Archives: பிப்ரவரி 2024

லேவியராகமம் கூட

அன்றைய வேத ஆராய்ச்சியின் தலைப்பு 'லேவியராகமம்'. நான் என் குழுவினரிடம், "லேவியராகமத்தின் பல பகுதிகளை வாசிக்கத் தவிர்த்துள்ளேன், நான் தோல் நோய்களைப் பற்றி மீண்டும் படிக்க விரும்பவில்லை" என்று காரணத்தையும் ஒப்புக்கொண்டு கூறினேன்.  என் நண்பர் டேவ், "அந்தப் பத்தியின் காரணமாக இயேசுவை விசுவாசித்த ஒருவரை எனக்குத் தெரியும்" என்றார். மேலும், "அவா் ஒரு நாத்திகர் ஆனால் மருத்துவரும்கூட, வேதாகமத்தை முற்றிலுமாக நிராகரிப்பதற்கு முன், தானே அதைப் படிப்பது நல்லது என்று அவர் முடிவு செய்தார். லேவியராகமத்தில் தோல் நோய்கள் பற்றிய பகுதி அவரை மிகவும் கவர்ந்தது" என்றார்.

அதில், தோல் தொற்று நோய் மற்றும் தொற்றாத தோல் புண்களைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருந்தது (13:1–46). மற்றும் அவற்றிற்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை பற்றிய ஆச்சரியமான விவரங்களைக் கொண்டிருந்தது  (14:8–9). அன்றைய நாட்களின் மருத்துவ அறிவை மிஞ்சும் அளவுக்கு இது உள்ளதை அறிந்துகொண்டார். ஆனால் அது லேவியராகமத்தில்தான் இருந்தது. மோசேக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்தார். மோசே உண்மையிலேயே தேவனிடமிருந்து தான் இந்த விபரங்களைப் பெற்றார் என்று கருதினார். இறுதியில் அவர் இயேசுவின் விசுவாசியானார்.

வேதாகமத்தின் சில பகுதிகள் உங்களைச் சங்கடப்படுத்தியிருக்கலாம். நானும் அதை அனுபவித்துள்ளேன். ஆனால் அப்படிக் கொல்லப்பட்டதற்கு ஒரு காரணம் உண்டு. இஸ்ரவேலர்கள் தேவனுக்காகவும், தேவனோடும் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிந்துகொள்ளும்படி லேவியராகமம் எழுதப்பட்டது. தேவனாகிய கர்த்தருக்கும் அவருடைய மக்களுக்கும் இடையிலான இந்த உறவைப் பற்றி அறியும்போது,  நாம் இன்னும் அதிகமாகத் தேவனைப் பற்றி அறிகிறோம்.

"வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக" (2 தீமோத்தேயு 3:16) என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார் . ஆகவே வேதாகமத்தை, குறிப்பாக லேவியராகமத்தைக் கூட நாம் தொடர்ந்து படிக்கலாம்.

என் அவிசுவாசம் நீங்க உதவிடும்

இதைக் கூறியவர் யாா் எனத் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள், அது: அன்னை தெரசா. இந்தியாவின் கொல்கத்தாவில் வாழும் ஏழைகளுக்காக அயராத தொண்டராக பணியாற்றியவர் அன்னை தெரசா. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தனது விசுவாசத்தோடு ஒரு தீவிரமான அமைதியாக நடத்தினார். 1997 இல் அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது குறிப்புகளின் சில பகுதிகள், "கம் பி மை லைட்" என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டபோதுதான் அப்போராட்டம் வெளிச்சத்திற்கு வந்தது.

தேவன் இல்லை என்ற எழும் நமது சந்தேகங்கள் அல்லது உணர்வுகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம்? அந்த தருணங்கள் பிறரைக் காட்டிலும் சில  விசுவாசிகளை அதிகமாகப் பாதிக்கக் கூடும். வாழ்வின் சில தருணங்களில், இயேசுவின் உண்மையுள்ள விசுவாசிகள் பலர் இந்த சந்தேகத்தை அனுபவிக்க நேரிடும்.

வேதாகமத்தில் உள்ள அழகான ஆனால் முரண்பாடான ஜெபம் ஒன்று ஒரேசமயத்தில் விசுவாசத்தையும் அவிசுவாசத்தையும் வெளிப்படுத்துவதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மாற்கு 9-ல், அசுத்த ஆவியினால் அலைக்கழிக்கப்படும் சிறுவனுடைய தகப்பனை இயேசு சந்திக்கிறார் (வ. 21). இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும் என்றார். (விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் வ. 23) உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்றான். (v. 24).

உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் இந்த நேர்மையான விண்ணப்பமானது சந்தேகத்துடன் போராடுபவர்கள், அதனைத் தேவனிடம் கொடுக்கவும், அவர் நம் விசுவாசத்தை பலப்படுத்தி நாம் கடந்து செல்லும் ஆழமான இருண்ட பள்ளத்தாக்குகளுக்கு மத்தியில் நம்மைத் தாங்கிக்கொள்கிறார் என்றும் நம்பும்படிக்கும் அழைக்கிறது.

இயேசு நிறுத்துகையில்

என் அலுவலகம் அருகே, பல நாட்களாக ஒரு பெட்டியில் முடங்கி, நோயுற்ற பூனை ஒன்று கத்திக்கொண்டே இருந்தது. ஜூன் முன்வரும்வரை; கைவிடப்பட்ட அந்தப் பூனையைக் கடந்து சென்ற பலரும் அதற்குக் கண்டுகொள்ளவில்லை. அவர் ஒரு தெரு துப்புரவாளர், அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றார், அங்கே தெருநாய்களாக இருந்த இரண்டு நாய்கள் மீட்கப்பட்டு அவருடன் வசித்து வந்தன.

"நான் அவற்றைப் பராமரிக்கிறேன், ஏனென்றால் யாரும் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. அவைகளில் நான் என்னையே காண்கிறேன், ஒரு துப்புரவாளரை யாரும் கண்டுகொள்வதில்லையே" என்கிறார் ஜுன்.

இயேசு எருசலேமுக்குச் செல்லும் வழியில், எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, யாராலும் கவனிக்கப்படாதிருந்த ஒரு குருடன் சாலையோரத்தில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தார். பெருங்கூட்டம் போய்க் கொண்டிருந்தது, அனைவரின் பார்வையும் கிறிஸ்துவின்மீது; ஒருவர் கூட அந்தப் பிச்சைக்காரனுக்கு உதவ நிற்கவில்லை.

இயேசுவைத் தவிர எவரும் முன்வரவில்லை. திரள் கூட்டத்தின் ஆரவாரத்தின் மத்தியில், கேட்பாரற்ற அவனின் அழுகையை  அவர் கேட்டார், "நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்" என்று கிறிஸ்து கேட்டார். "ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும்." என முழு உள்ளதோடு பதில் வந்தது. இயேசு அவனை நோக்கி: "நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்றார் (லூக்கா 18:41-42).

கேட்பாரற்றவரைப் போலச் சிலநேரங்களில் உணர்கிறோமா? நம்மை விட முக்கியமானவர்களாகத் தோன்றுபவர்களால் நமது அழுகுரல் மூழ்கிவிடுகிறதா? உலகம் கண்டுகொள்ளாதவர்களை நம் இரட்சகர் கவனிக்கிறார். உதவிக்கு அவரை அழையுங்கள்! பிறர் நம்மைக் கடந்து செல்லும்போது, அவர் நமக்காக தம்மை நிறுத்துவார்.

சுகமான தூக்கம்

கெட்ட நினைவுகளும் குற்றச்சாட்டுகளும் சாலின் மனதை அலைக்கழித்தன. பயத்தால் நெஞ்சம் நிறைந்து, வியர்த்து விறுவிறுத்து தூக்கம் தூரமானது. அவனுடைய ஞானஸ்நானத்திற்கு முந்தைய இரவு அது, இருண்ட எண்ணங்களின் தாக்குதலை அவனால் தவிர்க்க முடியவில்லை. சால், இயேசுவில் இரட்சிக்கப்பட்டு தனது பாவங்கள் மன்னிக்கப்பட்டதை அறிந்திருந்தார், ஆனால் ஆவிக்குரிய யுத்தம் தொடர்ந்தது.அப்போதுதான் அவரது மனைவி அவனுடைய கரம் பிடித்து ஜெபித்தார். சில நொடிகளில், சாலின் இதயத்தில் பயம் நீங்கி அமைதி நிறைந்தது. ஞானஸ்நான ஆராதனையில்,  அவர் பேசப்போவதை முன்பாகவே எழுதினார். முன்னர் அது அவரால் செய்ய முடியாத ஒன்றாயிருந்தது. அதன் பிறகு, அவர் இன்பமாக உறங்கினார்.

தாவீது ராஜாவும் அமைதியற்ற இரவின் அனுபவத்தை அறிந்திருந்தார். அரியணையைப் பறிக்க முயன்ற தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடினார் (2 சாமுவேல் 15-17), "சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேரு(ர்)" (சங்கீதம் 3:6) இருப்பதை அறிந்திருந்தார். "கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! !" (v. 1) என தாவீது புலம்பினார். பயமும் சந்தேகமும் மேலோங்கியிருப்பினும், அவர் தமது "கேடகமு(மான)ம்" (வ.3) தேவனை நோக்கி கூப்பிட்டார். பின்னர், "நான் படுத்து நித்திரை செய்தேன்" (வ. 5) ஏனெனில், "கர்த்தர்

என்னை தாங்குகிறார்" (வ.5).என்றார்.

