Archives: ஜூன் 2022

தேவனுக்காக என் வேலையை செய்தல்

நான் எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையின் கட்டுரை மிக முக்கியமானது என்று உணர்ந்ததால், பத்திரிக்கையின் ஆசிரியருக்கு என்னால் இயன்ற சிறந்த கட்டுரையை வழங்குவதில் சிரமப்பட்டேன். அவருடைய எதிர்பார்ப்பை சந்திக்க தீர்மானித்த நான், மீண்டும் மீண்டும் என்னுடைய சிந்தனைகளை மாற்றி எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால் என் பிரச்சனை என்ன? இது எனக்கு சவாலான ஒரு தலைப்பா? அல்லது ஆசிரியர் என்னுடைய வார்த்தைகளை விட்டுவிட்டு, என்னை அங்கீகரிக்க வேண்டும் என்னும் தனிப்பட்ட ஆதங்கமா?

நம் வேலைப் பளுவிற்கு, பவுல் நம்பகமான ஆலோசனையைக் கொடுக்கிறார். கொலோசெய திருச்சபைக்கு எழுதிய நிருபத்தில், மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாமல், தேவனுக்காக வேலை செய்ய பவுல் விசுவாசிகளுக்கு அறிவுறுத்துகிறார். அப்போஸ்தலர் அறிவுறுத்தியது போல, “நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோசெயர் 3:23-24).

பவுலின் ஆலோசனையின் பிரகாரம், நம்முடைய பூமிக்குரிய எஜமானர்களின் பார்வையில் நாம் நல்லவர்களாய் காண்பித்துக்கொள்வதற்கு பிரயாசப்பட வேண்டாம். அவர்களை மதித்து, நம்மால் முடிந்த நன்மையான காரியங்களை அவர்களுக்கு நிச்சயமாய் செய்யலாம். ஆனால் நாம் தேவனை முன்நிறுத்தி, நம் வேலையை ஆசீர்வதிக்கும்படிக்கு அவரை சார்ந்துகொண்டால், அவர் நம் முயற்சிகளுக்கு ஒளியூட்டுவார். நம்முடைய வெகுமதி? நம் வேலை அழுத்தங்கள் எளிதாகி, நம் பணிகள் நிறைவடைகின்றன. மேலும் “சிறப்பாய் செய்தீர்கள்” என்ற பாராட்டையும் அவரிடத்திலிருந்து நாம் ஒரு நாள் கேட்க முடியும்.

பாவத்திற்கு விலகி ஓடுதல்

இந்த கோடையில் இரண்டு முறை நான் காஜர் காஸ் (கேரட் புல்) என்று சொல்லப்படும் தாவரத்தினால் ஒருவகையான பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டேன். இரண்டு முறை எங்கள் முற்றத்தில் உள்ள தேவையற்ற தாவரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டேன். சிறு வெள்ளைப் பூக்களைக் கொண்ட இந்த காஜர் காஸ் செடிகள் ஓங்கி வளர்ந்திருந்ததை இரண்டு முறையும் பார்க்க நேர்ந்தது. அது எனக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அதின் அருகில் சென்றுவிடலாம் என்று எண்ணினேன். விரைவில், நான் தவறு செய்தேன் என்பதை உணர்ந்தேன். இந்த சிறிய பச்சை விரோதியை நான் நெருங்குவதற்கு பதிலாக, நான் எதிர் திசையில் ஓட்டமெடுத்திருக்கவேண்டும்.

