எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆல்பர்ட் லீகட்டுரைகள்

தகப்பனில்லாமை இனி இல்லை

“தகப்பனில்லாத தலைமுறை” என்னும் ஜான் சோவர்ஸின் புத்தகத்தில், “இதுவரையில்லாத எந்த தலைமுறையைக் காட்டிலும், தற்போதுள்ள தலைமுறையில் 25 மில்லியன் பிள்ளைகள் தகப்பனில்லாமல் தாயால் வளர்க்கப்படுகின்றனர்” என்று எழுதுகிறார். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில், வீதியில் நடக்கும்போது ஒருவேளை என்னுடைய அப்பா எனக்கு எதிரே வந்து என்னை மோதினாலும், அவர்தான் என்னுடைய அப்பா என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால், நான் சிறுபிள்ளையாயிருக்கும்போதே என்னுடைய பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. என் அப்பாவின் அனைத்து புகைப்படங்களும் எரிக்கப்பட்டுவிட்டது. ஆகையினால், பல ஆண்டுகளாக நான் தகப்பனில்லாமல் வாழ்ந்திருக்கிறேன். என் பதிமூன்றாம் வயதில் பரமண்டல ஜெபத்தைக் கேட்க நேர்ந்தது (மத்தேயு 6:9-13). “பூமியில் நீ தகப்பனில்லாதவனாய் இருக்கலாம், ஆனால் தேவன் உன் பரலோகத் தகப்பனாயிருக்கிறார்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். 

மத்தேயு 6:9இல் “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளோம்.” 7ஆம் வசனத்தில் ஜெபத்தில் “வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வசனங்கள் எப்படி தொடர்புடையதாகிறது என்று நாம் ஆச்சரியப்படலாம். நான் அதை உணர்ந்திருக்கிறேன். நாம் மீண்டும் மீண்டும் சொல்லத் தேவையில்லை, அவருக்கு ஞாபகம் இருக்கும். நாம் விளக்கத் தேவையில்லை, அவருக்குப் புரியும். அவர் இரக்கமுள்ளவர், அவரின் நன்மைகளைக் குறித்து நாம் சந்தேகிக்கத் தேவையில்லை. அவருக்கு முடிவு ஆரம்பத்திலேயே தெரியும் என்பதினால் அவர் கிரியை செய்யும் காலமே சரியானது. 

தேவன் நம் தகப்பனாய் இருப்பதால் அவரை செயல்பட வைப்பதற்கு “வீண்வார்த்தைகளை” (வச. 7) நாம் பயன்படுத்தத் தேவையில்லை. ஜெபத்தில், நம்மை நேசிக்கிற, நம்மேல் அக்கறையுள்ள நம்மை கிறிஸ்துவின் மூலம் பிள்ளையாக்கிக் கொண்ட, நம் அப்பாவிடம் பேசுகிறோம். 

பயத்தை மேற்கொள்ளல்

முப்பத்திரண்டு ஆண்டுகளாக பயம், ஒரு மனிதனுடைய வாழ்வை ஆண்டு கொண்டது. தான் செய்த ஒரு குற்றத்தினிமித்தம் பயந்து, தன்னுடைய சகோதரியின் பண்ணை வீட்டிலேயே, ஒருவரையும் சந்திக்காமலும், வேறிடம் எங்கும் செல்லாமலும் ஒளிந்து வாழ்ந்து வந்தான். அவன், தன்னுடைய தாயாரின் அடக்க வைபவத்தையும் தவிர்த்தான். ஆனால் தன்னுடைய அறுபத்திநான்காம் வயதில், தன் மீது எந்த குற்றச் சாட்டும் பதியப்படவில்லை என்பதை அறிந்தான், அவனும்  இயல்பு வாழ்வுக்குத் திரும்பினான். அவனுக்குத் தண்டனையைக்குறித்த ஓர் அச்சம் இருந்தது உண்மைதான், ஆனால், அந்த பயம் அவனை கட்டுப்படுத்தும்படி, தன்னை ஒப்புக்கொடுத்திருந்தான்.

