Archives: ஜூன் 2021

திருப்தியின் இரகசியம்

நீச்சலடிக்கும் போது விபத்தில் சிக்கி, கைகால்களை செயலிழக்கப்பண்ணும் ஒருவிதமான வாத நோயினால் பாதிக்கப்பட்ட ஜோனி எரிக்சன் டாடா, சிகிச்சைக்குபின் வீடு திரும்பினாள். அந்த விபத்திற்குப் பின் அவளுடைய வாழ்க்கை முற்றிலும் மாறியது. இப்போது குறுகலான கதவின் வழியே அவளுடைய சக்கர நாற்காலி போவதற்கு கடினப்படுகிறது   கைகழுவும் தொட்டி உயரமாக இருக்கிறது. அவள் தானாய் உணவு உட்கொள்ள பழகும்வரை, அவளுக்கு உணவு ஊட்ட இன்னொரு நபர் தேவைப்பட்டது. முதல்முறையாக தானாக உணவு உண்ண முயற்சித்தபோது, அது அவள் மீது சிந்தியதால் தன் இயலாமையைக் குறித்து உடைந்துபோனாள். ஆனால் விட்டுவிடவில்லை; தொடர்ந்து முயற்சித்தாள். அவள் சொல்லும்போது, “இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, ஓ தேவனே, இதில் எனக்கு உதவிசெய்யும்” என்று கேட்க பழகிக்கொண்டதுதான் நான் கற்றுக்கொண்ட இரகசியம் என்றாள். இன்று அவள் தன்னுடைய உணவை தானே சாப்பிட பழகிக்கொண்டாள்.

ஜோனியின் இந்த சிறை வாழ்க்கை இன்னொரு சிறைக்கைதியை அவளுக்கு நினைவுபடுத்தியதாம். ஆம்! பிலிப்பிய திருச்சபைக்கு நிருபம் எழுதும்போது, ரோம சிறையிருப்பில் இருந்த பவுல் அப்போஸ்தலர். பவுல் தன் வாழ்க்கையில் கண்டுபிடித்த இரகசியத்தை கற்றுக்கொள்ள ஜோனியும் முயற்சித்தாள்: “நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்” (பிலி. 4:11). இவ்வாறு பவுல் மனநிறைவோடு இருக்கப் பழகிக்கொண்டார்; ஆனால் அவர் இயல்பில் மனநிறைவோடு இல்லை. மனநிறைவை எப்படி கண்டுபிடித்தார்? கிறிஸ்துவை நம்புவதின் மூலமாகவே அதை கண்டுபிடித்தார்: “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (வச. 13).

நாம் அனைவரும் வாழ்க்கையில் வெவ்வேறு சவால்களை சந்திக்கிறோம். ஒவ்வொரு தேவையின்போதும் உதவிக்காகவும், பெலத்திற்காகவும், மன அமைதிக்காகவும் நாம் இயேசுவை சார்ந்துகொள்கிறோம். அவர் நம்முடைய பிரச்சனைகளிலிருந்து நம்மை மீளச்செய்து, அடுத்த கடினமான சவாலை எதிர்கொள்ளவும் நம்மை பெலப்படுத்துகிறார். அவரை நோக்கிப்பார்த்து அந்த மனநிறைவை அடையுங்கள். 

உன் வாழ்க்கையின் தேடல்

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மாலை நேரத்தில் நானும் எனது மனைவியும், இரண்டு நண்பர்களைக் கூட்டிக்கொண்டு மலைப்பாதையின் வழியாய் நடந்துசென்றோம். அந்த குறுகலான மலைப்பாதையானது ஒருபுறத்தில் செங்குத்தான மலைச்சரிவினாலும், மறுபுறத்தில் ஆறுகளாலும் சூழப்பட்டிருந்தது.

ஒரு திருப்பத்தில், பெரிய கரடி ஒன்றைப் பார்த்தோம். அது இங்கும் அங்குமாய் தன் தலையை திருப்பிப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது. அந்த கரடி எங்களை கவனிக்கவில்லை. ஆனால் அது சீக்கிரம் கவனிக்க நேரிடும்.

