Archives: ஜூலை 2022

“உங்களுக்கு சொந்தமாக்குங்கள்!"

ஜூன் 11, 2002 அன்று, “அமெரிக்கன் ஐடல்” என்னும் பாடும் போட்டி துவங்கியது. ஒவ்வொரு வாரமும், பங்கேற்றவர்கள் பிரபலமான பாடல்களில், தங்கள் சொந்த வரிகளில் பாடினார்கள். பார்வையாளர்கள், போட்டியின் அடுத்த சுற்றுக்கு யார் முன்னேறினார்கள் என்று வாக்களித்தனர்.

நிகழ்ச்சி நடுவர்களில் ஒருவரான, ராண்டி ஜாக்சன், “நீங்கள் அந்தப் பாடலை உங்களுடைய சொந்த பாடலாக்கிக்கொண்டீர்கள்” என்று அவர்களைப் பாராட்டுவது வழக்கம். ஒரு பாடகர், ஒரு பழக்கமான ட்யூனை எடுத்து, அதை கற்றுக்கொண்டு, அதை ஒரு தனித்துவமான புதிய வழியில் பாடியபோது அவர் அந்தப் பாராட்டுகளுக்கு பாத்திரமானார். “அதைத் தனக்கென  சொந்தமாக்கிக்கொள்ள" அதை முழுமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் சொந்தமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். பின்னர், அதை மேடையில் உலகிற்கு வெளிப்படுத்தலாம்.

நம்முடைய விசுவாசத்தையும் அதை பிரதிபலிப்பதையும் சொந்தமாக்கிக் கொள்ளும்படியான ஒன்றைச் செய்ய பவுல் நம்மை அழைக்கிறார். பிலிப்பியர் 3இல், தேவனுக்கு முன்பாக நீதிமானாய் இருப்பதற்கான முயற்சிகளை அவர் நிராகரிக்கிறார் (வச. 7–8). மாறாக, “கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து," வாழ அவர் நமக்குக் கற்பிக்கிறார் (வச. 9). மன்னிப்பு மற்றும் மீட்பின் பரிசு நமது உந்துதலையும் இலக்குகளையும் மாற்றுகிறது: “கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்" (வச. 12).

இயேசு நம் வெற்றியை உறுதிப்படுத்துகிறார். நம் வேலை? அந்த உண்மையை அறிந்துக்கொண்டு, தேவனின் வசனத்தை நாம் உள்வாங்கி, உடைந்த நம் உலகத்தின் மத்தியில் வாழவேண்டும். அதாவது, நாம் நமது விசுவாசத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் “நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக" (வச. 16) என்று வலியுறுத்துகிறார்.

 

சூரிய ஒளி வட்டம்

அது ஒரு வெப்பமான கோடை நாள். நானும் எனது நான்கு வயது பேத்தி ரிதுவும் பந்து விளையாடுவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வராந்தாவில் கண்ணாடி கோப்பையில் தண்ணீருடன் அமர்ந்திருந்தபோது, ரிது முற்றத்தைப் பார்த்து, “சூரிய ஒளி தரையில் படுவதைப் பாருங்கள்” என்றாள். இருண்ட நிழல்களுக்கு மத்தியில் ஒளியின் வட்டத்தை உருவாக்க சூரிய ஒளி அழகாய் ஊடுருவுகின்றது. 

சூரிய ஒளி வட்டம். இருண்ட நாட்களில் நம்பிக்கையைத் தேடுவதற்கு இது ஒரு அழகான படம் அல்லவா? பெரும்பாலும் சவாலான நேரங்களின் மத்தியில், நிழல்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஒளியின் மீது கவனம் செலுத்துவது சிறந்தது. 

அந்த ஒளிக்கு ஒரு பெயர் உண்டு - இயேசு. இயேசு மாம்சத்தில் வந்தபோது, உலகில் உதித்த பிரகாசத்தை விவரிக்க மத்தேயு ஏசாயாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார்: “இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது” (மத்தேயு 4:16; ஏசாயா 9:2ஐயும் பார்க்கவும்). “மரண இருளில்” நாம் வாழும்போது, பாவத்தின் விளைவுகள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. ஆனால் அந்த இருளை பிரகாசிபிக்கிறவர், உலகின் மகத்தான மற்றும் புகழ்பெற்ற ஒளியான இயேசு (யோவான் 1:4-5).

