Archives: ஜூலை 2024

அழகான ஒருவர்

130 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈஃபிள் கோபுரம் பாரிஸ் நகரத்தின் மீது கம்பீரமாக நிற்கிறது. இது கட்டிடக்கலையின் மேன்மையாகவும் அழகின் அடையாளமாகும் திகழ்கிறது. நகரம் அதன் மகத்துவத்தின் முக்கிய அங்கமாக கோபுரத்தை பெருமையுடன் ஊக்குவிக்கிறது.

இருப்பினும், அது கட்டப்படும்போது, பலர் அதைப் பற்றி கொஞ்சம் யோசித்தார்கள். உதாரணமாக, பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசண்ட், இது “தொழிற்சாலை புகைபோக்கி போன்ற அபத்தமான மெல்லிய வடிவம் கொண்டது" என்று விமர்சித்தார். அவனால் அதன் அழகைப் பார்க்க முடியவில்லை. 

இயேசுவை நேசிப்பவர்களும், தம் இரட்சகராக அவரிடம் இதயங்களை ஒப்படைத்தவர்களும், அவர் யார், அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம். ஆயினும், ஏசாயா தீர்க்கதரிசி இந்த வார்த்தைகளை எழுதினார்: “அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” (53:2). 

ஆனால் அவர் நமக்காகச் செய்தவற்றின் உன்னதமான மகத்துவம், மனிதர்கள் எப்போதும் அறிந்த மற்றும் அனுபவிக்கும் அழகின் உண்மையான, தூய்மையான வடிவமாகும். அவர் “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” (வச. 4). “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (வச. 5). 

சிலுவையில் நமக்காக பாடுபட்டு, நம் பாவங்களின் சொல்லொணாத் தண்டனையை சுமந்துகொண்ட அவரைப் போல் அழகானவர், அருமையானவர் எவரையும் நாம் ஒருபோதும் அறிய முடியாது.

அதுதான் இயேசு. அழகான ஒருவர். அவரைப் பார்த்து வாழ்வோம்.

 

அர்த்தமுள்ள ஹைபன்

என் அம்மாவின் வாழ்நாளின் சேவையை கொண்டாடும் கொண்டாட்டத்திற்கு நான் தயாராகும்போது, அவளுடைய “ஹைபன் வருடங்கள்,” அதாவது, அவளுடைய பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வருடங்களைக் குறித்த விவரிக்க சரியான வார்த்தைகளுக்காக நான் ஜெபித்தேன். எங்கள் உறவில் இருந்த நல்ல மற்றும் மிகவும் நல்ல நேரங்களை நான் பிரதிபலித்தேன். என் ஜீவியத்தை தேவன் மாற்றுவதை உணர்ந்த பின்பு என்னுடைய தாயார் இயேசுவை ஏற்றுக்கொண்ட நாளுக்காய் நான் தேவனை துதிக்கிறேன். நாங்கள் ஒன்றாக விசுவாசத்தில் வளர உதவியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் என் அம்மா அவர்களுக்கு எப்படி ஊக்கமளித்தார் மற்றும் அவர்களுக்காக ஜெபித்தார் என்பதைப் பகிர்ந்து கொண்டவர்களுக்காக நான் நன்றி தெரிவித்தேன். என் அம்மா ஆண்டவராகிய இயேசுவுக்காய் வாழ்ந்த ஒரு அர்த்தமுள்ள ஹைபனை அனுபவித்து மகிழ்ந்தார்.

இயேசுவை விசுவாசிக்கிறவர்களில் ஒருவர் கூட சரியானவர் இல்லை. இருப்பினும், பரிசுத்த ஆவியானவர், “தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்” (கொலோசெயர் 1:10) நமக்கு உதவ முடியும். அப்போஸ்தலர் பவுலின் கூற்றுப்படி, கொலோசே பட்டணத்தின் திருச்சபை விசுவாசத்திற்கும் அன்பிற்கும் பெயர்பெற்றது (வச. 3-6). பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு ஞானத்தையும் புத்தியையும் அளித்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ந்து, ஒவ்வொரு நற்கிரியையிலும் பெருக அவர்களுக்கு அதிகாரம் அளித்தார் (வச. 9-10). பவுல் அந்த விசுவாசிகளுக்காக ஜெபித்து, பாராட்டியபோது, “அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (வச. 14) என்று அவர் இயேசுவின் நாமத்தை அறிவித்தார்.

