உணவு விடுதியின் மேசையில் எனது டம்ளரை வைத்து விட்டு,  “இந்த உணவுக்காக உங்களுக்கு நன்றி கூறுகின்றேன், அப்பா” என்றேன். நான் கல்லூரியிலிருந்து ஒரு சிறிய விடுமுறையில் என்னுடைய வீட்டிற்கு வந்தேன். என்னுடைய உணவிற்கு என் பெற்றோர் பணம் கொடுத்தது எனக்கு சற்று வினோதமாக இருந்தது. “உன்னை வரவேற்கிறேன், ஜூலி” என்றார் என்னுடைய தந்தை. “நீ எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் நன்றி கூறத்தேவையில்லை, நீ இப்பொழுது எங்களை விட்டுப் பிரிந்து தனியாக இருந்தாலும், நீ எப்பொழுதும் எங்களுக்கு மகள் தான், எங்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினர் தான்” என்றார். நான் சிரித்துக் கொண்டே, “நன்றி, அப்பா” என்றேன்.

என்னுடைய குடும்பத்தில், என்னுடைய பெற்றோரின் அன்பினைப் பெறவும், அவர்கள் எனக்குச் செய்யும் அனைத்திற்காகவும், நான் எதையுமே செய்ததில்லை. என்னுடைய அப்பா கூறியதைப் போல, நான் தேவனுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கும் தகுதியைப் பெறுவதற்கும், நான் எதையுமே செய்ததில்லை என்பதை நினைத்துக் கொண்டேன்.

“தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்கு” தேவன் நம்மைத் தெரி ந்து கொண்டார் என பவுல் தன்னுடைய வாசகர்களுக்கு எழுதுகின்றார் (எபே.1:4). தேவனுக்கு முன்பாக கறைதிரையற்றவர்களாய் நிற்க தகுதியுள்ளவர்களாகும்படி அவர் நம்மைத் தெரிந்து கொண்டார் (5:25-27). ஆனால், இது இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே கூடும். “அவருடைய கிருபையின் ஐசுவரியத்திபடியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” (1:7). நாம் தேவனுடைய கிருபையையும், மன்னிப்பையும் பெறுவதும், மற்றும் அவருடைய குடும்பத்தில் ஒருவராவதும் நம்முடைய செயலினால் சம்பாதித்ததல்ல, இவற்றை நாம் தேவனிடமிருந்து ஈவாக பெற்றுக் கொள்கின்றோம்.

நம்முடைய வாழ்வை தேவனுக்கு நேராகத் திருப்பும் போது, நாம் தேவனுடைய பிள்ளைகளாகின்றோம், அப்படியானால் நாம் நித்திய வாழ்வையும் பெற்றுக் கொள்கின்றோம், நாம் சுதந்தரித்துக் கொள்ளும்படி பரலோகம் நமக்கு காத்திருக்கின்றது. இத்தனை அற்புதமான ஈவைத் தந்த தேவனை ஸ்தோத்தரிப்போம்!