Archives: மார்ச் 2020

சம்பாதிக்கப்பட்டதல்ல சுதந்தரிக்கப்பட்டது

உணவு விடுதியின் மேசையில் எனது டம்ளரை வைத்து விட்டு,  “இந்த உணவுக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன், அப்பா” என்றேன். நான் கல்லூரியிலிருந்து ஒரு சிறிய விடுமுறையில் என்னுடைய வீட்டிற்கு வந்தேன். என்னுடைய உணவிற்கு என் பெற்றோர் பணம் கொடுத்தது எனக்கு சற்று வினோதமாக இருந்தது. “உன்னை வரவேற்கிறேன், ஜூலி” என்றார் என்னுடைய தந்தை. “நீ எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் நன்றி கூறத்தேவையில்லை, நீ இப்பொழுது எங்களை விட்டுப் பிரிந்து தனியாக இருந்தாலும், நீ எப்பொழுதும் எங்களுக்கு மகள் தான், எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினர் தான்” என்றார். நான் சிரித்துக் கொண்டே, “நன்றி, அப்பா” என்றேன்.

என்னுடைய குடும்பத்தில், என்னுடைய பெற்றோரின் அன்பினைப் பெறவும், அவர்கள் எனக்குச் செய்யும் அனைத்திற்காகவும், நான் எதையுமே செய்ததில்லை. என்னுடைய அப்பா கூறியதைப் போல, நான் தேவனுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கும் தகுதியைப் பெறுவதற்கும், நான் எதையுமே செய்ததில்லை என்பதை நினைத்துக் கொண்டேன்.

“தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்கு” தேவன் நம்மைத் தெரி ந்து கொண்டார் என பவுல் தன்னுடைய வாசகர்களுக்கு எழுதுகின்றார் (எபே.1:4). தேவனுக்கு முன்பாக கறைதிரையற்றவர்களாய் நிற்க தகுதியுள்ளவர்களாகும்படி அவர் நம்மைத் தெரிந்து கொண்டார் (5:25-27). ஆனால், இது இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே கூடும். “அவருடைய கிருபையின் ஐசுவரியத்திபடியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (1:7). நாம் தேவனுடைய கிருபையையும், மன்னிப்பையும் பெறுவதும், மற்றும் அவருடைய குடும்பத்தில் ஒருவராவதும் நம்முடைய செயலினால் சம்பாதித்ததல்ல, இவற்றை நாம் தேவனிடமிருந்து ஈவாக பெற்றுக் கொள்கின்றோம்.

நம்முடைய வாழ்வை தேவனுக்கு நேராகத் திருப்பும் போது, நாம் தேவனுடைய பிள்ளைகளாகின்றோம், அப்படியானால் நாம் நித்திய வாழ்வையும் பெற்றுக் கொள்கின்றோம், நாம் சுதந்தரித்துக் கொள்ளும்படி பரலோகம் நமக்கு காத்திருக்கின்றது. இத்தனை அற்புதமான ஈவைத் தந்த தேவனை ஸ்தோத்தரிப்போம்!

