Archives: செப்டம்பர் 2025

சாதாரணமாய் தெரிபவர்கள்

ஆஸ்டன்-மார்டின்கள் மற்றும் பிற சொகுசு ஸ்போர்ட்ஸ் கார்களின் ஓட்டுநர்களாக இருக்கும் உளவாளிகளை பெரிய உளவாளிகளாய் ஹாலிவுட் திரைப்படங்கள் நமக்கு வழங்குகிறது. ஆனால் முன்னாள் சி.ஐ.ஏ தலைவரான ஜோனா மெண்டஸ், அதற்கு முரணாய் ஒன்றை சொல்கிறார். வேவுபார்க்கும் உளவாளி பளிச்சென்ற தெரியாத, விவரமற்ற, “சிறிய சாதாரண மனிதனாய் இருக்கவேண்டும்” என்று சொல்லுகிறார். “அவர்களை நீங்கள் எளிதில் மறந்துவிடுவீர்கள்.” உளவாளிகள் போல் தெரியாதவர்களே சிறந்த உளவாளிகள்.  
இஸ்ரவேலின் இரண்டு வேவுக்காரர்கள் எரிகோவுக்குள் சென்றனர். அவர்களை ராகாப் ராஜாவின் போர்ச்சேவகர்களிடமிருந்து மறைத்து வைத்து பாதுகாக்கிறாள் (யோசுவா 2:4). அவளை உளவுப்பணியாளராய் ஏற்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் குறைவு. அதற்கு மூன்று காரணங்கள் எதிரிடையாய் அமைகிறது: அவள் ஒரு கானானிய தேசத்தாள், அவள் ஒரு பெண், மற்றும் ஒரு விபச்சாரி. ஆனாலும் ராகாப் இஸ்ரவேலின் தேவனை நம்பத் துவங்கினாள்: “உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்” (வச. 11). அவள் இஸ்ரவேலின் உளவாளிகளை கூரையின் மீது ஆளிமரத்தின் கீழ் மறைத்து, அவர்கள் உயிருடன் தப்பிக்க உதவினாள். தேவன் அவளுடைய விசுவாசத்திற்கு வெகுமதி அளித்தார்: “அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்” (6:25). 
நாம் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என்று கருதியிருக்கலாம். ஒருவேளை நமக்கு உடல் ரீதியான வரம்புகள் இருக்கலாம், வழிநடத்தும் அளவுக்கு பிரபலமான நபராய் தெரியாமல் இருக்கலாம், அல்லது ஒரு கெட்டுப்போன கடந்த காலம் இருக்கலாம். ஆனால் வரலாறானது, ராகாப் தேவனுடைய தெய்வீக திட்டத்திற்கு எடுத்து பயன்படுத்தப்பட்டதுபோல மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர்களாலேயே நிரம்பியிருக்கிறது. உறுதியாக இருங்கள்: நம்மில் சாதாரணமானவர்களுக்கும் அவர் நேர்த்தியான தெய்வீகத் திட்டத்தை வைத்திருக்கிறார்.  

