எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கிளென் பாக்கியம்கட்டுரைகள்

கடினமான நேரங்களில் ஜெபித்தல்

எழுத்தாளரும் இறையியலாளருமான ரஸ்ஸல் மூர், தம் பிள்ளைகளைத் தத்தெடுத்த ரஷ்ய அனாதை இல்லத்தில் உள்ள அமானுஷ்ய அமைதியை விவரித்தார். குழந்தைகள் தங்களின் அழுகைக்கு யாரும் பதிலளிக்க மாட்டார்கள் என்பதை அறிந்ததால், அவர்கள் தங்களின் அழுகையை நிறுத்திவிட்டதாக ஒருவர் பின்னர் விளக்கினார்.

கடினமான நேரங்களில், ​கேட்பாரற்றவர்களாக நாமும் உணரலாம். அதிலும் மோசமானது, தேவனும் நம் அழுகையைக் கேட்கவில்லை அல்லது நம் கண்ணீரைப் பார்க்கவில்லை என்ற உணர்வுதான். ஆனால் அவர் பார்க்கிறார், கேட்கிறார்! அதனால்தான் நமது அந்த உணர்வை எதிர்க்கும் குறிப்பாகச் சங்கீத புத்தகத்தில் காணப்படும் விண்ணப்பம் நமக்குத் தேவை. சங்கீதக்காரர்கள் தேவனின் உதவிக்காக மன்றாடுகிறார்கள், மேலும் தங்கள் சூழ்நிலைகளை எதிர்க்கிறார்கள். சங்கீதம் 61 இல், தாவீது தன் விண்ணப்பங்களையும் எதிர்ப்பையும் தனது சிருஷ்டிகரிடம் கொண்டுவந்து, "என் இருதயம் தொய்யும்போது.. உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்" (வ. 2) என்கிறார். தாவீது தேவனிடம் கூக்குரலிடுகிறார், ஏனென்றால் அவர்தான் தனது "அடைக்கலம்" மற்றும் "துருகம்" (வச. 3) என்பதையறிந்திருந்தார்.

சங்கீதங்களின் இவ்விண்ணப்பங்களை மற்றும் எதிர்ப்புகளை ஜெபிப்பது தேவனின் சர்வ ஆளுகையை நமக்கு உறுதிப்படுத்திக் கொள்வதற்கும்,  அவருடைய நன்மை மற்றும் உண்மையை நம்பி முறையிடுவதற்கும் ஒரு வழியாகும். தேவனுடனான நமது நெருங்கிய உறவின் ஆதாரம் அவை. கடினமான தருணங்களில், அவர் கவலைப்படுவதில்லை என்ற பொய்யை நம்ப நாம் சோதிக்கப்படலாம். ஆனால் அவர் காண்கிறார். அவர் நமக்குச் செவிசாய்த்து நம்மோடிருக்கிறார்.

புலம்பலிலிருந்து துதிக்கு

தன்னுடைய மகன் மனந்திரும்பி தேவனிடம் வரும்படிக்கு மோனிகா பாரத்தோடு ஜெபித்தாள். அவள் அவனுடைய தவறான நடக்கைகளைக் கண்டு மனமுடைந்துபோனாள். அவன் வாழ்ந்த பல்வேறு இடங்களில் அவனைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டேயிருந்தாள். சூழ்நிலை கைமீறியதாய் தெரிந்தது. திடீரென்று ஒரு நாளில் அது சம்பவித்தது. அவளுடைய மகன் தேவனை சந்திக்க நேரிட்டது. அவன் கிறிஸ்தவ திருச்சபையின் ஒரு பெரிய இறையியல் நிபுணராய் மாறினான். அவர் வேறு யாருமில்லை, நம் அறிவுக்கு உட்பட்ட, ஹிப்போவின் பிஷப்பாகிய அகஸ்டின். 

“கர்த்தாவே... எதுவரைக்கும்?” (ஆபகூக் 1:2). அதிகாரத்திலிருக்கும் தலைவர்கள் அநீதி செய்யும்போது தேவன் மௌனமாயிருக்கிறதைக் கண்டு ஆபகூக் தீர்க்கதரிசி புலம்புகிறார் (வச. 4). நமக்கு இழைக்கப்பட்ட அநீதியினால் நாம் தேவனை தேடி ஓடிய நாட்களை நினைத்துப்பாருங்கள். வியாதி, பணப்பிரச்சனை அல்லது பிள்ளைகள் தேவனை விட்டு வழிதப்பிப் போகிற சூழ்நிலைகள் என்று அநேகம் இருக்கிறது. 

