ஜூன், 2021 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜூன் 2021

திருப்தியின் இரகசியம்

நீச்சலடிக்கும் போது விபத்தில் சிக்கி, கைகால்களை செயலிழக்கப்பண்ணும் ஒருவிதமான வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஜோனி எரிக்சன் டாடா, சிகிச்சைக்குபின் வீடு திரும்பினாள். அந்த விபத்திற்குப் பின் அவளுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியது. இப்போது குறுகலான கதவின் வழியே அவளுடைய சக்கர நாற்காலி போவதற்கு கடினப்படுகிறது   கைகழுவும் தொட்டி உயரமாக இருக்கிறது. அவள் தானாய் உணவு உட்கொள்ள பழகும்வரை, அவளுக்கு உணவு ஊட்ட இன்னொரு நபர் தேவைப்பட்டது. முதல்முறையாக தானாக உணவு உண்ண முயற்சித்தபோது, அது அவள் மீது சிந்தியதால் தன் இயலாமையைக் குறித்து உடைந்துபோனாள். ஆனால் விட்டுவிடவில்லை; தொடர்ந்து முயற்சித்தாள். அவள் சொல்லும்போது, “இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, ஓ தேவனே, இதில் எனக்கு உதவிசெய்யும்” என்று கேட்க பழகிக்கொண்டதுதான் நான் கற்றுக்கொண்ட இரகசியம் என்றாள். இன்று அவள் தன்னுடைய உணவை தானே சாப்பிட பழகிக்கொண்டாள்.

ஜோனியின் இந்த சிறை வாழ்க்கை இன்னொரு சிறைக்கைதியை அவளுக்கு நினைவுபடுத்தியதாம். ஆம்! பிலிப்பிய திருச்சபைக்கு நிருபம் எழுதும்போது, ரோம சிறையிருப்பில் இருந்த பவுல் அப்போஸ்தலர். பவுல் தன் வாழ்க்கையில் கண்டுபிடித்த இரகசியத்தை கற்றுக்கொள்ள ஜோனியும் முயற்சித்தாள்: “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்” (பிலி. 4:11). இவ்வாறு பவுல் மனநிறைவோடு இருக்கப் பழகிக்கொண்டார்; ஆனால் அவர் இயல்பில் மனநிறைவோடு இல்லை. மனநிறைவை எப்படி கண்டுபிடித்தார்? கிறிஸ்துவை நம்புவதின் மூலமாகவே அதை கண்டுபிடித்தார்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (வச. 13).

நாம் அனைவரும் வாழ்க்கையில் வெவ்வேறு சவால்களை சந்திக்கிறோம். ஒவ்வொரு தேவையின்போதும் உதவிக்காகவும், பெலத்திற்காகவும், மன அமைதிக்காகவும் நாம் இயேசுவை சார்ந்துகொள்கிறோம். அவர் நம்முடைய பிரச்சனைகளிலிருந்து நம்மை மீளச்செய்து, அடுத்த கடினமான சவாலை எதிர்கொள்ளவும் நம்மை பெலப்படுத்துகிறார். அவரை நோக்கிப்பார்த்து அந்த மனநிறைவை அடையுங்கள். 

உன் வாழ்க்கையின் தேடல்

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மாலை நேரத்தில் நானும் எனது மனைவியும், இரண்டு நண்பர்களைக் கூட்டிக்கொண்டு மலைப்பாதையின் வழியாய் நடந்துசென்றோம். அந்த குறுகலான மலைப்பாதையானது ஒருபுறத்தில் செங்குத்தான மலைச்சரிவினாலும், மறுபுறத்தில் ஆறுகளாலும் சூழப்பட்டிருந்தது.

ஒரு திருப்பத்தில், பெரிய கரடி ஒன்றைப் பார்த்தோம். அது இங்கும் அங்குமாய் தன் தலையை திருப்பிப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது. அந்த கரடி எங்களை கவனிக்கவில்லை. ஆனால் அது சீக்கிரம் கவனிக்க நேரிடும்.