பெலிஸ்தனான கோலியாத், ஏலா பள்ளத்தாக்கில் இஸ்ரவேலரிடம் சவால் விட்ட போது, அவர்களும் இத்தகைய பயத்தினால் இழுக்கப்பட்டனர். அவர்களுக்கிருந்த பயம் உண்மையானது தான். அவர்களின் எதிரியான கோலியாத் ஒன்பது அடி, ஒன்பது அங்குலம்  உயரம் இருந்தான், அவனுடைய போர் ஆயுதங்கள் மட்டும் 125 பவுண்டு எடையுள்ளனவாயிருந்தன (1 சாமு. 17:4-5). நாற்பது நாட்கள், காலையும், மாலையும், இஸ்ரவேலரின் படைகளைத் தன்னோடு யுத்தம் செய்ய வருமாறு சவால் விட்டான். ஆனால், அவனுக்கு எதிராக யுத்தம் செய்ய  ஒருவனும் முன்வரவில்லை.  இஸ்ரவேலரின் சேனைகளின் அணிவகுப்பண்டை தாவீது வரும் வரை, ஒருவனும் அவனை எதிர் கொள்ள முன்வரவில்லை. தாவீது கோலியாத்தைப் பார்த்தான், அவனுடைய இகழ்ச்சி வார்த்தைகளைக் கேட்டான், அவனை எதிர்த்துப் போர் செய்ய முன் வந்தான்.

இஸ்ரவேலர் அனைவரும், கோலியாத்தை தாங்கள் எதிர்த்து நிற்க கூடாதபடி, மிகப் பெரியவனாகப் பார்த்தனர், சிறிய பையனாகிய தாவீதோ, அவனை, தனக்குள் இருக்கும் தேவனைக் காட்டிலும் மிகச் சிறியவனாகக் கண்டான். அவன், “யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுப்பார்’’ என்றான் (வச. 47).

நம்மையும் பயம் ஆட்கொள்ளும் போது, தாவீதைப் போன்று நம்முடைய கண்களை தேவனுக்கு நேராகத் திருப்பி, நம்முடைய பிரச்சனையைக் குறித்த சரியான கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.  நமக்கிருக்கும் அச்சுறுத்தல் உண்மையானதாக இருக்கலாம், ஆனால் நமக்கெதிராக இருக்கும் பிரச்சனையைக் காட்டிலும், நம்மோடிருக்கும் தேவன், நமக்காக யுத்தம் செய்யும் தேவன், பெரியவர்.

குறைவுள்ளது என்றாலும் நேசிக்கப்பட்டது

ஜப்பானில் உணவுப்பொருட்கள் மிகவும் சுத்தமாகத் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டில் அடைப்பார்கள். அவைகள் ருசியாய் இருப்பதோடுகூட அழகாயும் காணப்பட வேண்டும். அநேக நேரங்களில் நான் பாக்கெட்டின் அழகிற்காக வாங்குகிறேனா அல்லது உணவிற்காக வாங்குகிறேனா என்ற சந்தேகம் எனக்கு வரும்! ஜப்பானியர்கள் தங்கள் பொருளின் தரத்தைக் காப்பதற்காகச் சிறிய குறை இருந்தாலும் அதை விற்காமல் நிராகரித்து விடுவார்கள். ஆனால் சமீபகாலத்தில் ‘’வாகீரி’’ என்றும் விற்பனைப் பொருட்கள் பிரபலமடைந்திருக்கின்றன. ‘’வாகீரி’’ என்றால் “ஒரு காணரமுண்டு” என்று ஜப்பானிய மொழியில் பொருள்படும். இந்த பொருட்கள் எறிந்துவிடப்படுவதில்லை. ஆனால், ஏதோ ஒரு குறையிருக்கும் காரணத்தால் (ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் ஒன்று உடைந்திருக்கலாம்) மலிவுலிலையில் விற்கப்படுகிறது.

ஜப்பானில் வசிக்கும் என் நண்பன் “வாகீரி” என்பது குறையுள்ள மனிதர்களையும் குறிக்கும் பழிச்சொல்லாகவும் பயன்படுகிறது என்றான்.

இயேசு அனைவரையும் நேசிக்கிறார் சமுதாயம் ஒதுக்கிவிடும் ‘’வாகீரி’’ மனிதர்களையும் இயேசு நேசிக்கிறார். பரிசேயனின் வீட்டில் இயேசு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட பாவியான பெண்ணொருத்தி, அந்த வீட்டிற்குள் வந்து, இயேசுவுக்குப் பின்னால் முழங்கால்படியிட்டு கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்தாள் (லூக். 7:37-38). பரிசேயன் அவளைப் ‘பாவி’ என்ற பட்டம் தீட்டினான் (39). ஆனால், இயேசுவோ அவளை ஏற்றுக்கொண்டார். அவளிடம் அன்பாகப் பேசி, அவள் பாவங்கெல்லாம் மன்னிக்கப்பட்டதென்று கூறினார் (வச. 48).