பழைய ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ள யோசேப்புக் கதையில், வளர்ந்து படரும் விஷ தாவரங்களைக் காட்டிலும் கொடிதான பாவத்திலிருந்து விலகியோட வேண்டியதின் அவசியத்தை நாம் பார்க்கிறோம். அவன் எகிப்தின் போத்திபாருடைய வீட்டில் தங்கியிருந்தபோது, போத்திபாரின் மனைவி அவனை இச்சையோடு அணுகுகிறாள். யோசேப்பு அவள் அருகாமையில் செல்ல முயலவில்லை. மாறாக, விலகியோடுகிறான்.
அவள் அவன் மீது பொய்யாகக் குற்றஞ்சாட்டி அவனை சிறையில் தள்ளினாலும், யோசேப்பு தன் வாழ்நாள் முழுவதும் சுத்தமனசாட்சியோடே இருந்தான். ஆதியாகமம் 39:21ல் நாம் பார்க்கிறபடி, “கர்த்தர் அவனோடிருந்தார்.”

தேவனிடத்திலிருந்து நம்மை விலகியோடச் செய்யும் செயல்கள் மற்றும் சூழ்நிலைகளில், பாவத்திற்கு எதிர் திசையில் நாம் ஓடுவதற்கு தேவன் நமக்கு உதவிசெய்ய முடியும். 2 தீமோத்தேயு 2:22ல் பவுல், “பொல்லாத இச்சைகளை விட்டு ஓடுங்கள்” என்று எழுதுகிறார். மேலும் 1 கொரிந்தியர் 6:18ல், “வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள்” என்றும் அறிவுறுத்துகிறார்.
நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரியங்களிலிருந்து விலகியோடுவதற்கு, தேவனுடைய பெலத்தை நாம் சார்ந்துகொள்வோம்.

தேவ சிநேகிதர்களின் சிநேகிதன்

இரண்டு நண்பர்களுக்கு பொதுவான இன்னொரு நண்பர் இருப்பதைக் கண்டறியும் போது, முதல் அறிமுகங்களில் சுவாரஸ்யமான அனுபவம் ஏற்படுவது இயல்பு. அதே போன்று, “உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. விஜயின் அல்லது ஹீனாவின் நண்பர்கள், எனக்கும் நண்பர்தான்" என்று நாம் சிநேகிதர்களின் சிநேகிதர்களை பெரிய மனதுடன் நம்முடைய வீட்டின் விருந்திற்கு வரவேற்கிறோம்.

இயேசுவும் இதே போன்று சொல்லியிருக்கிறார். அவர் பலரை வியாதியிலிருந்து குணமாக்கி, மக்களை கவர்ந்திருக்கிறார். ஆனால் அதே வேளையில், தங்களின் செல்வாக்கை தவறாய் பயன்படுத்தி, ஆலயத்தை வணிகமயமாக்கும் மதத் தலைவர்களின் செயல்களுக்கு ஒத்துப்போகாததால், அவர்களின் வெறுப்பையும் சம்பாதித்தார். இந்த எதிர்ப்புகளின் மத்தியிலும், அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சி, செலவு மற்றும் ஆச்சரியத்தை பெருக்க தீர்மானித்தார். அவர் தம்முடைய சீஷர்களுக்கு வியாதியை குணமாக்கும் அதிகாரத்தைக் கொடுத்து, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கிக்க அவர்களை அனுப்புகிறார். “உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்” (10:40) என்று அவர்களுக்கு உறுதியளிக்கிறார்.

வாழ்க்கையை மாற்றும் ஒரு அழகான நட்பிற்கு இதை விட ஒரு நல்ல எடுத்துக்காட்டை கற்பனை செய்வது கடினம். சீஷர்களுக்கு தங்கள் வீட்டைத் திறந்துகொடுக்கும் எவருக்கும், அல்லது அவர்களில் ஒருவருக்கு ஒரு கலசம் தண்ணீரைக் கொடுக்கும் எவருக்கும், இயேசு தேவனின் இருதயத்தில் ஒரு இடத்தை வாக்கு செய்கிறார். அந்த சம்பவம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறினாலும், சிறியதோ அல்லது பெரியதோ, ஒரு தயவுள்ள விருந்தோம்பல் செய்கையானது இன்றும் தேவனுடைய சிநேகிதர்களின் சிநேகிதனாய் நம்மை மாற்றுகிறது.

