Archives: ஜூலை 2023

தேவனுடைய வழித்தடத்தில் செல்லுதல்

பல ஆண்டுகளுக்கு முன்பு, 218 பேருடன் சென்ற ரயில், வடமேற்கு ஸ்பெயினில் தடம் புரண்டதில் 79 பேர் இறந்தனர், 66 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுனரால் அந்த விபத்தை விளக்க முடியவில்லை, ஆனால் வீடியோ காட்சிகள் அதை செய்தது. ஒரு கொடிய வளைவைத் தாண்டும் முன் ரயில் மிக வேகமாக சென்று, ரயிலில் உள்ள அனைவரையும் பாதுகாப்பதற்காக அனுமதிக்கப்பட்ட வேக அளவை தாண்டியது. ஸ்பெயினின் தேசிய இரயில் நிறுவனத்தில் முப்பது வருட அனுபவமிக்கவராக இருந்தபோதிலும், ஓட்டுநர் வேக எல்லையை புறக்கணித்ததால் பலர் உயிரிழந்தனர்.

 

உபாகமம் 5 இல், மோசே தனது மக்களுக்கான தேவனின் உடன்படிக்கை எல்லைகளை நினைப்பூட்டினார். மோசே ஒரு புதிய தலைமுறையினருக்கு தேவனின் அறிவுறுத்தலை, அவருடனான தங்கள் சொந்த உடன்படிக்கையாகக் கருதும்படி ஊக்கப்படுத்தினார் (வ. 3), அவர் பத்துக் கட்டளைகளை மீண்டும் கூறினார் (வவ. 7-21). கட்டளைகளைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமும், முந்தைய தலைமுறையின் கீழ்ப்படியாமையிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதன் மூலமும், மோசே இஸ்ரவேலர்களை பயபக்தியோடும், தாழ்மையோடும், தேவனின் உண்மைத்தன்மையைக் கவனத்தில் கொள்ளும்படி அழைத்தார். தேவன் தம்முடைய மக்களுக்கு ஒரு வழியை ஏற்படுத்தினார், அவருடைய வழிகளில் உண்மையாய் நடப்பவர்கள், தங்கள் வாழ்க்கையையோ, மற்றவர்களின் வாழ்க்கையையோ சிதைக்க மாட்டார்கள். தேவ ஞானத்தைப் புறக்கணித்தால், அவர்கள் தங்கள் சொந்த ஆபத்தில் விழுவார்கள்.

 

இன்று, தேவன் நம்மை வழிநடத்திச் செல்வதால், வேதவாக்கியங்களை நம் மகிழ்ச்சியாகவும், ஆலோசகராகவும், நம் வாழ்வின் பாதுகாப்புத் தண்டவாளமாகவும் கொள்வோம். ஆவியானவர் நம்மை வழிநடத்துவதால், அவருடைய ஞானமான பாதுகாப்பிற்குள் முழு மனதுடன் நம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிக்கலாம்.

கீழ்த்தளத்தில்

எனது நண்பர் ஒருவர், ஆப்பிரிக்காவின் மெர்சி என்ற மருத்துவமனைக் கப்பலில் பணிபுரிகிறார். இம்மருத்துவமனை வளரும் நாடுகளுக்கு இலவச சுகாதார சேவையை எடுத்துச் செல்கிறது. அங்கே பணிபுரிபவர்கள் தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சேவை செய்கிறார்கள். இல்லையெனில், அவர்களின் நோய்கள் சிகிச்சை அளிக்கப்படாமல் போய்விடும்.

 

அவ்வப்போது கப்பலில் ஏறும் தொலைக்காட்சிக் குழுவினர், அங்கே அற்புதமாக பணி புரியும் மருத்துவப் பணியாளர்களின் சேவைகளை படமெடுப்பர். சில நேரங்களில், அவர்கள் அங்கே உள்ள மற்ற குழு உறுப்பினர்களை நேர்காணல் செய்ய, தளத்தின் கீழே செல்வார்கள். அங்கே மிக் என்பவர் செய்யும் வேலை பொதுவாக கவனிக்கப்படாமல் இருந்தது.