ஒவ்வொருமுறை ஆபகூக் புலம்பும்போதும், தேவன் அவருடைய கதறலைக் கேட்டார். நாம் விசுவாசத்தில் காத்திருக்கும்போது, தீர்க்கதரிசியைப்போலவே நம்முடைய புலம்பலை துதியாய் மாற்றப் பழகலாம். அவர் சொல்லும்போது, “நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (3:18) என்று தேவனை துதிக்கிறார். அவரால் தேவனுடைய வழிகளை புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும், ஆபகூக் தேவனை நம்பினார். புலம்பலும் துதியும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் விசுவாசத்தின் கிரியைகளே. நாம் தேவனுடைய குணாதிசயங்களை அடிப்படையாய் வைத்து அவரிடத்தில் புலம்புகிறோம். அவர் யார் என்பதை அடிப்படையாய் வைத்து சர்வ வல்லமையுள்ள தேவனை நாம் துதிக்கிறோம். ஒரு நாள், அவருடைய கிருபையினால் புலம்பல்கள் எல்லாம் துதியாய் மாறும்.

மீட்டுக்கொள்ளும் தேவன்

என்னுடைய பிரசங்கத்தின் ஒரு பகுதியாக, மேடையில் ஓவியம் வரைந்துகொண்டிருந்த பெண் ஓவியரிடம் சென்று அவள் வரைந்துகொண்டிருந்த ஓவியத்தின் நடுவில் ஒரு கறுப்பு கோடு ஒன்றைப் போட்டேன். திருச்சபை விசுவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். ஓவியரின் அழகான அந்த படைப்பை நான் சிதைப்பதை அவள் வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர், ஒரு புதிய தூரிகையைத் தேர்ந்தெடுத்து, பாழடைந்த அந்த ஓவியத்தை வேறொரு அழகிய கலைப் படைப்பாக ஆர்வத்துடன் மாற்றினாள்.

அவளுடைய அந்த படைப்பாற்றல், நம்முடைய வாழ்க்கை பாழாக்கப்படும்போது தேவன் செய்யும் கிரியையை எனக்கு நினைவுபடுத்தியது. ஏசாயா தீர்க்கதரிசி, இஸ்ரவேல் ஜனங்களின் ஆவிக்குரிய குருடாக்கப்பட்ட நிலைமையையும் செவிடாக்கப்பட்ட நிலைமையையும் கடிந்துகொள்கிறார் (ஏசாயா 42:18-19). அதன் பின்பு, தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை அறிவிக்கிறார்: “பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்” (43:1). அவர் நமக்கும் அதை செய்ய வல்லவர். நாம் பாவம் செய்த பின்பும், பாவத்தை அறிக்கையிட்டு அவரிடம் திரும்பும்போது அவர் நம்மை மன்னித்து நம்மை மீட்டுக்கொள்ள போதுமானவராயிருக்கிறார் (வச. 5-7; பார்க்க 1 யோவான் 1:9). அலங்கோலத்தை நம்மால் அழகாக்க முடியாது. ஆனால் இயேசுவால் அது கூடும். இயேசு நம்மை அவருடைய இரத்தத்தினால் மீட்டுக்கொண்டார் என்பதே சுவிசேஷத்தின் நற்செய்தி. முடிவிலே கிறிஸ்து நம் கண்ணீரைத் துடைத்து, நம்முடைய கடந்த காலத்திலிருந்து நம்மை மீட்டு, அனைத்தையும் புதிதாக்குவார் என்று வெளிப்படுத்தின விசேஷம் உறுதியளிக்கிறது (வெளிப்படுத்தல் 21:4-5).