தேவனின் நிறைவான ஆசீர்வாதம்

திருச்சபையின் பலசரக்கு வாகனத்திலிருந்து மளிகைப் பொருட்களை இறக்க உதவுவதற்காக மூன்று வயது சிறுவனும் அவனது அம்மாவும் ஒவ்வொரு வாரமும் திருச்சபைக்குச் சென்றனர். பலசரக்கு வாகனம் பழுதாகிவிட்டது என்று அவனது அம்மா, பாட்டியிடம் கூறுவதை சிறுவன் கேட்டான். “ஐயோ, அவர்கள் இனி எப்படி பலசரக்குக் கொண்டு வருவார்கள்?” என்று சிறுவன் கேட்க, ஒரு புதிய வாகனம் வாங்குவதற்கு திருச்சபை பணம் திரட்ட வேண்டும் என்று அவனுடைய அம்மா விளக்கினார். சிறுவன் சிரித்தான். “என்னிடம் பணம் இருக்கிறது,” என்று சொல்லிக்கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினான். வண்ணமயமான ஸ்டிக்கர்களால் அலங்கரிக்கப்பட்டு நாணயங்களால் நிறைந்திருந்த பிளாஸ்டிக் ஜாடியுடன் அவன் திரும்பி வந்தான். அதில் தோராயமாக 2500 ரூபாய்க்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சிறுவனிடம் அதிகம் இல்லையென்றாலும், திருச்சபையின் நடவடிக்கைகள் தடைபடாமல் இருக்கும்பொருட்டு, திருச்சபையின் புதிய குளிர்பதன வாகனத்தை வாங்குவதற்கு தேவன் அந்த பணத்தையும் மற்றவர்களுடைய ஊக்கமான காணிக்கைகளோடு சேர்த்துக்கொண்டார்.

உற்சாகமாய் கொடுக்கப்படுகிற சிறிய தொகையானது, தேவனுடைய கரத்தில் வைக்கப்படும்போது, எப்போதும் தேவைக்கு அதிகமானதாய் மாறுகிறது. 2 இராஜாக்கள் 4 இல், ஒரு ஏழை விதவை எலிசா தீர்க்கதரிசியிடம் பொருளாதார உதவி கேட்கிறார். அவளிடம் என்ன இருக்கிறது என்று எலிசா தெரிந்துகொண்டு, அவளது அண்டை வீட்டாரிடத்திலிருக்கும் பாத்திரங்களை வாங்கி வரும்படி சொல்லுகிறார் (வச. 1-4). அவள் சேகரித்த ஜாடிகளில் அவளிடமிருந்த எண்ணெயை கொஞ்சமாய் வார்க்க, தேவன் அவள் வீட்டிலிருந்த அனைத்து பாத்திரங்களையும் எண்ணெயால் நிரப்புகிறார் (வச. 5-6). எலிசா அவளிடம், “நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்” (வச. 7).

நம்மிடம் இல்லாதவற்றில் நாம் கவனம் செலுத்தும்போது, நம்மிடம் இருப்பதைக் கொண்டு தேவன் செய்யும் பெரிய காரியங்களை நாம் இழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஜெபம் முக்கியமானது

“நடக்கவிருக்கும் மூளை ஸ்கேனுக்கான பிரார்த்தனைகள்;” “என் குழந்தைகள் மீண்டும் தேவாலயத்திற்கு வரவேண்டும்;“ “தன் மனைவியை இழந்த டேவின் ஆறுதலுக்காக" இதுபோன்ற ஜெப விண்ணப்பங்களை எங்களின் ஜெப ஊழியக் குழு வாரந்தோறும் பெறுகிறது. நாங்கள் அதற்காக ஜெபித்து, பதில் கடிதத்தையும் அனுப்புவது வழக்கம். ஜெப விண்ணப்ப பட்டியல் பெரிதாய் இருப்பதினால், எங்களுடைய முயற்சி கவனிக்கப்படாத வகையில் சிலவேளைகளில் இருக்கும். ஆனால் சமீபத்தில் டேவ் என்பவர் இறந்துபோன தன்னுடைய மனைவியின் இரங்கல் செய்தியின் நகலுடன், ஓர் நன்றிக் கடிதத்தையும் வைத்து அனுப்பியிருந்தார். அதைப் பார்த்த பின்பு எங்களுடைய சோர்வான சிந்தை மாறியது. ஜெபம் மிகவும் அவசியம் என்பதை நான் புதிதாக உணர்ந்தேன்.

