதித்து, நெகேமியாவுக்கு உதவி செய்யவும் தீர்மானித்து, அவனுடைய பயண ஏற்பாடுகளை செய்து, அவனுக்கு தேவையான மரமுட்டுகளையும் கொடுத்தனுப்புகிறார்.
“எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும்” ஜெபிக்கும்படிக்கு வேதம் நம்மை ஊக்குவிக்கிறது (எபேசியர் 6:18). நமக்கு தைரியம், சுய கட்டுப்பாடு தேவைப்படும் மற்றும் நாம் உணர்ச்சிவசப்படும் தருணங்களும் இதில் உள்ளடங்கும். நாம் பேசுவதற்கு முன்பாக ஜெபிப்பது, நம்முடைய சிந்தனையையும் வார்த்தைகளையும் தேவனுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க நமக்கு உதவுகிறது.
உங்களுடைய வார்த்தைகளை அவர் இன்று எவ்வாறு வழிநடத்த விரும்புகிறார்? அவரைக் கேட்டு அதை கண்டறியுங்கள்!

நியாயமான காத்திருத்தல்
மிகக்கடினமாய் நடத்தக்கூடிய முதலாளி அமைந்ததால், நீண்டநேரம் மனச்சோர்வோடு வேலைசெய்யக்கூடிய நிலைமை அபினவ்க்கு ஏற்பட்டது. தன் வேலையை விட்டுவிட எண்ணினார். ஆனால் அவனுடைய கடன், மனைவி, இளம்பிள்ளை ஆகிய பொறுப்புகள் அவருக்கிருந்தது. இருந்தாலும் வேலையை விட்டுவிடுவதற்கு அவர் முயற்சித்தார். அவருடைய மனைவி அவரிடத்தில், “நாம் காத்திருக்கலாம், தேவன் நமக்கு என்ன தருகிறார் என்று பார்க்கலாம்” என்றாள்.
பல மாதங்கள் கழித்து அவர்களுடைய ஜெபம் கேட்கப்பட்டது. அபினவ்க்கு புதிய வேலை கிடைத்தது. தன் குடும்பத்தினரிடம் அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. “அத்தனை மாதங்கள் என்பது நீண்ட காலம், ஆனால் தேவனுடைய குறித்த நேரத்தில் வெளிப்படும் அவருடைய திட்டத்திற்காக காத்திருந்ததற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.
பாடுகளுக்கு மத்தியில் தேவனுடைய குறித்த காலத்திற்காக காத்திருப்பது கடினம். அத்தருணத்தில் நம்முடைய திட்டத்தை அரங்கேற்ற தூண்டப்படுவோம். இஸ்ரவேலர்களும் அதையே செய்தனர்: சத்துருக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து தங்களை காத்துக்கொள்வதற்கு தேவனிடத்தில் திரும்பாமல், எகிப்து தேசத்திடம் உதவி கோரினர் (ஏசாயா 30:2). ஆனால் தேவன் அவர்களிடம், நீங்கள் மனந்திரும்பி என்னை நம்பினால், நீங்கள் பலப்பட்டு, மீட்பைப் பெறுவீர்கள் என்று எச்சரிக்கிறார் (வச. 15). “ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார்” (வச. 18) என்றும் கூறுகிறார்.
தேவனுக்காக காத்திருப்பதற்கு விசுவாசமும் பொறுமையும் தேவைப்படுகிறது. ஆனால் தேவனுடைய பதிலை நாம் பெற்றுக்கொள்ளும்போது, காத்திருந்தது நியாயமானது என்பதை நாம் ஒத்துக்கொள்வோம்: “அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்” (வச. 18). நாம் அவரிடத்திற்கு திரும்புவோம் என்று தேவன் நமக்காக காத்திருப்பதே அதைக்காட்டிலும் ஆச்சரியமானது.