Archives: டிசம்பர் 2019

அழகிய கனி

மலர்களின் பட்டணம் என்ற நிறுவனம் உருவாவதற்கு காரணமாயிருந்த ரெபேக்கா லெமோஸ் ஓடெரோ என்பவர், “குழந்தைகளே, நீங்கள் ஒரு விதையைத் தோட்டத்தில் எங்கேயாகிலும், நீங்கள் விரும்பும் இடத்தில் எறியுங்கள், பின்னர், அதிலிருந்து என்ன வெளியாகிறது என்று பாருங்கள்” என்றார். இது சரியான தோட்டக் கலையல்ல, எனினும், ஒவ்வொரு விதைக்குள்ளும் ஒரு ஜீவனை உருவாக்கக்கூடிய ஆற்றல் பொதிந்துள்ளது என்ற உண்மையை, அது வெளிப்படுத்தியது. 2004ஆம் ஆண்டிலிருந்து மலர்களின் பட்டணம் என்ற நிறுவனம், பள்ளிகளிலும், குறைந்த வருமானம் உள்ள பகுதிகளிலும் தோட்டங்களை உருவாக்கியது. குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களைப் பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டது. அவர்களுக்குத் தோட்ட வேலைக்கான திறன்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. “பட்டணங்களில் பசுமை நிறைந்த இடங்களை உருவாக்குவதன் மூலம், குழந்தைகள் சுற்றுப்புறங்களிலுள்ள அழகிய இடங்களில் பயன் தரும் காரியங்களைச் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது” என்றார், ரெபேக்கா.

இயேசு கிறிஸ்து, விதை விதைப்பதைக் குறித்து ஒரு கதையைக் கூறினார். இந்த விதைகள் நூறு மடங்கு விளைச்சலைத் தந்தன (லூக்கா 8:8) இங்கு, தேவனுடைய வார்த்தைகளாகிய விதைகள் நல்ல நிலத்தில் விதைக்கப் படுகின்றது. “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும், நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.”  என்பதாக விளக்குகின்றார் (வச. 15).

நாம் மிகுந்த கனிகளைக் கொடுப்பதற்கான ஒரேவழி கிறிஸ்துவில் நிலைத்திருப்பதேயாகும் (யோவா. 15:4). கிறிஸ்து நமக்கு கற்பித்ததைப் போன்று, நாம் அவரைப் பற்றிக் கொண்டால், ஆவியானவர் நம்மில் அவருடைய கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” (கலா. 5:22-23), ஆகிய இவற்றை நம்மில் காணச்செய்வார். நம்மில் உருவாக்கிய இந்தக் கனிகளின் மூலம், மற்றவர்களின் வாழ்வைச் சந்திக்கச் செய்வார், அவர்களின் வாழ்வும் கனிதரும் வாழ்வாக மாற்றப் படும். இது ஓர் அழகிய வாழ்வை உருவாக்கும்.

உருவாக்கப்பட்ட குறைபாடு

எருசலேம் நகரத்தின் கிழக்குப் பக்கத்தில், இயற்கையில் அமைந்த ஒரு நீரூற்று உள்ளது. அந்தக் காலத்தில், அப்பட்டணத்திற்குத் தண்ணீர் தரக்கூடிய ஒரே ஊற்று அதுதான். ஆனால், அது பட்டணத்தின் அலங்கத்திற்கு வெளியே அமைந்துள்ளது. எருசலேம் நகரத்தைப் பிடிப்பதற்கு உகந்த இடம் இதுதான். ஊடுருவ முடியாத இப்பட்டணத்தை, எதிரிகள் வளைந்து கொண்டு, இந்த நீரூற்றை வேறு திசைக்குத் திருப்பவோ, அல்லது அதன் நீரைத் தடுத்து நிறுத்தவோ செய்தால், அப்பட்டணத்தாருக்குச் சரணடைவதை விட வேறு வழியில்லை.