“சூரிய ஒளியின் வட்டங்கள் மின்னுவது போல” இயேசுவின் அன்பு மற்றும் இரக்கத்தின் ஒளி,  நம் இருளில் ஊடுருவி, நம் நாளை ஒளிரச் செய்யவும், நம் இதயங்களை நம்பிக்கையுடன் பிரகாசிக்கவும் செய்கிறது.

தேவனுடைய நன்மைகளைத் தொடர்ந்து..

எனது கல்லூரி நாட்களில், பெண்கள் துணிக்கடையில் நான் பகுதி நேர வேலை பார்த்தேன். அங்கு பொருட்கள் வாங்க வந்த சிலரை சந்தேகப்பட்ட கடையின் பெண் பாதுகாவலர் ஒருவர், அவர்கள் கடையில் பொருட்களை திருடியிருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டு பின் தொடர்ந்தார். அந்த கடையின் உரிமையாளருடைய பார்வையில் சந்தேகிக்கக்கூடியவர்கள் என்று சிலர் இருக்கிறார்கள். அவருடைய பார்வையில் நல்லவர்களாய் தெரிந்தவர்களை விட்டுவிட்டனர். சில கடைகளில் சந்தேகப்பட்டு, என்னையே பின்தொடர்ந்திருக்கின்றனர். அதினுடைய நுணுக்கங்களை இப்பொழுதும் நான் அறிந்துள்ளதால் அது ஒரு  சுவாரஸ்யமான அனுபவத்தையே கொடுத்தது.

இதற்கு நேர்மாறாக, தாவீது, தன்னை இரண்டு தெய்வீக ஆசீர்வாதம் பின்பற்றுவதாக அறிவித்தார். அவை கர்த்தரின் நன்மையும் கிருபையுமே. இந்த இரண்டு வரங்களும் எப்போதும் மெய்யான அன்போடு அவருடன் இருக்கும். “காக்கும் இரண்டு தூதர்கள்" என்று சுவிசேஷகர் சார்லஸ் ஸ்பர்ஜன் குறிப்பிடும் கர்த்தருடைய தூதர்கள், இருண்ட நாட்களிலும் பிரகாசமான நாட்களிலும் தேவனை விசுவாசிப்பவர்களின் கூடவே இருப்பார்கள். மந்தமான குளிர்கால நாட்களிலும் பிரகாசமான கோடைகால நாட்களிலும், அவருடைய நன்மை நம் தேவைகளை பூர்த்தி செய்கிறது. அவருடைய கிருபை நம் பாவங்களை மூடுகிறது.

ஒரு காலத்தில் மேய்ப்பனாக இருந்த தாவீது, கர்த்தருடைய நன்மையும் கிருபையையும் இணைக்கப்பட்டதின் நோக்கத்தை அறிந்திருந்தார். பயம், கவலை, சோதனை, சந்தேகம் போன்றவைகளும் நம்மைத் தொடரக்கூடியது. நிச்சயமாகவே தாவீதுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் கர்த்தருடைய நன்மையும் கிருபையையும் எப்போதும் நம்மை தொடர்ந்து பிடிக்கிறது என்று அவர் நம்பினார்.

தாவீது, “என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங்கீதம் 23:6) என்று மகிழ்ந்து களிகூறினார். இவைகளே நம்மைத் தொடர்ந்து வரக்கூடிய ஆச்சரியமான பரிசு. 