வாழ்க்கையைக் குறித்த நம்முடைய அறிவு குறைவானது. ஆனால் நம்மை பேர்ச்சொல்லி அழைக்கிற தேவன் (ஏசாயா 43:1), நம்முடைய வாழ்க்கையை நாம் எதிர்பார்த்ததை விட நேர்த்தியாய் மாற்றுகிறவர். இயேசுவின் மீதான விசுவாசத்தினால் நீங்கள் மீட்கப்பட்டவர்களாயிருந்தால், அந்த ஓவியத்தைப் போன்று உங்களுடைய ஜீவியமும் நேர்த்தியான முடிவை பெற்றிருக்கும்.

தினந்தோறும் சாருதல்

எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். மத்தேயு 6:11

ஒரு காலைப்பொழுதில் எனது குழந்தைகள் காலமே எழுந்து, காலை உணவை தாங்களே சமைப்பதென்று தீர்மானித்தனர். கடுமையான வேலைப்பளு நிறைந்த அந்த வாரத்தின் சோர்வால் நானும் எனது மனைவியும், அந்த சனிக்கிழமையன்று காலை 7:௦௦ மணி மட்டுமாவது தூங்க முயன்றோம். திடீரென நொறுங்கும் சத்தம் பேரோசையோடு என்னை எழுப்ப படுக்கையிலிருந்து பாய்ந்து, கீழ் படிகளில் விரைந்தேன். அங்கே உடைந்த தட்டும், தரையெங்கும் சிந்திய உணவும், அதைப் பெருக்கி சுத்தம்செய்யப் போராடிக்கொண்டிருந்த என் ஐந்து வயது மகன் ரோஷனையும் கண்டேன். என் பிள்ளைகள் பசியோடிருந்தனர், ஆனால் எங்களிடம் உதவி கேட்கவில்லை. எங்களைச் சார்ந்திருப்பதை விடுத்து சுயமாகச் செயல்பட எண்ணினர், அதின் பலனாக உணவு வீணானது. 

மனுஷர் வழக்கத்தில் பிள்ளைகள் நம்மைச் சார்ந்திருப்பதை விடுத்து, தாங்களாக சுயமாய் செயல்படவே எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆனால் தேவனுடனான உறவிலோ, சுயமாய் செயல்படுவதை விடுத்து அவரை சார்ந்துகொள்வதே வளர்ச்சியாகும். ஜெபத்தில்தான் நாம் அவ்வாறு சார்ந்துகொள்ளப் பழகுகிறோம். "'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்." (மத்தேயு 6:11) என்று ஜெபிக்க இயேசு தமது சீடர்களுக்கும், அவரை விசுவாசிக்கும் நமக்கும் கற்றுக்கொடுக்கையில் சார்ந்துகொள்ளும் ஒரு ஜெபத்தையே கற்றுக்கொடுத்தார். ஆகாரம் என்பது வாழ்வாதாரம், விடுதலை மற்றும் வழிகாட்டுதலுக்கு உருவகமாக உள்ளது (வ.11–13). இவை அனைத்திற்கும் இதைப் பார்க்கிலும் அதிகமானவற்றிற்கும் நாம் தேவனையே சார்ந்துள்ளோம்.

தாமே உருவான இயேசுவின் விசுவாசிகள் என எவருமில்லை, மேலும் நாம் அவருடைய கிருபையை மிஞ்சினவர்களும் இல்லை. நம் வாழ்நாள் முழுவதும், நம் நாளை துவக்குகையில், "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே" (வ.9) என்று ஜெபித்து நமது சார்புத்தன்மையை வெளிப்படுத்துவோம்.

ஞானம் அல்லது மதியீனம்?

எனக்கு பத்து வயதாக இருந்தபோது, எங்கள் இளைஞர் குழுவில் இருந்த ஒரு நண்பனிடமிருந்து ஒரு கேசட் டேப்பை வீட்டிற்கு கொண்டு வந்தேன். அதில் கிறிஸ்தவ இசைக்குழுவின் பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்து குடும்பத்திலிருந்து இரட்சிக்கப்பட்ட என்னுடைய அப்பா, அப்பாடல்களை விரும்பவில்லை. ஆராதனை பாடல்கள் மட்டுமே வீட்டில் ஒலிக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். இது ஒரு கிறிஸ்தவ இசைக்குழு தான் என்பதை நான் அவருக்கு விளக்கினேன். ஆனால் அது அவருடைய மனதை மாற்றவில்லை. சிறிது நேரம் கழித்து, இப்பாடல்கள் என்னை தேவனிடத்தில் நெருங்கச் செய்கிறதா அல்லது விலகச் செய்கிறதா என்று ஒருவாரம் பார்த்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார். அந்த ஆலோசனையில் ஒரு நியாயம் இருந்தது. 