எங்கள் நண்பர்களில் ஒருத்தி, தன் கேமராவை எடுத்து, “ஓ! நான் அதை படம் பிடித்தாக வேண்டும்” என்று சொன்னாள். அந்த சூழ்நிலை சாதகமானது இல்லை என்று உணர்ந்த நான், “இல்லை, நாம் இங்கிருந்து புறப்பட்டாக வேண்டும்” என்று கூறினேன். அந்த கரடி எங்கள் பார்வையிலிருந்து முற்றிலும் மறையும்வரை மெல்ல நகர்ந்து, ஓட்டம்பிடிக்க ஆரம்பித்தோம்.

பணக்காரனாக விரும்பும் ஆசைக்கு முன்பதாகவும் அப்படித்தான் ஓடவேண்டும். பணம் வைத்திருப்பது தவறல்ல அது கொடுக்கல் வாங்கலுக்கு நமக்கு அவசியப்படுகிறது. ஆனால் பண ஆசை கொண்டவர்கள், “சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் என்று பவுல் எச்சரிக்கிறார். பண ஆசை பலவிதமான பாவங்களுக்கு வழிவகுக்கிறது (1 தீமோ. 6:9).

அதற்கு பதிலாக, “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும்” அடையும்படிக்கு நாம் பிரயாசப்படவேண்டும் (வச. 11). இந்த நற்குணங்களை விரும்பி, அதை தேவனிடத்தில் கேட்கும்போது அவைகள் நம்மில் கிரியை செய்ய ஆரம்பிக்கிறது. நாம் தேவனிடத்தில் சுதந்தரிக்கவிரும்பும் மன திருப்தியை இந்த வழியில்தான் அடையமுடியும்.

தேவனுடைய பாதுகாப்பு

ஊசி, பால், காளான், லிஃப்ட், பிறப்பு, தேனீ, போன்று எதை கண்டாலும் பயப்படும் ஆட்ரியன் மாங்க், “மாங்க்” என்று அவரின் பெயரிடப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் முக்கியக் கதாப்பாத்திரம். அதில் அவரைப் போன்றே பயப்படும் துணை கதாப்பாத்திரமான ஹெரால்ட் க்ரென்ஷாவுடன் ஒரு காரின் பின்பெட்டியில் அடைத்துவைக்கப்படுகிறார். தன்னுடைய பயங்கள் வரிசையில், கிளாஸ்ட்ரோஃபோபியா என்னும் சிறிய இடத்தில் சிக்கிக்கொண்டதினால் ஏற்படும் பயத்திலிருந்து மாங்க் அன்று விடுவிக்கப்படுகிறார்.

மாங்க் மற்றும் ஹெரால்ட் ஆகிய இருவரும் அந்த காரின் பின்பெட்டியில் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கும்போது, மாங்கிற்கு ஓர் தீடீர் எண்ணம் உதிக்கிறது. “நாம் இதை தவறான பார்வையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்” என்று மாங்க் கூறுகிறார். “நம்மை அடைத்து வைத்திருக்கிற இந்த பெட்டி, நம்மை மூடவில்லை, உண்மையில் அது நம்மை பாதுகாக்கிறது; வெளியிலிருக்கும் கிருமிகள், பாம்புகள், சத்தங்கள் ஆகியவற்றிலிருந்து இது நிஜமாகவே நம்மை பாதுகாக்கிறது” என்று மாங்க் கூற, ஆச்சரியத்தில் ஹெரால்ட் தன் கண்களை அகல விரித்து, “அப்படியென்றால், இந்த பெட்டி நமது நண்பன்” என்று மெல்லமாக கூறுவதாக கதை அமைக்கப்படுகிறது.