ஆசீர்வதிக்கப்பட்ட அப்பம்

எங்களுடைய மூத்த மகள் பதின்மூன்றாம் வயதை எட்டிய போது, என்னுடைய மனைவியும், நானும் சேர்ந்து அவளுடைய சிறுபிராயத்திலிருந்து அவளுடைய வாழ்க்கையைப் பற்றி நாங்கள் எழுதிவைத்திருந்த தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை, அவளுக்குப் பரிசாகக் கொடுத்தோம். அதில் அவளுடைய விருப்புகள், வெறுப்புகள், தனித்திறன்கள், மறக்க முடியாத சில பேச்சுகள், நகைப்பைத்தரும் சில நிகழ்வுகள் ஆகியவற்றைக் குறித்து வைத்திருந்தோம். தேவன் அவளில் செயல்படும் விதத்தை நாங்கள் கண்டதையும் நீண்ட கடிதமாக எழுதிவைத்திருந்தோம். அவளுடைய பதின்மூன்றாம் பிறந்த நாளில், நாங்கள் அதனை அவளுக்குக் கொடுத்த போது, அது அவளை மெய் மறக்கச் செய்தது. அவள் தன்னுடைய தனித்துவத்தை அறிந்துகொள்ள, அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ஒரு சாதாரண பொருளான அப்பத்தை ஆசீர்வதித்ததின் மூலம், இயேசு அதன் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றார். அவர் படைத்த மற்ற படைப்புகளோடு, தேவன் அப்பத்தை அவருடைய மகிமையை வெளிப்படுத்துவதற்காகப் படைத்தார். இதன் மூலம், இவ்வுலகத்தின் எதிர் காலத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார் என நான் நம்புகின்றேன். ஒரு நாள், அவருடைய படைப்புகள் அனைத்தும் அவருடைய மகிமையால் நிரப்பப்படும். எனவே, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதிக்கும் போது (மத்.26:26), படைப்புகளின் துவக்கத்தையும், அவற்றின் முடிவையும் குறித்து சுட்டிக் காட்டுகின்றார் (ரோம. 8:20-21).

உன்னுடைய வாழ்க்கைக் கதையின் துவக்கம் குழப்பம் நிறைந்ததாக இருக்கலாம், உனக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை நீ உணராமல் இருக்கலாம். ஆனால் மிகப் பெரிய கதை ஒன்று உள்ளது. தேவன் உன்னை விருப்பத்தோடு, ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கினார், அவர் உன்னில் மகிழ்ச்சியடைகின்றார் என்பதே அந்தக் கதை. உன்னை மீட்பதற்பதற்காக தேவன் உன்னைத் தேடி வந்தார் என்பதைக் கூறும் கதை (மத். 26:28); தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியை உனக்குத் தந்து, உன்னை புதியதாக்கி, உன்னுடைய அடையாளத்தை மீட்டுக் கொடுத்தார், அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகின்றார் என்பதைக் கூறும் கதை அது.

பழச்சாறு

பேரம் பேசி, மிகச் சரியான விலைக்கு, அந்த விளக்கு வாங்கப்பட்டது. அது என் வீட்டு அலுவலகத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும், அதன் நிறம், அளவு மற்றும் விலை மிகப்பொருத்தமாக அமைந்தது. வீட்டிற்கு வந்ததும் அந்த விளக்கிற்கு மின் இணைப்பு கொடுத்தபோது ஒன்றும் நடக்கவில்லை, விளக்கும் எரியவில்லை!

“பிரச்சனை ஒன்றுமில்லை, நான் அதனை எளிதில் சரிபார்த்து விடுவேன்” என்று உறுதியளித்தார் என்னுடைய கணவர். அவர் அந்த விளக்கைப் பிரித்துப் பார்த்தார், அதன் பிரச்சனையை எளிதில் கண்டுகொண்டார். அங்கு மின் இணைப்புக் கம்பி, எதனோடும் பொருத்தப்படவில்லை, மின் ஆற்றல் மூலத்தோடு இணைக்கப் படாவிட்டால் அந்த நேர்த்தியான அழகிய விளக்கு பயனற்றதாகிவிடும். 

இது நம்முடைய வாழ்விற்கும் பொருத்தமானது. இயேசு தன் சீஷர்களிடம், “நானே திராட்சச் செடி, நீங்கள் கொடிகள், ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது” (யோவா. 15:5) என்று கூறுகின்றார்.

இயேசு இந்தப் போதனையை, திராட்சை அதிகம் விளையும் பகுதியில் கொடுத்தார், எனவே அவருடைய சீஷர்கள் எளிதில் புரிந்து கொண்டனர். திராட்சைச் செடிகள் கடினமான சூழல்களையும் தாங்கக் கூடியன, அதன் கொடிகள் அதிகம் வெட்டப் பட்டாலும் வளரக் கூடியன. ஆனால் முக்கிய செடியிலிருந்து அவை வெட்டப்பட்டு, தனிமையாக்கப்பட்டால் அவை பயனற்றவையாகிவிடும், எரிக்கப் படும் விறகாகிவிடும். அதேப் போலத்தான் நம்முடைய வாழ்வும் இருக்கும்.

