Archives: ஆகஸ்ட் 2021

இயேசுவை பகிர்தல்

டுவைட் மூடி (1837-99) என்னும் சுவிசேஷகர் இரட்சிக்கபட்ட பின்னர், ஒரு நாளைக்கு ஒருவரிடத்திலாவது சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதில்லை என்று தீர்மானித்தார். வேலைப்பளுவின் நிமித்தம் சில வேளைகளில் அவருடைய தீர்மானத்தை வெகு தாமதமாய் நினைவுகூருவதுண்டு. அப்படித்தான் ஒரு நாள் அவர் படுக்கையிலிருக்கும்போது அவருடைய தீர்மானம் அவருக்கு நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து வெளியே போனார். மழை பெய்யும் இந்த நள்ளிரவில் யாரும் இருக்கமாட்டார்களே என்று எண்ணினார். அங்கே சாலையில் குடையோடு நடந்துபோய்க் கொண்டிருந்த ஒரு மனிதனைப் பார்த்தார். வேகமாய் ஓடி, அவருடைய குடையில் தனக்கு அடைக்கலம் கேட்டார். அனுமதி கிடைத்ததும், “புயலின் நடுவில் தங்குவதற்கு உங்களுக்கு இடமிருக்கிறதா? நான் இயேசுவைக் குறித்து உங்களுக்கு சொல்லவா? என்று சுவிசேஷத்தை பகிரத் துவங்கினாராம். 

பாவத்தின் விளைவுகளிலிருந்து தேவன் நம்மை எப்படி இரட்சிக்கிறார் என்றும் சத்தியத்தை பகிர்ந்துகொள்ள மூடி எப்போதும் ஆயத்தமாயிருந்தார். அவருடைய நாமத்தையும், “அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்” (ஏசாயா 12:4) என்று இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைக்கு மூடி கீழ்ப்படிந்தார். இஸ்ரவேலர்கள் அழைக்கப்பட்டது “அவருடைய நாமம் உயர்ந்ததென்று” பிரஸ்தாபம்பண்ணுவதற்கு மாத்திரம் இல்லை, அத்துடன் சேர்த்து தேவன் எப்படி அவர்களின் இரட்சிப்பாய் மாறினார் (வச. 2) என்பதை அறிவிக்கவும் அழைக்கப்பட்டனர். நூற்றாண்டுகள் கழித்து, இன்று நாம் இயேசு மனிதனான ஆச்சரியத்தையும், சிலுவையில் மரித்து, உயிர்தெழுந்த சத்தியத்தையும் அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். 

மூடி செய்தது போல, யாரோ ஒருவர் துணிந்து நம்மிடத்தில் வந்து இயேசுவைக் குறித்து அறிவித்ததினாலேயே நாம் அவரின் அன்பைக் குறித்து கேள்விப்பட்டோம். நாமும் நம்மை இரட்சித்தவரைக் குறித்து நமக்குகந்த வழியில் மற்றவர்களுக்கு அறிவிக்கலாமே.

கிருபையும் இரக்கமும்

தேசிய நெடுங்சாலையின் நடுவில் இருந்த திட்டில் ஒரு சூரியகாந்தி பூ ஒன்று தனித்து ஓங்கி வளர்ந்திருந்தது. அதுவும் வேகப்பாதையின் மிக அருகாமையில் வளர்ந்திருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த சூரியகாந்தி பூவும் தென்படாத பட்சத்தில், இந்த ஒற்றைப் பூவைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். நெடுஞ்சாலையின் நடுவில் இப்படியொரு செடியை தேவனால் மட்டுமே வளர்க்கமுடியும். அவ்வழியாய் அவசர அவசரமாய் கடந்து செல்லும் பயணிகளை புன்முறுவலோடு வரவேற்று, மென்மையாய் வழியனுப்பிக் கொண்டிருந்தது. 

அதைப்போன்று ஆச்சரியப்படும் நேர்மையான ஓர் யூதேய ராஜாவைக் குறித்து பழைய ஏற்பாடு அறிவிக்கிறது. அவனுடைய தகப்பனும் தாத்தாவும் விக்கிரக  வழிபாட்டில் திளைத்திருந்தனர். யோசியா ஆட்சிக்கு வந்து எட்டு வருடங்களில், “தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட” ஆரம்பித்தான் (2 நாளாகமம் 34:3). “ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு” கட்டளையிட்டான். பழுதுபார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆலயத்திலிருந்து நியாயப்பிரமாண புத்தகத்தை கண்டெடுக்கின்றனர் (பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்கள்) (வச. 14). பின்பு தேவன் யோசியாவின் ஆவியை எழுப்பி, தேசத்தின் மக்களை அவர்களின் முற்பிதாக்களின் தேவனுக்கு நேராய் திரும்பும்படி செய்தார். யோசியா “உயிரோடிருந்த நாளெல்லாம்” (வச. 33) மக்கள் கர்த்தரை சேவிக்கும்படி செய்தான். 

கற்பனை செய்துபார்க்க முடியாத இரக்கங்களினால் நிரப்பகிறவர் நம் தேவன். வாழ்க்கையின் சாத்தியமில்லாத சூழ்நிலைகளில் சிறப்பான நன்மை ஒன்றை ஆச்சரியப்படும் வகையில் பூக்க வைக்க அவரால் முடியும். அவரை நோக்கிப் பாருங்கள். அதை இன்றும் அவரால் செய்யமுடியும். 