இயேசு குறையுள்ள “வாகீரி” மனிதர்களை அதாவது உங்களையும், என்னையும் நேசிக்கிறார். அவர் அன்பின் மாபெரும் வெளிபாடு என்னவென்றால் “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததே” (ரோம. 5:8). அவர் அன்பை ருசித்த நாம் நம்மை சுற்றியுள்ள குறைவுள்ள மனிதர்களுக்கு அவருடைய அன்பின் வாய்க்கால்களாயிருந்து, அவர்களும், தங்கள் குறைகளோடுகூட தேவனின் அன்பை ருசிக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளச் செய்வோம்.

உறுதியாக பற்றிக்கொள்

சீனாவில் ஷாங்க் ஜியாஜியிலுள்ள டையமன் மலை, உலகிலுள்ள அழகான மலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்மலையின் உயர்ந்த சிகரங்களின் முழு அழகையும் நீங்கள் கண்டு களிக்க டையமன் ஷான் கேபிள் காரின் (Cable Car) மூலம் செல்ல வேண்டும். இந்த கேபிள் கார் 7455 மீட்டர் (4.5 மைல்) தூரத்திற்கு பயணிக்கிறது. அந்த கேபிள் காரில் எந்த ஒரு மின் மோட்டாரும் இல்லாமல் மிக உயரமான மலைகளை அவ்வளவு தூரம் கடந்து செல்வது என்பது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. ஆனாலும் இது பிரமிக்கத்தக்க உயரமான அந்த மலைகளை பாதுகாப்பாக கடந்து செல்லுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த மின்சார மோட்டாருடன், மிக வலுவான கம்பிவடத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

நமது விசுவாசப் பயணத்தில் “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:14) என்று, நாமும் நமது ஓட்டத்தை எவ்வாறு வெற்றிகரமாக முடிக்க இயலும்? அந்த கேபிள் காரைப்போல நமக்கு கிறிஸ்துவுடன் கூட மிக வலுவான பிணைப்பு இருக்க வேண்டும். அதைத்தான் பவுல் “கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்” (பிலி. 4:1) என்று கூறியுள்ளார். நாமாக செயல்படக்கூடிய வழிமுறைகள் நம்மிடம் இல்லை. நாம் முன்னேறிச் செல்ல முழுவதுமாக கிறிஸ்துவைச் சார்ந்திருக்கிறோம். நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களைக் கடந்து செல்ல, அவர் உதவிசெய்து நம்மை பாதுகாவலாகப் பரலோகத்தில் சேர்ப்பார்.

இந்த உலகில் வாழ்ந்த இறுதி நாட்களில், அப்போஸ்தலனாகிய பவுல் “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோ. 4:7) என்று அறிவித்தார்; நீங்களும் அவ்வாறே கூற இயலும். கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். அது போதும்.

கிறிஸ்மஸின் பிறப்பு

காபிரியேல் தூதன் மரியாளுக்கும், பின்பு மேய்ப்பர்களுக்கும், உலகிற்கான நற்செய்தியை அறிவித்த பொழுது (லூக்கா 1: 26-27;2:10), அந்த நற்செய்தி இந்த பதின்வயது பெண்ணிற்கு நற்செய்தியாக இருந்ததா? ஒருவேளை மரியாள், நான் கர்ப்பவதி ஆனதை என் குடும்பத்தாருக்கு எவ்விதம் அறிவிப்பேன்? எனக்கு நியமிக்கப்பட்ட யோசேப்பு திருமணத்தை நிறுத்தி விடுவாரா? எனது ஊர் மக்கள் என்ன பேசுவார்கள்? எனது ஜீவன் ஒருவேளை தப்பினாலும், ஒரு தயாயாக தனிமையாக என்னால் வாழ இயலுமா? என்று பலவாறு சிந்தித்திருப்பாள்.

மரியாள் கர்ப்பவதியானதை அறிந்த யோசேப்பு மனக்கலக்கமடைந்தான். மரியாளை திருமணம் செய்து…

நாம் யார்?

1940ன் ஆரம்பத்தில் ஜெர்மனியை ஆண்ட சமநெறிக் கொள்கையினரால் சிறைக்கைதிகள் கொடுமையாக நடத்தப்பட்ட, வன்சிறைக்காப்பிடங்களில் (Concentration camp) கோரிடென் பூமும் அவளது சகோதரி பெட்சியும் அனுபவித்த பயங்கரமான கொடுமைகளை அவளது சுயசரிதையில் விளக்கியுள்ளாள். சிறையில், ஒருமுறை ஓர் ஆய்வின் போது அவர்களது உடைகளை களைந்து போடும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். கோரி, அவளது பெண்மை பாதிக்கப்பட்டவளாகவும், கைவிடப்பட்டவளாகவும் உணர்ந்த நிலையில் வரிசையில் நின்றாள். இயேசு சிலுவையில் நிர்வாணக் கோலத்தில் தொங்கினதை திடீரென்று நினைவு கூர்ந்தாள். அந்த எண்ணத்தினால் ஆச்சரியமான ஆராதிக்கும் உணர்வைப் பெற்ற அவள், “பெட்சி, அவர்கள் அவரது…