எங்கள் நண்பர்களில் ஒருத்தி, தன் கேமராவை எடுத்து, “ஓ! நான் அதை படம் பிடித்தாக வேண்டும்” என்று சொன்னாள். அந்த சூழ்நிலை சாதகமானது இல்லை என்று உணர்ந்த நான், “இல்லை, நாம் இங்கிருந்து புறப்பட்டாக வேண்டும்” என்று கூறினேன். அந்த கரடி எங்கள் பார்வையிலிருந்து முற்றிலும் மறையும்வரை மெல்ல நகர்ந்து, ஓட்டம்பிடிக்க ஆரம்பித்தோம்.

பணக்காரனாக விரும்பும் ஆசைக்கு முன்பதாகவும் அப்படித்தான் ஓடவேண்டும். பணம் வைத்திருப்பது தவறல்ல அது கொடுக்கல் வாங்கலுக்கு நமக்கு அவசியப்படுகிறது. ஆனால் பண ஆசை கொண்டவர்கள், “சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் என்று பவுல் எச்சரிக்கிறார். பண ஆசை பலவிதமான பாவங்களுக்கு வழிவகுக்கிறது (1 தீமோ. 6:9).

அதற்கு பதிலாக, “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும்” அடையும்படிக்கு நாம் பிரயாசப்படவேண்டும் (வச. 11). இந்த நற்குணங்களை விரும்பி, அதை தேவனிடத்தில் கேட்கும்போது அவைகள் நம்மில் கிரியை செய்ய ஆரம்பிக்கிறது. நாம் தேவனிடத்தில் சுதந்தரிக்கவிரும்பும் மன திருப்தியை இந்த வழியில்தான் அடையமுடியும்.

தேவனுடைய பாதுகாப்பு

ஊசி, பால், காளான், லிஃப்ட், பிறப்பு, தேனீ, போன்று எதை கண்டாலும் பயப்படும் ஆட்ரியன் மாங்க், “மாங்க்” என்று அவரின் பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் முக்கியக் கதாப்பாத்திரம். அதில் அவரைப் போன்றே பயப்படும் துணை கதாப்பாத்திரமான ஹெரால்ட் க்ரென்ஷாவுடன் ஒரு காரின் பின்பெட்டியில் அடைத்துவைக்கப்படுகிறார். தன்னுடைய பயங்கள் வரிசையில், கிளாஸ்ட்ரோஃபோபியா என்னும் சிறிய இடத்தில் சிக்கிக்கொண்டதினால் ஏற்படும் பயத்திலிருந்து மாங்க் அன்று விடுவிக்கப்படுகிறார்.

மாங்க் மற்றும் ஹெரால்ட் ஆகிய இருவரும் அந்த காரின் பின்பெட்டியில் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும்போது, மாங்கிற்கு ஓர் தீடீர் எண்ணம் உதிக்கிறது. “நாம் இதை தவறான பார்வையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என்று மாங்க் கூறுகிறார். “நம்மை அடைத்து வைத்திருக்கிற இந்த பெட்டி, நம்மை மூடவில்லை, உண்மையில் அது நம்மை பாதுகாக்கிறது; வெளியிலிருக்கும் கிருமிகள், பாம்புகள், சத்தங்கள் ஆகியவற்றிலிருந்து இது நிஜமாகவே நம்மை பாதுகாக்கிறது” என்று மாங்க் கூற, ஆச்சரியத்தில் ஹெரால்ட் தன் கண்களை அகல விரித்து, “அப்படியென்றால், இந்த பெட்டி நமது நண்பன்” என்று மெல்லமாக கூறுவதாக கதை அமைக்கப்படுகிறது.

