எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

ஆல்பர்ட் லீகட்டுரைகள்

தகப்பனில்லாமை இனி இல்லை

“தகப்பனில்லாத தலைமுறை” என்னும் ஜான் சோவர்ஸின் புத்தகத்தில், “இதுவரையில்லாத எந்த தலைமுறையைக் காட்டிலும், தற்போதுள்ள தலைமுறையில் 25 மில்லியன் பிள்ளைகள் தகப்பனில்லாமல் தாயால் வளர்க்கப்படுகின்றனர்” என்று எழுதுகிறார். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில், வீதியில் நடக்கும்போது ஒருவேளை என்னுடைய அப்பா எனக்கு எதிரே வந்து என்னை மோதினாலும், அவர்தான் என்னுடைய அப்பா என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால், நான் சிறுபிள்ளையாயிருக்கும்போதே என்னுடைய பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. என் அப்பாவின் அனைத்து புகைப்படங்களும் எரிக்கப்பட்டுவிட்டது. ஆகையினால், பல ஆண்டுகளாக நான் தகப்பனில்லாமல் வாழ்ந்திருக்கிறேன். என் பதிமூன்றாம் வயதில் பரமண்டல ஜெபத்தைக் கேட்க நேர்ந்தது (மத்தேயு 6:9-13). “பூமியில் நீ தகப்பனில்லாதவனாய் இருக்கலாம், ஆனால் தேவன் உன் பரலோகத் தகப்பனாயிருக்கிறார்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். 

மத்தேயு 6:9இல் “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளோம்.” 7ஆம் வசனத்தில் ஜெபத்தில் “வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வசனங்கள் எப்படி தொடர்புடையதாகிறது என்று நாம் ஆச்சரியப்படலாம். நான் அதை உணர்ந்திருக்கிறேன். நாம் மீண்டும் மீண்டும் சொல்லத் தேவையில்லை, அவருக்கு ஞாபகம் இருக்கும். நாம் விளக்கத் தேவையில்லை, அவருக்குப் புரியும். அவர் இரக்கமுள்ளவர், அவரின் நன்மைகளைக் குறித்து நாம் சந்தேகிக்கத் தேவையில்லை. அவருக்கு முடிவு ஆரம்பத்திலேயே தெரியும் என்பதினால் அவர் கிரியை செய்யும் காலமே சரியானது. 

தேவன் நம் தகப்பனாய் இருப்பதால் அவரை செயல்பட வைப்பதற்கு “வீண்வார்த்தைகளை” (வச. 7) நாம் பயன்படுத்தத் தேவையில்லை. ஜெபத்தில், நம்மை நேசிக்கிற, நம்மேல் அக்கறையுள்ள நம்மை கிறிஸ்துவின் மூலம் பிள்ளையாக்கிக் கொண்ட, நம் அப்பாவிடம் பேசுகிறோம். 

பயத்தை மேற்கொள்ளல்

முப்பத்திரண்டு ஆண்டுகளாக பயம், ஒரு மனிதனுடைய வாழ்வை ஆண்டு கொண்டது. தான் செய்த ஒரு குற்றத்தினிமித்தம் பயந்து, தன்னுடைய சகோதரியின் பண்ணை வீட்டிலேயே, ஒருவரையும் சந்திக்காமலும், வேறிடம் எங்கும் செல்லாமலும் ஒளிந்து வாழ்ந்து வந்தான். அவன், தன்னுடைய தாயாரின் அடக்க வைபவத்தையும் தவிர்த்தான். ஆனால் தன்னுடைய அறுபத்திநான்காம் வயதில், தன் மீது எந்த குற்றச் சாட்டும் பதியப்படவில்லை என்பதை அறிந்தான், அவனும்  இயல்பு வாழ்வுக்குத் திரும்பினான். அவனுக்குத் தண்டனையைக்குறித்த ஓர் அச்சம் இருந்தது உண்மைதான், ஆனால், அந்த பயம் அவனை கட்டுப்படுத்தும்படி, தன்னை ஒப்புக்கொடுத்திருந்தான்.