 

மிக், ஒரு பொறியாளர், கப்பலின் கழிவுநீர் ஆலையில் வேலை செய்ய நியமிக்கப்பட்ட பொறுப்பை, முதலில் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டார். ஒவ்வொரு நாளும் நாற்பதாயிரம் லிட்டர் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதால், இந்த நச்சுப் பொருளை நிர்வகிப்பது கடினமான பணியாகும். மிக் அதன் குழாய்கள் மற்றும் பம்புகளை பராமரிக்காவிட்டால், ஆப்பிரிக்காவின் மெர்சி மருத்துவமனையின் உயிர் கொடுக்கும் செயல்பாடுகள் நின்றுவிடும்.

 

கிறிஸ்தவ ஊழியத்தின் "மேல் தளத்தில்" இருப்பவர்களைப் பாராட்டுவது எளிது, அதே சமயம் கீழே உள்ள தாழ்வான இடங்களில் இருப்பவர்களைக் கண்டும் காணாதது போல் இருக்கிறோம். கொரிந்தியர்கள், அசாதாரணமான வரங்களைக் கொண்டவர்களை பிறரைக்காட்டிலும் உயர்த்தியபோது, கிறிஸ்துவின் வேலையில் அனைத்து விசுவாசிகளுக்கும் பங்குண்டென்று பவுல் அவர்களுக்கு நினைவூட்டினார் (1 கொரிந்தியர் 12:7-20). அற்புத சுகமளிப்பதோ, பிறருக்கு உதவுவதோ, ஒவ்வொரு வரமும் முக்கியமானது (வ.27–31). உண்மையில், குறைவான முக்கியத்துவம் என்று நாம் எண்ணும் பணியே அதிக மரியாதைக்குரியது (வ. 22-24).

 

நீங்கள் ஒரு "கீழ்த்தளத்தில்" உள்ள நபரா? உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.உங்கள் பணி தேவனால் மதிக்கப்படுகிறது மற்றும் அனைவருக்கும் இன்றியமையாதது.

அமைதியின் ஜெபம்

கிரீன் பேங்க் என்பது மேற்கு வர்ஜீனியாவின் கரடுமுரடான அப்பலாச்சியன் மலைகளில் உள்ள ஒரு சிறிய சமூகம். இந்த நகரம் அப்பகுதியில் உள்ள பல சிறிய நகரங்களை போலிருந்தாலும், ஒரு பெரிய வித்தியாசமுமிருந்தது. அங்கே 142 குடும்பங்களுக்கும் இணைய வசதி கிடையாது. இந்த கிரீன் பாங்கில் உள்ள தொலைநோக்கி வானத்தில் தொடர்ந்து செயல்படுவதற்கு, அருகிலுள்ள வை-பை அல்லது அலைபேசி கோபுரங்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் குறிக்கீட்டை தடைசெய்துள்ளனர். அதனால் கிரீன் பேங்க், வட அமெரிக்காவில் தொழில்நுட்ப இரைச்சலற்ற இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது .

 

சில சமயங்களில், அமைதியான சூழலே முன்னோக்கிச் செல்வதற்கான சிறந்த வழியாகும்; குறிப்பாக தேவனுடனான நமது உறவில். இயேசுவே பிதாவுடன் பேசுவதற்கு அமைதியான, ஒதுங்கிய இடங்களுக்கு சென்றதன் மூலம் நமக்கு முன்மாதிரியை விட்டுச் சென்றுள்ளார். லூக்கா 5:16ல், “அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்” (லூக்கா 5:16) என வாசிக்கிறோம். அவர் அடிக்கடி அவ்வாறு செய்தார். இது கிறிஸ்துவின் வழக்கமான நடைமுறையாகும். மேலும், இது நமக்கு சரியான முன்மாதிரியாக அமைகிறது. இவ்வுலகத்தின் சிருஷ்டிகர் தனது பிதாவை இவ்வளவாய் சார்ந்திருந்தால், நாம் எவ்வளவாய் அவரை சார்ந்திருக்க வேண்டியதாயிருக்கிறது!