நாம் பரிசுத்த ஆவியிடம் சரணடையும் போது, நாமும் தேவனைக் குறித்த நமது அறிவில் வளரவும், அவரையும் மக்களையும் நேசிக்கவும், நற்செய்தியைப் பரப்பவும், இயேசுவுக்காக நன்றாக வாழ்ந்த வாழ்க்கை என்ற அர்த்தமுள்ள ஹைபனை அனுபவிக்கவும் முடியும்.

 

காணப்படாத ராஜா

“பில்கிரிம்” என்பது மோட்ச பிரயாணம் (வுhந Pடைபசiஅ’ள Pசழபசநளள) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இசை நாடகமாகும். இது ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையின் உருவகமாகும். கதையில், ஆவிக்குரிய உலகின் அனைத்து கண்ணுக்கு தெரியாத சக்திகளும் பார்வையாளர்களுக்கு தெரியும். தேவனைக் குறிக்கும் ராஜாவின் பாத்திரம் கிட்டத்தட்ட முழு நிகழ்ச்சியிலும் மேடையில் உள்ளது. அவர் வெள்ளை உடையணிந்து, எதிரியின் தாக்குதல்களைத் தடுக்கிறார், வலியில் இருப்பவர்களை மென்மையாகப் பிடித்து, மற்றவர்களை நல்ல செயல்களுக்குத் தூண்டுகிறார். அவரது பாத்திரம் கதையில் முக்கியமாக இடம்பெற்றிருந்தாலும், முக்கிய மாம்சீக கதாபாத்திரங்கள் ராஜாவை உடல் ரீதியாக பார்க்க முடியாது. அவர் செய்யும் செயல்களின் விளைவுகளை மட்டுமே அனுபவிக்க முடியும்.

மெய்யான ராஜாவான தேவனை நாம் மாம்ச கண்களினால் காணமுடியாவிட்டாலும்,  நம் வாழ்வில் சுறுசுறுப்பாக இருப்பதைப் போல நாம் வாழ்கிறோமா? தேவைப்படும் நேரத்தில், தானியேல் தீர்க்கதரிசி பரலோக தூதரிடமிருந்து ஒரு தரிசனத்தைப் பெற்றார் (தானியேல் 10:7). அவருடைய உண்மையுள்ள ஜெபங்களுக்கு நேரடியாகப் பதிலைப் பெற்றுக்கொண்டார் (வச. 12). ஆவிக்குரிய யுத்தமானது அவர் வருவதைத் தாமதப்படுத்தியதால், தேவதூதர்களின் காப்புப்பிரதியை அனுப்ப வேண்டியிருந்தது (வச. 13) என்று தூதன் விளக்குகிறான். தானியேலால் தேவனை பார்க்க முடியாவிட்டாலும், அவருடைய கவனிப்பு மற்றும் கவனத்தின் சான்றுகளால் சூழப்பட்டிருப்பதை நினைவுபடுத்தினார். “பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள்” (வச. 19) தூதன் அவனை ஊக்கப்படுத்துகிறான். “பில்கிரீம்” என்ற அந்த நாடகத்தின் முடிவில், முக்கிய கதாபாத்திரம் பல இன்னல்களுக்குப் பிறகு சொர்க்கத்தின் வாசலை அடையும் போது, “நான் ராஜாவைப் பார்க்கிறேன்!” என்று முதன்முறையாக மகிழ்ச்சியுடன் கூவுகிறான். பரலோகத்தில் நமது புதிய கண்களால் அவரைப் பார்க்கும் வரை, இன்று நம் வாழ்வில் அவருடைய செயலை எதிர்பார்க்கிறோம்.