நாம் இயேசுவில் நிலைத்திரு க்கும் போது, அவருடைய வார்த்தைகள் நமக்கு ஜீவனைத்தரும், நாமும் நமக்கு ஜீவன் தரும் மூலமாகிய கிறிஸ்துவோடு இணைக்கப் பட்டிருப்போம். “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப் படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்” (வச. 8) என்றார். மிகுந்த கனிகளைக் கொடுக்க வேண்டுமென்றால் அனுதினமும் சத்தான உணவு கொடுக்கப்பட வேண்டும். தேவன் நமது ஆத்துமாவிற்குத் தேவையான உணவை வேதாகமத்தின் மூலமாகவும், அவருடைய அன்பினாலும் இலவசமாகக் கொடுக்கின்றார். எனவே, தேவனோடு எப்பொழுதும் இணக்கப் பட்டிருங்கள், அவருடைய சாறு உங்களுக்குள்ளே பாயட்டும்!

வருங்கால மரம் வெட்டி

நான் கல்லூரியில் இருந்த போது, ஓர் ஆண்டு விறகு கட்டைகளை வெட்டி, சேர்த்து வைத்து, விற்று, விநியோகித்து வந்தேன். அது ஒரு கடினமான வேலை. எனவே 2 இராஜாக்கள் 6ஆம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள துரதிஷ்டவசமான மரம் வெட்டியைக் குறித்துப் பரிதாபப் படுவேன்.

எலிசாவோடிருந்த தீர்க்கதரிசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்கள் தங்கும் இடம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. எனவே அவர்கள் யோர்தான் நதியண்டை சென்று மரம் வெட்டி வந்து, தங்களுக்கு ஒரு இடத்தை ஆயத்தப் படுத்த திட்டமிட்டனர். இதற்கு எலிசாவும் சம்மதித்து அவர்களோடு சென்றார். வேலை நன்றாகச் சென்று கொண்டிருந்த போது, ஒருவரின் கோடாரி தண்ணீரில் விழுந்தது (வச. 5).

எலிசா தன்னுடைய குச்சியால் தண்ணீருக்கு அடியில் தேடிப் பார்த்து, அதன் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, அதனை வெளியே எடுத்திருக்கலாம் என ஒருவர் சொல்லக் கூடும். அப்படியும் செய்திருக்கலாம், ஆனால் அப்படியல்ல, அங்கு ஒரு அற்புதம் நடைபெற்றது. அந்தக் கோடாரியின் தலைப் பகுதியை தேவனுடைய கரம் அசைத்தது, அதனை நீரின் மேல் மிதக்கும்படி செய்தார், எனவே அந்த மனிதனால் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ள முடிந்தது (வச. 6-7).

இந்த அற்புதம் நாம் மனதில் வைத்துக் கொள்ளக் வேண்டிய ஓர் ஆழ்ந்த உண்மையை நமக்கு வெளிப்படுத்துகின்றது. நம் வாழ்வின் சிறிய காரியங்களில் கூட தேவன் கரிசனையுள்ளவராய் இருக்கிறார் – சிறிய காரியங்களான, கோடாரி, சாவி, மூக்குக் கண்ணாடி, அலைபேசி போன்றவை தொலைந்து போனால் கூட, அது நம்மைப் பதறச் செய்யும் என்பதை தேவன் புரிந்து கொள்கின்றார். அவர் எப்பொழுதும் தொலைந்தவற்றை மீட்டுத் தருபவர் அல்ல, மாறாக அவர் நம்முடைய கவலையைப் புரிந்து கொண்டு, நம்மைத் தேற்றுபவராக இருக்கின்றார்.