 

முழு உலகமும் பாடும்போது

1970களின் பிரபலமான விளம்பரம் ஒன்று ஒரு தலைமுறையையே ஊக்குவித்தது. கோகோ கோலாவின் “தி ரியல் திங்” விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் இசைக் குழுவினரால் உருவாக்கப்பட்டு, இறுதியில் ஒரு முழு நீளப் பாடலாக உருவெடுத்தது. அது உலகெங்கிலும் இருந்த இசை அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்தது. ஆனால் ரோம் நகருக்கு வெளியே, ஒரு மலை உச்சியில் இளைஞர்கள் பாடிய அந்த பாடலின் தொலைக்காட்சி ஒளிபரப்பினை பலர் மறந்திருக்கமாட்டார்கள். தேனீக்களின் தரிசனம், பழங்களை ஈனும் மரங்கள், பாடலாசிரியரின் விருப்பத்தை உலகெங்கிலும் பறைசாற்றுவதற்கு அன்போடும், ஒற்றுமையுடனும் அப்பாடலை நாம் எதிரொலித்தோம். 

அப்போஸ்தலனாகிய யோவான், அந்த இலட்சியக் கனவைப் போன்ற ஒன்றை விவரிக்கிறார். அது மிகப் பெரியது. “அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்” (வெளி. 5:13) பாடிய ஒரு பாடலை அவர் கற்பனை செய்தார். இந்த பாடலில் விசித்திரமாக எதுவும் இல்லை. ஆனால் நமக்கான பெரிய விலைக்கிரயத்தைக் கொடுத்தவருக்காய் பாடப்பட்டது. யுத்தம், மரணம் மற்றும் பாதிப்புகள் என்று நம் கண் முன்னே நிழலாடும் காரியங்களிலிருந்து அவருடைய அன்பின் தியாகம் நம்மை மேற்கொள்கிறது. 

ஆயினும் ஆட்டுக்குட்டியானவர்  நம் பாவத்தைச் சுமந்து, மரணத்தை ஜெயித்து, மரண பயத்தைப் போக்கவும், வானத்தையும் பூமியையும் முழு இணக்கத்துடன் பாட கற்றுக்கொடுக்கவும் எதிர்பார்த்தார்.

 

திறவுகோல்

“தி ஹ்யூமன் கண்டிஷன்” (The Human Condition) என்னும் பிரபலமான தன்னுடைய புத்தகத்தில், தாமஸ் கீட்டிங் இந்த மறக்கமுடியாத கதையை பகிர்கிறார். ஒரு குருவானவர், தனது வீட்டின் சாவியைத் தொலைத்துவிட்டு, புல் வெளியில் தேடிக்கொண்டு இருந்தராம். அவரது சீடர்கள் அவர்த் தேடுவதைக் கண்டதும், அவர்களும் தேடினார்களாம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியாக, புத்திசாலித்தனமான சீடர்களில் ஒருவர், “குருவே, சாவியை எங்கே தொலைத்தீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கேட்க, அதற்கு குருவானவர், “அதை நான் வீட்டில் தொலைத்தேன்” என்று சொன்னாராம். “அப்படியானால் நாம் ஏன் அதை இங்கே தேடுகிறோம்?" என்று கேட்டாராம். அதற்கு அவர், “அதை விட இங்கு தான் வெளிச்சம் அதிகமாக இருக்கிறது” என்று பதிலளித்தாராம். 

“தேவனுடைய பிரசன்னத்தை அனுபவிக்கும் நெருக்கமான உறவு என்னும் சாவியை நாம் தொலைத்துவிட்டோம். அந்த அனுபவம் இல்லாமல், நம்மால் எதுவும் செய்ய முடியாது. அது நம்மோடிருந்தால் அனைத்தும் நேர்த்தியாய் இருக்கும்" என்று கீட்டிங் நிறைவுசெய்கிறார்.

வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளில் தேவன் நம்மோடிருந்தார் என்பதை சுலபமாய் மறந்துவிடுகிறோம். ஆனால் எல்லா தவறுகளையும் நாம் தவிர்க்கும்போது, உண்மையான நன்மையை நமக்கு தருவதற்கு அவர் ஆயத்தமாய் இருக்கிறார். மத்தேயு 11இல், தேவன் தம்முடைய வழிகளை “ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து,”; “பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால்” (வச. 25) இயேசு பிதாவை துதிக்கிறார். பின்னர் அவர், “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!" (வச. 28) இளைப்பாறுதலுக்காய் தம்மிடம் வரும்படி அழைக்கிறார்.