நாம் ஊக்கமாக, இடைவிடாமல், நம்பிக்கையுடன் ஜெபிக்கவேண்டும் என்று இயேசு முன்மாதிரியாகக் கூறினார். பூமியில் அவருடைய வாழ்ந்த காலம் குறைவாகவே இருந்தது. ஆனால் அவர் ஜெபிப்பதற்காக தனி நேரம் செலவழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார் (மாற்கு 1:35; 6:46; 14:32).

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இஸ்ரவேலின் ராஜாவான எசேக்கியாவும் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொண்டார். ஓர் வியாதியின் நிமித்தம் அவர் சீக்கிரம் மரிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது (2 இராஜாக்கள் 20:1). எசேக்கியா வேதனையோடும் வியாகுலத்தோடும், “தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு” (வச. 2) கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினார். இந்த விஷயத்தில் தேவன் உடனே பதில்கொடுக்கிறார். தேவன் எசேக்கியாவின் வியாதியை சுகமாக்கி, அவருக்கு பதினைந்து ஆண்டுகள் ஆயுசுநாட்களை பெருகப்பண்ணி, அவருடைய எதிரிகளிடமிருந்து இளைப்பாறுதலையும் வாக்குப்பண்ணுகிறார் (வச. 5-6). எசேக்கியா நல் வாழ்க்கை வாழ்ந்தார் என்பதற்காக தேவன் இந்த கிருபைகளை அவருக்குக் கொடுக்கவில்லை, மாறாக, “என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும்” தேவன் அவருக்கு கிருபையளிப்பதாக கூறுகிறார். நாம் கேட்கிற அனைத்தையும் தேவனிடத்திலிருந்து பெறாமல் இருக்கலாம், ஆனால் தேவன் நம்முடைய அனைத்து ஜெபங்களையும் கேட்டு கிரியை நடப்பிக்கிறவராயிருக்கிறார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.

 

நாம் நம்பத்தகுந்த சிருஷ்டிகர்

மேரி ஷெல்லியின் “ஃபிராங்கண்ஸ்டைன்” என்ற பிரபல நாவலில் உள்ள “அரக்கன்” மிகவும் பரவலாக அறியப்பட்ட இலக்கிய பாத்திரங்களில் ஒன்றாகும். ஆனால் அந்த நாவலை ஆழமாய் படித்தவர்கள், அந்த அரக்கனை தோற்றுவித்த மாயை விஞ்ஞானியான விக்டர் ஃபிராங்கண்ஸ்டைனையே உண்மையான அரக்கனாக ஷெல்லி சித்தரிக்கிறார் என்று அறிவர். புத்திசாலித்தனமான உயிரினத்தை உருவாக்கிய பிறகு, விக்டர் அதற்கு வழிகாட்டுதல், தோழமை அல்லது மகிழ்ச்சியின் நம்பிக்கையை கொடுக்க மறுக்கிறார். அந்த உயிரினம், விரக்தி மற்றும் கோபப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறது. ஓர் தருணத்தில் அந்த உயிரினம் விக்டரைப் பார்த்து, “என் படைப்பாளியே, நீ என்னை துண்டு துண்டாக கிழித்து வெற்றி பெறும்” என்று கூறுவதைப் பார்க்கமுடியும். 