 

தேவனின் பிரசன்னத்தில் புதுபெலன் பெற அமைதியான இடத்திற்கு செல்லுகையில், அவருடைய பெலத்தால் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து முன்னேற நம்மை ஆயத்தப்படுத்துகிறது. அத்தகைய இடத்தை இன்று நீங்கள் எங்கே காணலாம்?

நீண்ட காத்திருப்பு

துனின் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டபோது, இராணுவம் விசுவாசிகளை பயமுறுத்தி, அவர்களின் பண்ணை விலங்குகளை கொல்லத் தொடங்கியது. வாழ்வாதாரத்தை இழந்த துனின் குடும்பம், பல்வேறு நாடுகளுக்கு சிதறடிக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளாக, துன் தனது குடும்பத்திலிருந்து வெகுதொலைவில் உள்ள அகதிகள் முகாமில் இருந்தார். தேவன் தன்னுடன் இருப்பதை அவர் அறிந்திருந்தும், பிரிவின் போது இரண்டு குடும்ப உறுப்பினரை இழந்ததால் விரக்தியில் இருந்தார்.

 

நீண்ட காலத்திற்கு முன்பு, மற்றொரு மக்கள் குழுவினர் இதைப் போலவே கொடூரமான ஒடுக்குமுறையை எதிர்கொண்டனர். ஆகவே, அந்த மக்களை (இஸ்ரவேலர்) எகிப்திலிருந்து வெளியே வழிநடத்த தேவன் மோசேயை நியமித்தார். மோசே தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் பார்வோனை அணுகியபோது, எகிப்திய அதிகாரி அடக்குமுறையை தீவிரப்படுத்தினான் (யாத்திராகமம் 5:6-9). பார்வோன்: நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான் (வ.5:2).

மக்கள் மோசேயிடம் முறையிட்டனர், அவர் தேவனிடம் முறையிட்டார் (வ.20-23).

 

இறுதியில், தேவன் இஸ்ரவேலர்களை விடுவித்தார், அவர்கள் விரும்பிய சுதந்திரத்தைப் பெற்றார்கள். ஆனால் தேவனின் வழியிலும், நேரத்திலும். அவர் ஒரு நீண்ட காலம் எடுத்து, அவருடைய குணாதிசயத்தைப் பற்றி நமக்குக் கற்பிக்கிறார். பெரிய விஷயத்திற்கு நம்மை தயார்படுத்துகிறார்.

 

துன் அகதிகள் முகாமில் தனது ஆண்டுகளை நன்கு பயன்படுத்திக் கொண்டார், புதுதில்லி வேதாகம கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். இப்போது அவர் தனது சொந்த மக்களுக்கு ஒரு போதகர். ஒரு புதிய அடைக்கலத்தை கண்டுகொண்டு அவரைப் போலவே இருந்த மக்களுக்கு போதகரானார். "ஒரு அகதியான எனது கதை ஒரு ஊழியனாக மற்றவர்களை வழிநடத்துவதற்காக என்னை புடமிட்டது," என்று அவர் கூறினார். அவரது சாட்சியில், யாத்திராகமம் 15:2 இல், மோசேயின் பாடலை மேற்கோள் காட்டுகிறார், ”கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்” (யாத்திராகமம் 15:2). அவர் இன்று நம்முடையவராய் இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஸ்னாப்டீல் நகர்