வாழ்க்கையில் சரி தவறு என்று பல விஷயங்கள் இருக்கிறது. ஆனால் பல வேளைகளில் நாம் சில தீர்மானங்களை எடுக்க போராட வேண்டியுள்ளது (ரோமர் 14:1-19). என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதில், வேதத்தின் ஞானத்தை நாம் சார்ந்துகொள்ளலாம். எபேசிய திருச்சபை விசுவாசிகளை, “ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து” இருங்கள் என்று பவுல் ஊக்குவித்தார் (எபேசியர் 5:15). ஒரு சிறந்த பெற்றோரைப்போன்று அவர்கள் கூடவே இருந்து ஒவ்வொரு சூழ்நிலைக்கும் அவர்களுக்கு ஆலோசனை கொடுக்கமுடியாது என்பது பவுலுக்கு நன்றாய் தெரியும். நாட்கள் பொல்லாதவைகளானதால் அவர்கள் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுவார்கள் என்றால், அவர்களைக் குறித்த கர்த்தருடைய சித்தம் இன்னதென்று அவர்களால் விளங்கிக்கொள்ள முடியும் என்று பவுல் கூறுகிறார் (வச. 16-17). நாம் சர்ச்சைக்குரிய விஷயங்களுடன் போராடும்போது தேவன் நம்மை வழிநடத்துவதால் விவேகத்தையும் நல்ல தீர்மானங்களையும் பின்பற்றுவதற்கான அழைப்பே ஞானமுள்ள வாழ்க்கை.

திட்டங்களும் நடத்துதலும்

2000ஆம் ஆண்டு, வளர்ந்துவரும் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தை ரூ.375 கோடிக்கு மற்றொரு நிறுவனத்திற்கு விற்க முன்வந்தது. திரைப்படங்கள், மற்றும் வீடியோ கேம்களை வாடகைக்கு எடுக்கும் இந்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் சுமார் 300000 சந்தாதாரர்களை கொண்டிருந்தது. ஆனால் அதே சமயத்தில், பெரிய திரைப்பட காணொலி நிறுவனங்களில் மில்லியன் கணக்கான சந்தாதாரர்கள் இருந்தனர். இவர்கள் இந்த சிறிய நிறுவனத்தை விலைகொடுத்து வாங்க மறுத்துவிட்டனர். அதன் விளைவு? இன்று நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 18 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களையும், 15 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனமுமாய் உருவெடுத்திருக்கிறது. வளர்ந்து வந்த மற்ற நிறுவனங்களெல்லாம், அதை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது. எதிர்காலத்தை யாராலும் தீர்மானிக்கமுடியாது.

நம்முடைய வாழ்க்கை நம்முடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்றும், நம்முடைய எதிர்காலம் சிறப்பானதாய் இருக்கும் என்றும் நாம் நம்புவதற்கு துண்டப்படுகிறோம். ஆனால் யாக்கோபு சொல்லும்போது, நம்முடைய வாழ்க்கையானது “கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே” (4:14) என்று குறிப்பிடுகிறார். வாழ்க்கை என்பது, சொற்பமானதும், துரிதமானதும், எளிதில் நொறுங்கக்கூடியதுமாயிருக்கிறது என்பதை நாம் உணர்வதுண்டு. திட்டமிடுதல் அவசியம் தான். ஆனால், நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் தான் அனைத்தும் இயங்குகிறது என்பது பாவம்.

ஆகையினால் தான் யாக்கோபு, “உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்டbமேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது” (வச. 16) என்று குறிப்பிடுகிறார்.  தேவனோடு உள்ள நெருங்கிய உறவின் மூலமே இந்த பழக்கத்திலிருந்து நாம் விடுபடமுடியும். நன்றியுள்ள ஜீவியமே, “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்” தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதை நமக்கு நினைப்பூட்டுகிறது. நாம் தேவனை அணுகும்போது, நம்முடைய நிகழ்கால மற்றும் எதிர்கால திட்டங்களை ஆசீர்வதிக்கும்படிக்கு மட்டும் கேட்காமல், அவருடைய சித்தத்திற்கு உகந்த வாழ்க்கைக்கு ஒப்புக்கொடுப்போம். “ஆண்டவருக்குச் சித்தமானால்” (4:15) என்பதற்கான அர்த்தம் இதுவே.