வாழ்க்கையின் புயல்கள்

வேதாகமத்தில் மாற்கு என்ற புத்தகத்தில் பயங்கரமான புயல் காற்றைப் பற்றி வாசிக்கின்றோம். இயேசுவின் சீஷர்கள் இயேசுவோடு கூட ஒரு படகில் கலிலேயாக் கடலில் சென்று கொண்டிருந்தார்கள். “பலத்த சுழல் காற்று” அடித்த பொழுது, சீஷர்கள் அவர்களில் சிலர் அனுபவமிக்க மீனவர்களாக இருந்தபொழுதும், அவர்களது ஜீவனைக் குறித்து பயந்தார்கள். (4:37-38) தேவன் கவலைப்படவில்லையா? அவர்கள் இயேசுவினால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும், இயேசுவுக்கு மிகவும் நெருங்கினவர்களாகவும் இல்லையா? “அக்கரைக்குப் போவோம் வாருங்கள்” என்று இயேசு கூறினதற்கு அவர்கள் கீழ்ப்படிந்தார்கள் அல்லவா? (வச.35) பின்பு ஏன் இப்படிப்பட்ட பயங்கரமான…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

 கிறிஸ்துவுடன் ஆழமான நட்பு

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள க்ரைஸ்ட் கல்லூரியின் சிற்றாலயத்தில் உள்ள நினைவுச்சின்னம், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த “இணைபிரியா நண்பர்களாகிய" ஜான் ஃபின்ச் மற்றும் தாமஸ் பெயின்ஸ் என்ற மருத்துவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இருவரும் மருத்துவ ஆராய்ச்சியில் ஒன்றாக பணியாற்றியவர்கள் மற்றும் அரசாங்க பயணங்களில் ஒன்றாக பயணித்தவர்கள். 1680 இல் பெயின்ஸ் இறந்தபோது, ஃபின்ச் 36 காலமாக “ஈருடல் ஓருயிராக” இருந்த அவர்களின் நட்புக்காக வருந்தினார். அவர்களுடைய நட்பில் அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு இருந்தது. 

இப்படிப்பட்ட நெருக்கமான நட்பு தாவீது ராஜாவுக்கும் யோனத்தானுக்கும் இருந்தது. அவர்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஒருவரையொருவர் நேசித்தனர் (1 சாமுவேல் 20:41), மேலும் ஒருவருக்கொருவர் உடன்படிக்கையும் செய்தனர் (வ.8–17, 42). அவர்களின் நட்பில் உண்மையாக இருந்தனர் (1 சாமுவேல் 19:1–2; 20:13). தாவீது ராஜாவாவதற்காக, யோனத்தான் தனது உரிமையைத் தியாகம் செய்தார் (20:30-31; பார்க்க 23:15-18). யோனத்தான் மரித்தபோது, அவன் தன்மேல் வைத்திருந்த அன்பு " ஸ்தீரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது" என்று தாவீது புலம்பினார் (2 சாமுவேல் 1:26). 

நட்பைத் திருமணத்துடன் ஒப்பிடுவது இன்று நமக்குக் கடினமாயிருக்கலாம், ஆனால் ஃபின்ச் மற்றும் பெயின்ஸ், தாவீது மற்றும் யோனத்தான் போன்ற நட்புகள், நம் சொந்த வாழ்வில் நட்பை அதிக ஆழப்படுத்த ஊக்குவிக்கிறது. இயேசுவும் தம்முடைய மார்பில் சாய தமது நண்பர்களை ஏற்றுக்கொண்டார் (யோவான் 13:23-25). அவர் காட்டும் உண்மை, நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்பு நாம் ஒன்றாக உருவாக்கும் ஆழமான நட்பின் அடித்தளமாக இருக்கட்டும். 

கிறிஸ்துவுக்கு பூரணமாய் சரணடைதல்

1920 ஆம் ஆண்டில், ஒரு சீன போதகரின் ஆறாவது மகனான ஜான் சுங், அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க உதவித்தொகை பெற்றார். அவர் உயர்ந்த மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றார். முதுகலை படிப்பை முடித்து, முனைவர் பட்டமும் பெற்றார். ஆனால் அவர் தனது படிப்பைத் தொடரும்போது, தேவனை விட்டு விலகிச் சென்றார். பின்னர், 1927இல் ஒரு இரவு, அவர் தனது வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்படைத்தார் மற்றும் ஒரு போதகராகும் அழைப்பைப் பெற்றார்.