 

மறுரூபமான ஆராதனை

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே அமர்ந்திருந்தபோது சுசி அழுதுகொண்டிருந்தாள். முடக்கமான பயத்தின் அலைகள் அவளைத் தழுவியது. அவளது இரண்டு மாத குழந்தையின் சிறிய நுரையீரல் திரவத்தால் நிரம்பியுள்ளது. மருத்துவர்கள் குழந்தையைக்  காப்பாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாகக் கூறினர். ஆனால் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. அந்த நேரத்தில், “தேவனை ஆராதிக்கும்படி நினைவூட்டும் பரிசுத்த ஆவியின் இனிமையான, மென்மையான அசைவை உணர்ந்தேன்” என்று அவள் கூறினாள். பாடுவதற்கு சக்தியில்லாமல், மருத்துவமனையில் இருந்த அடுத்த மூன்று நாட்களும் அவள் போனில் துதி பாடல்களை ஒளிக்கச் செய்தாள். அவள் துதித்தபோது, நம்பிக்கையையும் அமைதியையும் கண்டாள். இன்று, “ஆராதனை தேவனை மாற்றாது; ஆனால் அது நிச்சயமாக உங்களை மாற்றுகிறது” என்று அந்த அனுபவம் தனக்குக் கற்றுக் கொடுத்ததாக அவள் கூறுகிறாள்.

அவநம்பிக்கையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, தாவீது ஜெபத்திலும் துதியிலும் தேவனை அழைத்தார் (சங்கீதம் 30:8). ஒரு வர்ணனையாளர், சங்கீதக்காரன் துதியினால் வெளிப்படும் கிருபைக்காக விண்ணப்பிப்பதாக குறிப்பிடுகிறார். தேவன் தாவீதின் “புலம்பலை ஆனந்த களிப்பாய் மாறப்பண்ணினார்” என்பதினால் தாவீது தேவனிடத்தில் “என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்” (வச. 11-12) என்று அறிக்கையிடுகிறான். வேதனையான நேரங்களில் தேவனைத் துதிப்பது கடினமாக இருந்தாலும், அது மாற்றத்திற்கு வழிவகுக்கும். விரக்தியிலிருந்து நம்பிக்கைக்கும், பயத்திலிருந்து இளைப்பாறதலுக்கும் வழிவகுக்கும். மற்றவர்களை ஊக்குவிக்கவும் மாற்றவும் அவர் நம் முன்மாதிரியைப் பயன்படுத்தலாம் (வச. 4-5).

தேவனுடைய கிருபையினால் சுசியின் ஆண் குழந்தை ஆரோக்கியமாக மீட்கப்பட்டது. வாழ்க்கையில் எல்லா சவால்களும் நாம் நம்புவது போல் முடிவடையாவிட்டாலும், நம் வேதனையிலும் நாம் அவரை ஆராதிக்கும்போது, அவர் நம்மை மாற்றி, புதுப்பிக்கப்பட்ட மகிழ்ச்சியால் (வச. 11) நம்மை நிரப்புவார்.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

துருவிய வெண்ணெய்

ஜே. ஆர். ஆர். டோல்கியேன் இன் "தி  ஃபெல்லோஷிப் ஆஃப் தி ரிங்ஸ்" புத்தகத்தில், பில்போ பக்கின்ஸ் எனும் கதாபாத்திரம் ஆறு தசாப்தங்களாக, இருளான தீயசத்தியைக் கொண்ட ஒரு மந்திர மோதிரத்தைச் சுமந்து செல்வதன் விளைவுகளைக் காட்டுகிறது. அதன் மெதுவாக அழிக்கும் தன்மையால் சோர்ந்து, அது மந்திரவாதி கந்தால்ஃபிடம், "உனக்கு புரியும்படி சொல்லவேண்டுமானால், நான் ரொட்டியின் மீது அதிகமாகத் தடவப்பட்ட வெண்ணெய்யைப் போல, தேவையில்லாமல் இழுக்கப்பட்டும், வலுவிழந்தும் ஏன் உணர்கிறேன்?" என்று கேட்கிறது. எங்கேயாவது  "அமைதியையும், நிம்மதியையும், அறிமுகமானவர்களின் இரைச்சல் இல்லாத" இளைப்பாறுதல் தேடி தனது வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கிறான் பில்போ.