இந்த பெலவீனத்தையறிந்த எசேக்கியா ராஜா, கடினமான மலை வழியே 1750 அடி நீளமுள்ள கால்வாயை வெட்டி, அதன் வழியே தண்ணீரை பட்டணத்துக்குள் உள்ள குளத்திற்குக் கொண்டு வந்தான் (2 இரா. 20:20, 2 நாளா. 32:2-4). இவை எல்லாவற்றிலும், அதைச் செய்தவரை, அவர் நோக்காமலும், அதை ஏற்படுத்தி, தூரத்திலிருந்து வரும்படி திட்டம் பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள், என்று எசேக்கியாவைக் குறித்து கூறுகின்றார் (ஏசா. 22:11) எதைத் திட்டம் பண்ணினார்?

எருசலேம் பட்டணத்திற்குத் தண்ணீர் தரும் ஊற்றை, பட்டணத்திற்கு வெளியே இருக்குமாறு திட்டமிட்டவர் தேவன் தாமே. அந்தப் பட்டணத்தினுள் வாசம் பண்ணுவோர், தங்களுடைய இரட்சிப்புக்கு தேவனாகிய கர்த்தரையே சார்ந்திருக்கும்படி அவர்களுக்கு தொடர்ந்து நினைப்பூட்டவே, அந்த  நீரூற்றை பட்டணத்திற்கு வெளியே அமைத்தார். 

இது நம்முடைய குறைபாடுகளும், நம்முடைய நலனுக்காகவே கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லவா? அப்போஸ்தலனாகிய பவுலும், தனக்கிருந்த குறைகளைக் குறித்துக் கூறும் போது, “ஆகையால் கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்” (2 கொரி. 12:9) என்கின்றார். எனவே, நாமும் நமக்கிருக்கின்ற குறைகளை, தேவனுடைய பெலன் நம்மில் வெளிப்படும் படி, கொடுக்கப்பட்ட ஈவுகளாகக் கருதுவோமா?

அன்பில் கழுவப்படல்

தெற்கு கலிஃபோர்னியாவிலுள்ள ஓர் ஆலயத்தின் விசுவாசிகள், தேவனுடைய அன்பை செயல் முறையில் காண்பிக்க விரும்பினர். அவர்கள் அருகிலுள்ள, இயந்திரம் மூலம் துணி துவைக்கும் இடத்தில் கூடி, தங்களின் சமுதாயத்தில் தேவையுள்ளோருக்கு, துணிகளைத் துவைத்து, மடித்து, அவற்றோடு, சூடான உணவையும், மளிகை சாமான்கள்  அடங்கிய பைகளையும் சேர்த்து வழங்கினர்.

இவ்வாறு செய்யும் போது, ஒரு தன்னார்வத் தொண்டர் கண்டுபிடித்தது என்னவெனில், “அம்மக்களோடு தொடர்பு கொள்ள வாய்ப்பு கிடைப்பதாகவும், அவர்களுடைய கதைகளைக் கேட்க முடிந்ததாகவும்” கூறினார். அவர்கள் இயேசுவோடு சரியான உறவை வைத்திருப்பதால், தங்களுடைய விசுவாசத்தை வாழ்வில் காட்ட விரும்பினர், அன்பான வார்த்தையாலும், அன்பின் செய்கையாலும் மற்றவர்களுக்கு உதவி, அவர்களோடு உண்மையான உறவை ஏற்படுத்திக் கொள்ள விரும்பினர்.

ஒவ்வொரு விசுவாசியினுடைய உண்மையான விசுவாசத்தின் விளைவை, அவர்களுடைய அன்பின் கிரியைகளில் காணலாம் என  அப்போஸ்தலனாகிய யாக்கோபு  கூறுகின்றார். “அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்” (யாக். 2:17) என்று சொல்கின்றார். நாம் தேவனை விசுவாசிக்கிறோம் என்று அறிக்கையிடும் போது, அவருடைய பிள்ளைகளாகின்றோம், நாம் மற்றவர்களுக்குப் பணிசெய்வதன் மூலம் தேவனுக்கு ஊழியம் செய்யும் போது, இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, அவரைப் பின்பற்றுகிறவர்களாகிறோம் (வச. 24) ஆவியும், சரீரமும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதைப் போல, விசுவாசமும், ஊழியமும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன (வச. 26) என கிறிஸ்துவின் வல்லமை நம் மூலமாக, நம்மில் வெளிப்படுவதை அழகாகக் காட்டுகின்றார்.

