Archives: அக்டோபர் 2019

நாம் தேவனைத் துதிக்கும் போது

2014 ஆம் ஆண்டு ஒன்பது வயது நிரம்பிய வில்லி, அவர்களுடைய வீட்டு முற்றத்திலிருந்து கடத்தப்பட்டான். அவன் தனக்கு விருப்பமான “எல்லாத் துதியும்” என்ற சுவிசேஷகத் துதி பாடல் ஒன்றினைத் திரும்பத் திரும்ப பாடிக் கொண்டேயிருந்தான். அந்த மூன்று மணி நேர கடும் போராட்டத்தில், வில்லியை அமைதியாக இருக்கும்படி கடத்தல்காரர்கள் விடுத்த கட்டளையையும் பொருட்படுத்தாமல் அவன் பாடிக் கொண்டேயிருந்தான். கடைசியாக, கடத்தல்காரர்கள் வில்லியை காரைவிட்டு வெளியேற்றினர். பின்பு, வில்லி அந்த எதிர்பாராத அநுபவத்தை விளக்கிய போது, அவன் தன் பயத்தின் மத்தியிலும் விசுவாசத்தைக் கைவிடாமல் பாடியதைக் கேட்ட கடத்தல் காரர்கள் குழப்பமடைந்தனர், என்றான்.

பயங்கரச் சூழலில் வில்லி செயல்பட்ட விதம், பவுலும் சீலாவும் பகிர்ந்து கொண்ட ஓர் அநுபவத்தைப் போலுள்ளது. வாரினால் அடிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்ட பின்பு அவர்கள், “ஜெபம் பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள். காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும் படியாக பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டன; எல்லாருடைய கட்டுகளும் கழன்று போயிற்று” (அப். 16:25-26).

இந்த அதிசயமான வல்லமையின் வெளிப்பாட்டைக் கண்ட சிறைச் சாலைக்காரன் பவுலும் சீலாவும் ஆராதித்த தேவனாகிய கர்த்தரை விசுவாசித்தான். அவனோடு, அவன் வீட்டாரனைவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள் (வச. 27-34) அன்று இரவு துதியின் வழியாக ஆவிக்குரிய கட்டுகளும், மாம்சக் கட்டுகளும் தெறிப்புண்டன.

பவுல், சீலா மற்றும் வில்லியின் அநுபவங்களைப் போன்று நமக்கு கண்களால் காணக்கூடிய அநுபவம் இல்லாமலிருக்கலாம். ஆனால் அவருடைய ஜனங்களின் துதிக்கு அவர் செவி கொடுப்பார் என்பதைத் தெரிந்து கொள்வோம். அவர் அசையும் போது, சங்கிலிகள் தெறிப்புண்டு போம்.

 

உண்மை: கசப்பா? அல்லது இனிப்பா?

என்னுடைய மூக்கின் மேல்பகுதியில் அநேக மாதங்களாக ஒரு கட்டி இருந்தது. நான் மருத்துவரை அணுகினேன். அந்தப் பகுதியின் திசு ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு சில நாட்களில் கிடைத்தது. அதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அது தோல் புற்றுநோய். அந்த நோயை குணப்படுத்த முடியுமென்றாலும், அதனால் உயிருக்கு எந்த ஆபத்துமில்லையென்றாலும் அந்தச் செய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. 

தேவன் எசேக்கியேலிடம் ஒரு கசப்பான மருந்தை, அதாவது புலம்பல்களும், தவிப்பும் நிறைந்த வார்த்தைகள் அடங்கிய ஒரு புத்தகச் சுருளை விழுங்கச் சொல்கின்றார் (எசே. 2:10; 3:1-2). அவன் அதை உட்கொண்டு, வயிற்றை நிரப்பி, பின்னர் அந்த வார்த்தைகளை கடின முகமும், முரட்டாட்ட இருதயமும் (2:4) உள்ள இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசும்படி சொல்கின்றார். கர்த்தருடைய வார்த்தைகளடங்கிய ஒரு புத்தகச் சுருள் சாப்பிடுவதற்கு கசப்பான மருந்து போல இருக்கும் என்று தான் யாரும் எதிர்பார்க்கக் கூடும். ஆனால் எசேக்கியேல், “அது என் வாய்க்கு தேனைப்போல் தித்திப்பாயிருந்தது” என்கின்றார் (3:3).

தேவன் தரும் எச்சரிப்பு எசேக்கியேலுக்கு இனிமையாக இருந்தது. அவருடைய கடிந்துகொள்ளுதலை அவன் வெறுப்போடு பார்க்காமல், அதனை தன் ஆன்மாவுக்கு “இனிமை”யானதாக எடுத்துக்கொண்டான். தேவன் நமக்கு அன்போடும், கருணையோடும் எச்சரிப்பைக் கொடுத்து நம்மைத் திருத்திக் கொண்டு, அவரை கனப்படுத்தி, பிரியப்படுத்தி வாழ உதவி செய்கின்றார்.

சில உண்மைகள், விழுங்குவதற்கு கசப்பான மருந்தாகத் தோன்றும். சில நமக்கு தேனைப்போல இனிமையாயிருக்கும். தேவன் நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார் என்பதை நினைத்துப் பார்த்தால், அவருடைய உண்மை நமக்கு தேனைப்போல இனிமையாயிருக்கும். அவருடைய வார்த்தைகள் நமது நலனுக்காக கொடுக்கப்படுகின்றன. அவை நமக்கு ஞானத்தையும், பிறரை மன்னிக்க பெலனையும் தந்து ,வீண் பேச்சுகளிலிருந்து நம்மை விலக்கிக் காக்கும். சோதனையைச் சகிக்க பெலன் தரும். தேவனே, உம்முடைய ஞானம், இனிமையான ஆலோசனை என்பதைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியருளும்.