சங்கீதம் 63இல் தாவீதுக்கும் இதேபோன்ற ஒரு வெளிப்பாடு கிடைக்கிறது. “வறண்டதும் விடாய்த்ததுமான நிலத்திலே” இருந்தபோதும், தாவீது கர்த்தருடைய வல்லமையையும் மகிமையையும், கிருபையையும் பார்க்கிறான் (சங். 63:1-3). அந்த வறண்ட பாலைவனத்தையும் தேவன் தனக்கு ஏற்படுத்திய பாதுகாப்பான இடமாய் உணருகிறான். ஒரு பறவைக்குஞ்சு தன் தாயின் சிறகுகளின் கீழ் அடைக்கலம் புகுவதுபோல, தாவீது தேவனிடத்தில் அடைக்கலம் புகுகிறான். வனாந்திரமான அந்த இடத்திலும், “நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல” (வச. 5) தன் ஆத்துமா திருப்தியாகிறது என்றும் “ஜீவனைப்பார்க்கிலும்” (வச. 3) மேலான கிருபையினால் பெலமும் உற்சாகமும் அடைகிறான்.

விட்டுச்சென்ற கருணை

மார்த்தா, ஆரம்பப் பள்ளியொன்றில் உதவி ஆசிரியராக முப்பது ஆண்டுகள் பணியாற்றினார். ஒவ்வொரு ஆண்டும் பணம் சேமித்து வைத்து, அந்த பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு புத்தாடைகளை வாங்கித் தருவது அவரது வழக்கம். இரத்தப்புற்றுநோயுடன் போராடி உயிரிழந்த மார்த்தாவின் சேவையைப் பாரட்டி எங்கள் பள்ளியில் அவளுக்கு நினைவுநாள் கொண்டாடப்பட்டது. அந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பூங்கொத்துகளோடு சேர்த்து நூற்றுக்கணக்கான புத்தாடைகளை ஏழைப் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாய் வழங்கினர். மார்த்தாவின் தியாகமான சேவையைக் குறித்தும் மற்றவர்களை ஊக்கப்படுத்திய அவரது கருணை உள்ளத்தைக் குறித்தும் பல்வேறு சாட்சிகள் பகிரப்பட்டது. அவரின் சேவையை மதித்த அவரது சக ஆசிரியர்கள், அவள் செய்து வந்த அந்த தொண்டை, அவளது மறைவுக்குப் பின் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக செய்துகொண்டு வருகின்றனர். மார்த்தா விட்டுச்சென்ற இந்த கருணை உள்ளம், தேவையுள்ளவர்களுக்கு உதவ இன்னும் பலரை ஊக்குவிக்கிறது.

அப்போஸ்தலர் 9ஆம் அதிகாரத்தில் “நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்” செய்து வந்த தொற்காள் என்னும் பெண்ணைக்குறித்து லூக்கா பதிவு செய்கிறார் (வச. 39). அவள் வியாதிப்பட்டு மரித்துவிடுகிறாள். ஆனால் அங்கிருந்த பேதுருவை மக்கள் வருந்தி அழைக்கின்றனர். அங்கிருந்த விதவைகள் அனைவரும் அழுது, தொற்காள் எவ்வாறு சேவை மனப்பான்மையுடன் வாழ்ந்தாள் என்பதை பேதுருவுக்கு தெரிவித்தனர் (வச. 39). பேதுரு தொற்காளை உயிரோடு எழும்பப்பண்ணுகிறார். “இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்” (வச. 42). எளியவர்களுக்கு உதவும் தொற்காளின் இந்த சேவை மனப்பான்மை மற்றவர்களின் உள்ளத்தைத் தொட்டது, அத்துடன், அன்போடு கூடிய தயாள குணத்தின் வலிமையை மற்றவர்களுக்கு தெளிவாய் வெளிப்படுத்தியது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