தேவன் சிலுவையில் வெளிப்படுத்தின தியாகத்தை நாம் ஏற்றுக்கொண்டு, அவருடைய அன்பினால் முற்றிலும் கழுவப்படும் போது, நம்முடைய உண்மையான விசுவாசம், நாம் முழுமனதோடு பிறருக்குச் செய்யும் அநேகக் கிரியைகளினால் விளங்கும்.

நீ ஒரு போதும் மறக்கப்பட்டுப் போவதில்லை

பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, பியானோவின் அடிப்படை பாடங்களைக் கற்றுக் கொண்டேன் என்பதை என்னுடைய பிள்ளைகளுக்கு நிரூபித்துக்காட்ட, நான் பியானோவை வாசிக்கும்படி அமர்ந்தேன். சி மேஜர் இசையில் ஆரம்பித்தேன். கடந்த  இருபது ஆண்டுகளில் மிகச் சிறிய அளவே வாசித்திருப்பேன். ஆனால் என்ன ஆச்சரியம்!  இசை இன்னமும் என் நினைவிலிருக்கிறது, எனக்கு ஒரு தைரியமும் கிடைத்தது, நான், என் நினைவிலிருந்து, ஏழு வெவ்வேறு ஆதாரச் சுருதிகளையும், ஒவ்வொன்றாகப் போட ஆரம்பித்தேன். நானே  அதிர்ந்து போனேன்! பல ஆண்டுகளின் பயிற்சி, அந்தப் பாடங்களை என்னுடைய மனதில் பதித்து விட்டது, விரல்களுக்குத் தேவையான நுட்பங்களும், என்னுடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அவை உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்துவிட்டன.

சில காரியங்களை, நாம் மறக்கவே முடியாது. தேவன் தம்முடைய பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பும், நம்முடைய மங்கிப் போகும் நினைவைப் போல் அல்லாமல், அவருடைய மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. உண்மையில் தேவன் ,நம்மை மறப்பவரல்ல. ஆனால், புறதேசத்திற்கு சிறைப்பட்டுப் போன இஸ்ரவேலர்கள், கர்த்தர் நம்மைக் கைவிட்டார், ஆண்டவர் நம்மை மறந்தார் என்று சொல்கின்றார்கள், (ஏசாயா49:14). ஏசாயா தீர்க்கன் மூலமாக தெளிவாக கூறவிரும்புகிறார். “ஸ்திரியானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை” (வ.15) என்று உறுதியாகக் கூறுகின்றார். 

தேவன் தன்னுடைய மாறாத அன்பை, அவர்கள் அறிந்து கொள்ளும்படியும் தன்னுடைய பிள்ளைகளின் மீது அவர் கொண்டுள்ள கரிசனையை, அவர்கள் தெரிந்து கொள்ளும் படியும், “இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்,” (வ.16) என்கின்றார். இது, அவருடைய பிள்ளைகளின் மீது அவர் எத்தனை விழிப்பாயிருக்கின்றார் என்பதைக் காட்டுகிறது. அவர்களுடைய முகங்களும், பெயர்களும் எப்பொழுதும் அவருக்கு முன்பாக நிற்கின்றன.

இன்றும் கூட, நாம் தேவன் நம்மை மறந்து விட்டார், கைவிட்டு விட்டார் என்று எளிதில் கூறிவிடுகின்றோம். ஆனால் நம்மை அவர் உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறார் என்பது எத்தனை ஆறுதலாயிருக்கின்றது. இப்பொழுதும் நம்முடைய தந்தை நம்மை மறக்கவில்லை, நம்மைப் பாதுகாக்கின்றார், நம் மீது அன்பு செலுத்துகின்றார் என்பதை மறவாதே.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