சங்கீதம் 63இல் தாவீதுக்கும் இதேபோன்ற ஒரு வெளிப்பாடு கிடைக்கிறது. “வறண்டதும் விடாய்த்ததுமான நிலத்திலே” இருந்தபோதும், தாவீது கர்த்தருடைய வல்லமையையும் மகிமையையும், கிருபையையும் பார்க்கிறான் (சங். 63:1-3). அந்த வறண்ட பாலைவனத்தையும் தேவன் தனக்கு ஏற்படுத்திய பாதுகாப்பான இடமாய் உணருகிறான். ஒரு பறவைக்குஞ்சு தன் தாயின் சிறகுகளின் கீழ் அடைக்கலம் புகுவதுபோல, தாவீது தேவனிடத்தில் அடைக்கலம் புகுகிறான். வனாந்திரமான அந்த இடத்திலும், “நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல” (வச. 5) தன் ஆத்துமா திருப்தியாகிறது என்றும் “ஜீவனைப்பார்க்கிலும்” (வச. 3) மேலான கிருபையினால் பெலமும் உற்சாகமும் அடைகிறான்.

விட்டுச்சென்ற கருணை

மார்த்தா, ஆரம்பப் பள்ளியொன்றில் உதவி ஆசிரியராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். ஒவ்வொரு ஆண்டும் பணம் சேமித்து வைத்து, அந்த பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு புத்தாடைகளை வாங்கித் தருவது அவரது வழக்கம். இரத்தப்புற்றுநோயுடன் போராடி உயிரிழந்த மார்த்தாவின் சேவையைப் பாரட்டி எங்கள் பள்ளியில் அவளுக்கு நினைவுநாள் கொண்டாடப்பட்டது. அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பூங்கொத்துகளோடு சேர்த்து நூற்றுக்கணக்கான புத்தாடைகளை ஏழைப் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாய் வழங்கினர். மார்த்தாவின் தியாகமான சேவையைக் குறித்தும் மற்றவர்களை ஊக்கப்படுத்திய அவரது கருணை உள்ளத்தைக் குறித்தும் பல்வேறு சாட்சிகள் பகிரப்பட்டது. அவரின் சேவையை மதித்த அவரது சக ஆசிரியர்கள், அவள் செய்து வந்த அந்த தொண்டை, அவளது மறைவுக்குப் பின் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக செய்துகொண்டு வருகின்றனர். மார்த்தா விட்டுச்சென்ற இந்த கருணை உள்ளம், தேவையுள்ளவர்களுக்கு உதவ இன்னும் பலரை ஊக்குவிக்கிறது.

அப்போஸ்தலர் 9ஆம் அதிகாரத்தில் “நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்” செய்து வந்த தொற்காள் என்னும் பெண்ணைக்குறித்து லூக்கா பதிவு செய்கிறார் (வச. 39). அவள் வியாதிப்பட்டு மரித்துவிடுகிறாள். ஆனால் அங்கிருந்த பேதுருவை மக்கள் வருந்தி அழைக்கின்றனர். அங்கிருந்த விதவைகள் அனைவரும் அழுது, தொற்காள் எவ்வாறு சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்தாள் என்பதை பேதுருவுக்கு தெரிவித்தனர் (வச. 39). பேதுரு தொற்காளை உயிரோடு எழும்பப்பண்ணுகிறார். “இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்” (வச. 42). எளியவர்களுக்கு உதவும் தொற்காளின் இந்த சேவை மனப்பான்மை மற்றவர்களின் உள்ளத்தைத் தொட்டது, அத்துடன், அன்போடு கூடிய தயாள குணத்தின் வலிமையை மற்றவர்களுக்கு தெளிவாய் வெளிப்படுத்தியது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?