பெலிஸ்தனான கோலியாத், ஏலா பள்ளத்தாக்கில் இஸ்ரவேலரிடம் சவால் விட்ட போது, அவர்களும் இத்தகைய பயத்தினால் இழுக்கப்பட்டனர். அவர்களுக்கிருந்த பயம் உண்மையானது தான். அவர்களின் எதிரியான கோலியாத் ஒன்பது அடி, ஒன்பது அங்குலம்  உயரம் இருந்தான், அவனுடைய போர் ஆயுதங்கள் மட்டும் 125 பவுண்டு எடையுள்ளனவாயிருந்தன (1 சாமு. 17:4-5). நாற்பது நாட்கள், காலையும், மாலையும், இஸ்ரவேலரின் படைகளைத் தன்னோடு யுத்தம் செய்ய வருமாறு சவால் விட்டான். ஆனால், அவனுக்கு எதிராக யுத்தம் செய்ய  ஒருவனும் முன்வரவில்லை.  இஸ்ரவேலரின் சேனைகளின் அணிவகுப்பண்டை தாவீது வரும் வரை, ஒருவனும் அவனை எதிர் கொள்ள முன்வரவில்லை. தாவீது கோலியாத்தைப் பார்த்தான், அவனுடைய இகழ்ச்சி வார்த்தைகளைக் கேட்டான், அவனை எதிர்த்துப் போர் செய்ய முன் வந்தான்.

இஸ்ரவேலர் அனைவரும், கோலியாத்தை தாங்கள் எதிர்த்து நிற்க கூடாதபடி, மிகப் பெரியவனாகப் பார்த்தனர், சிறிய பையனாகிய தாவீதோ, அவனை, தனக்குள் இருக்கும் தேவனைக் காட்டிலும் மிகச் சிறியவனாகக் கண்டான். அவன், “யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுப்பார்’’ என்றான் (வச. 47).

நம்மையும் பயம் ஆட்கொள்ளும் போது, தாவீதைப் போன்று நம்முடைய கண்களை தேவனுக்கு நேராகத் திருப்பி, நம்முடைய பிரச்சனையைக் குறித்த சரியான கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.  நமக்கிருக்கும் அச்சுறுத்தல் உண்மையானதாக இருக்கலாம், ஆனால் நமக்கெதிராக இருக்கும் பிரச்சனையைக் காட்டிலும், நம்மோடிருக்கும் தேவன், நமக்காக யுத்தம் செய்யும் தேவன், பெரியவர்.

குறைவுள்ளது என்றாலும் நேசிக்கப்பட்டது

ஜப்பானில் உணவுப்பொருட்கள் மிகவும் சுத்தமாகத் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டில் அடைப்பார்கள். அவைகள் ருசியாய் இருப்பதோடுகூட அழகாயும் காணப்பட வேண்டும். அநேக நேரங்களில் நான் பாக்கெட்டின் அழகிற்காக வாங்குகிறேனா அல்லது உணவிற்காக வாங்குகிறேனா என்ற சந்தேகம் எனக்கு வரும்! ஜப்பானியர்கள் தங்கள் பொருளின் தரத்தைக் காப்பதற்காகச் சிறிய குறை இருந்தாலும் அதை விற்காமல் நிராகரித்து விடுவார்கள். ஆனால் சமீபகாலத்தில் ‘’வாகீரி’’ என்றும் விற்பனைப் பொருட்கள் பிரபலமடைந்திருக்கின்றன. ‘’வாகீரி’’ என்றால் “ஒரு காணரமுண்டு” என்று ஜப்பானிய மொழியில் பொருள்படும். இந்த பொருட்கள் எறிந்துவிடப்படுவதில்லை. ஆனால், ஏதோ ஒரு குறையிருக்கும் காரணத்தால் (ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் ஒன்று உடைந்திருக்கலாம்) மலிவுலிலையில் விற்கப்படுகிறது.

ஜப்பானில் வசிக்கும் என் நண்பன் “வாகீரி” என்பது குறையுள்ள மனிதர்களையும் குறிக்கும் பழிச்சொல்லாகவும் பயன்படுகிறது என்றான்.

இயேசு அனைவரையும் நேசிக்கிறார் சமுதாயம் ஒதுக்கிவிடும் ‘’வாகீரி’’ மனிதர்களையும் இயேசு நேசிக்கிறார். பரிசேயனின் வீட்டில் இயேசு இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட பாவியான பெண்ணொருத்தி, அந்த வீட்டிற்குள் வந்து, இயேசுவுக்குப் பின்னால் முழங்கால்படியிட்டு கண்ணீரால் அவர் பாதங்களை நனைத்தாள் (லூக். 7:37-38). பரிசேயன் அவளைப் ‘பாவி’ என்ற பட்டம் தீட்டினான் (39). ஆனால், இயேசுவோ அவளை ஏற்றுக்கொண்டார். அவளிடம் அன்பாகப் பேசி, அவள் பாவங்கெல்லாம் மன்னிக்கப்பட்டதென்று கூறினார் (வச. 48).