கொடுப்பவரின் இருதயம்

எங்கள் பழைய வீட்டை காலி செய்யும் கடைசி நாளில், எனது நண்பர் தனது நான்கு வயது மகள் கின்ஸ்லீயை எங்களுக்கு வழியணுப்ப அழைத்துவந்தார். “நீங்கள் போவதை நான் விரும்பவில்லை” என்று கின்ஸ்லீ கூறினாள். நான் அவளைக் கட்டிப்பிடித்து, என்னிடமிருந்த ஒரு கையால் வர்ணம் பூசப்பட்ட கைவிசிறி ஒன்றை அவளுக்கு பரிசாகக் கொடுத்தேன். “என் ஞாபகம் உனக்கு வரும்போதெல்லாம், இந்த கைவிசிறியைப் பயன்படுத்து, நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை நினைவில் கொள்” என்றேன். அவள் என்னுடைய பையில் இருந்த வேறு ஒரு கைவிசிறியைப் பார்த்துவிட்டு, அதைத் தரும்படிக்கு கேட்டாள். “அது உடைந்துவிட்டது” என்று சொன்னேன். “இருப்பதிலேயே சிறந்த கைவிசிறியை உனக்குக் கொடுத்திருக்கிறேன்” என்று அவளிடம் சொன்னேன். அவளுக்கு சிறந்த கைவிசிறியைக் கொடுத்ததில் நான் வருத்தப்படவில்லை. அவளுடைய மகிழ்ச்சியைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். பின்பாக ஒரு நாள், நான் உடைந்த கைவிசிறியை வைத்திருப்பதை கின்ஸ்லீ வருத்தத்துடன் அவளுடைய தாயாரிடம் சொல்லியிருக்கிறாள். அவர்கள் புதிய ஊதா நிற கைவிசிறியை எனக்கு பரிசாக அனுப்பிவைத்தனர். எனக்கு தாராளமான பரிசை கொடுத்த பின்பு கின்ஸ்லீ மகிழ்ச்சியடைந்தாள். நானும் மகிழ்ச்சியடைந்தேன்.  
சுய திருப்தி மற்றும் சுய பாதுகாப்பை ஊக்குவிக்கும் உலகில், இதயங்களைக் கொடுப்பதற்குப் பதிலாக நாம் பதுக்கி வைக்க ஆசைப்படலாம். இருப்பினும், “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு” (நீதிமொழிகள் 11:24) என்று வேதம் சொல்லுகிறது. அதிகமாய் செல்வத்தை ஈட்டக்கூடியதே செழிப்பு என்று நம்முடைய கலாச்சாரம் வரையறுக்கிறது. ஆனால் “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” (வச. 25) என்று வேதம் சொல்லுகிறது.  
தேவனின் வரம்பற்ற மற்றும் நிபந்தனையற்ற அன்பும் பெருந்தன்மையும் தொடர்ந்து நம்மை புத்துணர்வடையச் செய்கிறது. எல்லாவற்றையும் தாராளமாய் அள்ளிக்கொடுப்பதில் சோர்ந்துபோகாத தேவனை நாம் அறிந்திருக்கிறபடியால், நாமும் தாராளமாய் கொடுத்து, கொடுப்பவர்களின் கூட்டத்தை அதிகரிக்கச்செய்யலாம்.  

உங்கள் தோட்டத்தை பராமரியுங்கள்

எங்கள் வீட்டின் பின்புறத்தில் காய்கனி தாவரங்களை நாங்கள் விரும்பி பயிரிட்டோம். பின்னர் நான் மண்ணில் சிறிய துளைகளை கவனித்தேன். எங்கள் தாவரத்திலிருந்து முதல் பழம் பழுத்தபோது, தீடீரென்று அது காணாமல் போய்விட்டது. ஒரு நாள் எங்களின் மிகப் பெரிய ஸ்ட்ராபெரி செடி, குழிமுயலால் முற்றிலும் பிடுங்கப்பட்டு, வெயிலால் கருகிப் போனதைக் கண்டு நான் திகைத்துப் போனேன். சில எச்சரிக்கை அறிகுறிகளுக்கு நான் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன்! 
உன்னதப்பாட்டில் பதிவாகியுள்ள நேசத்தின் கவிதையானது ஒரு இளைய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உரையாடலை பதிவுசெய்கிறது. அந்த பெண்ணை ரூபவதி என்று அழைக்கும் நேசர், அவர்களின் நேசத்திற்கு உருவக அடையாளமான தோட்டத்தை குழிமுயல்கள் சேதப்படுத்தாதபடிக்கு பாதுகாத்துக்கொள்ளும்படி எச்சரிக்கிறார். “திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப்  பிடியுங்கள்” (உன்னதப்பாட்டு 2:15) என்று சொல்லுகிறார். பொறாமை, கோபம், வஞ்சகம் அல்லது அக்கறையின்மை போன்ற அவர்களின் காதலை அழிக்கக்கூடிய “நரிகளின்” குழிகளை அவர் பார்த்திருக்கலாம். அவர் தனது ரூபவதியின் அழகில் மகிழ்ந்ததால் (வச. 14), ஆரோக்கியமற்ற பிரச்சனை இருப்பதை அவர் விரும்பமாட்டார். அவள் அவருக்கு “முள்ளுகளுக்குள்ளே  லீலிபுஷ்பம்” (வச. 2) போலிருக்கிறாள். அவர்களது உறவை பாதுகாக்கும் முயற்சியில் அவர் முழுமனதுடன் ஈடுபடுகிறார்.  
குடும்பம் மற்றும் நண்பர்கள் போன்ற உறவுகளைப் பேணிக்காப்பது என்பது எளிதல்ல என்றாலும், அவைகள் நமக்கு மிகவும் விலையேறப்பெற்ற பரிசுகளாகும். பொறுமையோடும், பராமரிப்போடும், சிறு குழிநரிகளிடத்திலிருந்து பாதுகாப்போடும், தேவன் நம் கனிகளை விளையச்செய்வார் என்று அவரை நம்புவோம்.  