கிறிஸ்துவில் ஐக்கிய பன்முகத்தன்மை

பேராசிரியர் டேனியல் போமன் ஜூனியர் தனது “சர்வீஸ் அன் தி ஸ்பெக்ட்ரம்” என்ற கட்டுரையில், ஓர் மனஇறுக்கம் கொண்ட நபராக தனது தேவாலயத்திற்கு எவ்வாறு சேவைசெய்வது என்பது குறித்த முடிவுகளை மேற்கொள்வதில் உள்ள சிரமத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் குறிப்பிடும்போது “இதுபோன்ற மனஇறுக்கம் கொண்ட மக்கள் ஒவ்வொரு முறையும் முன்னோக்கி செல்ல ஓர் புதிய பாதையை உருவாக்கவேண்டும். அவை ஓர் தனித்துவமான பாதையை அமைக்கிறது... மன, உணர்ச்சி மற்றும் உடல் ஆற்றல்... தனிமை/புத்துணர்வூட்டும் தருணங்கள்; உணர்வு உள்ளீடுகள் மற்றும் ஆறுதல் நிலை...அன்றைய நாள்பொழுது; நாம் நமது பெலனானவைகளுக்காக மதிக்கப்படுகிறோமா மற்றும் உணரப்பட்ட குறைபாடுகளுக்காக ஒதுக்கப்படாமல் நமது தேவைகளுக்கு இடமளிக்கப்படுகிறோமா இல்லையா என்று சிந்தித்தல்...; இன்னும் பற்பல காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.” அதுபோன்ற தீர்மானங்கள் “மக்களின் நேரத்தையும் ஆற்றலையும் மாற்றியமைக்கும்போது, அவை மற்றவர்களையும் நம்மையும் மறுசீரமைக்க உதவும்” என்று போமன் எழுதுகிறார். 

1 கொரிந்தியர் 12இல் பவுல் விவரிக்கும் பரஸ்பர பார்வை ஓர் குணப்படுத்தும் தீர்வாக இருக்கும் என்று போமன் நம்புகிறார். அதில் 4-6 வசனங்களில், தேவன் தன் ஜனங்கள் ஒவ்வொருவருக்கும் வரங்களை “அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது” (வச. 7) என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தில் இன்றியமையாத அவயங்கள் (வச. 22). திருச்சபை அனைவரையும் மாற்றமுடியாத ஒரே பாதையில் பயன்படுத்தாமல், அவரவருக்கு தேவன் கொடுத்த வரங்களின் அடிப்படையில் தேவனுடைய இராஜ்யத்திற்காய் அவற்றை நேர்த்தியாய் பிரயோகிக்க அனுமதிக்கலாம். 

இந்த வழியில், ஒவ்வொரு நபரும் செழிப்பையும் முழுமையையும் காண்பதோடு, கிறிஸ்துவின் சரீரத்தில் தங்கள் மதிப்புமிக்க இடத்தில் பாதுகாப்பாக இருக்க முடியும் (வச. 26).

 

இயேசு – மெய்யான சமாதானக் காரணர்

1862, டிசம்பர் 30ஆம் தேதி, அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்டது. எதிர் துருப்புக்கள் ஓர் ஆற்றின் எதிர்பக்கங்களில் எழுநூறு மீட்டர் இடைவெளியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள் தீ மூட்டி குளிர்காய்ந்துகொண்டிருந்தபோது, மற்றொரு பகுதியில் சிப்பாய்கள் தங்கள் வயலின்களையும் ஹார்மோனியங்களையும் எடுத்துக்கொண்டு “யாங்கி டூடுல்” என்ற இசையை வாசிக்கத் துவங்கினர். பதிலுக்கு, மறுபக்கத்தில் இருந்த வீரர்கள் “டிக்ஸி” என்று ஓர் பாடல் இசையை  வாசித்தனர். அப்படி மாறி மாறி வாசிக்கையில், இறுதியில் இருதரப்பினரும் இணைந்து “ஹோம், ஸ்வீட் ஹோம்” என்ற இசையை வாசித்தனர். ஒன்றுக்கொன்று எதிரிகளாய் இருந்த இரண்டு தேசத்து இராணுவ வீரர்களும் இரவில் இசையைப் பகிர்ந்து, கற்பனைசெய்ய முடியாத அளவு சமாதானத்தை பிரதிபலித்தனர். இருப்பினும் அந்த மெல்லிசைப் போர்நிறுத்தம் குறுகிய காலமே நீடித்தது. மறுநாள் காலை, அவர்கள் தங்கள் இசைக்கருவிகளை கீழே வைத்துவிட்டு, தங்கள் துப்பாக்கிகளை கையில் எடுத்தனர். அந்த போரில் 24,645 வீரர்கள் உயிரிழந்தனர்.

