Archives: மார்ச் 2020

சம்பாதிக்கப்பட்டதல்ல சுதந்தரிக்கப்பட்டது

உணவு விடுதியின் மேசையில் எனது டம்ளரை வைத்து விட்டு,  “இந்த உணவுக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன், அப்பா” என்றேன். நான் கல்லூரியிலிருந்து ஒரு சிறிய விடுமுறையில் என்னுடைய வீட்டிற்கு வந்தேன். என்னுடைய உணவிற்கு என் பெற்றோர் பணம் கொடுத்தது எனக்கு சற்று வினோதமாக இருந்தது. “உன்னை வரவேற்கிறேன், ஜூலி” என்றார் என்னுடைய தந்தை. “நீ எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் நன்றி கூறத்தேவையில்லை, நீ இப்பொழுது எங்களை விட்டுப் பிரிந்து தனியாக இருந்தாலும், நீ எப்பொழுதும் எங்களுக்கு மகள் தான், எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினர் தான்” என்றார். நான் சிரித்துக் கொண்டே, “நன்றி, அப்பா” என்றேன்.

என்னுடைய குடும்பத்தில், என்னுடைய பெற்றோரின் அன்பினைப் பெறவும், அவர்கள் எனக்குச் செய்யும் அனைத்திற்காகவும், நான் எதையுமே செய்ததில்லை. என்னுடைய அப்பா கூறியதைப் போல, நான் தேவனுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கும் தகுதியைப் பெறுவதற்கும், நான் எதையுமே செய்ததில்லை என்பதை நினைத்துக் கொண்டேன்.

“தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்கு” தேவன் நம்மைத் தெரி ந்து கொண்டார் என பவுல் தன்னுடைய வாசகர்களுக்கு எழுதுகின்றார் (எபே.1:4). தேவனுக்கு முன்பாக கறைதிரையற்றவர்களாய் நிற்க தகுதியுள்ளவர்களாகும்படி அவர் நம்மைத் தெரிந்து கொண்டார் (5:25-27). ஆனால், இது இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே கூடும். “அவருடைய கிருபையின் ஐசுவரியத்திபடியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (1:7). நாம் தேவனுடைய கிருபையையும், மன்னிப்பையும் பெறுவதும், மற்றும் அவருடைய குடும்பத்தில் ஒருவராவதும் நம்முடைய செயலினால் சம்பாதித்ததல்ல, இவற்றை நாம் தேவனிடமிருந்து ஈவாக பெற்றுக் கொள்கின்றோம்.

நம்முடைய வாழ்வை தேவனுக்கு நேராகத் திருப்பும் போது, நாம் தேவனுடைய பிள்ளைகளாகின்றோம், அப்படியானால் நாம் நித்திய வாழ்வையும் பெற்றுக் கொள்கின்றோம், நாம் சுதந்தரித்துக் கொள்ளும்படி பரலோகம் நமக்கு காத்திருக்கின்றது. இத்தனை அற்புதமான ஈவைத் தந்த தேவனை ஸ்தோத்தரிப்போம்!

