அது ஒரு வெப்பமான கோடை நாள். நானும் எனது நான்கு வயது பேத்தி ரிதுவும் பந்து விளையாடுவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வராந்தாவில் கண்ணாடி கோப்பையில் தண்ணீருடன் அமர்ந்திருந்தபோது, ரிது முற்றத்தைப் பார்த்து, “சூரிய ஒளி தரையில் படுவதைப் பாருங்கள்” என்றாள். இருண்ட நிழல்களுக்கு மத்தியில் ஒளியின் வட்டத்தை உருவாக்க சூரிய ஒளி அழகாய் ஊடுருவுகின்றது. 

சூரிய ஒளி வட்டம். இருண்ட நாட்களில் நம்பிக்கையைத் தேடுவதற்கு இது ஒரு அழகான படம் அல்லவா? பெரும்பாலும் சவாலான நேரங்களின் மத்தியில், நிழல்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஒளியின் மீது கவனம் செலுத்துவது சிறந்தது. 

அந்த ஒளிக்கு ஒரு பெயர் உண்டு – இயேசு. இயேசு மாம்சத்தில் வந்தபோது, உலகில் உதித்த பிரகாசத்தை விவரிக்க மத்தேயு ஏசாயாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார்: “இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது” (மத்தேயு 4:16; ஏசாயா 9:2ஐயும் பார்க்கவும்). “மரண இருளில்” நாம் வாழும்போது, பாவத்தின் விளைவுகள் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. ஆனால் அந்த இருளை பிரகாசிபிக்கிறவர், உலகின் மகத்தான மற்றும் புகழ்பெற்ற ஒளியான இயேசு (யோவான் 1:4-5).

“சூரிய ஒளியின் வட்டங்கள் மின்னுவது போல” இயேசுவின் அன்பு மற்றும் இரக்கத்தின் ஒளி,  நம் இருளில் ஊடுருவி, நம் நாளை ஒளிரச் செய்யவும், நம் இதயங்களை நம்பிக்கையுடன் பிரகாசிக்கவும் செய்கிறது.