இயேசு குறையுள்ள “வாகீரி” மனிதர்களை அதாவது உங்களையும், என்னையும் நேசிக்கிறார். அவர் அன்பின் மாபெரும் வெளிபாடு என்னவென்றால் “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததே” (ரோம. 5:8). அவர் அன்பை ருசித்த நாம் நம்மை சுற்றியுள்ள குறைவுள்ள மனிதர்களுக்கு அவருடைய அன்பின் வாய்க்கால்களாயிருந்து, அவர்களும், தங்கள் குறைகளோடுகூட தேவனின் அன்பை ருசிக்க முடியும் என்பதை அறிந்துகொள்ளச் செய்வோம்.

உறுதியாக பற்றிக்கொள்

சீனாவில் ஷாங்க் ஜியாஜியிலுள்ள டையமன் மலை, உலகிலுள்ள அழகான மலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்மலையின் உயர்ந்த சிகரங்களின் முழு அழகையும் நீங்கள் கண்டு களிக்க டையமன் ஷான் கேபிள் காரின் (Cable Car) மூலம் செல்ல வேண்டும். இந்த கேபிள் கார் 7455 மீட்டர் (4.5 மைல்) தூரத்திற்கு பயணிக்கிறது. அந்த கேபிள் காரில் எந்த ஒரு மின் மோட்டாரும் இல்லாமல் மிக உயரமான மலைகளை அவ்வளவு தூரம் கடந்து செல்வது என்பது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. ஆனாலும் இது பிரமிக்கத்தக்க உயரமான அந்த மலைகளை பாதுகாப்பாக கடந்து செல்லுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த மின்சார மோட்டாருடன், மிக வலுவான கம்பிவடத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

நமது விசுவாசப் பயணத்தில் “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:14) என்று, நாமும் நமது ஓட்டத்தை எவ்வாறு வெற்றிகரமாக முடிக்க இயலும்? அந்த கேபிள் காரைப்போல நமக்கு கிறிஸ்துவுடன் கூட மிக வலுவான பிணைப்பு இருக்க வேண்டும். அதைத்தான் பவுல் “கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்” (பிலி. 4:1) என்று கூறியுள்ளார். நாமாக செயல்படக்கூடிய வழிமுறைகள் நம்மிடம் இல்லை. நாம் முன்னேறிச் செல்ல முழுவதுமாக கிறிஸ்துவைச் சார்ந்திருக்கிறோம். நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களைக் கடந்து செல்ல, அவர் உதவிசெய்து நம்மை பாதுகாவலாகப் பரலோகத்தில் சேர்ப்பார்.

இந்த உலகில் வாழ்ந்த இறுதி நாட்களில், அப்போஸ்தலனாகிய பவுல் “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோ. 4:7) என்று அறிவித்தார்; நீங்களும் அவ்வாறே கூற இயலும். கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். அது போதும்.

கிறிஸ்மஸின் பிறப்பு

காபிரியேல் தூதன் மரியாளுக்கும், பின்பு மேய்ப்பர்களுக்கும், உலகிற்கான நற்செய்தியை அறிவித்த பொழுது (லூக்கா 1: 26-27;2:10), அந்த நற்செய்தி இந்த பதின்வயது பெண்ணிற்கு நற்செய்தியாக இருந்ததா? ஒருவேளை மரியாள், நான் கர்ப்பவதி ஆனதை என் குடும்பத்தாருக்கு எவ்விதம் அறிவிப்பேன்? எனக்கு நியமிக்கப்பட்ட யோசேப்பு திருமணத்தை நிறுத்தி விடுவாரா? எனது ஊர் மக்கள் என்ன பேசுவார்கள்? எனது ஜீவன் ஒருவேளை தப்பினாலும், ஒரு தயாயாக தனிமையாக என்னால் வாழ இயலுமா? என்று பலவாறு சிந்தித்திருப்பாள்.

மரியாள் கர்ப்பவதியானதை அறிந்த யோசேப்பு மனக்கலக்கமடைந்தான். மரியாளை திருமணம் செய்து…

நாம் யார்?