ஆசீர்வதிக்கப்பட்ட அப்பம்

எங்களுடைய மூத்த மகள் பதின்மூன்றாம் வயதை எட்டிய போது, என்னுடைய மனைவியும், நானும் சேர்ந்து அவளுடைய சிறுபிராயத்திலிருந்து அவளுடைய வாழ்க்கையைப் பற்றி நாங்கள் எழுதிவைத்திருந்த தொகுப்புகள் அடங்கிய புத்தகத்தை, அவளுக்குப் பரிசாகக் கொடுத்தோம். அதில் அவளுடைய விருப்புகள், வெறுப்புகள், தனித்திறன்கள், மறக்க முடியாத சில பேச்சுகள், நகைப்பைத்தரும் சில நிகழ்வுகள் ஆகியவற்றைக் குறித்து வைத்திருந்தோம். தேவன் அவளில் செயல்படும் விதத்தை நாங்கள் கண்டதையும் நீண்ட கடிதமாக எழுதிவைத்திருந்தோம். அவளுடைய பதின்மூன்றாம் பிறந்த நாளில், நாங்கள் அதனை அவளுக்குக் கொடுத்த போது, அது அவளை மெய் மறக்கச் செய்தது. அவள் தன்னுடைய தனித்துவத்தை அறிந்துகொள்ள, அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ஒரு சாதாரண பொருளான அப்பத்தை ஆசீர்வதித்ததின் மூலம், இயேசு அதன் தனித்துவத்தை வெளிப்படுத்துகின்றார். அவர் படைத்த மற்ற படைப்புகளோடு, தேவன் அப்பத்தை அவருடைய மகிமையை வெளிப்படுத்துவதற்காகப் படைத்தார். இதன் மூலம், இவ்வுலகத்தின் எதிர் காலத்தைப் பற்றி குறிப்பிடுகின்றார் என நான் நம்புகின்றேன். ஒரு நாள், அவருடைய படைப்புகள் அனைத்தும் அவருடைய மகிமையால் நிரப்பப்படும். எனவே, இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதிக்கும் போது (மத்.26:26), படைப்புகளின் துவக்கத்தையும், அவற்றின் முடிவையும் குறித்து சுட்டிக் காட்டுகின்றார் (ரோம. 8:20-21).

உன்னுடைய வாழ்க்கைக் கதையின் துவக்கம் குழப்பம் நிறைந்ததாக இருக்கலாம், உனக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை நீ உணராமல் இருக்கலாம். ஆனால் மிகப் பெரிய கதை ஒன்று உள்ளது. தேவன் உன்னை விருப்பத்தோடு, ஒரு நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கினார், அவர் உன்னில் மகிழ்ச்சியடைகின்றார் என்பதே அந்தக் கதை. உன்னை மீட்பதற்பதற்காக தேவன் உன்னைத் தேடி வந்தார் என்பதைக் கூறும் கதை (மத். 26:28); தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியை உனக்குத் தந்து, உன்னை புதியதாக்கி, உன்னுடைய அடையாளத்தை மீட்டுக் கொடுத்தார், அவர் உன்னை ஆசீர்வதிக்க விரும்புகின்றார் என்பதைக் கூறும் கதை அது.

பழச்சாறு

பேரம் பேசி, மிகச் சரியான விலைக்கு, அந்த விளக்கு வாங்கப்பட்டது. அது என் வீட்டு அலுவலகத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும், அதன் நிறம், அளவு மற்றும் விலை மிகப்பொருத்தமாக அமைந்தது. வீட்டிற்கு வந்ததும் அந்த விளக்கிற்கு மின் இணைப்பு கொடுத்தபோது ஒன்றும் நடக்கவில்லை, விளக்கும் எரியவில்லை!

“பிரச்சனை ஒன்றுமில்லை, நான் அதனை எளிதில் சரிபார்த்து விடுவேன்” என்று உறுதியளித்தார் என்னுடைய கணவர். அவர் அந்த விளக்கைப் பிரித்துப் பார்த்தார், அதன் பிரச்சனையை எளிதில் கண்டுகொண்டார். அங்கு மின் இணைப்புக் கம்பி, எதனோடும் பொருத்தப்படவில்லை, மின் ஆற்றல் மூலத்தோடு இணைக்கப் படாவிட்டால் அந்த நேர்த்தியான அழகிய விளக்கு பயனற்றதாகிவிடும். 

இது நம்முடைய வாழ்விற்கும் பொருத்தமானது. இயேசு தன் சீஷர்களிடம், “நானே திராட்சச் செடி, நீங்கள் கொடிகள், ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது” (யோவா. 15:5) என்று கூறுகின்றார்.