“ஐயோ!” எனக்கு முன்பாக போய்க்கொண்டிருந்த பழுதுபார்க்கும் லாரி திடீரென்று திரும்பியதால் நான் அலறினேன்.  
அந்த வாகனத்தில் பின்புறம் “எனது வாகனம் ஓட்டும் திறமை எப்படி?” என்று கேட்டு அதற்கு கீழ் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டேன். நான் ஏன் அழைக்கிறேன் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார். நான் என் விரக்தியை கோபமாய் வெளிப்படுத்தினேன். டிரக்கின் நம்பரை குறித்துக்கொண்டாள். பின்னர் அவள், “எப்போதும் நன்றாக வாகனம் ஓட்டும் ஒருவரைக் குறித்து சொல்லுவதற்கும் நீங்கள் எங்களை அழைக்கலாம்” என்று சோர்வுடன் சொன்னாள். 
அவளுடைய அந்த சோகமான வார்த்தைகள் என்னை தடுமாறச் செய்தது. என் தவறை நான் உணர்ந்தேன். எனக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக, நான் பேசிய கோபமான வார்த்;தைகள் அந்த கடினமான வேலை செய்யும் பெண்ணை எந்த அளவிற்கு காயப்படுத்தியிருக்கவேண்டும் என்று யோசித்தேன். என்னுடைய விசுவாசத்திற்கும் கனிகொடுக்கும் ஜீவியத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு அற்றுபோனதாக அவ்வேளையில் நான் உணர்ந்தேன்.  
நம்முடைய செய்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைத் தான் யாக்கோபு நிருபம் வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1:19-20இல் “ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே” என்று வாசிக்கிறோம். மேலும் அவர், “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (வச. 22) என்றும் ஆலோசனை கூறுகிறார்.  
நாம் யாரும் நேர்த்தியானவர்கள் இல்லை. சில வேளைகளில் நம்முடைய வாழ்க்கை என்னும் வாகனத்தை ஓட்டும்போது, நம்முடைய கடினமான வாழ்க்கைப் பாதையில் அவர் நம்முடைய கடினமான சுபாவங்களை மாற்றுவார் என்று நம்பி அவரை சார்ந்துகொள்ள முற்படுவோம்.

தேவன் பார்க்கிறார், புரிந்துகொள்கிறார், பாதுகாக்கிறார்

சில நேரங்களில், நாள்பட்ட வலி மற்றும் சோர்வுடன் வாழ்வது என்பது வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு தனக்கு யாருமில்லை என்ற உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. தேவனோ அல்லது மற்றவர்களோ என்னை பார்க்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனது நாயுடன் அதிகாலையில் நான் ஜெபநடை ஏறெடுக்கும்போது, இதுபோன்ற உணர்வுகள் என்னை வெகுவாய் பாதித்தது. தூரத்தில் காற்று நிரப்பப்பட்ட பெரிய பலூன் பறந்து சென்றுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அதில் பயணம் செய்யும் நபர்கள் பூமியை உயரத்திலிருந்து பார்த்து ரசிக்கமுடியும். நான் என் அயலவர்களின் வீடுகளை நடந்து கடந்தபோது, பெருமூச்சு விட்டேன். அந்த மூடிய கதவுகளுக்குப் பின்னால் எத்தனை பேர் கண்ணுக்குத் தெரியாதவர்களாகவும் முக்கியமற்றவர்களாகவும் உணர்கிறார்கள்? நான் என் நடைப்பயணத்தை முடித்தவுடன், நான் அவர்களைப் பார்க்கிறேன், அவர்களைக் கவனித்துக்கொள்கிறேன் என்பதை என் அண்டை வீட்டாருக்குத் தெரியப்படுத்த எனக்கு வாய்ப்புகளைத் தரும்படி தேவனிடம் கேட்டேன். அவரும் அப்படித்தான். 
தேவன் எத்தனை நட்சத்திரங்களைப் படைத்தார் என்னும் தொகை அவருக்கு தெரியும். ஒவ்வொரு நட்சத்திரங்களையும் அவர் பேர்சொல்லி அழைப்பது (சங்கீதம் 147:5), சிறு விஷயங்களுக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காண்பிக்கிறது. அவருடைய வல்லமை, ஞானம், பகுத்தறிவு ஆகியவைகள் காலவரம்பற்றவைகள் (வச. 5). 
தேவன் ஒவ்வொரு அவிசுவாசத்தின் அழுகையையும் கேட்கிறார்; ஒவ்வொரு அமைதியான கண்ணீரையும் அவர் தெளிவாகக் காண்கிறார். ஒவ்வொரு திருப்தி பெருமூச்சையும் அவர் அறிந்திருக்கிறார். நாம் எப்போது தடுமாறுகிறோம், எப்போது வெற்றிபெறுகிறோம் என்பதை அவர் பார்க்கிறார். நம்முடைய ஆழ்ந்த அச்சங்களையும், நமது உள்ளார்ந்த எண்ணங்களையும், நம்முடைய பயங்கரமான கனவுகளையும் அவர் புரிந்துகொள்கிறார். நாம் எங்கு இருந்தோம், எங்கு செல்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். நம் அண்டை வீட்டாரைப் பார்க்கவும், கேட்கவும், நேசிக்கவும் தேவன் நமக்கு உதவுவதால், நம்மைப் பார்க்கவும், புரிந்து கொள்ளவும், கவனித்துக் கொள்ளவும் அவரை முழுமையாய் நம்பலாம். 