சிறு குழந்தைகளைப் போலவே, “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்” (வச. 29) என்று சொன்ன நம்முடைய குருவிடத்திலிருந்து மெய்யான இளைப்பாறுதலை நாம் பெற்றுக்கொள்ள முடியும். நம்மை நித்திய வீட்டிற்கு அழைத்துச்செல்ல அவர் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார். 

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனை அறியச்செய்தல்

தேவன் மீதும் மக்கள் மீதும் கேத்ரின் கொண்டிருந்த அன்பானது வேதாகம மொழிபெயர்ப்பு பணியில் அவரை ஈடுபடச்செய்தது. இந்தியாவில் உள்ள பெண்கள் தங்கள் தாய்மொழியில் வேதாகமத்தைப் படித்து, அதை ஆழமாகப் புரிந்துகொண்டபோது அவர் மகிழ்ச்சியடைகிறார். அவர் சொல்லும்போது, “அவர்கள் வேதத்தை படித்து புரிந்துகொள்ளும்போது அடிக்கடி கைதட்டவோ மற்ற விதங்களிலோ தங்களை உற்சாகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் இயேசுவைப் பற்றி வாசித்து, ‘ஆஹா அற்புதம்!’ என்று சொல்கிறார்கள்” என்று ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

அதிகமான மக்கள் தங்கள் சொந்த மொழியில் வேதத்தை வாசிக்க வேண்டும் என்று கேத்ரின் ஏங்குகிறார். இந்த விதத்தில், பத்மூ தீவில் இருந்த வயதான சீஷனான யோவானின் பார்வையை அவர் தத்தெடுக்கிறார். ஆவியின் மூலம், தேவன் அவரை பரலோகத்தின் சிம்மாசன அறைக்குள் கொண்டு சென்றார். அங்கு அவர் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள்... சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்க” (வெளிப்படுத்தல் 7:9) காண்கிறார். அவர்களெல்லாரும் “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்” (வச. 10). 

தேவன் தன்னை ஆராதிக்கும் ஏராளமான ஜனங்களைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அவர்களுக்காக ஜெபிப்பவர்களை மட்டும் பயன்படுத்துவதில்லை. இயேசுவின் நற்செய்தியை அன்புடன் தங்கள் அண்டை வீட்டாரிடத்தில் கொண்டுசெல்பவர்களையும் பயன்படுத்துகிறார். “எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” (வச. 12) என்று அவரை துதித்து இந்த பணியில் நாமும் கைகோர்க்கலாம். 

 

தேவனால் அழைக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுதல்

“சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கான உன்னுடைய வேலை, ஆன்சைட் வானொலி ஒலிபரப்பை ஏற்பாடு செய்வது” என்று என் முதலாளி என்னிடம் கூறினார். இது எனக்கு புதிய அனுபவம் என்பதால் நான் சற்று பயந்தேன். ஆண்டவரே, நான் இது போன்ற எதையும் இதற்கு முன்பாக செய்ததில்லை தயவாய் எனக்கு உதவிசெய்யும் என்று ஜெபித்தேன். 

எனக்கு வழிகாட்ட தேவன் ஆதாரங்களையும் மக்களையும் வழங்கினார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள், நான் வேலை மும்முரத்தில் இருக்கும்போது சில முக்கியக் காரியங்களை எனக்கு அவ்வப்போது நினைவூட்டுவதற்கென்று சில நபர்களை தேவன் எனக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த ஒளிபரப்பு நன்றாக இருந்தது. ஏனென்றால், எனக்கு என்ன தேவை என்பதை தேவன் அறிந்திருந்தார். மேலும், எனக்கு அவர் கொடுத்த திறமைகளைப் பயன்படுத்த என்னை ஊக்கப்படுத்தினார். 