இயேசு இந்தப் போதனையை, திராட்சை அதிகம் விளையும் பகுதியில் கொடுத்தார், எனவே அவருடைய சீஷர்கள் எளிதில் புரிந்து கொண்டனர். திராட்சைச் செடிகள் கடினமான சூழல்களையும் தாங்கக் கூடியன, அதன் கொடிகள் அதிகம் வெட்டப் பட்டாலும் வளரக் கூடியன. ஆனால் முக்கிய செடியிலிருந்து அவை வெட்டப்பட்டு, தனிமையாக்கப்பட்டால் அவை பயனற்றவையாகிவிடும், எரிக்கப் படும் விறகாகிவிடும். அதேப் போலத்தான் நம்முடைய வாழ்வும் இருக்கும்.

நாம் இயேசுவில் நிலைத்திரு க்கும் போது, அவருடைய வார்த்தைகள் நமக்கு ஜீவனைத்தரும், நாமும் நமக்கு ஜீவன் தரும் மூலமாகிய கிறிஸ்துவோடு இணைக்கப் பட்டிருப்போம். “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப் படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்” (வச. 8) என்றார். மிகுந்த கனிகளைக் கொடுக்க வேண்டுமென்றால் அனுதினமும் சத்தான உணவு கொடுக்கப்பட வேண்டும். தேவன் நமது ஆத்துமாவிற்குத் தேவையான உணவை வேதாகமத்தின் மூலமாகவும், அவருடைய அன்பினாலும் இலவசமாகக் கொடுக்கின்றார். எனவே, தேவனோடு எப்பொழுதும் இணக்கப் பட்டிருங்கள், அவருடைய சாறு உங்களுக்குள்ளே பாயட்டும்!

வருங்கால மரம் வெட்டி

நான் கல்லூரியில் இருந்த போது, ஓர் ஆண்டு விறகு கட்டைகளை வெட்டி, சேர்த்து வைத்து, விற்று, விநியோகித்து வந்தேன். அது ஒரு கடினமான வேலை. எனவே 2 இராஜாக்கள் 6ஆம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள துரதிஷ்டவசமான மரம் வெட்டியைக் குறித்துப் பரிதாபப் படுவேன்.

எலிசாவோடிருந்த தீர்க்கதரிசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அவர்கள் தங்கும் இடம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. எனவே அவர்கள் யோர்தான் நதியண்டை சென்று மரம் வெட்டி வந்து, தங்களுக்கு ஒரு இடத்தை ஆயத்தப் படுத்த திட்டமிட்டனர். இதற்கு எலிசாவும் சம்மதித்து அவர்களோடு சென்றார். வேலை நன்றாகச் சென்று கொண்டிருந்த போது, ஒருவரின் கோடாரி தண்ணீரில் விழுந்தது (வச. 5).

எலிசா தன்னுடைய குச்சியால் தண்ணீருக்கு அடியில் தேடிப் பார்த்து, அதன் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து, அதனை வெளியே எடுத்திருக்கலாம் என ஒருவர் சொல்லக் கூடும். அப்படியும் செய்திருக்கலாம், ஆனால் அப்படியல்ல, அங்கு ஒரு அற்புதம் நடைபெற்றது. அந்தக் கோடாரியின் தலைப் பகுதியை தேவனுடைய கரம் அசைத்தது, அதனை நீரின் மேல் மிதக்கும்படி செய்தார், எனவே அந்த மனிதனால் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ள முடிந்தது (வச. 6-7).

