Archives: ஜூன் 2024

உனக்கென்ன

"அவளுக்குத் திராட்சை லாலிபாப், எனக்கு மட்டும் ஸ்ட்ராபெரி லாலிபாப்பா?" என் சகோதரியின் ஆறு வயது மகள் கேட்டாள். குழந்தைகள், தாங்கள் பெறுவதையும் பிறர் பெறுவதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை, என் சகோதரியின் பிள்ளைகள் ஆரம்பத்திலேயே எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதன் பொருள் என்னவென்றால், ஒரு சித்தியாக , நான் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும்.

நானும் சில சமயங்களில் தேவன் எனக்குக் கொடுப்பதைப் பிறருக்குக் கொடுக்கப்பட்டதோடு ஒப்பிடுவேன். "எனக்கு ஏன் இது, அவளுக்கு மட்டும் அது?" என்று தேவனைக் கேட்டிருக்கிறேன். கலிலேயா கடலோரம் இயேசுவிடம் சீமோன் பேதுரு கேட்டதை என் கேள்வி எனக்கு நினைவூட்டுகிறது. பேதுரு தன்னை முன்பு மறுதலித்ததற்காக இயேசு அவனை மன்னித்தார். இப்போது ஒரு இரத்தசாட்சியான மரணத்தின் மூலம் தேவனை பேதுரு மகிமைப்படுத்தப் போவதாகக் கூறினார் (யோவான் 21:15-19). இருப்பினும், தம்மைப் பின்தொடரும்படியான இயேசுவின் அழைப்பிற்கு ஆம் என்று பதிலளிப்பதற்குப் பதிலாக, பேதுரு, “இவன் [யோவான்] காரியம் என்ன?” என்று கேட்டார். (வ. 21).

அதற்கு இயேசு, "உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்." (வ. 22). இயேசு நமக்கும் அதையே சொல்வார் என்று நான் நம்புகிறேன். நம் வாழ்வின் வழிகாட்டுதலை ஏற்கனவே அவர் நமக்கு அருளியிருக்கையில், ​​நம்மில் விசுவாசத்தை எதிர்பார்க்கிறார். நாம் நமது பாதையை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது, மாறாக நாம் அவரைப் பின்பற்றினால் போதும்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அப்போஸ்தலனாகிய பேதுரு, ஆதித்திருச்சபையின் தைரியமான தலைவராகத் தேவனைப் பின்பற்றினார். தீய பேரரசன் நீரோவின் கீழ் அவர் அச்சமின்றி மரணத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. நாமும் தேவனைப் பின்பற்றுவதில் உறுதியாகவும், கேள்விக்கு இடமில்லாமல் அவருடைய அன்பையும் வழிநடத்துதலையும் நம்புவோமாக.

 

நீ பிரியமானவன்(ள்)

தன் சோகத்தை வெளிப்படுத்த, அந்த இளம் பெண் மாலினி, ஒரு மரத் துண்டில், "“உண்மையைச் சொல்வதானால், நான் சோகமாக இருக்கிறேன். யாரும் என்னுடன் சேர விரும்பவில்லை, என்னை நேசிக்கும் ஒரே நபரையும் நான் இழந்துவிட்டேன். நான் தினமும் அழுகிறேன்" என்றெழுதி எழுதி பூங்காவில் வைத்துவிட்டாள்.

யாரோ ஒருத்தி அந்தக் குறிப்பைக் கண்டெடுத்தபோது, ​​பூங்காவிற்கு ஒரு பெரிய எழுத்துப் பலகையைக் கொண்டு வந்து, மக்கள் தங்கள் எண்ணங்களை மாலினிக்காக எழுதச் சொன்னாள். அருகிலுள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், "நாங்கள் உன்னை நேசிக்கிறோம்", "தேவன் உன்னை நேசிக்கிறார்", "நீ பிரியமானவள்" என்றெல்லாம் பல ஆதரவான வார்த்தைகளை எழுதிச் சென்றனர்.  பள்ளி முதல்வரும் "அவளிடம் உள்ள வெறுமை நிரம்பும்படி அவளுக்கு உதவிட நாம் எடுக்கும் சிறிய முயற்சி இது. அவள் நம் அனைவரையும் பிரதிபலிக்கிறாள், ஏனெனில் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சோகத்தையும் துன்பத்தையும் அனுபவிப்போம் அல்லது அனுபவிக்கிறோம்" என்றார்.

"நீ பிரியமானவள்" என்ற வார்த்தை, மோசே இறப்பதற்குச் சற்று முன்பு  இஸ்ரவேல் கோத்திரமான பென்யமீனுக்கு அளித்த அற்புதமான ஆசீர்வாதத்தை எனக்கு நினைவூட்டுகிறது, " கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்" (உபாகமம் 33:12). மோசே தேவனுக்காக ஒரு வலிமையான தலைவராக இருந்தார், எதிரி நாடுகளைத் தோற்கடித்தார், பத்து கட்டளைகளைப் பெற்றார், தேவனைப் பின்பற்ற அவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அவர் அவர்களைத் தேவனின் கண்ணோட்டத்தில் கண்டு மரித்தார். பிரியமானவன் என்ற வார்த்தையை நாமும் நமக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம். ஏனென்றால் இயேசு கூறினார், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16).

