Archives: ஜூலை 2024

அழகான ஒருவர்

130 ஆண்டுகளுக்கும் மேலாக, ஈஃபிள் கோபுரம் பாரிஸ் நகரத்தின் மீது கம்பீரமாக நிற்கிறது. இது கட்டிடக்கலையின் மேன்மையாகவும் அழகின் அடையாளமாகும் திகழ்கிறது. நகரம் அதன் மகத்துவத்தின் முக்கிய அங்கமாக கோபுரத்தை பெருமையுடன் ஊக்குவிக்கிறது.

இருப்பினும், அது கட்டப்படும்போது, பலர் அதைப் பற்றி கொஞ்சம் யோசித்தார்கள். உதாரணமாக, பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசண்ட், இது “தொழிற்சாலை புகைபோக்கி போன்ற அபத்தமான மெல்லிய வடிவம் கொண்டது" என்று விமர்சித்தார். அவனால் அதன் அழகைப் பார்க்க முடியவில்லை. 

இயேசுவை நேசிப்பவர்களும், தம் இரட்சகராக அவரிடம் இதயங்களை ஒப்படைத்தவர்களும், அவர் யார், அவர் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை அறிந்திருக்கிறோம். ஆயினும், ஏசாயா தீர்க்கதரிசி இந்த வார்த்தைகளை எழுதினார்: “அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” (53:2). 

ஆனால் அவர் நமக்காகச் செய்தவற்றின் உன்னதமான மகத்துவம், மனிதர்கள் எப்போதும் அறிந்த மற்றும் அனுபவிக்கும் அழகின் உண்மையான, தூய்மையான வடிவமாகும். அவர் “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்” (வச. 4). “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” (வச. 5). 

சிலுவையில் நமக்காக பாடுபட்டு, நம் பாவங்களின் சொல்லொணாத் தண்டனையை சுமந்துகொண்ட அவரைப் போல் அழகானவர், அருமையானவர் எவரையும் நாம் ஒருபோதும் அறிய முடியாது.

அதுதான் இயேசு. அழகான ஒருவர். அவரைப் பார்த்து வாழ்வோம்.

 

அர்த்தமுள்ள ஹைபன்

என் அம்மாவின் வாழ்நாளின் சேவையை கொண்டாடும் கொண்டாட்டத்திற்கு நான் தயாராகும்போது, அவளுடைய “ஹைபன் வருடங்கள்,” அதாவது, அவளுடைய பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வருடங்களைக் குறித்த விவரிக்க சரியான வார்த்தைகளுக்காக நான் ஜெபித்தேன். எங்கள் உறவில் இருந்த நல்ல மற்றும் மிகவும் நல்ல நேரங்களை நான் பிரதிபலித்தேன். என் ஜீவியத்தை தேவன் மாற்றுவதை உணர்ந்த பின்பு என்னுடைய தாயார் இயேசுவை ஏற்றுக்கொண்ட நாளுக்காய் நான் தேவனை துதிக்கிறேன். நாங்கள் ஒன்றாக விசுவாசத்தில் வளர உதவியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன். மேலும் என் அம்மா அவர்களுக்கு எப்படி ஊக்கமளித்தார் மற்றும் அவர்களுக்காக ஜெபித்தார் என்பதைப் பகிர்ந்து கொண்டவர்களுக்காக நான் நன்றி தெரிவித்தேன். என் அம்மா ஆண்டவராகிய இயேசுவுக்காய் வாழ்ந்த ஒரு அர்த்தமுள்ள ஹைபனை அனுபவித்து மகிழ்ந்தார்.

இயேசுவை விசுவாசிக்கிறவர்களில் ஒருவர் கூட சரியானவர் இல்லை. இருப்பினும், பரிசுத்த ஆவியானவர், “தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்” (கொலோசெயர் 1:10) நமக்கு உதவ முடியும். அப்போஸ்தலர் பவுலின் கூற்றுப்படி, கொலோசே பட்டணத்தின் திருச்சபை விசுவாசத்திற்கும் அன்பிற்கும் பெயர்பெற்றது (வச. 3-6). பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு ஞானத்தையும் புத்தியையும் அளித்து, தேவனை அறிகிற அறிவில் வளர்ந்து, ஒவ்வொரு நற்கிரியையிலும் பெருக அவர்களுக்கு அதிகாரம் அளித்தார் (வச. 9-10). பவுல் அந்த விசுவாசிகளுக்காக ஜெபித்து, பாராட்டியபோது, “அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது” (வச. 14) என்று அவர் இயேசுவின் நாமத்தை அறிவித்தார்.

நாம் பரிசுத்த ஆவியிடம் சரணடையும் போது, நாமும் தேவனைக் குறித்த நமது அறிவில் வளரவும், அவரையும் மக்களையும் நேசிக்கவும், நற்செய்தியைப் பரப்பவும், இயேசுவுக்காக நன்றாக வாழ்ந்த வாழ்க்கை என்ற அர்த்தமுள்ள ஹைபனை அனுபவிக்கவும் முடியும்.