1940ன் ஆரம்பத்தில் ஜெர்மனியை ஆண்ட சமநெறிக் கொள்கையினரால் சிறைக்கைதிகள் கொடுமையாக நடத்தப்பட்ட, வன்சிறைக்காப்பிடங்களில் (Concentration camp) கோரிடென் பூமும் அவளது சகோதரி பெட்சியும் அனுபவித்த பயங்கரமான கொடுமைகளை அவளது சுயசரிதையில் விளக்கியுள்ளாள். சிறையில், ஒருமுறை ஓர் ஆய்வின் போது அவர்களது உடைகளை களைந்து போடும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். கோரி, அவளது பெண்மை பாதிக்கப்பட்டவளாகவும், கைவிடப்பட்டவளாகவும் உணர்ந்த நிலையில் வரிசையில் நின்றாள். இயேசு சிலுவையில் நிர்வாணக் கோலத்தில் தொங்கினதை திடீரென்று நினைவு கூர்ந்தாள். அந்த எண்ணத்தினால் ஆச்சரியமான ஆராதிக்கும் உணர்வைப் பெற்ற அவள், “பெட்சி, அவர்கள் அவரது…

வாழ்க்கையின் புயல்கள்

வேதாகமத்தில் மாற்கு என்ற புத்தகத்தில் பயங்கரமான புயல் காற்றைப் பற்றி வாசிக்கின்றோம். இயேசுவின் சீஷர்கள் இயேசுவோடு கூட ஒரு படகில் கலிலேயாக் கடலில் சென்று கொண்டிருந்தார்கள். “பலத்த சுழல் காற்று” அடித்த பொழுது, சீஷர்கள் அவர்களில் சிலர் அனுபவமிக்க மீனவர்களாக இருந்தபொழுதும், அவர்களது ஜீவனைக் குறித்து பயந்தார்கள். (4:37-38) தேவன் கவலைப்படவில்லையா? அவர்கள் இயேசுவினால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும், இயேசுவுக்கு மிகவும் நெருங்கினவர்களாகவும் இல்லையா? “அக்கரைக்குப் போவோம் வாருங்கள்” என்று இயேசு கூறினதற்கு அவர்கள் கீழ்ப்படிந்தார்கள் அல்லவா? (வச.35) பின்பு ஏன் இப்படிப்பட்ட பயங்கரமான…

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவின் பேரன்பு

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் திரைப்படத்தில் ஜிம் கேவிசெல் இயேசுவாக நடிக்கும் முன், இயக்குனர் மெல்கிப்சன் இந்த பாத்திரம் மிகவும் கடினமாக இருக்கும் என்றும் திரையுலகில் அவரது தொழிலை எதிர்மறையாக பாதிக்கும் என்றும் எச்சரித்தார். இருப்பினும் கேவிசெல் அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார், "அது கடினமாக இருந்தாலும் நாம் அதை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார். 

படப்பிடிப்பின் போது, கேவிசெல் மின்னலால் தாக்கப்பட்டார், சுமார் இருபது கிலோ எடை குறைந்தார், மற்றும் கசையடி காட்சியின் போது தற்செயலாக சாட்டையால் அடிபட்டார். பின்னர், “மக்கள் என்னைப் பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதன் மூலம் மனமாற்றம் உண்டாகும்" என்றார். அந்த படம் கேவிசெல் மற்றும் படக்குழுவிலிருந்த மற்றவர்களை ஆழமாக பாதித்தது, மேலும் அதைப் பார்த்த லட்சக்கணக்கானவர்களில் எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றியது என்பதை தேவன் மட்டுமே அறிவார். 

தி பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட் என்பது, குருத்தோலை ஞாயிறு அன்று அவரது வெற்றி பவனியில் துவங்கி, அவர் அனுபவித்த துரோகம், கேலி, கசையடி, சிலுவையில் அறையப்படுதல் உள்ளிட்ட இயேசுவின் மிகப்பெரிய பாடுகளின் நேரத்தைக் குறிக்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் இச்சம்பவங்கள் காணப்படுகின்றன. 

ஏசாயா 53 இல், அவருடைய பாடுகளும் அதன் விளைவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளன: "நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்" (வ.5). நாமெல்லாரும் "ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்தோம்" (வ.6). ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த காரணத்தால், நாம் தேவனுடன் சமாதானமாக இருக்க முடியும். அவருடைய பாடுகள் நாம் அவருடன் இருப்பதற்கான வழியை உண்டாக்கியது. 