இந்த அற்புதம் நாம் மனதில் வைத்துக் கொள்ளக் வேண்டிய ஓர் ஆழ்ந்த உண்மையை நமக்கு வெளிப்படுத்துகின்றது. நம் வாழ்வின் சிறிய காரியங்களில் கூட தேவன் கரிசனையுள்ளவராய் இருக்கிறார் – சிறிய காரியங்களான, கோடாரி, சாவி, மூக்குக் கண்ணாடி, அலைபேசி போன்றவை தொலைந்து போனால் கூட, அது நம்மைப் பதறச் செய்யும் என்பதை தேவன் புரிந்து கொள்கின்றார். அவர் எப்பொழுதும் தொலைந்தவற்றை மீட்டுத் தருபவர் அல்ல, மாறாக அவர் நம்முடைய கவலையைப் புரிந்து கொண்டு, நம்மைத் தேற்றுபவராக இருக்கின்றார்.

தேவன் நம்மை இரட்சித்தார் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டதோடு, தேவன் நம்மைப் பாதுகாக்கிறார் என்ற உறுதியையும் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த உறுதி இல்லையென்றால், நாம் இவ்வுலகில் தனிமையை உணர்வோம், அநேகக் கவலைகளுக்குள்ளாவோம். தேவன் நம்மைப் பாதுகாக்கிறார், நம்முடைய இழப்புகளில், அவை சிறியதாக இருப்பினும் அவற்றில் பங்கு பெறுகின்றார், நம்மீது அவர் அக்கறை கொண்டுள்ளார் என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார். 

 

கிறிஸ்துவின் சமூகம்

“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது. 

வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.

 

கசக்கும் திருடப்பட்ட இனிப்பு

ஜெர்மானிய தேசத்தில் இருபது டன்களுக்கும் அதிகமான சாக்லேட் நிரப்பப்பட்ட டிரக்கின் குளிரூட்டப்பட்ட டிரெய்லரை திருடர்கள் திருடிச் சென்றனர். திருடப்பட்ட இனிப்பின் மதிப்பிடப்பட்ட  தொகை 80,000 டாலர்கள் (சுமார் 66 லட்சம்). வழக்கத்திற்கு மாறாக யாராவது அதிகப்படியான சாக்லேட்டுகளை விநியோகிப்பது தெரிந்தால், உடனடியாக அதைப் புகாரளிக்க உள்ளுர் காவல்திறையினர் கேட்டுக்கொண்டனர். பெரிய அளவிலான இனிப்புகளைத் திருடியவர்கள் பிடிபட்டு வழக்குத் தொடரப்பட்டால் அவர்கள் கசப்பான மற்றும் திருப்தியற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!

நீதிமொழிகள் இந்தக் கொள்கையை உறுதிப்படுத்துகின்றன: “வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்” (20:17). வஞ்சகமாகவோ அல்லது தவறாகவோ நாம் பெற்றுக்கொண்ட விஷயங்கள் முதலில் தற்காலிக இன்பத்தையளிக்கும் வகையில் இனிமையாகத் தோன்றலாம். ஆனால் சுவையானது இறுதியில் மாறிவிடும். மேலும் நம்முடைய தவறான செய்கை நம்மை சிக்கலில் கொண்டுபோய் விட்டுவிடும். குற்ற உணர்வு, பயம், பாவம் ஆகியவற்றின் கசப்பான விளைவுகள், நம் வாழ்க்கையையும் நற்பெயரையும் அழித்துவிடும். “பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்” (வச. 11). நம்முடைய வார்த்தை மற்றும் செயல்கள் நமது சுயநல ஆசைகளை வெளிப்படுத்தாமல், தூய்மையான தேவனுடையஇருதயத்தை பிரதிபலிக்கட்டும். 

நாம் சோதிக்கப்படும்போது, அவருக்கு உண்மையாய் செயல்படுவதற்கு தேவன் நம்மை பெலப்படுத்துபடிக்கு அவரிடத்தில் விண்ணப்பிக்கலாம். நம்முடைய தற்காலிக இன்பத்திற்கு நம்மை அடிபணியச் செய்யாமல், நிரந்திர மகிமைக்கு நம்மை நடத்திச்செல்லும்படிக்கு அவரிடத்தில் நாம் விண்ணப்பிக்கலாம்.