தேவன் உன்னை பேர்ச்சொல்லி அழைக்கிறார்

நடாலியா, கல்வி கற்பதாக முடிவுசெய்து வேறு நாட்டிற்குச் சென்றார். ஆனால் அவள் தங்கியிருந்த புதிய வீட்டில் இருந்த தகப்பன் ஒருவன் அவளை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தத் தொடங்கினான். ஊதியம் இல்லாமல் தனது வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்கும்படி அவளை கட்டாயப்படுத்தினான். அவன் அவளை வெளியே செல்லவோ அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தவோ அனுமதிக்கவில்லை. அவள் அவனுடைய அடிமையாகிவிட்டாள். 
ஆகார் என்பவள் ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பணிவிடை செய்த ஒரு எகிப்திய அடிமை. அவர்கள் அவளை “என் அடிமைப்பெண்” என்றும் “உன் அடிமைப்பெண்” என்றும் (ஆதியாகமம் 16:2, 5-6) அழைக்கிறதை பார்க்கமுடியும். அவளை வைத்து தன் சந்ததியை வளர்த்துக்கொள்ளும் நோக்கத்தோடு அவளை பயன்படுத்திக் கொண்டனர்.  
தேவன் எவ்வளவு வித்தியாசமானவர்! கர்ப்பவதியாய் இருந்த ஆகாருக்கு தேவதூதன் வனாந்திரத்தில் முதல் முறையாக வெளிப்படுகிறான். தேவதூதன் என்பது தேவனுடைய தூதுவனாகவோ, சிலவேளைகளில் தேவனாகவேகூட இருக்கக்கூடும். ஆகார் தேவதூதனை தேவன் என்று எண்ணி, “என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன்” (வச. 13) என்று சொல்லுகிறாள். தேவதூதன் தேவனாக இருந்தால், அவர் மாம்சத்தில் உதித்து, தேவனை நமக்கு வெளிப்படுத்திய தேவனுடைய குமாரனாக இருக்கலாம். அவர் அவளுடைய பெயரைச் சொல்லி அழைக்கிறார், “சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்?” (வச. 8).  
தேவன் நடாலியாவைக் கண்டு, அவள் மீது அக்கறைக் கொள்ளும் நபர்களின் மூலம் அவளுடைய அடிமைத்தன வாழ்க்கையை விடுவித்தார். அவள் தற்போது செவிலியராய் பணிபுரிந்துகொண்டிருக்கிறாள். தேவன் ஆகாரைப் பார்த்து அவளை பேர்ச்சொல்லி அழைத்தார். தேவன் உங்களையும் பார்க்கிறார். நீங்கள் ஒருவேளை முக்கியத்துவமற்றவராய் கருதப்படலாம். இயேசு உங்களை பேர்ச்சொல்லி அழைக்கிறார். அவரிடத்தில் ஓடிவாருங்கள்.  

பிரத்யேகமான கதறல்

ஒரு குழந்தை அழுகிறதென்றால், அது களைப்பாய் இருக்கிறது அல்லது அதற்கு பசிக்கிறது என்று அர்த்தமல்லவா? பிரவுன் பல்கலைக்கழகத்தின் மருத்துவர்களின் கூற்றுப்படி, புதிதாகப் பிறந்த குழந்தையின் அழுகைகளில் உள்ள நுட்பமான வேறுபாடுகள் மற்ற பிரச்சினைகளுக்கு முக்கியமான தடயங்களை கொடுக்கக்கூடும். குழந்தையின் மைய நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதை அறிய, அவைகளின் அழுகுரலில் இருக்கும் சுருதி, ஓசை ஆகியவைகளை அடிப்படையாய் வைத்து கணினியின் துணையோடு கண்டறியும் மருத்துவ செயல்பாடுகள் அமுலில் உள்ளது.  
தேவன் தம்முடைய ஜனங்களின் வித்தியாசமான கூக்குரலைக் கேட்டு, அவர்களுடைய இருதயத்தின் நிலையைத் தீர்மானிப்பார் என்றும் கிருபையுடன் அவர்களுக்கு இரங்குவார் என்றும் ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். யூதேயா, தேவனிடம் ஆலோசனைக் கேட்பதற்கு பதிலாக, எகிப்தின் உதவியை நாடியது (ஏசாயா 30:1-7). அவர்கள் தொடர்ந்து தேவனிடத்தில் முரட்டாட்டம் செய்தால், தேவன் அவர்களுக்கு தோல்வியையும் அவமானத்தையும் கொண்டுவருவதாக எச்சரிக்கிறார். இருப்பினும், அவர்களின் “கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்க” (வச. 18) தீர்மானித்தார். அவர்கள் தேவனிடத்தில் மனந்திரும்பி விசுவாசத்துடன் மன்றாடி கதறினாலொழிய அவர்களுக்கு மீட்பு வராது. கர்த்தருடைய ஜனங்கள் அவரிடத்தில் கதறி அழும்போது, அவர் அவர்களுடைய பாவத்தை மன்னித்து அவர்களின் ஆவிக்குரிய வலிமையை புதுப்பிப்பார் (வச. 8-26).  
இதே விஷயம் இன்று கிறிஸ்தவர்களாகிய நமக்கும் பொருந்தும். நம்முடைய மனந்திரும்புதலின் கதறல் சத்தத்தை பரலோகப் பிதா கேட்கும்போது, அவர் நம்மை மன்னித்து, அவர் மீதான நம்முடைய மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் புதுப்பிக்கிறார்.  