ஆனால் தன் படைப்புகள் மது தீராத அன்புகொண்ட மெய்யான சிருஷ்டிகர் எப்பேற்பட்டவர் என்பதை வேதம் வெளிப்படுத்துகிறது. ஏதோ சிருஷக்கவேண்டும் என்பதற்காக தேவன் உலகத்தை படைக்கவில்லை, மாறாக, அதை அழகாகவும் நேர்த்தியாகவும் படைத்திருக்கிறார் (ஆதியாகமம் 1:31). ஆனால் கொடூரமான தீமையைத் தேர்ந்தெடுக்க மனிதகுலம் அவரிடமிருந்து திசைமாறியபோதும், மனிதகுலத்திற்கான தேவனுடைய அர்ப்பணிப்பும் அன்பும் மாறவில்லை.

நிக்கோதேமுக்கு இயேசு விளக்கியதுபோல், தன்னுடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்காய் பலியாய் கொடுக்குமளவிற்கு இந்த உலகத்தின்மீதான தேவனுடைய அன்பு விலையேறப்பெற்றது (யோவான் 3:16). இயேசு தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்து, நம்முடைய பாவத்தின் விளைவுகளைச் சுமந்துகொண்டு, “தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” (வச. 15) நம்மை உயர்த்துகிறார். 

நாம் மனப்பூர்வமாய் நம்பக்கூடிய ஓர் சிருஷ்டிகர் நமக்கு இருக்கிறார். 

 

இயேசுவின் அதிகாரம்

பல வருடங்களாக போதைப்பொருள் அடிமைத்தனத்திலிருந்த என் மகன் ஜியோப்பை இயேசு விடுவித்த பிறகும், எனக்கு இன்னும் சில கவலைகள் இருந்தது. நாங்கள் ஒன்றாக இருந்தாலும், அவனுடைய எதிர்காலத்தைவிட அவனுடைய கடினமான கடந்த காலத்தைக் குறித்து நான் அதிக கவலைப்பட்டேன். போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீண்டும் மீண்டும் சரிசெய்யவேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஓர் குடும்பக் கூடுகையில் நான் ஜியோப்பை பிடித்து இழுத்து, அவனிடம், “நமக்கு ஒரு எதிரி இருக்கிறான். அவன் மிகவும் வலிமையானவன் என்பதை புரிந்துகொள்” என்றேன். அவனும் “எனக்கு தெரியும் அப்பா, அவனுக்கு வலிமை இருக்கிறது ஆனால் அதிகாரம் இல்லை” என்று பதிலளித்தான். 

அந்த தருணத்தில், நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்டு, அவரை நாடுகிறவர்களின் வாழ்க்கையை மறுரூபமாக்குகிற இயேசுவை நான் நினைவுகூர்ந்தேன். அவர் பரமேறி செல்வதற்கு முன்பு தன்னுடைய சீஷர்களைப் பார்த்து, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய்...” (மத்தேயு 28:18-19) என்று கொடுக்கப்பட்ட கட்டளையையும் நான் நினைவுகூர நேரிட்டது. 

சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு, நமது கடந்தகாலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நாம் அவரிடத்தில் வருவதற்கு வழி செய்துள்ளார். அவர் நமது கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் தன் கையில் வைத்திருக்கிறார். அவர் எப்பொழுதும் நம்முடன் இருப்பார் என்று வாக்களிக்கப்பட்டிருப்பதால் (வச. 20), அவர் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்றும், நம்முடைய ஜீவியம் அவரது பலத்த கரங்களில் உள்ளது என்றும் நாம் உறுதியாக நம்பலாம். நாம் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நல்ல நம்பிக்கையை இயேசு நமக்கு தருகிறார். பிசாசும் உலகமும் தற்காலிகமான இவ்வுலகத்தில் சில வல்லமைகளைக் கொண்டு செயலாற்றலாம். ஆனால் “சகல அதிகாரமும்” என்றென்றும் இயேசுவுக்கே சொந்தமானது.