நம்பிக்கை நம் மனதை நிரப்புகிறது. சால் மற்றும் தாவீது போல நாம் உடனடியாக இனிமையான தூக்கத்தை அனுபவிக்கவில்லை என்றாலும், "சமாதானத்தோடே [நாம்] நித்திரை செய்ய முடியும்..  நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்" (4:8)  எனலாம். ஏனெனில் தேவன் நம்மோடு இருக்கிறார், அவரே நமக்கு இளைப்பாறுதல்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவின் தன்மையை பிரதிபலித்தல்

மேஜையில் இரண்டு முகங்கள் தனித்து நின்றன. ஒன்று கசப்பான கோபத்தால் சுருங்கி, மற்றொன்று உணர்ச்சி வலியில் முறுக்கி இருந்தது. பழைய நண்பர்களின் சந்திப்பு இப்போது கோபத்தின் கூச்சலானது, ஒருத்தி தன் நம்பிக்கைகளுக்காக மற்றொருத்தியைத் திட்டினாள். முதல் பெண் உணவகத்தை விட்டு வெளியேறும் வரை தகராறு தொடர்ந்தது, இது மற்றவளை அவமானத்தால் நிலைகுலைத்தது.

கருத்து வேறுபாட்டைச் சகித்துக்கொள்ள முடியாத காலத்தில் நாம் உண்மையில் வாழ்கிறோமா? இரண்டு பேர் ஒத்துப்போக முடியாது என்பதால் ஏதோவொன்று தீயது என்று அர்த்தம் இல்லை. கடுமையான அல்லது அடிபணியாத பேச்சு ஒருபோதும் ஏற்புடையதல்ல, மேலும் வலுவான நம்பிக்கைகள் கண்ணியத்தையும் இரக்கத்தையும் மிஞ்சக்கூடாது.

ரோமர்12, “ஒருவரையொருவர் கனம்பண்ணுகிறது” மற்றும் பிறருடன் “ஏகசிந்தையுள்ள வர்களாயிருப்பது” (வ.10, 16) எப்படி என்பதற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக உள்ளது. தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கான அடையாளமான பண்பு, நாம் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள அன்பே என்று இயேசு சுட்டிக்காட்டினார் (யோவான் 13:35). பெருமையும் கோபமும் நம்மை எளிதில் தடம் புரளச் செய்யும் அதே வேளையில், நாம் பிறரிடம் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்பும் அன்பிற்கு நேர் மாறாகவும் இருக்கிறது.

நம் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாட்டை இழக்கையில், பிறரைக் குறை கூறாமல் இருப்பது ஒரு சவால்தான், ஆனால் “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்” (ரோமர் 12:18) என்ற வார்த்தைகள் கிறிஸ்துவின் தன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை வாழ வேண்டிய பொறுப்பை வேறு யார் மீதும் சுமத்த முடியாது என்பதைக் காட்டுகிறது. அது அவருடைய நாமம் தரிக்கப்பட்ட நம் ஒவ்வொருவர் மீதும் உள்ளது. 

 

நான் ஓட்டுநர் மட்டுமே

“அப்பா, நான் என் தோழியுடன் இரவு தங்கலாமா?” பயிற்சி முடிந்து காரில் ஏறிக் கொண்டே என் மகள் கேட்டாள். “கண்ணே, உனக்கே பதில் தெரியும். நான் ஓட்டுநர் மட்டும்தான். முடிவை நான் அறியேன், அம்மாவிடம் கேட்கலாம்” என்றேன்.

“நான் ஓட்டுநர் மட்டுமே” என்றது எங்கள் வீட்டில் நகைச்சுவையாகிவிட்டது. தினமும், நான் எங்கே இருக்க வேண்டும்? எப்போது, யாரை எங்கு அழைத்துச் செல்லவேண்டும்? என்று ஒழுங்கமைக்கும் எனது மனைவியிடம் கேட்கிறேன். மூன்று யுவதிகளுடன், ஒரு “வாகன ஓட்டுநராக” இரவில் வாகனம் ஓடுவதை இரண்டாவது வேலையாகவே உணர்கிறேன். பெரும்பாலும், நான் அறியாதவை எனக்குத் தெரியாமலேயே இருக்கும். எனவே, எல்லாவற்றையும் தீர்மானிக்கும் எசமானியுடன் நான் சரிபார்க்க வேண்டும்.