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவைப் போல் கொடுத்தல்

அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி தனது பிரியமான 1905 கிறிஸ்மஸ் கதையான “தி கிஃப்ட் ஆஃப் தி மேகி” என்னும் கதையை எழுதியபோது, அவர் தனிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மீள போராடிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் ஒரு அழகான, கிறிஸ்துவின் பிரம்மாண்ட குணாதிசயமான தியாகத்தை முக்கியத்துவப்படுத்தும் ஒரு எழுச்சியூட்டும் கதையை எழுதினார். கதையில், ஒரு ஏழை மனைவி கிறிஸ்துமஸ் முன்தினத்தன்று தனது கணவனுக்கு பரிசுக்கொடுக்க அவரிடத்திலிருக்கும் பாக்கெட் கடிகாரத்திற்கு ஒரு அழகான தங்க சங்கிலியை வாங்குவதற்காக தனது அழகான நீண்ட தலைமுடியை விற்றாள். ஆனால் அவளுடைய கணவன், அவளுடைய அழகான கூந்தலுக்கு பரிசுகொடுக்க எண்ணி, ஒரு ஜோடி சீப்புகளை அவளுக்கு பரிசாக வாங்கி வந்திருந்தார்.  
அவர்கள் மற்றவருக்கு கொடுக்க எண்ணிய மிகப்பெரிய பரிசு, தியாகம். அவர்கள் இருவருடைய செயல்களும், அவர்களுக்கு மற்றவர் மீது இருக்கும் அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது.  
அதே போன்று, இயேசு என்னும் குழந்தை பிறந்த மாத்திரத்தில், அவரைக் காண வந்திருந்த சாஸ்திரிகள், அவருக்கு அன்பான பரிசுகளைக் கொண்டு வந்திருந்ததை இந்த கதை பிரதிபலிக்கிறது (மத்தேயு 2:1,11ஐப் பார்க்கவும்). அந்த பரிசுகளை விட, அந்த குழந்தை இயேசு வளர்ந்து ஒரு நாள் முழு உலகத்திற்காகவும் தனது ஜீவனையே பரிசாகக் கொடுக்கப்போகிறார்.  
நமது அன்றாட வாழ்வில், நம்முடைய நேரத்தையும், பொக்கிஷங்களையும், அன்பைப் பற்றிப் பேசும் குணத்தையும் மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் கிறிஸ்துவின் மாபெரும் பரிசை கிறிஸ்தவர்களாகிய நாம் முன்னிலைப்படுத்த முடியும். அப்போஸ்தலனாகிய பவுல், “அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்” (ரோமர் 12:1) என்று எழுதுகிறார். இயேசுவின் அன்பின் மூலம் மற்றவர்களுக்காக தியாகம் செய்வதை விட சிறந்த பரிசு எதுவும் இல்லை. 