தேவன் நம்மை ஓர் பணிக்கு அழைத்தால், அதற்கு நம்மை தயார்படுத்துகிறார். அவர் பெசலெயேலை ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்ய நியமித்தபோது, பெசலெயேல் ஏற்கனவே ஓர் திறமையான கைவினைஞராக இருந்தான். தேவன் அவனை தம் ஆவியால் நிரப்பி, ஞானம், புரிதல், அறிவு மற்றும் எல்லாவிதமான திறமைகளாலும் அவனை மேலும் ஆயத்தப்படுத்தினார் (யாத்திராகமம் 31:3). தேவன் அவனுக்கு அகோலியாப் என்னும் ஒரு உதவியாளரையும், திறமையான பணியாளர்களையும் கொடுத்தார் (வச. 6). அவனது தலைமைத்துவத்தோடு இணைந்து செயல்பட்ட குழுவினர், ஆசரிப்புக்கூடாரம், அதன் அலங்காரங்கள் மற்றும் ஆசாரியர்களின் ஆடைகள் என்று அனைத்தையும் வடிவமைத்து உருவாக்கியது. இஸ்ரவேலர்கள் தேவனை வழிபடுவதற்கு இவைகள் கருவிகளாக இருந்தன (வச. 7-11).

பெசலெயேல் என்றால் “தேவனுடைய நிழலில்” என்று பொருள். கைவினைஞர்கள் தேவனுடைய பாதுகாப்பு, வல்லமை மற்றும் ஆசீர்வாதத்தின் கீழ் பணியாற்றினர். ஓர் பணியைச் செய்து முடிக்க தைரியமாக அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவோம். நமக்கு என்ன தேவை, எப்படி, எப்போது கொடுக்கவேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.

 

இடமாற்றம்

2020-ல் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது, எனது நண்பர் ஜோன் மாரடைப்பால் இறந்துவிட்டார். முதலில் அவரது குடும்பத்தார், தங்களது திருச்சபையில் அவரது நினைவுச் சடங்கு நடைபெறும் என்று அறிவித்தனர். ஆனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அதை வீட்டில் நடத்துவது நல்லது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக “ஜோன் வார்னர்ஸ் - இடமாற்றம்!” என்று ஆன்லைனில் புதிய அறிவிப்பு போடப்பட்டது. 

ஆம், அவருடைய குடியிருப்பு இடம் மாறிவிட்டது! அவர் பூமியிலிருந்து பரலோகத்திற்கு சென்றுவிட்டார். தேவன் அவருடைய வாழ்க்கையை பல ஆண்டுகளுக்கு முன்பே மறுரூபமாக்கியிருந்தார். அவர் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தேவனுக்கு அன்புடன் ஊழியம் செய்தார். மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் கிடந்தபோதும், போராடிக்கொண்டிருக்கும் தனக்குப் பிடித்த மற்றவர்களைப் பற்றிக் கேட்டார். இப்போது அவர் தேவனோடு இருக்கிறார். அவருடைய குடியிருப்பு மாற்றப்பட்டுவிட்டது. 

அப்போஸ்தலனாகிய பவுலுக்கு, கிறிஸ்துவுடன் வேறொரு இடத்தில் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது (2 கொரிந்தியர் 5:8). ஆனால் மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக, அவர் பூமியில் தங்கியிருக்கவேண்டியது அவசியம் என்று கருதினார். அவர் பிலிப்பியர்களுக்கு எழுதியபோது, “அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்” (பிலிப்பியர் 1:24) என்று எழுதுகிறார். ஜோன் போன்ற ஒருவருக்காக நாம் துக்கப்படுகையில், அவர்கள் இப்பூமியில் பலருக்கு அவசியப்படலாம் என்று நீங்கள் தேவனிடத்தில் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுடைய குடியிருப்பை மாற்றுவதற்கென்று தேவன் உகந்த நேரத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். 

ஆவியின் பெலத்தில், தேவனை முகமுகமாய் தரிசிக்கும் நாள் வரும்வரை, இப்போது “அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்” (2 கொரிந்தியர் 5:9). அதுவே நமக்கு மேன்மையாயிருக்கும்.