தேவன் நம்மை இரட்சித்தார் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டதோடு, தேவன் நம்மைப் பாதுகாக்கிறார் என்ற உறுதியையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த உறுதி இல்லையென்றால், நாம் இவ்வுலகில் தனிமையை உணர்வோம், அநேகக் கவலைகளுக்குள்ளாவோம். தேவன் நம்மைப் பாதுகாக்கிறார், நம்முடைய இழப்புகளில், அவை சிறியதாக இருப்பினும் அவற்றில் பங்கு பெறுகின்றார், நம்மீது அவர் அக்கறை கொண்டுள்ளார் என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவன் மட்டுமே திருப்தியாக்குவார்

பெரிய இறால், ஷவர்மா, சாலடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பல உணவு வகைகள் அந்த வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் விருந்து வைக்கவில்லை. உண்மையில், அவர் அந்த வகையறாவான உணவை வாங்கவுமில்லை; அவரது ஆறு வயது மகன் செய்தான். இது எப்படி நடந்தது? தந்தை தூங்குவதற்கு முன் தனது மகனை தனது அலைபேசியில் விளையாட அனுமதித்தார், அவனோ பல உணவகங்களில் இருந்து விலையுயர்ந்த உணவுகளை தாராளமாக வாங்க அதைப் பயன்படுத்தினான். “ஏன் இப்படி செய்தாய்?” என தந்தை, போா்வைக்குப் பின் மறைந்திருந்த மகனிடம் கேட்டார். ஆறு வயது சிறுவன், “எனக்கு பசித்தது” என்றான். சிறுவனின் பசியும், முதிர்ச்சியின்மையும் அதிக விலைக்கிரயம் செலுத்த வழிவகுத்தது.

ஏசாவின் பசியும் அவருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை விட அதிக நஷ்டத்தை அளித்தது. ஆதியாகமம் 25ல் உள்ள கதை, அவர் சோர்வடைந்து உணவுக்காக ஏங்குவதை காட்டுகிறது. அவர் தன் சகோதரனிடம், “அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன்” (வ.30) என்றான். அதற்கு யாக்கோபு ஏசாவின் சேஷ்ட புத்திரபாகத்தை கேட்டார் (வ.31). அந்த பிறப்புரிமையில், முதற்பேறான ஏசாவின் அதிகாரம், தேவனின் வாக்குதத்தங்களின் ஆசீர்வாதம், சொத்தில் இருமடங்கு பங்கு மற்றும் குடும்பத்தின் ஆவிக்குரிய தலைவராக இருக்கும் பாக்கியம் ஆகியவை அடங்கும். தன் பசிக்கு தானே பலியான ஏசா, “புசித்துக் குடித்து” மற்றும் “தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்” (வ. 34).

நாம் சோதிக்கப்பட்டு, எதையாவது விரும்பும்போது நமது பசி நம்மைக் கொடிய தவறுகளுக்கும் பாவங்களுக்கும் இட்டுச் செல்ல விடாமல், பசியுள்ள ஆத்துமாவை “நன்மைகளால்” (சங்கீதம் 107:9) திருப்திப்படுத்துகிற பரலோகத் தகப்பனை மட்டும் அணுகுவோம்.

நெருக்கத்தின் குரல்

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த இடிபாடுகளின் இரண்டு தளங்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிரியா நாட்டுச் சிறுமியான ஐந்து வயது ஜினான், தனது சிறிய சகோதரனைச் சுற்றியுள்ள இடிபாடுகளில் இருந்து காப்பாற்றியபோது மீட்புப் பணியாளர்களை அழைத்தார். “என்னை இங்கிருந்து வெளியே கூட்டிச்செல்லுங்கள்; நான் உங்களுக்காக எதையும் செய்வேன், நான் உங்கள் வேலைக்காரியாகவும் இருப்பேன்” என்று அவள் நொறுங்கிய உள்ளத்தோடு அழைத்தாள்.

நெருக்கத்திலிருந்து அழைப்பது என்பது சங்கீதம் முழுதும் உள்ளது, “நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்” (118:5). பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் எடையை நாம் அனுபவிக்கவில்லை என்றாலும், சவாலான உடல்நிலை, பொருளாதாரக் கஷ்டம், எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற தன்மை அல்லது உறவுமுறை இழப்பு போன்றவற்றின் நெருக்குதலை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம்.