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் தங்களுக்கு உதவிய இனைய நிறுவனத்தை கவுரவிக்கும் வகையில் “ஸ்னாப்டீல் டாட் காம் நகர்” என பெயர் மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளது. 2011க்கு முன், கிராம மக்கள் தினமும் பல கிலோ மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். ஆனால் இனைய நிறுவனத்திற்கு நன்றி, அவர்கள் இப்போது கைப்பம்புகள் மூலம் எளிதில் கிடைக்கக்கூடிய சுத்தமான தண்ணீரை பெறுகின்றனர். அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒரு ஊழியரால் இது சாத்தியமானது என்று தலைமை நிர்வாக அதிகாரி குணால் பால் கூறினார். இந்த ஊழியர் கிராம மக்களின் துயரத்தை மாநகராட்சியுடன் பகிர்ந்து கொண்டார், மேலும் அவரது எளிய செய்தி நூற்றுக்கணக்கான வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஒரு தீர்க்கதரிசியின் புரட்சிகரமான செயல்களை வேதாகமம் பதிவு செய்கிறது. இந்த தீர்க்கதரிசி கொடூரமான ராஜா ஆகாபிடம் தேவனின் செய்தியைத் தைரியமாகத் தெரிவித்தார். ராஜாவுக்கு அவர் சொன்ன செய்தி இனிமையானதல்ல, ஆனால் அது சத்தியம் மற்றும் அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அதைப் பேசினார்(வ.42). அதே காலகட்டத்தில் வாழ்ந்து தீர்க்கதரிசனம் உரைத்த எலியா போன்ற பிற தீர்க்கதரிசிகளும் உள்ளனர். அவர்களின் பெயர்களும் செயல்களும் நன்கு அறியப்பட்டாலும், இந்த தீர்க்கதரிசி பெயரிடப்படவில்லை. அப்படியிருந்தும், தேவன் தனக்குக் கொடுத்த பணியை அவர் நிறைவேற்றினார்.

ஸ்னாப்டீல் நகரைச் சேர்ந்த ஊழியரைப் போலவே, இந்த பெயர் தெரியாத தீர்க்கதரிசிக்குச் சூழ்நிலை சவாலாக இருந்தபோதும் உண்மையைப் பேசினார். அங்கீகாரம் கோருவது சாதாரணமாக இருக்கும் ஒரு உலகில், அமைதியாகவும் அடக்கமாகவும் நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தேவனுக்குக் கீழ்ப்படிய முயல்வோம். தேவனின் பிள்ளைகளாகிய நாம் நமது உறவுகள், பேச்சு மற்றும் செயல்கள் மூலம் அவருடைய செய்தியைத் தெரிவிக்கும்போது, நாமும் மாற்றத்தின் கருவியாக இருக்க முடியும். பெயர் இல்லாவிட்டாலும் நாம் அறியப்படாதவர்கள் அல்ல. ஏனென்றால், தேவன் நம் செயல்களைப் பார்க்கிறார், எவரும் அறியாதபோதும் நாம் என்ன செய்கிறோம் என்பதை அவர் அறிவார் (எபிரெயர் 6:10). 

 

நல்ல பிரியாணி

வர்ஷாவின் உணவுக் கடையில் அதிகம் விற்பனையாகும் உணவு அவரது பிரியாணிதான். அவள் வெங்காயத்தை பொன் நிறமாக மாறும் வரை கவனமாக வறுத்தெடுப்பாள். எனவே, வழக்கமான வாடிக்கையாளர் ஒருவர், “உங்கள் பிரியாணி சுவை வித்தியாசமானது. சுவை மேம்பட்டதாக தெரியவில்லை” என்றார்.

வர்ஷாவின் புதிய உதவியாளர், இந்த முறை அதைத் தயாரித்து, அது ஏன் வித்தியாசமானது என்பதை விளக்கினார்: “வழக்கமான முறையில் நான் வெங்காயத்தை வறுக்கவில்லை, ஏனென்றால் நான் அதை வீட்டில் அவ்வாறு செய்வது வழக்கம். மிளகாய் தூளும் அதிகம் சேர்த்தேன். என் கருத்துப்படி, அது நன்றாக சுவைக்கிறது.” செய்முறை வழக்கத்தைப் புறக்கணித்துவிட்டு, அதற்குப் பதிலாக அதை தன்னுடைய பாணியில் அவள் செய்து காண்பித்தாள்.

நான் சில சமயங்களில் தேவனுடைய ஆலோசனைகளுக்கு இப்படித்தான் பதிலளிப்பேன். வேதத்தில் கொடுக்கப்பட்டுள்ள அவருடைய கட்டளைகளை முழுமையாகக் கடைப்பிடிப்பதற்குப் பதிலாக, நான் என் கருத்துக்களுக்கு உட்பட்டு என் வழியில் செல்கிறேன்.