களவுபோன தெய்வங்கள்

மரத்தால் செய்யப்பட்ட ஒரு குலதெய்வ விக்கிரகத்தைக் காணவில்லை என்று ஒரு பெண் அதிகாரிகளிடம் புகார் அளித்தாள். அவர்கள் அந்த விக்கிரகத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணி, அடையாளம் காண்பிப்பதற்காக அவளை வரச்சொன்னார்கள். இது உங்களுடைய குலதெய்வமா? என்று அவளைக் கேட்க, அவள் வருத்தத்துடன் “இல்லை, என்னுடைய தெய்வம் இதைக்காட்டிலும் பெரியதும் அழகானதுமாய் இருக்கும்” என்று பதிலளித்தாளாம்.  
மக்கள் அவர்களுடைய கரங்களால் செய்யப்படும் தெய்வங்கள் அவர்களை பாதுகாக்கும் என்று நம்பி அவர்கள் விரும்பின வடிவத்தை அதற்கு கொடுக்கிறார்கள். அதினால் தான் யாக்கோபின் மனைவி ராகேல், லாபானிடத்திலிருந்து மறைமுகமாய் புறப்பட்டபோது “தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்” (ஆதியாகமம் 31:19) என்று வேதம் சொல்லுகிறது. ஆனாலும் அந்த சுரூபங்களுக்கு மத்தியில் தேவன் யாக்கோபை பாதுகாத்தார் (வச. 34).  
யாக்கோபுடைய பயணத்தில் யாக்கோபு இரவு முழுவதும் ஒரு மனிதனோடு போராடுகிறான் (32:24). அந்த மனிதன் சாதாரண மனுஷீகத்திற்கு உட்பட்டவன் இல்லை என்பதை யாக்கோபு அறிந்ததினால் தான் “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” (வச. 26) என்று சொல்லுகிறான். அந்த மனிதன் இவனுடைய பெயரை இஸ்ரவேல் (“தேவன் யுத்தம்செய்கிறார்”) என்று மாற்றி ஆசீர்வதிக்கிறார் (வச. 28-29). “நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல்” (வச. 30) என்று யாக்கோபு பேரிட்டான். 
இந்த தேவனே ஒருவரால் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு பெரியவரும் அழகானவருமாகிய தேவன். அவரை செதுக்கவோ, திருடவோ, மறைக்கவோ முடியாது. ஆனாலும், அன்றிரவு யாக்கோபு கற்றுக்கொண்டபடி, நாம் அந்த தேவனை அணுகலாம்! இந்த தேவனை “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று அழைக்க இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 6:9).