வார்த்தைகள் இருதயத்தைப் பிரதிபலிக்கிறது

கெட்டவார்த்தை உபபோகிப்பதை எவ்வாறு அகற்றுவது? ஓர் உயர்நிலைப் பள்ளி “கெட்ட வார்த்தை பேசுவதில்லை” என்று உறுதிமொழியை எடுத்தது. அந்த பள்ளியின் மாணவர்கள் “நாங்கள் பள்ளி வளாகத்திற்குள்ளும் அதின் சுவர்களிலும் எந்தவிதமான கெட்ட வார்த்தைகளையோ தவறான கருத்துக்களை கிறுக்கவோ பேசவோ மாட்டோம்” என்று உறுதிமொழியேற்றனர். இது ஓர் உன்னத முயற்சி. ஆனால், இயேசுவின் கூற்றுப்படி, எந்த விதிமுறைகளும் உறுதிமொழிகளும் ஒருபோதும் தவறான பேச்சின் வாசனையை மறைக்க முடியாது.

நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளின் துர்நாற்றத்தை நீக்குவது நம் இதயத்தை புதுப்பிப்பதில் இருந்து தொடங்குகிறது. பழங்களைக் கொண்டு மரத்தின் வகையை மக்கள் அடையாளம் காண்பது போல் (லூக்கா 6:43-44), நம்முடைய பேச்சு, நம் இருதயம் அவரோடும் அவருடைய வழிகளோடும் ஒத்துப்போகிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் அடையாள சின்னமாய் இருக்கிறது என்று இயேசு கூறுகிறார். பழம் என்பது ஓர் நபரின் பேச்சைக் குறிக்கிறது. “இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” (வச. 45). நம் வாயிலிருந்து வெளிவருவதை நாம் உண்மையில் மாற்ற விரும்பினால், முதலில் நம் இருதயத்தின் நினைவுகளை மாற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் என்று கிறிஸ்து சுட்டிக்காட்டுகிறார்.

மறுரூபமாக்கப்படாத இருதயத்திலிருந்து வெளிவரும் தவறான வார்த்தைகளைக் கட்டுப்படுத்த வெளிப்புற வாக்குறுதிகள் பயனற்றவை. முதலில் இயேசுவை (1 கொரிந்தியர் 12:3) விசுவாசித்து, பிறகு நம்மை நிரப்ப பரிசுத்த ஆவியானவரை அழைப்பதன் மூலம் மட்டுமே தவறான பேச்சை நாம் அகற்ற முடியும் (எபேசியர் 5:18). தொடர்ந்து தேவனுக்கு நன்றி செலுத்துவதற்கும் (வச. 20) ஊக்கமளிக்கும் வார்த்தைகளை மற்றவர்களிடம் பேசுவதற்கும் (4:15, 29; கொலோசெயர் 4:6) மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கும் அவர் நமக்குள் செயல்படுகிறார். 

ஓர் மூத்தவரின் ஆலோசனை

“நான் எதற்கு வருத்தப்படவேண்டும்?” நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பிரபல எழுத்தாளர் ஜார்ஜ் சாண்டர்ஸ் 2013ஆம் ஆண்டு சைராகுஸ் பல்கலைக்கழகத்தில் தனது தொடக்க உரையில் பதிலளித்த கேள்வி இதுவாகும். ஓர் வயதான நபராய் (சாண்டர்ஸ்) தன்னுடைய வாழ்க்கையில் தான் வருந்தும் காரியங்களிலிருந்து இளைஞர்கள் ஏதாகிலும் கற்றுக்கொள்வார்கள் என்று எண்ணி, அவர் வாழ்க்கையின் ஒருசில அனுபவங்களை அவர்களுடன் (பட்டதாரிகளுடன்) பகிர்ந்துகொண்டார். அவர் வருத்தங்களில், ஏழையாக இருப்பது, கடின வேலைகள் செய்வது போன்ற சில விஷயங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், சாண்டர்ஸ் உண்மையில் அவைகளுக்காக வருத்தப்படவில்லை என்றார். மாறாக, தான் கருணை காண்பிக்கவேண்டிய ஓர் நபரிடத்தில் கருணை காண்பிக்க தவறிவிட்டதாக வருத்தப்பட்டார்.

அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவில் உள்ள விசுவாசிகளுக்கு இந்தக் கேள்விக்குப் பதிலளித்து எழுதுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஓர் குறிப்பிட்ட அரசியல் பார்வையை வைத்திருப்பது, சில புத்தகங்கள் அல்லது திரைப்படங்களைத் தவிர்ப்பது, ஓர் குறிப்பிட்ட விதத்தில் தேவனை ஆராதிப்பது போன்ற நமது பதில்களுடன் விரைந்து செல்ல இது தூண்டுகிறது. ஆனால் பவுல், “கெட்ட வார்த்தை” (எபேசியர் 4:29)மற்றும் “கசப்பும், கோபமும், மூர்க்கமும்” (வச. 31) போன்ற காரியங்களிலிருந்த நம்மை விடுவிப்பதே கிறிஸ்தவ வாழ்க்கை என்று குறிப்பிடுகிறார். அவருடைய பேச்சை முடிக்கும் தருவாயில், எபேசியர்களுக்கும் நமக்கும், “கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” (வச. 32) என்று ஆலோசனை கூறுகிறார்.

இயேசுவின் வாழ்க்கை இருக்கவேண்டும் என்று நாம் நம்பும் எல்லாவற்றிலும் ஒன்று, நிச்சயமாக, இரக்கமாக இருக்கவேண்டும். 

 

உடனடி பாராட்டு

நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள். [ அப்போஸ்தலர் 16:25 ]

 

எத்தியோப்பியாவிற்கு ஓர் குறுகிய கால மிஷன் பயணத்தின்போது, எங்கள் குழு ஓர் உள்ளூர் அமைச்சகத்தின் மற்றொரு குழுவுடன் சேர்ந்து, குப்பைக் கிடங்கில் குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருந்த இளைஞர்கள் கூட்டத்தினைச் சந்திக்கச் சென்றது. அவர்கள் எங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். நாங்கள் சாட்சிகள், ஊக்கமளிக்கும் வார்த்தைகள் மற்றும் ஜெபங்களை ஒன்றாகப் பகிர்ந்துகொண்டோம். அந்த மாலையில் எனக்கு மிகவும் பிடித்த தருணங்களில் ஒன்று, உள்ளூர் குழு உறுப்பினர் ஒருவர் தனது கிடாா் இசைக்கருவியினை வாசிக்க, நாங்கள் நிலவின் ஒளியில் நின்று தேவனை ஆராதித்தோம். என்ன ஓர் புனிதமான தருணம்! அவர்களின் இக்கட்டான தருணத்திலும், இயேசுவில் மட்டுமே கிடைக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அவர்கள் முழுமையாய் அனுபவித்தனர்.

அப்போஸ்தலர் 16ல், மற்றொரு எதிர்பாராத துதிவேளையைப் பற்றி வாசிக்கிறோம். இது பிலிப்பு பட்டணத்தில் உள்ள சிறைச்சாலையில் நடந்தது. பவுலும் சீலாவும் இயேசுவைச் சேவித்தபோது கைது செய்யப்பட்டு, அடிக்கப்பட்டு, கசையடி பெற்று, சிறையில் அடைக்கப்பட்டனர். விரக்திக்கு ஆளாகாமல், தங்கள் சிறை அறையில் “ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்.” “சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று” (வச. 25-26).

மயக்கத்திலிருந்து எழுந்த சிறைச்சாலைக்காரன் தற்கொலை செய்துகொள்ள விரைந்தான். ஆனால் கைதிகள் தப்பியோடவில்லை என்பதை உணர்ந்தபோது, அவன் கர்த்தருக்கு பயந்து, குடும்பத்தோடு இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான் (வச. 27-34).

தேவன் நம் துதிகளில் பிரியப்படுகிறார். வாழ்க்கையின் உயர்வான மற்றும் தாழ்வான எல்லா தருணங்களிலும் நாம் தேவனை துதிக்கப் பிரயாசப்படுவோம்.