Archives: பிப்ரவரி 2024

லேவியராகமம் கூட

அன்றைய வேத ஆராய்ச்சியின் தலைப்பு 'லேவியராகமம்'. நான் என் குழுவினரிடம், "லேவியராகமத்தின் பல பகுதிகளை வாசிக்கத் தவிர்த்துள்ளேன், நான் தோல் நோய்களைப் பற்றி மீண்டும் படிக்க விரும்பவில்லை" என்று காரணத்தையும் ஒப்புக்கொண்டு கூறினேன்.  என் நண்பர் டேவ், "அந்தப் பத்தியின் காரணமாக இயேசுவை விசுவாசித்த ஒருவரை எனக்குத் தெரியும்" என்றார். மேலும், "அவா் ஒரு நாத்திகர் ஆனால் மருத்துவரும்கூட, வேதாகமத்தை முற்றிலுமாக நிராகரிப்பதற்கு முன், தானே அதைப் படிப்பது நல்லது என்று அவர் முடிவு செய்தார். லேவியராகமத்தில் தோல் நோய்கள் பற்றிய பகுதி அவரை மிகவும் கவர்ந்தது" என்றார்.

அதில், தோல் தொற்று நோய் மற்றும் தொற்றாத தோல் புண்களைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருந்தது (13:1–46). மற்றும் அவற்றிற்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை பற்றிய ஆச்சரியமான விவரங்களைக் கொண்டிருந்தது  (14:8–9). அன்றைய நாட்களின் மருத்துவ அறிவை மிஞ்சும் அளவுக்கு இது உள்ளதை அறிந்துகொண்டார். ஆனால் அது லேவியராகமத்தில்தான் இருந்தது. மோசேக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்தார். மோசே உண்மையிலேயே தேவனிடமிருந்து தான் இந்த விபரங்களைப் பெற்றார் என்று கருதினார். இறுதியில் அவர் இயேசுவின் விசுவாசியானார்.

வேதாகமத்தின் சில பகுதிகள் உங்களைச் சங்கடப்படுத்தியிருக்கலாம். நானும் அதை அனுபவித்துள்ளேன். ஆனால் அப்படிக் கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. இஸ்ரவேலர்கள் தேவனுக்காகவும், தேவனோடும் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும்படி லேவியராகமம் எழுதப்பட்டது. தேவனாகிய கர்த்தருக்கும் அவருடைய மக்களுக்கும் இடையிலான இந்த உறவைப் பற்றி அறியும்போது,  நாம் இன்னும் அதிகமாகத் தேவனைப் பற்றி அறிகிறோம்.

"வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக" (2 தீமோத்தேயு 3:16) என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார் . ஆகவே வேதாகமத்தை, குறிப்பாக லேவியராகமத்தைக் கூட நாம் தொடர்ந்து படிக்கலாம்.

என் அவிசுவாசம் நீங்க உதவிடும்

இதைக் கூறியவர் யாா் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள், அது: அன்னை தெரசா. இந்தியாவின் கொல்கத்தாவில் வாழும் ஏழைகளுக்காக அயராத தொண்டராக பணியாற்றியவர் அன்னை தெரசா. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தனது விசுவாசத்தோடு ஒரு தீவிரமான அமைதியாக நடத்தினார். 1997 இல் அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது குறிப்புகளின் சில பகுதிகள், "கம் பி மை லைட்" என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டபோதுதான் அப்போராட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.

தேவன் இல்லை என்ற எழும் நமது சந்தேகங்கள் அல்லது உணர்வுகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம்? அந்த தருணங்கள் பிறரைக் காட்டிலும் சில  விசுவாசிகளை அதிகமாகப் பாதிக்கக் கூடும். வாழ்வின் சில தருணங்களில், இயேசுவின் உண்மையுள்ள விசுவாசிகள் பலர் இந்த சந்தேகத்தை அனுபவிக்க நேரிடும்.

வேதாகமத்தில் உள்ள அழகான ஆனால் முரண்பாடான ஜெபம் ஒன்று ஒரேசமயத்தில் விசுவாசத்தையும் அவிசுவாசத்தையும் வெளிப்படுத்துவதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மாற்கு 9-ல், அசுத்த ஆவியினால் அலைக்கழிக்கப்படும் சிறுவனுடைய தகப்பனை இயேசு சந்திக்கிறார் (வ. 21). இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும் என்றார். (விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் வ. 23) உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்றான். (v. 24).

உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் இந்த நேர்மையான விண்ணப்பமானது சந்தேகத்துடன் போராடுபவர்கள், அதனைத் தேவனிடம் கொடுக்கவும், அவர் நம் விசுவாசத்தை பலப்படுத்தி நாம் கடந்து செல்லும் ஆழமான இருண்ட பள்ளத்தாக்குகளுக்கு மத்தியில் நம்மைத் தாங்கிக்கொள்கிறார் என்றும் நம்பும்படிக்கும் அழைக்கிறது.