இசைக்குழுவைப் போல

என் மனைவி அதிகமாய் பார்க்க விரும்பும் ஒரு கலைஞனின் இசை நிகழ்ச்சியைக் கேட்க, அதற்குரிய டிக்கெட்டுகளுடன் அவளை ஆச்சரியப்படுத்தினேன். திறமை மிக்க அந்தப் பாடகர் ஒரு இசைக்குழுவுடன் வந்திருந்தார். மேலும் அந்த அமைப்பு கடல் மட்டத்திலிருந்து 6000 அடிகளுக்கு மேல், 300 அடி பாறை அமைப்புகளுக்கிடையே கட்டப்பட்ட ஒரு அரைவட்ட அரங்கமாயிருந்தது. இசைக்குழுவினர், எல்லாராலும் அதிகமாய் நேசிக்கப்பட்ட அநேக இலக்கிய நயம் வாய்ந்த மற்றும் நாட்டுப்புற இசைகளை வாசித்தனர். “அமேஸிங் கிரேஸ்” என்ற உன்னதமான பாடலை அவர்கள் இறுதியாக வாசித்தனர். அந்த அழகான, உகந்ததான ஏற்பாடு எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. 

நல்லிணக்கத்தைப் பற்றி ஏதோ அழகான - தனித்தனியான கருவிகள் ஒன்றாக சேர்ந்து இசைக்கப்படும்போது பெரிய மற்றும் அடுக்கடுக்கான கவிஞர்களின் இயற்கை நிலக்காட்சி போல படைக்கப்பட்டது. அப்போஸ்தலனாகிய பவுல், பிலிப்பியருக்கு எழுதும்போது, அழகான நல்லிணக்கம் - “ஏக சிந்தையும்” “ஏக அன்பும்”, இசைந்த ஆத்துமாக்களாய்” “ஒன்றையே சிந்தித்து” கொண்டிருப்பது என்று சுட்டிக்காட்டினார் (பிலிப்பியர் 2:2). இயேசுவின் தாழ்மையான மனப்போக்கு மற்றும் அவரையே கொடுக்கும் அன்பைப் போலவே அல்ல. மாறாக, அதையே தழுவிக்கொள்ளவே அவர் நம்மிடம் கூறுகிறார். பவுல் நன்கு அறிந்த மற்றும் கற்றுக்கொடுத்த சுவிசேஷம், நம்முடைய வேறுபாடுகளை அழிக்காது. ஆனால் நம்மிடையே உள்ள பிரிவினைகளை அகற்றிவிடும். பல அறிஞர்கள், இங்குள்ள பவுலின் வார்த்தைகள் (வச. 6-11), ஒரு ஆரம்பக்கால பாடலுக்கு முகவுரையாய் இருக்கும் என்று நம்புவது சுவாரஸ்யமானது. 

நம்முடைய தனித்துவமான வாழ்க்கையிலும், சூழலிலும் நாம் பரிசுத்த ஆவியானவரை கிரியைசெய்ய அனுமதிக்கும்போது, இயேசுவைப் போல நம்மை மாற்றி, நாம் எல்லாரும் சேர்ந்து, கிறிஸ்துவின் தாழ்மையான அன்பை பிரதிபலிக்கும் இசைக்குழுவைப் போலாகிறோம்.

இருளை எதிர்கொள்ளுதல்

1960 களின் நடுப்பகுதியில், மனித ஆன்மாவில் இருளின் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் இரண்டு பேர் பங்கேற்றனர். அவர்கள் தனித்தனி குகைகளுக்குள் நுழைந்தனர், அதே நேரத்தில் ஆராய்ச்சியாளர்கள் அவர்களின் உணவு மற்றும் தூக்க பழக்கத்தை கண்காணித்தனர். ஒருவர் முழு இருளில் 88 நாட்களும், மற்றொருவர் 126 நாட்களும் இருந்தனர். ஒவ்வொருவரும் எவ்வளவு காலம் முழு இருளில் இருக்கமுடியும் என்று தீர்மானித்திருந்த மாதங்களுக்குள்ளாகவே சோர்ந்து போனார்கள். ஒருவர் குறுகிய நேரம் தான் தூங்கினதாக நினைத்தார். ஆனால் உண்மையாக அவர் 30 மணிநேரம் தூங்கியுள்ளதைக் கண்டுபிடித்தார். இருள் நம்மை திசைதிருப்பும்.