அமைதியை உருவாக்குவதற்கான நமது மனித முயற்சிகள் தவிர்க்க முடியாமல் பெலனற்றுபோகிறது. பகைமைகள் ஓர் இடத்தில் அணைந்து, வேறொரு இடத்தில் நெருப்பை பற்றவைக்கிறது. ஓர் குடும்பப் பிரச்சனை திடீரென்று முடிவுக்கு வரும், சிறிது நாட்கள் கழித்து மறுபடியும் சூடுபிடிக்கும். நமக்கு நம்பிக்கையான சமாதானக் காரணர் தேவன் மட்டுமே என்று வேதம் சொல்லுகிறது. “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டு” (16:33) என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். இயேசுவில் நாம் இளைப்பாறக்கூடும். அவருடைய சமாதானப் பணியில் நாமும் இணைந்துகொள்ளும்போது, மெய்யான சமாதானத்தை அவர் நமக்கு அருளுவார். 

இவ்வுலகத்தின் உபத்திரவ பாதையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாது என்று இயேசு கூறுகிறார். “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்” (வச. 33) என்று இயேசு சொல்லுகிறார். நம்முடைய முயற்சிகள் பல சமயங்களில் பயனற்றவையாக இருந்தாலும், நம் அன்பான தேவன் (வச. 27) இந்த உடைந்த உலகில் நமக்கு சமாதானத்தை அருளுகிறார். 

 

கிறிஸ்துவின் சமூகம்

“வீட்டையும், என் மனைவி, மகன் மற்றும் மகளையும் மறந்துவிடுவதே வெற்றிக்கான ஒரே வழி என்று எனக்குத் தெரியும்; ஆனால் என்னால் அதை செய்ய முடியாது என்று கண்டுபிடித்தேன்; அவை என் இதயம் மற்றும் ஆன்மாவில் பிணைக்கப்பட்டுள்ளன” என்று ஜோர்டன் கூறினார். அவர் ஓர் தொலைதூரப் பகுதியில் தனியாக, ஓர் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுக்கொண்டிருந்தார். அங்கு போட்டியாளர்கள் முடிந்தவரை குறைந்தபட்ச பொருட்களுடன் சமவெளியில் உயிர்வாழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்கிருக்கக்கூடிய பயங்கரமான கரடிகள், உறைபனி, காயங்கள் மற்றும் பசி ஆகியவைகளை அவரால் சமாளிக்க முடிந்திருந்தும், தன் குடும்பத்தைவிட்டு பிரிந்திருக்கும் தனிமையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அந்த ஆட்டத்தை கைவிட அவைகள் அவரை கட்டாயப்படுத்தியது. 

வனாந்தரத்தில் உயிர்வாழ தேவையான அனைத்து காரியங்களும் நம்மிடம் இருந்தாலும், நம்முடைய சமூகத்தினின்று நாம் பிரிந்திருப்பது நம்மை தோல்விக்கு நேராய் நடத்தக்கூடும். பிரசங்கி புத்தகத்தில் ஞானி, “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்... ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்” (4:9-10) என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவை கனப்படுத்தும் சமூகம், குழப்பம் ஏற்படுத்தினாலும்கூட, அவைகள் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இந்த உலகத்தின் சோதனைகளை நாம் சொந்தமாகச் சமாளிக்க முயற்சித்தால் அவைகளை நாம் மேற்கொள்ள முடியாது. “ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்” (வச. 8) அவனுடைய பிரயாசம் விருதாவாயிருக்கிறது. சமூகத்தில் இல்லாமல் தனித்திருந்தால் நாம் அபாயத்தை சந்திக்கக்கூடும் (வச. 11-12). “முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது” (வச. 12). அன்பான, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சமூகத்தின் பரிசு, ஊக்கத்தை அளிப்பது மட்டுமல்லாமல், சவாலான சூழ்நிலைகளிலும் செழிக்க நமக்கு பலத்தையும் அளிக்கிறது. நமக்கு மற்றவர்களின் ஆதரவும் அவசியப்படுகிறது.