Archives: ஜூலை 2024

அழகான ஒருவர்

130 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈஃபிள் கோபுரம் பாரிஸ் நகரத்தின் மீது கம்பீரமாக நிற்கிறது. இது கட்டிடக்கலையின் மேன்மையாகவும் அழகின் அடையாளமாகும் திகழ்கிறது. நகரம் அதன் மகத்துவத்தின் முக்கிய அங்கமாக கோபுரத்தை பெருமையுடன் ஊக்குவிக்கிறது.

இருப்பினும், அது கட்டப்படும்போது, பலர் அதைப் பற்றி கொஞ்சம் யோசித்தார்கள். உதாரணமாக, பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசண்ட், இது “தொழிற்சாலை புகைபோக்கி போன்ற அபத்தமான மெல்லிய வடிவம் கொண்டது" என்று விமர்சித்தார். அவனால் அதன் அழகைப் பார்க்க முடியவில்லை. 

இயேசுவை நேசிப்பவர்களும், தம் இரட்சகராக அவரிடம் இதயங்களை ஒப்படைத்தவர்களும், அவர் யார், அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம். ஆயினும், ஏசாயா தீர்க்கதரிசி இந்த வார்த்தைகளை எழுதினார்: “அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” (53:2). 

ஆனால் அவர் நமக்காகச் செய்தவற்றின் உன்னதமான மகத்துவம், மனிதர்கள் எப்போதும் அறிந்த மற்றும் அனுபவிக்கும் அழகின் உண்மையான, தூய்மையான வடிவமாகும். அவர் “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” (வச. 4). “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (வச. 5). 

சிலுவையில் நமக்காக பாடுபட்டு, நம் பாவங்களின் சொல்லொணாத் தண்டனையை சுமந்துகொண்ட அவரைப் போல் அழகானவர், அருமையானவர் எவரையும் நாம் ஒருபோதும் அறிய முடியாது.

அதுதான் இயேசு. அழகான ஒருவர். அவரைப் பார்த்து வாழ்வோம்.

 

அர்த்தமுள்ள ஹைபன்

என் அம்மாவின் வாழ்நாளின் சேவையை கொண்டாடும் கொண்டாட்டத்திற்கு நான் தயாராகும்போது, அவளுடைய “ஹைபன் வருடங்கள்,” அதாவது, அவளுடைய பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வருடங்களைக் குறித்த விவரிக்க சரியான வார்த்தைகளுக்காக நான் ஜெபித்தேன். எங்கள் உறவில் இருந்த நல்ல மற்றும் மிகவும் நல்ல நேரங்களை நான் பிரதிபலித்தேன். என் ஜீவியத்தை தேவன் மாற்றுவதை உணர்ந்த பின்பு என்னுடைய தாயார் இயேசுவை ஏற்றுக்கொண்ட நாளுக்காய் நான் தேவனை துதிக்கிறேன். நாங்கள் ஒன்றாக விசுவாசத்தில் வளர உதவியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் என் அம்மா அவர்களுக்கு எப்படி ஊக்கமளித்தார் மற்றும் அவர்களுக்காக ஜெபித்தார் என்பதைப் பகிர்ந்து கொண்டவர்களுக்காக நான் நன்றி தெரிவித்தேன். என் அம்மா ஆண்டவராகிய இயேசுவுக்காய் வாழ்ந்த ஒரு அர்த்தமுள்ள ஹைபனை அனுபவித்து மகிழ்ந்தார்.

இயேசுவை விசுவாசிக்கிறவர்களில் ஒருவர் கூட சரியானவர் இல்லை. இருப்பினும், பரிசுத்த ஆவியானவர், “தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்” (கொலோசெயர் 1:10) நமக்கு உதவ முடியும். அப்போஸ்தலர் பவுலின் கூற்றுப்படி, கொலோசே பட்டணத்தின் திருச்சபை விசுவாசத்திற்கும் அன்பிற்கும் பெயர்பெற்றது (வச. 3-6). பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு ஞானத்தையும் புத்தியையும் அளித்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ந்து, ஒவ்வொரு நற்கிரியையிலும் பெருக அவர்களுக்கு அதிகாரம் அளித்தார் (வச. 9-10). பவுல் அந்த விசுவாசிகளுக்காக ஜெபித்து, பாராட்டியபோது, “அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (வச. 14) என்று அவர் இயேசுவின் நாமத்தை அறிவித்தார்.

