ஜூன் 11, 2002 அன்று, “அமெரிக்கன் ஐடல்” என்னும் பாடும் போட்டி துவங்கியது. ஒவ்வொரு வாரமும், பங்கேற்றவர்கள் பிரபலமான பாடல்களில், தங்கள் சொந்த வரிகளில் பாடினார்கள். பார்வையாளர்கள், போட்டியின் அடுத்த சுற்றுக்கு யார் முன்னேறினார்கள் என்று வாக்களித்தனர்.

நிகழ்ச்சி நடுவர்களில் ஒருவரான, ராண்டி ஜாக்சன், “நீங்கள் அந்தப் பாடலை உங்களுடைய சொந்த பாடலாக்கிக்கொண்டீர்கள்” என்று அவர்களைப் பாராட்டுவது வழக்கம். ஒரு பாடகர், ஒரு பழக்கமான ட்யூனை எடுத்து, அதை கற்றுக்கொண்டு, அதை ஒரு தனித்துவமான புதிய வழியில் பாடியபோது அவர் அந்தப் பாராட்டுகளுக்கு பாத்திரமானார். “அதைத் தனக்கென  சொந்தமாக்கிக்கொள்ள” அதை முழுமையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் சொந்தமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். பின்னர், அதை மேடையில் உலகிற்கு வெளிப்படுத்தலாம்.

நம்முடைய விசுவாசத்தையும் அதை பிரதிபலிப்பதையும் சொந்தமாக்கிக் கொள்ளும்படியான ஒன்றைச் செய்ய பவுல் நம்மை அழைக்கிறார். பிலிப்பியர் 3இல், தேவனுக்கு முன்பாக நீதிமானாய் இருப்பதற்கான முயற்சிகளை அவர் நிராகரிக்கிறார் (வச. 7–8). மாறாக, “கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து,” வாழ அவர் நமக்குக் கற்பிக்கிறார் (வச. 9). மன்னிப்பு மற்றும் மீட்பின் பரிசு நமது உந்துதலையும் இலக்குகளையும் மாற்றுகிறது: “கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்” (வச. 12).

இயேசு நம் வெற்றியை உறுதிப்படுத்துகிறார். நம் வேலை? அந்த உண்மையை அறிந்துக்கொண்டு, தேவனின் வசனத்தை நாம் உள்வாங்கி, உடைந்த நம் உலகத்தின் மத்தியில் வாழவேண்டும். அதாவது, நாம் நமது விசுவாசத்தை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதின் மூலம் “நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக” (வச. 16) என்று வலியுறுத்துகிறார்.