Archives: பிப்ரவரி 2020

ரகசியம்

சில வேளைகளில் என்னுடைய பூனை ஹீத்கிளிஃப், FOMO (Fear Of Missing Out) என்பதால் பாதிக்கப்படும். நாம் எதையாவது பார்க்காமல் விட்டு விடுவோமோ என்ற பயத்திலேயே வாழும் இந்த வியாதியினால், அது கஷ்டப்படுவதாக நான் நினைக்கிறேன். நான் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வரும் போது, ஹீத்கிளிஃப் வேகமாக வந்து, நான் வாங்கி வந்துள்ளவற்றை ஆய்வு செய்யும், நான் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்கும் போது, அது தன்னுடைய பின்னங்கால் பாதங்களில் நின்றுகொண்டு, நான் வைத்திருப்பவற்றை உற்றுப்பார்க்கும், நான் அவற்றை அதனோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்கும். நான் அவற்றில், அதற்குப் பிடித்தமானதைக் கொடுக்கும் போது, அது, அதன் மீதுள்ள ஆர்வத்தை இழந்து, கோபத்தோடும், சலிப்போடும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விடும்.

எனக்கு அன்பான அந்த பூனையிடம், நான் கடுமையாக நடந்து கொள்வது ஒரு பாசாங்குத் தனம் தான். எனக்குள் இருக்கிற மேலும், மேலும் வேண்டும் என்கிற ஒரு திருப்தியற்ற பசி, என்னுடைய பூனையையும் தொற்றிக்கொண்டது. என்னுடைய திருப்தியற்ற பசியைக் குறித்து, நான் சிந்தித்துப் பார்க்கும் போது, “இப்பொழுது” என்பது எனக்குப் போதுமானதாக இல்லை. 

திருப்தி என்பது ஒரு மனிதனுக்கு இயற்கையாக வருவதில்லை, அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் (பிலி. 4:11). என்னென்ன காரியங்கள் நம்மை திருப்திபடுத்த முடியும் என்று நாம் நினைக்கிறோமோ, அவற்றை விடாப்பிடியாக அடைந்து விடுகிறோம், ஆனால் வேறொன்றைப் பார்த்ததும், நம்முடைய மனநிறைவு கலைந்துவிடுகிறது. இந்த திருப்தியற்ற நிலை, சில வேளைகளில் நம்மை பதட்டதிற்கு இழுத்துச் செல்கிறது. இதனால், அநேகரைக் குறித்து சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களிடமிருந்து நம்மை ஒதுக்கிக் கொள்கின்றோம்.

இன்னும் கூறுவோமேயானால், உண்மையான சந்தோஷத்தை அநுபவிப்பதற்குப் பதிலாக, எதைக்குறித்து பயப்பட்டோமோ, அதையே அநுபவிக்கின்றோம். வாழ்வில் மிக மோசமான விளைவுகளை அநுபவித்த பின்பு, பவுல் உண்மையான திருப்தியின் “இரகசியத்தை” வெளிப்படுத்துகின்றார் (வச. 11-12). முழுமையான திருப்தியைப் பெற நாம் எடுக்கும் முயற்சிகளையெல்லாம் தேவனிடம் ஒப்படைக்கும் போது, நம்மால் விளங்கிக் கொள்ளமுடியாத சமாதானத்தைப் பெற்றுக் கொள்கின்றோம் (வச. 6-7). கிறிஸ்துவின் ஆழமான வல்லமைக்குள்ளும், அழகிற்குள்ளும், கிருபைக்குள்ளும் இழுத்துக் கொள்ளப்படுவோம்.      