நாம் பரிசுத்த ஆவியிடம் சரணடையும் போது, நாமும் தேவனைக் குறித்த நமது அறிவில் வளரவும், அவரையும் மக்களையும் நேசிக்கவும், நற்செய்தியைப் பரப்பவும், இயேசுவுக்காக நன்றாக வாழ்ந்த வாழ்க்கை என்ற அர்த்தமுள்ள ஹைபனை அனுபவிக்கவும் முடியும்.

 

காணப்படாத ராஜா

“பில்கிரிம்” என்பது மோட்ச பிரயாணம் (வுhந Pடைபசiஅ’ள Pசழபசநளள) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இசை நாடகமாகும். இது ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையின் உருவகமாகும். கதையில், ஆவிக்குரிய உலகின் அனைத்து கண்ணுக்கு தெரியாத சக்திகளும் பார்வையாளர்களுக்கு தெரியும். தேவனைக் குறிக்கும் ராஜாவின் பாத்திரம் கிட்டத்தட்ட முழு நிகழ்ச்சியிலும் மேடையில் உள்ளது. அவர் வெள்ளை உடையணிந்து, எதிரியின் தாக்குதல்களைத் தடுக்கிறார், வலியில் இருப்பவர்களை மென்மையாகப் பிடித்து, மற்றவர்களை நல்ல செயல்களுக்குத் தூண்டுகிறார். அவரது பாத்திரம் கதையில் முக்கியமாக இடம்பெற்றிருந்தாலும், முக்கிய மாம்சீக கதாபாத்திரங்கள் ராஜாவை உடல் ரீதியாக பார்க்க முடியாது. அவர் செய்யும் செயல்களின் விளைவுகளை மட்டுமே அனுபவிக்க முடியும்.

மெய்யான ராஜாவான தேவனை நாம் மாம்ச கண்களினால் காணமுடியாவிட்டாலும்,  நம் வாழ்வில் சுறுசுறுப்பாக இருப்பதைப் போல நாம் வாழ்கிறோமா? தேவைப்படும் நேரத்தில், தானியேல் தீர்க்கதரிசி பரலோக தூதரிடமிருந்து ஒரு தரிசனத்தைப் பெற்றார் (தானியேல் 10:7). அவருடைய உண்மையுள்ள ஜெபங்களுக்கு நேரடியாகப் பதிலைப் பெற்றுக்கொண்டார் (வச. 12). ஆவிக்குரிய யுத்தமானது அவர் வருவதைத் தாமதப்படுத்தியதால், தேவதூதர்களின் காப்புப்பிரதியை அனுப்ப வேண்டியிருந்தது (வச. 13) என்று தூதன் விளக்குகிறான். தானியேலால் தேவனை பார்க்க முடியாவிட்டாலும், அவருடைய கவனிப்பு மற்றும் கவனத்தின் சான்றுகளால் சூழப்பட்டிருப்பதை நினைவுபடுத்தினார். “பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள்” (வச. 19) தூதன் அவனை ஊக்கப்படுத்துகிறான். “பில்கிரீம்” என்ற அந்த நாடகத்தின் முடிவில், முக்கிய கதாபாத்திரம் பல இன்னல்களுக்குப் பிறகு சொர்க்கத்தின் வாசலை அடையும் போது, “நான் ராஜாவைப் பார்க்கிறேன்!” என்று முதன்முறையாக மகிழ்ச்சியுடன் கூவுகிறான். பரலோகத்தில் நமது புதிய கண்களால் அவரைப் பார்க்கும் வரை, இன்று நம் வாழ்வில் அவருடைய செயலை எதிர்பார்க்கிறோம்.