தேவனின் மக்கள் தனித்துவிடப்பட்ட இருளில் தங்களைக் கண்டார்கள். என்ன நடக்கும் என்று தெரியாமல் அவர்கள் காத்திருந்தனர். ஏசாயா தீர்க்கதரிசி இருளை அவர்களின் திசைதிருப்பலுக்கான ஓர் உருவகமாகவும், தேவனின் தீர்ப்பைப் பற்றி பேசுவதற்கான ஒரு வழியாகவும் பயன்படுத்தினார் (ஏசாயா 8:22). முன்னதாக, எகிப்தியர்களை இருள் வாதையாக சந்தித்தது (யாத்திராகமம் 10:21-29). இப்போது இஸ்ரவேல் இருளில் மூழ்கியது.

ஆனால் ஒரு ஒளி வரும். “இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிரகாசித்தது” (ஏசாயா 9:2). அடக்குமுறை உடைக்கப்படும்; திசைதிருப்பல் முடிவுக்கு வரும். எல்லாவற்றையும் மாற்றி ஒரு புதிய நாளைக் கொண்டுவரவும் - மன்னிப்பு மற்றும் சுதந்திரத்தின் நாளைக் கொண்டுவரவும் ஒரு பாலகன் பிறப்பார் (வச.6).

இயேசு வந்தார்! உலகின் இருள் திசைதிருப்பக்கூடியதாக இருந்தாலும், கிறிஸ்துவில் காணப்படும் மன்னிப்பு, சுதந்திரம் மற்றும் ஒளியின் ஆறுதலை நாம் பூரணமாக அனுபவிக்கலாம்.

காலையை போல வாழ்

நான் பல வேறுபட்ட நேரமுடைய பகுதிகளுக்கு விமானப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் போது, ​​விண்பயண களைப்பை தவிர்க்க பல்வேறு தீர்வுகளை முயற்சித்திருக்கிறேன். நான் அவை அனைத்தையும் முயற்சித்தேன் என்று நினைக்கிறேன்! ஒரு சந்தர்ப்பத்தில், நான் பயணிக்கும் நேர மண்டல பகுதிக்கு ஏற்றவாறு எனது விமானப் பயணத்தின் உணவை உண்ணுவதன் மூலம் சரிசெய்ய முடிவு செய்தேன். உடன் பயணிக்கும் பயணிகளுடன் இரவு உணவை சாப்பிடுவதற்கு பதிலாக, நான் ஒரு படம் பார்த்துக்கொண்டே ஆழ்ந்து உறங்க முயற்சித்தேன். நான் தேர்ந்தெடுத்த அந்த உண்ணாமலிருந்த நேரம் கடினமாக இருந்தது, நாங்கள் தரையிறங்குவதற்கு முன்பே வந்த காலை உணவு மிகவும் விரும்பத்தக்கதாக இருந்தது. ஆனால் என்னுடன் இருந்தவர்களுடன் "பலவீனப்பட்டது" பயனளித்தது. இது எனது உடல் கடிகாரத்தை ஒரு புதிய நேர மண்டலத்திற்குள் செல்ல அதுவே உந்தியது.

இயேசுவின் விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் உண்மையிலேயே அவரை பிரதிபலிக்க வேண்டுமென்றால், அவர்களை சுற்றியுள்ள உலகத்தை விடுத்து வாழ வேண்டும் என்பதை பவுல் அறிந்திருந்தார். அவர்கள் “ஒரு காலத்தில் அந்தகாரமாயிருந்தார்கள்” ஆனால் இப்போது அவர்கள் “ஒளியின் பிள்ளைகளாக” வாழ வேண்டியிருந்தது (எபேசியர் 5: 8). அது எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? பவுல்அந்த உருவகத்தை இவ்வாறு நிரப்புகிறார்: "ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்." (வச.. 9).