நிலைத்திருக்கும் விசுவாசம்

எர்னஸ்ட் ஷக்கில்டன் (1874-1922), 1914 ஆம் ஆண்டு, அண்டார்டிக்கா சமுத்திரத்தைக் கடக்கும் முயற்சியில், ஒரு குழுவினரை வழிநடத்தினார். இதற்காக ஆயத்தப்படுத்தின கப்பலுக்கு “எண்டியுரன்ஸ்” (சகிப்புத் தன்மையுடையது) என்று பெயரிட்டார். அந்தக் கப்பல், வெட்டெல் கடலில், கடுமையான பனியில் அகப்பட்டுக் கொண்டது. அவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு அதிக சகிப்புத்தன்மையோடு ஓட வேண்டியதாயிற்று. அவர்கள் உலகத்தோடு தொடர்பு கொள்ள எந்த வகையிலும் முடியாத நிலையில், ஷக்கில்டனும் அவருடைய குழுவினரும், உயிர் காக்கும் படகுகள் உதவியால் அருகிலுள்ள யானைத் தீவின் கரையை அடைந்தனர். அக்குழுவின் அநேகர் அத்தீவிலேயே தங்கிவிட, ஷக்கில்டனும் மேலும் ஐந்து பேரும், இரண்டு வாரங்கள் நடந்து, 800 மைல்களைக் கடந்து, தெற்கு ஜியார்ஜியாவை அடைந்தனர். அங்கு வந்த பின், தங்கள் குழுவிலுள்ள மற்றவர்களுக்கு உதவியைப் பெற்றளித்தனர். தோல்வியடைந்த அவர்களின் பிரயாணம், வெற்றியாக முடிந்து, சரித்திரத்தில் இடம் பிடித்தது. ஷக்கில்டன் குழுவினர் அனைவரும் தப்பிப் பிழைத்ததால், அவர்களின் தைரியத்தையும், சகிப்புத்தன்மையையும் நன்றியோடு நினைப்போம்.

அப்போஸ்தலனாகிய பவுல், சகித்தலை நன்கு அறிவார். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்காக, ஒரு விசாரணைக்கு ரோமாபுரிக்குச் சென்ற போது, அவர் சென்ற கப்பல் கொடிய புயலில் சிக்கிக் கொண்டது. தேவதூதன் மூலம் அந்தக் கப்பல் மூழ்கிப் போகும் என்பதை பவுல் அறிந்து கொண்டான். பவுல் அக்கப்பலில் பிரயாணம் செய்த அனைவரையும் ஊக்கப்படுத்தி, கரையை அடையச் செய்தார். அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வர் என்ற வாக்கிற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினார். அவர்களின் கப்பல் மட்டும் சேதமானது (அப். 27:23-24).

பேரழிவுகளை நாம் சந்திக்கும் போது, தேவனாகிய கர்த்தர் அனைத்தையும் உடனே சரியாக்கி விட வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் தேவன் நம்பிக்கையைக் கொடுத்து, நாம் சகித்து வளரும்படி செய்கிறார். பவுல் ரோமாபுரியாருக்கு எழுதும் போது, “உபத்திரவம் பொறுமையை………உண்டாக்குகிறது” (ரோம. 5:3) என்கிறார். எனவே, கடினமான நேரங்களில் தேவன் மீது நம்பிக்கையாயிருந்து, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்.

எதிர்பாராத மாற்றம்

1943 ஆம் ஆண்டு, தெற்கு டக்கோட்டாவிலுள்ள ஸ்பியர்ஃபிஷ் என்ற இடத்தை வறண்ட காற்று தாக்கிய போது, அங்கு வெப்பநிலை,-4F இருந்து 45F (-20 டிகிரி C இருந்து 7டிகிரி C) ஆக உயர்ந்தது. இந்த திடீர் வானிலை மாற்றம், 49 டிகிரி வெப்பநிலை உயர்வு இரண்டே நிமிடங்களில் ஏற்பட்டது. இந்த பயங்கர வெப்பநிலை மாற்றம், அடுத்த 24 மணி நேரங்களில் வியத்தகு வகையில் 103 டிகிரிகள் உயர்ந்தது என அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது! 1972 ஆம் ஆண்டு, ஜனவரி 15 ஆம் நாள், லோமா, மான்டனா ஆகியோர் அவ்விடங்களில் வெப்பநிலை -54 டிகிரியிலிருந்து 49 டிகிரி ஃபாரன்கீட் (-48 டிகிரியிலிருந்து 9 டிகிரி செல்ஸியஸ்) ஆக உயர்ந்தது எனக் கண்டனர்.

இவ்வாறு ஏற்படும் திடீர் மாற்றங்கள் வெறுமனே வானிலையில் மட்டும் நிகழ்வன அல்ல, சில வேளைகளில் வாழ்க்கையையே மாற்றுகின்றன. இப்படியிருக்க, “நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப்போய், அங்கே ஒரு வருஷம் தங்கி, வியாபாரம் செய்து, சம்பாத்தியம் பண்ணுவோம் என்கிறவர்களே, கேளுங்கள், நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே” (4:13-14) என்று யாக்கோபு நினைவுபடுத்துகின்றார். எதிர்பாராத நஷ்டம், வியப்பூட்டும் மருத்துவ அறிக்கை, பொருளாதார திருப்பங்கள் என்பதைப் போன்ற திடீர் மாற்றங்கள் ஏற்படலாமே.

நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் அநேக எதிர்பாராத காரியங்கள் நிகழலாம். இதனாலேயே, ஆண்டவருடைய சித்தத்தை எண்ணத்தில் கொள்ளாத “வீம்பு காரியங்களை” விட்டுத் திரும்புங்கள் (வச. 16) என்று யாக்கோபு கூறுகின்றார். அவர் நமக்குத் தரும் ஆலோசனையின் படி, “ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்” (வச. 15) என்கின்றார். நம் வாழ்வின் காரியங்களெல்லாம் உறுதியற்றவை, ஆனால் ஒன்று மட்டும் உண்மை, நம் வாழ்வின் எதிர்பாராத நிகழ்வுகளின் மத்தியில், நம்முடைய தேவன் நம்மை ஒருபோதும் விட்டு விலகுவதில்லை, நம் வாழ்வின் எல்லா நாட்களிலும் நம்மோடிருப்பவர் தேவன் ஒருவரே.

மகிழ்ச்சிதரும் எண்ணங்கள்

What We Keep (வாட் வி கீப்) என்பதில் பில் ஷாப்பிரோ என்பவரின் நேர்முகத் தேர்வுகளைப் பற்றிய தொகுப்பு உள்ளது. இதில் வரும் ஒவ்வொரு நபரும், என்றும் மறக்க முடியாததும் மகிழ்ச்சி தருவதாகவும் உள்ள முக்கியமான அநுபவங்களைக் கூறுகின்றனர்.

இது, என்னுடைய அநுபவத்திலும், நான் மிக முக்கியமானதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் கருதும் காரியங்களைக் குறித்துச் சிந்திக்க வைத்தது. அவைகளில் ஒன்று, நாற்பது ஆண்டுகளைத் தாண்டிய, என்னுடைய தாயார் கைப்பட எழுதிய, சமையல் குறிப்பு அடங்கிய ஓர் அட்டை, மற்றொன்று, என்னுடைய பாட்டியம்மாவின் இளம்சிவப்பு நிற காப்பி கோப்பைகள். சிலர் தங்கள் நினைவில் சில காரியங்களைப் பொக்கிஷமாக வைத்திருப்பார்கள். தங்களைப் பாராட்டி ஊக்கப்படுத்திய வார்த்தைகள், பேரப்பிள்ளைகளின் சிரிப்பு அல்லது வேதாகம வார்த்தைகள் வெளிப்படுத்தின சில உட்கருத்துகள் போன்றவற்றை நினைவில் வைத்திருப்பார்கள்.

நாம் நம்முடைய இருதயத்திற்குள் எவற்றைத் தேக்கி வைத்துள்ளோம்?  நம்முடைய வாழ்வின் மகிழ்ச்சியற்ற கணங்களையா: பதட்டம் ஒளித்துவைக்கப்பட்டுள்ளது, அது எந்த வேளையும் வெளிப்படலாம், கோபம் மேலாக இருக்கிறது, அது தாக்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறது, மனக் கசப்புகள் அமைதியாக இருதயத்திற்குள் இருந்து, நமது சிந்தனைகளை அரித்துக் கொண்டிருக்கிறது.

அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பி சபை மக்களுக்கு நேர்மையான “சிந்தனைகளைக்” குறித்து எழுதுகின்றார். அவர் அந்த மக்களிடம், எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள், எல்லாரிடமும் சாந்த குணத்தைக் காட்டுங்கள், எல்லாவற்றையும் ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப் படுத்துங்கள் என்று கூறி உற்சாகப் படுத்துகின்றார் (பிலி. 4:4-9).

நாம் எவற்றைச் சிந்திக்க வேண்டும் என்று பவுல் கூறும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள், நமக்குள்ளேயுள்ள இருளின் சிந்தைகளை அகற்றி, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம் இருதயங்களையும், சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளுவதற்கு உதவியாக இருக்கும் (வச. 7). நம்முடைய சிந்தைகளை உண்மை, உயர்ந்த எண்ணங்கள், நேர்மை, தூய்மை, அன்பு நிறைந்த, நேசிக்க கூடிய, போற்றக் கூடிய எண்ணங்களால் நிரப்புவோமேயானால், அவர் தரும் சமாதானம் நம்முடைய இருதயங்களை நிரப்பும் (வச. 8).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

குடும்பம் மிகவும் முக்கியமானது

எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்திற்காகவும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது. 

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).