சுவிசேஷத்தின் வல்லமை

பண்டைய ரோமாபுரிக்குக்கென்று ஒரு “சுவிசேஷம்” இருந்தது. வெர்ஜில் ஸியூஸ் என்னும் கவிஞர், தேவர்களுக்கெல்லாம் தேவன், முடிவில்லாத ஒரு ராஜ்யத்தை ரோமர்களுக்கு கொடுத்துள்ளார் என்று கூறுகிறார். தேவர்கள் அகஸ்து ராயனை தேவ குமாரனாகவும், உலக இரட்சகராகவும், அமைதியும் செழிப்பும் நிறைந்த பொற்காலத்தை உலகத்திற்கு கொடுக்கப்போகிறவராகவும் தீர்மானித்திருக்கிறார்கள் என்பதே அந்த சுவிசேஷம். 

ஆனால் இந்த சுவிசேஷம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ரோம இராணுவத்தின் அடக்குமுறையும் உயிர்சேதங்களும் இந்த சுவிசேஷத்தை வரவேற்புடையதாய் மாற்றவில்லை. அகஸ்துராயனின் சாம்ராஜ்யம் சட்டவிரோதமாக மக்களை அடிமைப்படுத்தி, ஆளும் வர்க்கம் மட்டுமே திருப்தியடைந்திருக்கும்படி செய்தது. 

இந்த சூழ்நிலையிலிருந்தே பவுல் தன்னை கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று அறிமுகப்படுத்திக்கொள்ளுகிறான் (ரோமர் 1:1). இந்த சூழ்நிலையில் நின்றே இயேசு என்ற பெயரை பவுல் ஒரு காலத்தில் வெறுத்தான். தன்னை யூதருக்கு ராஜா என்றும் உலக இரட்சகர் என்றும் இயேசு அறிவித்ததற்காய் பாடுகள் அனுபவித்ததும் இதே சூழ்நிலையில் தான். 

இந்த நற்செய்தியையே பவுல் ரோமருக்கு எழுதின நிருபத்தில் பகிர்ந்து கொள்ளுகிறார். இந்த சுவிசேஷத்தை “விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது” (ரோமர் 1:16). ஆம்! ராயனின் ஆளுகையில் உபத்திரவப்படும் மக்களுக்கு இது எவ்வளவு அவசியம்! சிலுவையிலறையப்பட்டு, பின் உயிர்தெழுந்து, தன் அன்பை பிரதிபலித்து சத்துருக்களை வென்ற இரட்சகரின் சுவிசேஷ செய்தி இங்கு பிரசங்கிக்கப்பட்டது. 

நல்ல முடிவு

என்னுடைய கணவரும் மகனும் தொலைக்காட்சி அலைவரிசையை மாற்றி தங்களுக்கு பிடித்தமான திரைப்படம் ஏற்கனவே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். அதின் கடைசி காட்சிகளை பார்க்கும்போதே, அடுத்த படத்தைத் தேட ஆரம்பித்தனர். அவர்களுக்கு பிரியமான எட்டு படங்களை கண்டுபிடித்தனர். பொறுமையிழந்த நான், ஏன், ஏதாவது ஒரு படத்தை தேர்வுசெய்து அதை முதலிலிருந்து பார்க்கலாமல்லவா என்றேன். அதற்கு என் கணவர், “நல்ல முடிவுக் காட்சி யாருக்கு தான் பிடிக்காது?” என்று புன்முறுவலோடு சொன்னார். 

நானும் எனக்கு பிடித்தமான புத்தகங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றில் நல்ல முடிவை எதிர்பார்த்து தான் காத்திருப்பேன் என்பதை ஒத்துக்கொள்கிறேன். என் வேதாகமத்திலும், எனக்கு பரீட்சையமான, பிடித்த கதைகள், எளிதில் புரியும் வேதப்பகுதிகள் போன்றவற்றில் கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால் ஜீவனுள்ள வார்த்தைகள் அனைத்தையும் கொண்டு பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையை மறுரூபமாக்கி, கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களின் வாழ்க்கையின் முடிவு சம்பூரணமாயிருக்கும் என்று உறுதியளிக்கிறார்.

“நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்” என்று கிறிஸ்து கூறுகிறார் (வெளி. 22:13). மேலும் அவர், அவருடைய ஜனங்கள் நித்திய வாழ்;க்கையை சுதந்தரிப்பர் என்றும் (வச. 14), “இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை” (வச. 18-19) கூட்டவும் குறைக்கவும் கூடாது என்றும் கூறுகிறார். 

வேதத்திலுள்ள எல்லா காரியங்களையும் நாம் அறிந்துகொள்வது முடியாமல் இருக்கலாம். ஆனால் இயேசு தான் சொன்னபடி நிச்சயமாய் திரும்பி வருவார் என்பதை அறிந்திருக்கிறோம். அவர் பாவத்தை அழித்து, கோணலானவைகளை நேராக்கி, எல்லாவற்றையும் புதிதாக்கி, நம்முடைய அன்புள்ள ராஜாவாய் என்றும் அரசாளுகிறார். இது தற்போது நம்மை புதிய ஆரம்பத்திற்குள் நடத்தும் அழகான முடிவு!

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார். 

 

கிறிஸ்துவின் சமூகம்

“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது. 

வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.