இரவு உணவு வேளை முழுதும் நான் தூங்கியது என்னுடன் விமானத்தில் பயணித்தவர்களுக்கு முட்டாள்தனமாய் தோன்றி இருக்கலாம், ஆனால் உலகத்திற்கு நள்ளிரவாய் இருந்தாலும், விசுவாசிகளாக, காலையை போல வாழ அழைக்கப்படுகிறோம்.  இது இகழ்ச்சி மற்றும் எதிர்ப்பைத் தூண்டக்கூடும், ஆனால் இயேசுவின் மூலம் நாம் "அன்பின் வழியில் நடக்க" முடியும், "கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, அதை உதாரணமாகக் கொண்டு நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்."(வச.. 2).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தேவனால் விரும்பப்படுதலும், நேசிக்கப்படுதலும்

முகநூலில் “பிடித்திருக்கிறது” என்பதற்கு அடையாளமான அந்த விருப்ப குறி பொத்தான் முகநூலின் ஆரம்பத்திலிருந்தே இருப்பது போலத் தோன்றும். ஆனால் அது 2009 இல் தான் நடைமுறைக்கு வந்தது.

இந்த ‘விருப்ப’ பொத்தானை வடிவமைத்த ஜஸ்டின் ரோசன்ஸ்டைன் கூறுகையில், ‘ஒருவரையொருவர் கிழித்து கீழ்த்தள்ளும் உலகத்திற்கு மாறாக, ஊக்கப்படுத்தி உயர்த்தும்’ ஒரு உலகை உருவாக்கத் தான் விரும்பியதாகத் தெரிவித்தார். ஆனால் தனது கண்டுபிடிப்பு, பயனாளர்களை இந்த சமூக ஊடகத்தின் அடிமையாக்கிய விளைவைக் கண்டு ரோசன்ஸ்டைன் வருந்தினார்.

ரோசன்ஸ்டைனின் இந்த படைப்பு, நமது இணைப்பு மற்றும் அங்கீகாரத்திற்கான அடிப்படைத் தேவையை வெளிப்படுத்துவதாக நான் எண்ணுகிறேன். பிறர் நம்மை அறியவும், கவனிக்கவும், விரும்பவும் வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ‘விருப்ப’ பொத்தான்தான் புதியது, ஆனால் அறிவதற்கும், அறியப்படுவதற்குமான நமது விருப்பம், தேவன் மனிதனை உண்டாக்கிய நாள் தொட்டே உள்ளது.

இன்றும், ‘விருப்ப’ பொத்தான் நமது விருப்பத்தைத் தனிக்கவில்லை. சரிதானே? அதிர்ஷ்டவசமாக மின்னியல் அங்கீகாரத்தை விட, மிக ஆழமாக நேசிக்கும் தேவனை நாம் ஆராதிக்கிறோம். எரேமியா 1:5 ல் தனக்கென்று தீர்க்கதரிசியை அழைக்கையில், அதில் உள்ள ஆழ்ந்த நோக்கத்தையும், பிணைப்பையும் காண்கிறோம். “நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்குமுன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி...என்றாா்.கருவுறுதலுக்கு முன்பே தீர்க்கதரிசியைத் தேவன் அறிந்திருந்தார். மேலும் அர்த்தமுள்ள, நோக்கம் நிறைந்த வாழ்க்கைக்காக அவரை வடிவமைத்தார் (வ. 8-10). நம்மை மிகவும் நெருக்கமாக அறிந்த, நேசிக்கும், விரும்பும் இந்த தகப்பனை நாம் அறிகையில், அவர் நம்மையும் ஒரு நோக்கமுள்ள வாழ்க்கைக்கு அழைக்கிறார். 