எனக்குப் பதிலாக இயேசு

இருபது வயது செல்வந்தன் ஒருவன் தன் நண்பர்களுடன் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதசாரி மீது மோதியதால் அவா் மரணமடைந்தாா். அந்த இளைஞனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் ஆஜரானவர் (பின்னர் சிறைத்தண்டனை அனுபவித்தவர்) குற்றத்தைச் செய்த ஓட்டுநருக்கு மாற்றாக வந்தவர் என்று சிலர் எண்ணுகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் சில நாடுகளில் நடக்கிறது, அங்கு மக்கள் தங்கள் குற்றங்களுக்காக தண்டனை பெறுவதை தவிர்க்க தங்களை போலவே தோற்றமளிக்கும் பிறரை வாடகைக்கு அமர்த்துகின்றனர். 

இது அவதூறும் மூர்க்கமுமான செயலாக இருக்கலாம், ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு நமது சார்பில் மாற்றாக ஆனார், மேலும் " அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்" (1 பேதுரு 3:18). தேவனின் பாவமற்ற பலியாக, அவரை விசுவாசிப்பவர்களின் பொருட்டு கிறிஸ்து துன்பப்பட்டு ஒரேதரம் மரித்தார் (எபிரெயர் 10:10). நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் அவர் சிலுவையில் தம்முடைய சரீரத்திலே தண்டனையை ஏற்றுக்கொண்டார். இன்று ஒரு குற்றவாளிக்கு மாற்றாக சில பணத்தைப் பெற ஒப்புக்கொள்ளும் ஒரு நபரைப் போலல்லாமல், கிறிஸ்துவின் சிலுவை மரணம் நமக்கு "நம்பிக்கையை" அளித்தது, அவர் தாமாகவே, விருப்பத்துடன் நமக்காகத் தம் ஜீவனை கொடுத்தார் (1 பேதுரு 3:15, 18; யோவான் 10:15). நமக்கும் தேவனுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் அகற்ற அவர் அவ்வாறு செய்தார். 

இயேசு நமக்கு பதிலாக மரித்ததின் மூலம் மட்டுமே, தேவையிலுள்ள பாவிகளாகிய நாம் அன்பான தேவனுடன் ஒரு உறவைப் பெற முடியும் மற்றும் முழுமையாக அவருடன் ஆவிக்குரிய உறவை பெற முடியும் என்ற இந்த ஆழமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைவோம், ஆறுதலையும் நம்பிக்கையையும் பெறுவோம். 

நேசிப்பதற்கான புதிய கட்டளை

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமான பாரம்பரியப்படி, ஐக்கிய பேரரசின் அரச குடும்பத்தினர் புனித வெள்ளிக்கு முந்தைய நாளான பெரிய வியாழன் அன்று தேவையானவர்களுக்கு பரிசுகளை வழங்குவார்கள். இந்த நடைமுறையானது மவுண்டி என்ற வார்த்தையின் அர்த்தத்தில் வேரூன்றியுள்ளது, இது லத்தீன் ‘மாண்டடம்’ அதாவது “கட்டளை” என்பதிலிருந்து வருகிறது. இயேசு தாம் இறப்பதற்கு முந்தைய இரவில் தம் நண்பர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளைதான் நினைவுகூரப்படுகிறது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (யோவான் 13:34).

இயேசு தலைவராக இருந்தும், தம் நண்பர்களின் கால்களைக் கழுவுகையில், ஒரு ஊழியக்காரனான இருந்தார் (வச. 5). பின்னர் அவர் அவ்வாறே செய்யும்படி அவர்களை அழைத்தார்: “நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” (வச. 15). மேலும் இன்னும் பெரிய தியாகமாக, அவர் சிலுவையில் மரித்து தனது உயிரைக் கொடுத்தார் (19:30). முழுமையான வாழ்வை நாம் அனுபவிக்க, கருணையினாலும் அன்பினாலும் அவர் தம்மையே கொடுத்தார்.

பிரித்தானிய அரச குடும்பம் தேவைப்படுபவர்களுக்கு சேவையாற்றும் பாரம்பரியம் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கான அடையாளமாக தொடர்கிறது. இதுபோல வாய்ப்புள்ள சூழலில் நாம் பிறக்காமல் இருக்கலாம்; ஆனால் நாம் இயேசுவில் நம்பிக்கை வைக்கும் போது, நாம் அவருடைய குடும்பத்தினராக மாறுகிறோம். நாமும் அவருடைய புதிய கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் நம் அன்பைக் காட்டலாம். உள்ளிருந்து நம்மை மாற்றுவதற்கு நாம் தேவனின் ஆவியைச் சார்ந்திருக்கையில்; அக்கறையுடனும், உறுதியுடனும், கருணையுடனும் பிறரை அணுகலாம்.