பல அதிக ஊதியம் பெறும் வாய்ப்புகள் அவருக்கு சீனாவில் மீண்டும் காத்திருந்தன. ஆனால் அவருடைய இலட்சியங்களை ஒதுக்கி வைக்கும்படிக்கு பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டார். அவரது அர்ப்பணிப்பின் அடையாளமாக, அவர் தனது பெற்றோருக்கு கனம்செலுத்தும் நோக்கத்தோடு தனது பிஎச்டி சான்றிதழை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற அனைத்து விருதுகளையும் கடலில் வீசினார்.

தம்முடைய சீடராக மாறுவது பற்றி இயேசு சொன்னதை ஜான் சங் புரிந்துகொண்டார்: “மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?” (மாற்கு 8:36). நாம் நம்மையே வெறுத்து, கிறிஸ்துவையும் அவருடைய வழிநடத்துதலையும் பின்பற்றுவதற்காக நமது பழைய வாழ்க்கையை விட்டு மனம்திரும்பும்போது (வச. 34-35), அவரைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைத் திசைதிருப்பும் தனிப்பட்ட ஆசைகளையும் பொருள் ஆதாயத்தையும் தியாகம் செய்ய அவசியமாகலாம்.

அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளாக, ஜான் தனது தேவன் கொடுத்த பணியை முழு மனதுடன் நிறைவேற்றினார். சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு நற்செய்தியை அறிவித்தார். நாம் எப்படி? நாம் பிரசங்கிகளாகவோ அல்லது மிஷனரிகளாகவோ இருக்க அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை எங்கு ஊழியம் செய்ய அழைக்கிறாரோ, அவருடைய ஆவி நம்மில் கிரியை செய்வதால், நாம் அவருக்கு முழுமையாக சரணடைவோமாக. 

- ஜாஸ்மின் கோ

இயேசு நம் ராஜா

உலகின் மிக வெப்பம் மிகுந்த மற்றும் வறண்ட நாடுகள் ஒன்றில் எண்ணெய் தோண்டும் போது,குழுக்கள் மிகப்பெரிய நிலத்தடி நீர் அமைப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். எனவே, 1983 ஆம் ஆண்டில், “மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பான நதி திட்டம்” தொடங்கப்பட்டது. அதின் மூலம் தண்ணீர் தேவைப்படும் நகரங்களுக்கு பெரிய குழாய் மூலம் நல்ல தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. திட்டம் துவக்கப்படுகிற இடத்தில் உள்ள ஒரு பதாகத்தில், “இங்கிருந்து ஜீவத் தண்ணீர் பாய்கிறது” என்று எழுதப்பட்டிருந்தது.

ஏசாயா தீர்க்கதரிசி, வனாந்திரத்தில் பாய்ந்தோடும் நீர்க்கால்களை எதிர்கால நீதியுள்ள ராஜாவை விவரிக்க பயன்படுத்துகிறார் (ஏசாயா 32). ராஜாக்களும் அதிபதிகளும் நீதியோடும் நியாயத்தோடும் அரசாளும்போது, அது “வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” (வச. 2) இருப்பார்கள். சில ஆட்சியாளர்கள் கொடுப்பதற்குப் பதிலாக பறித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இருப்பினும், தேவனை கனம்பண்ணும் தலைவர் மக்களுக்கு தங்குமிடம், அடைக்கலம், புத்துணர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டு வருபவராயிருக்கிறார். “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம்” (வச. 17) என்று ஏசாயா குறிப்பிடுகிறார்.

ஏசாயாவின் நம்பிக்கையான வார்த்தைகள், “கர்த்தர் தாமே.. இறங்கிவருவார்; நாமும்... எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்” (1 தெசலோனிக்கேயர் 4:16-17) என்று இயேசுவில் தன் நிறைவேறுதலைக் கண்டது. “மனிதனால் உருவாக்கப்பட்ட சிறப்பான நதி திட்டம்” மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது. என்றாவது ஒரு நாள் அந்த நீர் தேக்கம் வறண்டு போகும். ஆனால் நம் நீதியுள்ள ராஜா, ஒருபோதும் வறண்டு போகாத புத்துணர்ச்சியையும் ஜீவத் தண்ணீரையும் தருகிறார். 

 

- கேரன் பிம்போ