டோல்கினின் கதையின் இந்த அம்சம் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசி ஒருவரின் அனுபவத்தை எனக்கு நினைவூட்டுகிறது. யேசபேலிடமிருந்து தப்பி, கள்ள தீர்க்கதரிசிகளுடன் மோதிய பின்னர், எலியாவுக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. சோர்வுற்ற அவர், "போதும் கர்த்தாவே" (1 இராஜாக்கள் 19:4) என்று கூறி, தன்னை சாக அனுமதிக்குமாறு தேவனிடம் கேட்டார். அவர் தூங்கிய பிறகு, தேவதூதன் அவரை எழுப்பினார், அதனால் அவர் சாப்பிடவும் குடிக்கவும் செய்தார். அவர் மீண்டும் தூங்கினார், பின்னர் தேவதூதன் வழங்கிய உணவை மேலும் சாப்பிட்டார். புத்துயிர் பெற்ற அவர், தேவபர்வதத்திற்கு செல்ல நாற்பது நாட்களின் நடைப்பயணத்திற்கு போதுமான ஆற்றலைப் பெற்றார்.

நாம் உருத்தெரியாமல் உடைக்கப்பட்டிருக்கையில், ​​உண்மையான புத்துணர்ச்சிக்காக நாமும் தேவனை நோக்கலாம். அவருடைய நம்பிக்கை, சமாதானம் மற்றும் இளைப்பாறுதலால் நம்மை நிரப்பும்படி அவரிடம் கேட்கும் அதே வேளையில், நாம் நம் உடலைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கலாம். தேவதூதன் எலியாவை உபசரித்தது போல , தேவன் தம்முடைய புத்துணர்ச்சியூட்டும் பிரசன்னத்தை நம்மீதும் பொழிவார் என்று நாம் நம்பலாம் (பார்க்க மத்தேயு 11:28).

தேவனின் முன்னேற்பாடு

ஜூன் 2023 இல் கொலம்பியாவின் அமேசான் காட்டில் ஒன்று முதல் பதின்மூன்று வயதுள்ள நான்கு உடன்பிறந்தவர்கள் உயிருடன் மீட்கப்பட்டபோது உலகமே வியந்தது. விமானம் விபத்துக்குள்ளாகி, தங்கள் தாயை இழந்த பிறகு, அவர்கள் காட்டில் நாற்பது நாட்கள் உயிர் பிழைத்துள்ளனர். காட்டின் கடுமையான நிலப்பரப்பை நன்கு அறிந்த குழந்தைகள், காட்டு விலங்குகளிடமிருந்து மரத்தடிகளில் ஒளிந்துகொண்டு, ஓடைகள் மற்றும் மழைநீரைப் புட்டிகளில் சேகரித்து, விமான சிதைவிலிருந்து மரவள்ளிக்கிழங்கு மாவு போன்ற உணவைச் சாப்பிட்டனர். எந்த காட்டுப் பழங்கள் மற்றும் விதைகளை உண்பது பாதுகாப்பானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

தேவன் அவர்களை ஆதரித்தார்.

அவர்களின் நம்பமுடியாத கதை, நாற்பது ஆண்டுகளாக வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களை தேவன் எவ்வாறு அற்புதமாகத் தாங்கினார் என்பதை எனக்கு நினைவூட்டுகிறது, இது யாத்திராகமம் மற்றும் எண்ணாகவும் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டு வேதாகமம் முழுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தங்கள் தேவன் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய ஜீவனைக் காப்பாற்றினார்.