 

காணப்படாத ராஜா

“பில்கிரிம்” என்பது மோட்ச பிரயாணம் (வுhந Pடைபசiஅ’ள Pசழபசநளள) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இசை நாடகமாகும். இது ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையின் உருவகமாகும். கதையில், ஆவிக்குரிய உலகின் அனைத்து கண்ணுக்கு தெரியாத சக்திகளும் பார்வையாளர்களுக்கு தெரியும். தேவனைக் குறிக்கும் ராஜாவின் பாத்திரம் கிட்டத்தட்ட முழு நிகழ்ச்சியிலும் மேடையில் உள்ளது. அவர் வெள்ளை உடையணிந்து, எதிரியின் தாக்குதல்களைத் தடுக்கிறார், வலியில் இருப்பவர்களை மென்மையாகப் பிடித்து, மற்றவர்களை நல்ல செயல்களுக்குத் தூண்டுகிறார். அவரது பாத்திரம் கதையில் முக்கியமாக இடம்பெற்றிருந்தாலும், முக்கிய மாம்சீக கதாபாத்திரங்கள் ராஜாவை உடல் ரீதியாக பார்க்க முடியாது. அவர் செய்யும் செயல்களின் விளைவுகளை மட்டுமே அனுபவிக்க முடியும்.

மெய்யான ராஜாவான தேவனை நாம் மாம்ச கண்களினால் காணமுடியாவிட்டாலும்,  நம் வாழ்வில் சுறுசுறுப்பாக இருப்பதைப் போல நாம் வாழ்கிறோமா? தேவைப்படும் நேரத்தில், தானியேல் தீர்க்கதரிசி பரலோக தூதரிடமிருந்து ஒரு தரிசனத்தைப் பெற்றார் (தானியேல் 10:7). அவருடைய உண்மையுள்ள ஜெபங்களுக்கு நேரடியாகப் பதிலைப் பெற்றுக்கொண்டார் (வச. 12). ஆவிக்குரிய யுத்தமானது அவர் வருவதைத் தாமதப்படுத்தியதால், தேவதூதர்களின் காப்புப்பிரதியை அனுப்ப வேண்டியிருந்தது (வச. 13) என்று தூதன் விளக்குகிறான். தானியேலால் தேவனை பார்க்க முடியாவிட்டாலும், அவருடைய கவனிப்பு மற்றும் கவனத்தின் சான்றுகளால் சூழப்பட்டிருப்பதை நினைவுபடுத்தினார். “பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள்” (வச. 19) தூதன் அவனை ஊக்கப்படுத்துகிறான். “பில்கிரீம்” என்ற அந்த நாடகத்தின் முடிவில், முக்கிய கதாபாத்திரம் பல இன்னல்களுக்குப் பிறகு சொர்க்கத்தின் வாசலை அடையும் போது, “நான் ராஜாவைப் பார்க்கிறேன்!” என்று முதன்முறையாக மகிழ்ச்சியுடன் கூவுகிறான். பரலோகத்தில் நமது புதிய கண்களால் அவரைப் பார்க்கும் வரை, இன்று நம் வாழ்வில் அவருடைய செயலை எதிர்பார்க்கிறோம்.

 

மறுரூபமான ஆராதனை

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே அமர்ந்திருந்தபோது சுசி அழுதுகொண்டிருந்தாள். முடக்கமான பயத்தின் அலைகள் அவளைத் தழுவியது. அவளது இரண்டு மாத குழந்தையின் சிறிய நுரையீரல் திரவத்தால் நிரம்பியுள்ளது. மருத்துவர்கள் குழந்தையைக்  காப்பாற்ற தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வதாகக் கூறினர். ஆனால் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. அந்த நேரத்தில், “தேவனை ஆராதிக்கும்படி நினைவூட்டும் பரிசுத்த ஆவியின் இனிமையான, மென்மையான அசைவை உணர்ந்தேன்” என்று அவள் கூறினாள். பாடுவதற்கு சக்தியில்லாமல், மருத்துவமனையில் இருந்த அடுத்த மூன்று நாட்களும் அவள் போனில் துதி பாடல்களை ஒளிக்கச் செய்தாள். அவள் துதித்தபோது, நம்பிக்கையையும் அமைதியையும் கண்டாள். இன்று, “ஆராதனை தேவனை மாற்றாது; ஆனால் அது நிச்சயமாக உங்களை மாற்றுகிறது” என்று அந்த அனுபவம் தனக்குக் கற்றுக் கொடுத்ததாக அவள் கூறுகிறாள்.

அவநம்பிக்கையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, தாவீது ஜெபத்திலும் துதியிலும் தேவனை அழைத்தார் (சங்கீதம் 30:8). ஒரு வர்ணனையாளர், சங்கீதக்காரன் துதியினால் வெளிப்படும் கிருபைக்காக விண்ணப்பிப்பதாக குறிப்பிடுகிறார். தேவன் தாவீதின் “புலம்பலை ஆனந்த களிப்பாய் மாறப்பண்ணினார்” என்பதினால் தாவீது தேவனிடத்தில் “என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்” (வச. 11-12) என்று அறிக்கையிடுகிறான். வேதனையான நேரங்களில் தேவனைத் துதிப்பது கடினமாக இருந்தாலும், அது மாற்றத்திற்கு வழிவகுக்கும். விரக்தியிலிருந்து நம்பிக்கைக்கும், பயத்திலிருந்து இளைப்பாறதலுக்கும் வழிவகுக்கும். மற்றவர்களை ஊக்குவிக்கவும் மாற்றவும் அவர் நம் முன்மாதிரியைப் பயன்படுத்தலாம் (வச. 4-5).

தேவனுடைய கிருபையினால் சுசியின் ஆண் குழந்தை ஆரோக்கியமாக மீட்கப்பட்டது. வாழ்க்கையில் எல்லா சவால்களும் நாம் நம்புவது போல் முடிவடையாவிட்டாலும், நம் வேதனையிலும் நாம் அவரை ஆராதிக்கும்போது, அவர் நம்மை மாற்றி, புதுப்பிக்கப்பட்ட மகிழ்ச்சியால் (வச. 11) நம்மை நிரப்புவார்.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.