இயேசுவின் ஒவ்வொரு விசுவாசியும் அவருக்கு "பிரியமானவர்கள்" என்ற சத்தியத்தில் உறுதியாக இளைப்பாறிட  அவர் நமக்கு உதவுவதால், மாலினியின் புதிய நண்பர்களைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க முற்படுவோம்.

 

நம்பிக்கையான எதிர்காலத்தைப் பார்த்தல்

2005 இல் கத்ரீனா புயலின் பேரழிவிற்குப் பிறகு, நியூ ஆர்லியன்ஸ் மெதுவாக மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. லோயர் நைந்த் வார்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும், கத்ரீனாவின் பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்மக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதை மாற்ற பர்னெல் காட்லன் பணியாற்றினார். நவம்பர் 2014 இல், கத்ரீனாவுக்குப் பிறகு லோயர் நைந்த் வார்டில் முதல் மளிகைக் கடையைத் திறந்தார். "நான் கட்டிடத்தை வாங்கியபோது, ​​​​எல்லோரும் என்னைப் பைத்தியம் என்றெண்ணினார்கள். ஆனால் எனது முதல் வாடிக்கையாளரோ அழுது “தனது சுற்றுப்புறம் திரும்பக் கிடைக்குமென்று ஒருபோதும் நினைத்ததில்லை" என்றதை காட்லன் நினைவு கூர்ந்தார். அவரது தாயார் தனது மகன் “நான் பார்க்காத ஒன்றைப் பார்த்தான்.  அந்த வாய்ப்பை பயன்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி" என்றார்.

ஏசாயா தீர்க்கதரிசிக்கு, அழிவினூடே எதிர்பாராத நம்பிக்கையான எதிர்காலத்தைக் காணத் தேவன் உதவினார். "சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல்" (ஏசாயா 41:17) இருப்பதால் "வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்(குவேன்)" (வ.18) என்று தேவன் வாக்குப் பண்ணினார். பசிக்கும், தாகத்திற்கும் பதிலாக, அவருடைய ஜனங்கள் மீண்டும் ஒருமுறை செழுமையை அனுபவிக்கும்போது, ​​"கர்த்தருடைய கரம் அதைச்செய்தது" (வ. 20) என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

அவரே இன்றும் புனரமைப்பின் ஆக்கியோன், "சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு" (ரோமர் 8:20) , சுதந்திரம் என்ற எதிர்கால நிலைக்கு உருவாக்கும் பணியில் கிறிஸ்து ஈடுபட்டுவிட்டார். அவருடைய நற்குணத்தில் (அன்பில்)நாம் நம்பிக்கை கொள்கையில், ​​நம்பிக்கை சாத்தியமாகும் எதிர்காலத்தைக் காண அவர் நமக்கு உதவுவார்.

 

வாழ்வின் யாத்திரை

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இருபது கோடிக்கும் அதிகமான ஜனங்கள் புனித யாத்திரை செல்கின்றனர். காலங்காலமாக “ஒரு யாத்ரீகரின் நோக்கம் ஏதோவொரு ஆசீர்வாதத்தைப் பெற்றிட புனித ஸ்தலத்திற்குப் பயணித்தல்” எனப்  பலர் கருதுகின்றனர். 

எனினும், பிரிட்டனின் செல்டிக் கிறிஸ்தவர்கள் புனித யாத்திரையை வித்தியாசமாக அணுகினர். அவர்கள் திக்கு திசை அறியா காட்டுப் பகுதிகளுக்கோ அல்லது படகேறி கடல் இழுக்கும் போக்கிலோ பயணப்படுகிறார்கள். அவர்களுக்குப் பரிச்சயமில்லாத இடத்தில் தேவனை   நம்புவதே அவர்களின் யாத்திரை. அவர்களுக்கு ஆசீர்வாதம் இலக்கில் அல்ல, ஆனால் பயணத்தில் கிடைத்தது.

இவர்களின் வாழ்க்கை எபிரேயர் 11ஐ பிரதிபலிக்கிறது.  ஏனெனில் கிறிஸ்துவிலான வாழ்க்கை என்பது உலக வழிகளை விட்டு, தேவனின் நகரத்திற்கு அந்நியரைப் போலச் சாகச பயணம் செய்வதைப் போன்றது (வ.13-16) என வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது . கடினமான, நடந்திராத பாதையில் அனைத்திற்கும் தேவனையே நம்புவதன் மூலம், ஒரு யாத்ரீகர் முந்தைய விசுவாச வீரர்கள் வாழ்ந்துகாட்டிய விசுவாசத்தை பின்பற்றுகின்றனர்(வ.1-12).

நாம் உண்மையாகவே மலையேற்றம் செய்கிறோமோ இல்லையோ, நாம்   கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இதுவே: இயேசுவை நம்பியவர்களுக்கு, வாழ்க்கை என்பது பரலோக நாட்டிற்கு ஒரு புனிதப் பயணம். வழியோ இருண்ட காடுகள், முட்டுக்கட்டைகள் மற்றும் சோதனைகள் நிறைந்தது. நாம் பயணிக்கையில், ​​வழியெங்கிலும் தேவனின் பராமரிப்பை அனுபவிக்கும் பாக்கியத்தைத் தவறவிடாமல் இருப்போமாக.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.