மத்தேயு 8 இல், இயேசு ஒருவரைச் சந்தித்தார், அவர் கட்டளைகளைப் பின்பற்றுதல் மற்றும் அளித்தல் குறித்து அறிந்திருந்தார். ஒரு ரோமானிய நூற்றுக்கு அதிபதியாக, அவனுக்கு கீழ்ப்பட்டவர்களுக்குக் கட்டளையிட அதிகாரம் இருப்பதைப் போலவே, இயேசுவுக்குக் குணமாக்கும் அதிகாரம் உண்டு என்பதை அவன் புரிந்துகொண்டான். “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தும், எனக்குக் கீழ்ப்படிகிற சேவகருமுண்டு;” (வ. 8-9). கிறிஸ்து அவனுடைய விசுவாசத்தைப் பாராட்டினார் (வவ. 10,13), அவருடைய அதிகாரம் எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது என்பதை அவன் புரிந்துகொண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

அப்படியானால் நாம் எப்படி இருக்கிறோம்? இயேசுவிடமிருந்து நமது அன்றாடப் பணிகளைப் பெற்று, அவர்மீதே நம்பிக்கை கொள்வது எவ்வாறு இருக்கும்? ஏனென்றால், நாம் “வெறும் ஓட்டுநர்” என்று நினைத்தாலும், ஒவ்வொரு பணிக்கும் ராஜ்ய அர்த்தமும் நோக்கமும் உள்ளது. 

 

கிறிஸ்துவில் முடிப்பவர்களாக இருத்தல்

கலாவதி தனது கொள்ளுப்பேரனான ராஜேஷுக்காக பின்னிக்கொண்டிருந்த கம்பளிச்சட்டையை முடிப்பதற்குள் இறந்துவிட்டார். அதை நிறைவுசெய்ய மற்றொரு ஆர்வமுள்ள பின்னல்காரரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. “நிறைவு செய்பவர்கள்” எனப்பட்ட தன்னார்வ கைவினைஞர்களையும், தங்கள் பணிகளை முடிப்பதற்கு முன்னரே இந்த வாழ்க்கையை விட்டு வெளியேறினவர்களின் அன்புக்குரியவர்களையும் இணைக்கும் ஒரு நிறுவனத்திற்கு நன்றி. “நிறைவு செய்பவர்கள்” துக்கப்படுபவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு பணியை முடிக்க தங்கள் நேரத்தையும் திறமையையும் அன்புடன் செலவிடுகின்றனர்.

தேவன் எலியாவின் பணிக்காகவும்கூட ஒரு “நிறைவு செய்பவரை” நியமித்தார். இஸ்ரவேலர்கள் தேவனின் உடன்படிக்கையை நிராகரித்து தீர்க்கதரிசிகளைக் கொல்வதைக் கண்டு அந்தத் தீர்க்கதரிசி தனிமையாகவும் மனச்சோர்வுடனும் இருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தேவன் எலியாவிடம் “எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு” (1 இராஜாக்கள் 19:16) என அறிவுறுத்தினார். தேவனுடைய சத்தியத்தைப் பிரகடனப்படுத்துவதற்கான பணியானது எலியாவின் மரணத்திற்குப் பின்னரும் தொடரும் என்பதை இது உறுதி செய்தது.

எலியாவுக்குப் பின் தேவனின் தீர்க்கதரிசியாகத் தொடரும்படி தேவன் அவரை அழைத்தார் என்று எலிசாவுக்கு காண்பிக்க, எலியா “அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்” (வ. 19). தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான தேவசெய்தியை அறிவிப்பவா் ஒருவரின் அதிகாரத்தைக் குறிக்க ஒரு தீர்க்கதரிசியின் சால்வை பயன்படுத்தப்பட்டதால் (பார்க்க 2 இராஜாக்கள் 2:8), இந்த செயல் எலிசாவின் தீர்க்கதரிசிக்கான அழைப்பைத் தெளிவாக்கியது. இயேசுவை விசுவாசிக்கிறவர்களாக, தேவனின் அன்பைப் பிறருடன் பகிரவும், “[அவருடைய] புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு” (1 பேதுரு 2:9) அழைக்கப்பட்டிருக்கிறோம். இப்பணியானது நம் ஆயுளை விட அதிகமாக இருப்பினும், அவர் இப்பணியை ஆதரிப்பார் என்றும், அவரை அறிவிக்கும் உன்னதமான வேலைக்கு பிற “நிறைவு செய்பவர்களை” தொடர்ந்து அழைப்பார் என்றும் நாம் நிச்சயம் நம்பலாம்.