அந்த தருணங்களில் நாம் விடுதலைக்காக தேவனிடம் பேரம் பேசலாம். ஆனால் உதவிக்காக தேவனை வற்புறுத்த வேண்டியதில்லை. அவர் பதிலளிப்பதாக உறுதியளிக்கிறார், அது நமது சூழ்நிலையிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அவர் நம்முடனும் நம் அருகிலும் இருப்பார். மரணம் உட்பட வேறு எந்த ஆபத்துக்கும் நாம் பயப்படத் தேவையில்லை. சங்கீதக்காரனோடு நாமும், “எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்” (வ.7) எனலாம்.

ஜினானும் அவளது தம்பியும் பெற்றுக்கொண்டதை போல வியத்தகு மீட்பு நமக்கு வாக்களிக்கப்படவில்லை, ஆனால் சங்கீதக்காரனை “விசாலத்திலே” (வ. 5) கொண்டு வந்த நமது உண்மையுள்ள தேவனை நாம் நம்பலாம். அவர் நம் நிலைமையை அறிந்திருக்கிறார், மரணத்திலும் அவர் நம்மை கைவிடமாட்டார்.

பெஹலே ஆப்

கருணை மற்றும் விருந்தோம்பலின் இந்தியாவின் முடிசூடா தலைநகரம் லக்னோ. பின்வரும் நகைச்சுவையில் இது பொருத்தமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது: "ஏன் பயணிகள் லக்னோ ரயில் நிலையத்தை விட்டு வெளியே வருவதில்லை? ஏனென்றால் அவர்கள் ரயில் நிலைய நடைபாதையில் ஒருவருக்கொருவர், "பெஹலே ஆப்!" ("நீங்கள் முதலில்" என்று மொழிபெயர்க்கிறது) என்று சொல்லி நகராமல் இருப்பதாலே". மற்றவர்களை முதலில் செல்ல அனுமதிப்பது பற்றி லக்னோ மக்களிடம் இருந்து நாட்டின் பிற பகுதிகள் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளத்தக்கது.

ஆனால் இயேசுவைப் பின்பற்றுபவர்களான நமக்கோ தாழ்மைக்கான நமது அளவுகோல் இயேசுவே. இயேசு சொன்னார், "உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்" (மத்தேயு 23:11). அண்ட சராசரத்தின் சிருஷ்டிகராகிய அவர், "அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போல" (ஏசாயா 53:7) நடத்தப்படுவதற்கு அனுமதித்தபோது, அவர் நமக்குத் தாழ்மையை விளக்கிக் காட்டினார். பவுல் பிலிப்பி சபைக்கு எழுதிய நிருபத்தில், கிறிஸ்துவின் தலைமையின் அளவை குறித்து நம் கவனத்தை ஈர்க்கிறார். இயேசு, சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி இருக்க அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார் (வ.6-8) என்ற உண்மையை நாம் சிந்தையில் கொள்ள அவர் நமக்கு உதவுகிறார். இந்த கீழ்ப்படிதலுள்ள தாழ்மையே அவரது அந்தஸ்தை மேலும் உயர்த்தியது, அவருக்கு உலகின் ஒரே மீட்பராக "மேலான நாமத்தை" வழங்கியது (வ.9-11).

தாழ்மையான இதயம் கொள்வது எளிதல்ல. மற்றவரின் தேவைகளை நம் தேவைக்கு மேல் வைப்பது மிகவும் கடினம். குடும்பம் அல்லது நண்பர்கள் போன்ற நாம் விரும்பும் நபர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது அவ்வளவு கடினம் அல்ல, ஆனால் அந்நியர்களின் தேவைகளை நம்முடைய தேவைகளுக்கு மேல் வைப்பது கடினம் (மாற்கு 12:31). உண்மையான தாழ்மையின் தன்மையை இயேசு நமக்குக் காட்டினார். நாம் பின்பற்றும்படி அவர் நமக்கு ஒரு உதாரணம் கொடுத்தார். தாழ்மையானது கடினமாக இருந்தாலும், நாம் கைக்கொள்ள வேண்டிய ஒன்று.