சீரிய இராணுவத்தின் படைத்தளபதியான நாகமானும் இதேபோன்ற தவறை செய்யும் விளிம்பில் இருந்தான். தன் தொழுநோய் குணமாக யோர்தானில் தன்னைக் கழுவும்படி எலிசா தீர்க்கதரிசி மூலம் தேவனுடைய அறிவுறுத்தலைப் பெற்றபோது, பெருமிதம் கொண்ட படைவீரன் கோபமடைந்தான். தேவனுடைய கட்டளையை விட அவனது சுயகருத்து மேலானது என்று நம்பி, தனது தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதற்கான தனது சொந்த எதிர்பார்ப்புகளை அவன் பேசினான் (2 இராஜாக்கள் 5:11-12). இருப்பினும், எலிசாவின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கும்படி அவனுடைய ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தினர் (வச. 13). இதன் விளைவாக, நாகமான் குணமடைந்தான்.

நாம் தேவனுடைய வழியில் விஷயங்களைச் செய்யும்போது, விவரிக்க முடியாத சமாதானத்தை அனுபவிக்கிறோம். அவருடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவருடன் இணைந்து பணியாற்றுவோம். 

.

இராஜ்ய வடிவில் பணித்தளம்

இங்கிலாந்தின் தொழிற்சாலைகள் இருண்ட இடங்களாக இருந்தன. இறப்புகள் அதிகமாக நிகழ்ந்தன. தொழிலாளர்கள் பெரும்பாலும் வறுமையில் வாழ்ந்தனர். “சேரியில் வசிக்கும் உழைக்கும் வர்க்கம் எவ்வாறு இலட்சியங்களை வளர்த்துக் கொள்ள முடியும்,” என்று எண்ணிய ஜார்ஜ் கேட்பரி, தனது விரிவடையும் சாக்லேட் வணிகத்திற்காக ஒரு புதிய வகையான தொழிற்சாலையை உருவாக்கினார். அது அவரது தொழிலாளர்களுக்கு பெருமளவில் பயனளித்தது. இதன் விளைவாக, முன்னூறுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட போர்ன்வில்லே என்ற அந்த குக்கிராமம், விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள் மற்றும் கேட்பரியின் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான தேவாலயங்கள் என்று வடிவமைக்கப்பட்டது. அவர்களுக்கு நல்ல ஊதியமும் மருத்துவ சேவையும் வழங்கப்பட்டது. இவை அனைத்திற்கும் கேட்பரி கிறிஸ்துவின் மீது வைத்த நம்பிக்கையே காரணம்.

தேவனுடைய சித்தம் “பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று இயேசு ஜெபிக்கக் கற்றுக்கொடுக்கிறார் (மத்தேயு 6:10). காட்பரி செய்தது போல், இயேசு கற்றுக்கொடுத்த ஜெபத்தின் அடிப்படையில், நம்முடைய பணியிடங்கள் அன்றன்றுள்ள ஆகாரத்தை சம்பாதிக்கும் இடமாகவும் கடனாளிகளை மன்னிக்கிற இடமாகவும் இருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க உதவுகிறது (வச. 11-12). ஒரு வேலையாளுக்கு, “கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து” (கொலேசெயர் 3:23) வேலை செய்ய ஊக்குவிக்கிறது. முதலாளிகளாக, ஊழியர்களுக்கு “வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்ய” (4:1) ஊக்குவிக்கிறது. நமது பங்கு எதுவாக இருந்தாலும், ஊதியமாக இருந்தாலும் சரி, தன்னார்வமாக இருந்தாலும் சரி, நாம் சேவை செய்பவர்களின் நல்வாழ்வைக் கவனிப்பதைக் குறிக்கிறது.

ஜார்ஜ் கேட்பரியைப் போலவே, தேவன் நம் சுற்றுப்புறங்களுக்கும் பணியிடங்களுக்கும் பொறுப்பாக இருந்தால், விஷயங்கள் எப்படி வித்தியாசமாக இருக்கும் என்று கற்பனை செய்யலாம். ஏனெனில் அவர் இருக்கும் போது மக்கள் செழித்து வளர்கிறார்கள்.