 

மறுரூபமான ஆராதனை

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே அமர்ந்திருந்தபோது சுசி அழுதுகொண்டிருந்தாள். முடக்கமான பயத்தின் அலைகள் அவளைத் தழுவியது. அவளது இரண்டு மாத குழந்தையின் சிறிய நுரையீரல் திரவத்தால் நிரம்பியுள்ளது. மருத்துவர்கள் குழந்தையைக்  காப்பாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாகக் கூறினர். ஆனால் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. அந்த நேரத்தில், “தேவனை ஆராதிக்கும்படி நினைவூட்டும் பரிசுத்த ஆவியின் இனிமையான, மென்மையான அசைவை உணர்ந்தேன்” என்று அவள் கூறினாள். பாடுவதற்கு சக்தியில்லாமல், மருத்துவமனையில் இருந்த அடுத்த மூன்று நாட்களும் அவள் போனில் துதி பாடல்களை ஒளிக்கச் செய்தாள். அவள் துதித்தபோது, நம்பிக்கையையும் அமைதியையும் கண்டாள். இன்று, “ஆராதனை தேவனை மாற்றாது; ஆனால் அது நிச்சயமாக உங்களை மாற்றுகிறது” என்று அந்த அனுபவம் தனக்குக் கற்றுக் கொடுத்ததாக அவள் கூறுகிறாள்.

அவநம்பிக்கையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, தாவீது ஜெபத்திலும் துதியிலும் தேவனை அழைத்தார் (சங்கீதம் 30:8). ஒரு வர்ணனையாளர், சங்கீதக்காரன் துதியினால் வெளிப்படும் கிருபைக்காக விண்ணப்பிப்பதாக குறிப்பிடுகிறார். தேவன் தாவீதின் “புலம்பலை ஆனந்த களிப்பாய் மாறப்பண்ணினார்” என்பதினால் தாவீது தேவனிடத்தில் “என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்” (வச. 11-12) என்று அறிக்கையிடுகிறான். வேதனையான நேரங்களில் தேவனைத் துதிப்பது கடினமாக இருந்தாலும், அது மாற்றத்திற்கு வழிவகுக்கும். விரக்தியிலிருந்து நம்பிக்கைக்கும், பயத்திலிருந்து இளைப்பாறதலுக்கும் வழிவகுக்கும். மற்றவர்களை ஊக்குவிக்கவும் மாற்றவும் அவர் நம் முன்மாதிரியைப் பயன்படுத்தலாம் (வச. 4-5).

தேவனுடைய கிருபையினால் சுசியின் ஆண் குழந்தை ஆரோக்கியமாக மீட்கப்பட்டது. வாழ்க்கையில் எல்லா சவால்களும் நாம் நம்புவது போல் முடிவடையாவிட்டாலும், நம் வேதனையிலும் நாம் அவரை ஆராதிக்கும்போது, அவர் நம்மை மாற்றி, புதுப்பிக்கப்பட்ட மகிழ்ச்சியால் (வச. 11) நம்மை நிரப்புவார்.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனிடத்தில் அழைப்பு பெறுதல்

“வாழ்க்கைக்காய் தத்தெடுக்கப்பட்டது” என்னும் புத்தகத்தில், டாக்டர். ரஸ்ஸல் மூர் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதற்காக அனாதை இல்லத்திற்கு தனது குடும்பத்தினர் மேற்கொண்ட பயணத்தை விவரிக்கிறார். அவர்கள் அந்த இல்லத்திற்குள் நுழையும் போது, அங்கு நிலவிய அமைதியான சூழல் அவர்களை திடுக்கிட வைத்தது. தொட்டிலில் இருந்த குழந்தைகள் அழவில்லை. அவைகளுக்கு எதுவும் தேவையில்லை என்பதினால் அல்ல; மாறாக, அழுதாலும் யாரும் அவர்கள் மீது அக்கறை காட்டமாட்டார்கள் என்பதை அவைகள் நன்று அனுபவித்திருந்தன என்பதினால் அமைதி காத்தனர்.