 

தாகமும், நன்றியுள்ளமும்

நானும் என் இரண்டு நண்பர்களும் ஒரு மலைப்பாதையில் சாகச பயணம் செய்ய விரும்பினோம். அதற்கு முன், எங்கள் நடைப்பயணத்தைத் தொடங்கும் போது போதுமான தண்ணீர் இருக்கிறதா என்று நாங்கள் சந்தேகப்பட்டதுபோலவே, அது வேகமாகத் தீர்ந்தது. விளிம்பை அடைய இன்னும் சில தூரமிருந்த நிலையில் நாங்கள் முற்றிலும் தண்ணீர் இல்லாமல் இருந்தோம். மூச்சுத் திணறி ஜெபத்துடன் சுவாசித்தோம். பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி வருகையில், ஒரு அதிசயம் நடந்தது. மூன்று தண்ணீர் பாட்டில்கள் பாறையில் ஒரு பிளவில் மாட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம், “உங்களுக்கு இது தேவை என்று தெரியும். மகிழுங்கள்!” என்று ஒரு குறிப்புமிருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டு, தேவனுக்கு நன்றி சொல்லி, மிகவும் தேவையான நீரைப் பருகி, கடைசிக் கட்டத்திற்குப் பயணித்தோம். நான் என் வாழ்நாளில் இவ்வளவு தாகமாகவும், நன்றியுடனும் இருந்ததில்லை.

சங்கீதக்காரனுக்கு மலையேறிய அனுபவம் இல்லை. ஆனால் ஒரு மானுக்குத் தாகமெடுக்கையில் எவ்வாறு செயல்படும் என்பதை அவர் அறிந்திருந்தார். (சங்கீதம் 42:1) தாகத்தாலும், பசியாலும், மானானது உயிர் பிழைப்பதற்காக நீரோடையை வாஞ்சித்துக் கதறுகிறது போல , “என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (வ.1) என தேவனுக்கான அவனது விருப்பத்தை அவன் வெளிப்படுத்துகிறான்.

மிகவும் தேவையான நீரைப் போலவே, தேவன் நமக்கு எப்போதும் இருக்கும் உதவியாளர். நாம் அவருக்காக ஏங்குகிறோம், ஏனெனில் அவர் நமது சோர்ந்துபோன வாழ்க்கைக்குப் புதுப்பிக்கப்பட்ட பெலனையும், புத்துணர்ச்சியையும் தருகிறார், அனுதின பயணத்தில் எதுவாயிருந்தாலும் நம்மை ஆயத்தப்படுத்துகிறார்.

 

கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்பட்டது

எனது முதல் குறுகிய கால மிஷனரி பயணமாக, ஆற்றங்கரையில் சபையைக் கட்ட உதவுவதற்காக, ஒரிசாவில் உள்ள காட்டிற்குச் சென்றேன். ஒரு நாள் மதியம், அந்த பகுதியில் தண்ணீர் வடிகட்டி இருக்கும் சில வீடுகளில் ஒன்றிற்குச் சென்றோம். எங்களை ஏற்றுக்கொண்டவர், கலங்கியிருந்த கிணற்று நீரை வடிகட்டியின் மேல் ஊற்றியபோது, சில நிமிடங்களில் அனைத்து அசுத்தங்களும் அகற்றப்பட்டு சுத்தமான, தெளிவான குடிநீர் தோன்றியது. அந்த மனிதனின் வசிப்பிடத்தில், கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுவதன் அர்த்தம் என்ன என்பதை நான் பார்த்தேன்.

நாம் முதலில் நம் குற்ற உணர்ச்சியோடும், அவமானத்தோடும் இயேசுவிடம் வந்து, நம்மை மன்னிக்கும்படி கேட்கும்போதும், அவரை நம் இரட்சகராக ஏற்கும்போதும், அவர் நம் பாவங்களிலிருந்து நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் புதிதாக்குகிறார். கலங்கியிருந்த நீரைச் சுத்தமான குடிநீராக மாற்றியது போல் நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். இயேசுவின் பலியால், நாம் தேவனுடைய நீதியாகிறோம் (2 கொரிந்தியர் 5:21) என்பதையும், மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என்பதையும் அறிவது எவ்வளவு மகிழ்ச்சி!

ஆனால் நாம் இனி ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் இல்லை என்பதை அப்போஸ்தலன் யோவான் நமக்கு நினைவூட்டுகிறார். நாம் பாவம் செய்யும்போது, இந்த வடிகட்டியின் உருவகத்தைக் கொண்டு உறுதியடைவோம், “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1 யோவான் 1:9) என்றறிந்து ஆறுதலடைவோம்.

நாம் தொடர்ந்து கிறிஸ்துவால் சுத்திகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து நம்பிக்கையுடன் வாழ்வோம்.