தேவன் கசப்பான நீரூற்று நீரைக் குடிநீராக மாற்றினார், இரண்டு முறை பாறையிலிருந்து தண்ணீரை வழங்கினார், மேலும் பகலில் மேக ஸ்தம்பத்திலும் இரவில் நெருப்பு ஸ்தம்பத்திலும் தம் ஜனங்களை வழிநடத்தினார். அவர்களுக்கு மன்னாவையும் வழங்கினார். "அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம். கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத் தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்” (யாத்திராகமம் 16:15-16).

அதே தேவன் நமக்கு "வேண்டிய ஆகாரத்தை இன்று" (மத்தேயு 6:11) வழங்குகிறார் . "கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே " (பிலிப்பியர் 4:19) நம்முடைய தேவைகளை அவர் சந்திப்பார் என்று நாம் நம்பலாம். எப்பேர்ப்பட்ட வல்லமையுள்ள தேவனை நாம் சேவிக்கிறோம்!

மகிழ்ச்சியின் வேகம்

"மகிழ்ச்சியின் வேகத்தில் செல்லுங்கள்" ஒரு நாள் காலையில் வரவிருக்கும் ஆண்டை குறித்து நான் ஜெபத்துடன் சிந்தித்தபோது, இந்த வாக்கியம் என் மனதில் பட்டது, அது பொருத்தமானதாகத் தோன்றியது. எனக்கு அதிக வேலை செய்யும் நாட்டம் இருந்தது, அது என் மகிழ்ச்சியை அடிக்கடி பறித்தது. எனவே, இந்த வழிகாட்டுதலைப் பின்பற்றி, நண்பர்கள் மற்றும் சநதோஷகாரமான செயல்பாடுகளுக்கு இடமளிக்கும் வகையில், வரும் ஆண்டில் மகிழ்ச்சிகரமான வேகத்தில் பணியாற்ற நிச்சயித்தேன்.

இந்த திட்டம் பலன் கொடுத்தது; மார்ச் வரை! பின்னர் நான் உருவாக்கும் ஒரு பாடத் திட்டத்தின் சோதனையை மேற்பார்வையிட ஒரு பல்கலைக்கழகத்துடன் கூட்டுச் சேர்ந்தேன். மாணவர் சேர்க்கை மற்றும் பாடம் தயாரித்தல் என்று  நான் விரைவில் நீண்ட நேரம் உழைத்தேன். இப்போது நான் எப்படி மகிழ்ச்சியின் வேகத்தில் செல்வேன்?

இயேசு தம்மை விசுவாசிக்கிறவர்களுக்குச் சந்தோஷத்தை வாக்களிக்கிறார், அது அவருடைய அன்பில் நிலைத்திருப்பதன் மூலமும் (யோவான் 15:9) ஜெபத்துடன் நம்முடைய தேவைகளை அவரிடம் கொண்டு செல்வதன் மூலமும் வருகிறது என்று கூறுகிறார் (16:24). "என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்" (15:11) என்கிறார். இந்த மகிழ்ச்சி அவருடைய ஆவியானவர் மூலம் ஒரு கனியாக வெளிப்படுகிறது, அவருடன்தான் நாம் நடக்க வேண்டும் (கலாத்தியர் 5:22-25). ஒவ்வொரு இரவும் இளைப்பாறுதலான, நம்பிக்கையான ஜெபத்தில் நேரத்தைச் செலவழித்தபோதுதான் என்னுடைய வேலை மிக்க காலத்தில் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

மகிழ்ச்சி மிகவும் அவசியமானதால், நமது முக்கியத்துவங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது ஞானமுள்ள காரியம். ஆனால் வாழ்க்கை முழுவதுமாக நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், மகிழ்ச்சியின் மற்றொரு ஆதாரமான ஆவியானவர் நமக்குக் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை, இப்போது மகிழ்ச்சியின் வேகத்தில் செல்வது என்பது ஜெபத்தின் வேகத்தில் செல்வதைக் குறிக்கிறது; மகிழ்ச்சியைத்  தருபவரிடமிருந்து பெற்றுக்கொள்ள நேரம் ஒதுக்குவதாகும்