அந்த வார்த்தைகளை வாசிக்கையில் என் மனம் வலித்தது. எங்கள் குழந்தைகள் சிறியவர்களாக இருந்த எண்ணற்ற இரவுகள் எனக்கு நினைவிருக்கிறது. “அப்பா, எனக்கு உடம்பு சரியில்லை!” அல்லது “அம்மா, எனக்கு பயமாயிருக்கிறது!” என்று சொன்னமாத்திரத்தில் எங்களில் ஒருவர் செயலில் இறங்கி, அவர்களை ஆறுதல்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய அவர்களின் படுக்கையறைக்குச் சென்றது நினைவிருக்கிறது. எங்கள் குழந்தைகள் மீது எங்களுக்குள்ள அன்பு, அவர்களுடைய தேவையில் அவர்கள் எங்களை அழைப்பதற்கான காரணத்தை கொடுத்தது.

பெரும்பாலான சங்கீதங்கள் தேவனிடத்தில் ஏறெடுக்கப்பட்ட அழுகைகளையும் புலம்பல்களையும் உள்ளடக்கியுள்ளது. அவர்களுடனான தனிப்பட்ட உறவின் அடிப்படையில் இஸ்ரவேல் தங்கள் புலம்பல்களை தேவனிடத்தில் கொண்டுவந்தது. தேவன் தன்னுடைய “சேஷ்டபுத்திரன்” (யாத்திராகமம் 4:22) என்னும் அங்கீகாரத்தைக் கொடுத்தார். அவர்களும் தங்களுடைய தேவைகளை தகப்பனிடத்தில் கொண்டுவந்தனர். இத்தகைய நேர்மையான நம்பிக்கை சங்கீதம் 25-ல் காணப்படுகிறது: “என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்... என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்.” பராமரிப்பாளரின் அன்பில் நம்பிக்கை கொண்ட குழந்தைகள் மட்டுமே அழுகிறார்கள். இயேசுவின் விசுவாசிகளாக, தேவனின் பிள்ளைகளாக அவரை நோக்கிக் கூப்பிடுவதற்கான காரணத்தை அவர் நமக்குத் தந்திருக்கிறார். அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறபடியால் நம்முடைய ஜெபங்களைக் கேட்கிறார், நம்மை பாதுகாக்கிறார். 

- ஜாண் பிளேஸ்

தேவனின் பாதுகாப்பான அன்பு

ஒரு கோடை இரவு, எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த பறவைகள் திடீரென்று குழப்பமான ஓசை எழுப்பின. பாட்டுப்பறவைகள் மரங்களில் இருந்து அலறல் ஓசைகளை எழுப்பியது. ஏன் என்பதை தாமதமாகதான் உணர்ந்தோம். சூரியன் மறையும் போது, ஒரு பெரிய பருந்து ஒரு மரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்து வந்தது. மரத்திலிருந்து பறவைகள் ஆவேசத்துடன் சிதறி, அபாயத்திலிருந்து பறந்து செல்லும் போது எச்சரிக்கை ஒலி எழுப்பியது.

வேதாகமம் முழுவதும் நம் வாழ்க்கைக்கு தேவையான எச்சரிக்கைகளை விடுக்கிறது. உதாரணமாக, தவறான போதனைகளுக்கு விரோதமான எச்சரிக்கைகளை எடுத்துக்கொள்ளலாம். நாம் கேட்பதை நாம் சந்தேகிக்கக்கூடும். எவ்வாறாயினும், நம் பரலோகத் தகப்பன் நம்மீது அவருக்குள்ள அன்பின் நிமித்தம், அத்தகைய ஆவிக்குரிய ஆபத்துகளை நமக்குத் தெளிவாக்குவதற்கு வேதத்தின் தெளிவைத் தருகிறார்.