இயேசு நிறுத்துகையில்

என் அலுவலகம் அருகே, பல நாட்களாக ஒரு பெட்டியில் முடங்கி, நோயுற்ற பூனை ஒன்று கத்திக்கொண்டே இருந்தது. ஜூன் முன்வரும்வரை; கைவிடப்பட்ட அந்தப் பூனையைக் கடந்து சென்ற பலரும் அதற்குக் கண்டுகொள்ளவில்லை. அவர் ஒரு தெரு துப்புரவாளர், அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றார், அங்கே தெருநாய்களாக இருந்த இரண்டு நாய்கள் மீட்கப்பட்டு அவருடன் வசித்து வந்தன.

"நான் அவற்றைப் பராமரிக்கிறேன், ஏனென்றால் யாரும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. அவைகளில் நான் என்னையே காண்கிறேன், ஒரு துப்புரவாளரை யாரும் கண்டுகொள்வதில்லையே" என்கிறார் ஜுன்.

இயேசு எருசலேமுக்குச் செல்லும் வழியில், எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, யாராலும் கவனிக்கப்படாதிருந்த ஒரு குருடன் சாலையோரத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். பெருங்கூட்டம் போய்க் கொண்டிருந்தது, அனைவரின் பார்வையும் கிறிஸ்துவின்மீது; ஒருவர் கூட அந்தப் பிச்சைக்காரனுக்கு உதவ நிற்கவில்லை.

இயேசுவைத் தவிர எவரும் முன்வரவில்லை. திரள் கூட்டத்தின் ஆரவாரத்தின் மத்தியில், கேட்பாரற்ற அவனின் அழுகையை  அவர் கேட்டார், "நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்" என்று கிறிஸ்து கேட்டார். "ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும்." என முழு உள்ளதோடு பதில் வந்தது. இயேசு அவனை நோக்கி: "நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்றார் (லூக்கா 18:41-42).

கேட்பாரற்றவரைப் போலச் சிலநேரங்களில் உணர்கிறோமா? நம்மை விட முக்கியமானவர்களாகத் தோன்றுபவர்களால் நமது அழுகுரல் மூழ்கிவிடுகிறதா? உலகம் கண்டுகொள்ளாதவர்களை நம் இரட்சகர் கவனிக்கிறார். உதவிக்கு அவரை அழையுங்கள்! பிறர் நம்மைக் கடந்து செல்லும்போது, அவர் நமக்காக தம்மை நிறுத்துவார்.

சுகமான தூக்கம்

கெட்ட நினைவுகளும் குற்றச்சாட்டுகளும் சாலின் மனதை அலைக்கழித்தன. பயத்தால் நெஞ்சம் நிறைந்து, வியர்த்து விறுவிறுத்து தூக்கம் தூரமானது. அவனுடைய ஞானஸ்நானத்திற்கு முந்தைய இரவு அது, இருண்ட எண்ணங்களின் தாக்குதலை அவனால் தவிர்க்க முடியவில்லை. சால், இயேசுவில் இரட்சிக்கப்பட்டு தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டதை அறிந்திருந்தார், ஆனால் ஆவிக்குரிய யுத்தம் தொடர்ந்தது.அப்போதுதான் அவரது மனைவி அவனுடைய கரம் பிடித்து ஜெபித்தார். சில நொடிகளில், சாலின் இதயத்தில் பயம் நீங்கி அமைதி நிறைந்தது. ஞானஸ்நான ஆராதனையில்,  அவர் பேசப்போவதை முன்பாகவே எழுதினார். முன்னர் அது அவரால் செய்ய முடியாத ஒன்றாயிருந்தது. அதன் பிறகு, அவர் இன்பமாக உறங்கினார்.

தாவீது ராஜாவும் அமைதியற்ற இரவின் அனுபவத்தை அறிந்திருந்தார். அரியணையைப் பறிக்க முயன்ற தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடினார் (2 சாமுவேல் 15-17), "சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேரு(ர்)" (சங்கீதம் 3:6) இருப்பதை அறிந்திருந்தார். "கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! !" (v. 1) என தாவீது புலம்பினார். பயமும் சந்தேகமும் மேலோங்கியிருப்பினும், அவர் தமது "கேடகமு(மான)ம்" (வ.3) தேவனை நோக்கி கூப்பிட்டார். பின்னர், "நான் படுத்து நித்திரை செய்தேன்" (வ. 5) ஏனெனில், "கர்த்தர்

என்னை தாங்குகிறார்" (வ.5).என்றார்.

நம்பிக்கை நம் மனதை நிரப்புகிறது. சால் மற்றும் தாவீது போல நாம் உடனடியாக இனிமையான தூக்கத்தை அனுபவிக்கவில்லை என்றாலும், "சமாதானத்தோடே [நாம்] நித்திரை செய்ய முடியும்..  நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்" (4:8)  எனலாம். ஏனெனில் தேவன் நம்மோடு இருக்கிறார், அவரே நமக்கு இளைப்பாறுதல்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.