புனிதர் நிக்

செயிண்ட் நிக்கோலஸ் (செயிண்ட் நிக்) என்று நாம் அறியும் நபர், கி.பி 270இல் ஒரு பணக்கார கிரேக்க குடும்பத்தில் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவர் சிறுவனாக இருந்தபோது அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். அவர் தனது மாமாவுடன் வாழ நேரிட்டது. அவர் அவரை நேசித்து, தேவனைப் பின்பற்றவும் கற்றுக்கொடுத்தார். நிக்கோலஸ் இளைஞனாக இருந்தபோது,திருமணத்திற்கு வரதட்சணை இல்லாத மூன்று சகோதரிகளைப் பற்றி அவர் கேள்விப்பட்டதாக புராணக்கதை கூறுகிறது. தேவைப்படுபவர்களுக்குக் கொடுப்பது பற்றிய இயேசுவின் போதனைகளைப் பின்பற்ற விரும்பிய அவர், அவருடைய சொத்தை எடுத்து ஒவ்வொரு சகோதரிக்கும் ஒரு பொற்காசுகளைக் கொடுத்தார். பல ஆண்டுகளாக, நிக்கோலஸ் தனது மீதமுள்ள பணத்தை ஏழைகளுக்கு உணவளிப்பதற்கும் மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் கொடுத்தார். அடுத்த நூற்றாண்டுகளில், நிக்கோலஸ் அவரது ஆடம்பரமான தாராள மனப்பான்மைக்காக கௌரவிக்கப்பட்டார். மேலும் அவர் சாண்டா கிளாஸ் என்று நாம் அறிந்த கதாபாத்திரத்தை ஊக்கப்படுத்தினார். 
இந்த பண்டிகை நாட்களின் பளிச்சிடும் விளம்பரங்களும் நமது கொண்டாட்டங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், பரிசு வழங்கும் பாரம்பரியம் நிக்கோலஸ{டன் இணைகிறது. மேலும் அவருடைய தாராள மனப்பான்மை இயேசுவிடம் அவர் கொண்டிருந்த பக்தியின் அடிப்படையில் அமைந்தது. கிறிஸ்து கற்பனைக்கு எட்டாத தாராள மனப்பான்மை உடையவர் என்பதை நிக்கோலஸ் அறிந்திருந்தார். அவர் கொண்டுவந்த மிக ஆழமான பரிசு: தேவன். இயேசு என்றால் “தேவன்  நம்முடன் இருக்கிறார்" (மத்தேயு 1:23) என்று அர்த்தம். மேலும் அவர் நமக்கு வாழ்வின் பரிசைக் கொண்டு வந்தார். மரண உலகில், அவர் “தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (வச. 21). 
நாம் இயேசுவை நம்பும்போது, தியாகம் செய்யும் பெருந்தன்மை வெளிப்படுகிறது. நாம் மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறோம். தேவன் நமக்குக் கொடுப்பதுபோல நாமும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கொடுக்கிறோம். இது செயிண்ட் நிக்கின் கதை. எல்லாவற்றிற்கும் மேலாக இது தேவனுடைய கதை.  

தேவனின் ஆறுதலான அர்ப்பணிப்பு

பல ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் குடும்பம் அமெரிக்காவின் நான்கு மாநிலங்கள் சந்திக்கும் புள்ளியில் எங்கள் குடும்பம் ஆளுக்கொரு திசையாய் நின்றோம். என் கணவர் அரிசோனா எனக் குறிக்கப்பட்ட பிரிவில் நின்றார். எங்கள் மூத்த மகன், ஏ.ஜே., யூட்டாவிற்குள் நுழைந்தார். நாங்கள் கொலராடோவிற்குள் நுழைந்தபோது எங்கள் இளைய மகன் சேவியர் என் கையைப் பிடித்தார். நான் நியூ மெக்சிகோவிற்குச் சென்றபோது, சேவியர், “அம்மா, நீங்கள் என்னை கொலராடோவில் விட்டுச் சென்றீர்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!” என்று சொன்னான். எங்கள் சிரிப்பு நான்கு வெவ்வேறு மாநிலங்களில் கேட்டதால் நாங்கள் ஒன்றாகவும் பிரிந்தும் இருந்தோம். இப்போது எங்கள் வளர்ந்த மகன்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதால், அவர்கள் எங்கு சென்றாலும் அவருடைய பிள்ளைகள் அனைவரோடுங்கூட தேவன் இருப்பேன் என்று சொன்ன வாக்குத்தத்தத்தை நான் ஆழமாக நம்புகிறேன்.  
மோசேயின் மரணத்திற்குப் பிறகு, தேவன் யோசுவாவை தலைமைத்துவத்திற்கு அழைத்தார். மேலும் இஸ்ரவேலரின் எல்லையை விரிவுபடுத்தியபோது அவரது பிரசன்னத்தை உறுதிசெய்தார் (யோசுவா 1:1-4). தேவன், “நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (வச. 5) என்று சொன்னார். யோசுவா தம்முடைய ஜனங்களின் புதிய தலைவராக சந்தேகத்துடனும் பயத்துடனும் போராடுவான் என்பதை அறிந்த தேவன், இந்த வார்த்தைகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை உருவாக்கினார்: “நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்” (வச. 9). 
தேவன் நம்மை அல்லது நம் அன்புக்குரியவர்களை எங்கு அழைத்துச் சென்றாலும், கடினமான காலங்களில் கூட, அவருடைய மிகவும் ஆறுதலான அர்ப்பணிப்பு அவர் எப்போதும் நம்மோடு இருப்பதை உறுதிப்படுத்துகிறது.