இயேசு, “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்” (மத்தேயு 7:15) என்று எச்சரிக்கிறார். மேலும், “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்... அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” (வச. 16-17; 20) என்றும் எச்சரிக்கிறார்.

“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” (நீதிமொழிகள் 22:3) என்று நமக்கு நினைவுபடுத்துகிறது. இதுபோன்ற வார்த்தைகளில் தேவனுடைய பாதுகாக்கும் அன்பு மறைந்திருந்து நமக்கு அவ்வப்போது வார்த்தையின் மூலம் வெளிப்படுகிறது.

தங்களுக்கு மாம்ச ரீதியாக ஏற்படப்போகிற ஆபத்தைக் குறித்து பறவைகள் ஒன்றையொன்று எச்சரித்ததுபோல, ஆவிக்குரிய ஆபத்துகளிலிருந்து நம்மை எச்சரிக்கும் வேதத்தின் சத்தியங்களுக்கு நாம் செவிகொடுப்போமாக. 

- பாட்ரிசியா ரேபோன்

பாதங்களையும் பாத்திரங்களையும் கழுவுதல்

சார்லி மற்றும் ஜானின் ஐம்பதாவது திருமண ஆண்டு விழாவில், அவர்கள் தங்கள் மகன் ஜானுடன் ஒரு ஓட்டலில் காலை உணவை சாப்பிட்டனர். அன்று உணவகத்தில் ஒரு மேலாளர், சமையல்காரர் மற்றும் ஒரு இளம் தொகுப்பாளினி, பணிப்பெண் மற்றும் பணம் சேகரிக்கும் ஒருவர் என்று வெகு குறைவான பணியாளர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் காலை உணவை முடித்ததும், சார்லி தனது மனைவி மற்றும் மகனின் பக்கம் திரும்பி, “அடுத்த சில மணிநேரங்களில் உங்களுக்கு வேறு ஏதாவது முக்கியமான வேலை இருக்கிறதா?” என்று கேட்க, அவர்கள் இல்லை என்று பதிலளித்தனர்.

எனவே மேலாளரின் அனுமதியுடன், சார்லியும் ஜானும் உணவகத்தின் பின்புறத்தில் பாத்திரங்களைக் கழுவத் தொடங்கினர். ஜான், உணவுகள் சிதறிக்கிடந்த மேசைகளைத் துடைக்கத் தொடங்கினார். ஜானின் கூற்றுப்படி, அன்று நடந்தது உண்மையில் ஆச்சரியப்படும் காரியம் இல்லை. அவனுடைய பெற்றோர், இயேசு “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய” வந்தார் (மாற்கு 10:45) என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுத்தே வளர்த்திருக்கிறார்கள்.

யோவான் 13ல், கிறிஸ்து தம் சீஷர்களுடன் கடைசியாகப் பகிர்ந்துகொண்ட உணவைப் பற்றி வாசிக்கிறோம். அன்றிரவு, அவர்களின் அழுக்கு கால்களைக் கழுவுவதன் மூலம் தாழ்மையின் ஊழியத்தைக் குறித்து இயேசு அவர்களுக்குக் கற்பித்தார் (வச. 14-15). பன்னிரண்டு பேர்களின் கால்களைக் கழுவும் கீழ்த்தரமான வேலையைச் செய்ய அவர் தயாராக இருந்தால், அவர்களும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியுடன் ஊழியம் செய்திருக்கக்கூடும்.

நாம் செய்ய வேண்டிய ஊழியங்களின் தன்மை வித்தியாசப்படலாம், ஆனால் அது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பதை மறுக்கமுடியாது. ஒருவர் புகழைப்பெறுவதற்காய் இந்த சேவைப் பணியில் ஈடுபடுவதில்லை, மாறாக, மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலம் நம்முடைய தாழ்மையான, தியாக உருவான தேவனுக்கு மகிமையைச் செலுத்துகின்றனர். 

- சிண்டி ஹெஸ் காஸ்பர்