 

அமைதியான வாழ்வைத் தேடல்

“நீ பெரியவனான பின்பு என்னவாக வேண்டுமென விரும்புகின்றாய்?” இந்தக் கேள்வியை நம்மிடம், நாம் குழந்தைகளாயிருந்தபோது அல்லது வளர்ந்த பின்பு கூட கேட்டிருக்கலாம். ஆர்வ மிகுதியால் இக்கேள்வி உருவானது. இதற்கான விடை, ஒருவருடைய எதிர் கால இலட்சியத்தை வெளிப்படுத்தும். வருடங்கள் செல்லச் செல்ல என்னுடைய விடை மாறிக் கொண்டேயிருந்தது .கால் நடைகள் பராமரிப்பவரிலிருந்து டிரக் ஓட்டுனர், இராணுவ வீரர், என மாறியது. நான் கல்லூரிக்குச் சென்று மருத்துவராக வேண்டுமெனத் தீர்மானித்தேன். ஆனால், ஒருவர் கூட “ஓர் அமைதியான வாழ்வை” அடைய விரும்புகிறேனெனக் கூறியதேயில்லை.

இதைத் தான் பவுல் தெசலோனிக்கேயருக்குச் சொல்கின்றார். முதலாவது அவர், ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவும், நாடெங்குமுள்ள தேவனுடைய குடும்பத்தினரை நேசிக்கும்படியும் கூறுகின்றார் (1 தெச. 4:9-10). அவர் மேலும் ஒரு பொதுவான அறிவுரையைக் கூறுகின்றார். அது அவர்கள் கையிட்டுச்செய்கின்ற அனைத்து வேலைகளையும் குறிப்பிடுகின்றது. “நீங்கள் அமைதலுள்ளவர்களாய் இருக்கும்படி நாடவும்” (வச. 12) என்று சொல்கின்றார். “உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலை செய்யவும் வேண்டுமெனவும் புத்தி சொல்கின்றார்’’ (வச. 12). நாம் நம் குழந்தைகள் அடையவிரும்பும் இலட்சியங்களையும், அவர்களின் ஆவல்களையும் குறித்து ஊக்கமிழக்கச் செய்ய வேண்டாம். ஆனால் எதை அடைய விரும்பினாலும் அதை அமைதலுள்ள ஆவியோடு அடைய வேண்டுமென்பதை ஊக்கப்படுத்துவோம்.

நாம் வாழும் இன்றைய உலகில் இலட்சியத்தையும் அமைதியையும் தனித்தனியே பார்க்கமுடியாது. ஆனால் நம் வாழ்க்கையோடு தொடர்புடையதையே வேதாகமம் கூறுகின்றது. எனவே நாம் அமைதலுள்ள வாழ்க்கை வாழத்தொடங்கினால் எப்படியிருக்கும் என்பதைக் கருத்தில் கொள்வோம்.

 

வைக்கோல் போர் ஜெபங்கள்

இயேசுவைப் பற்றிய சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு இன்னும் அதிக ஜனங்களைத் தேவன் அனுப்பும்படி சாமுவேல் மில்ஸ் என்பவரும், அவருடைய நான்கு நண்பர்களும் அடிக்கடி கூடி ஜெபித்து வந்தனர். 1806ஆம் ஆண்டு, ஒரு நாள், அவர்கள் தங்கள் ஜெபத்தை முடித்து விட்டுத் திரும்பியபோது, ஒரு பெரிய புயல் காற்றில் அகப்பட்டனர். எனவே அவர்கள் ஒரு வைக்கோல் போர் அண்டை அடைக்கலமாயினர். அதிலிருந்து அவர்களுடைய வாராந்திர ஜெபக்கூடுகை “வைக்கோல் போர் ஜெபக்கூடுகை” என்றழைக்கப்பட்டது. அதுவே பிற்காலத்தில் உலகளவில் செயல்படும் ஓர் இயக்கமானது. இன்றும் இந்த வைக்கோல் போர் ஜெபக்குழுவின் நினைவுச் சின்னம் அமெரிக்காவில் வில்லியம்ஸ் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. நம் ஜெபத்தின் மூலம், தேவன் செயல்படக் கூடியதை அது நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. 

அவருடைய பிள்ளைகள் ஒரு பொதுவான நோக்கத்தோடு தன்னிடம் வரும்போது, நம்முடைய பரலோகத் தந்தை வெகுவாக மகிழ்ச்சியடைகின்றார். அது, ஒரு குறிப்பிட்ட பாரத்தை குடும்ப நபர்கள் அனைவரும் பகிர்ந்து கொண்டு, ஒரு மனதோடு குடும்ப ஜெபத்தில் வருவது போலவுள்ளது.

அதிகமான துன்பங்களைச் சந்தித்த காலத்தில், மற்றவர்களின் ஜெபத்தின் மூலம் தேவன் தனக்கு எப்படி உதவினார் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குகின்றார். “அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார். அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும் பொருட்டு நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவி செய்யுங்கள்” (2 கொரி. 1:10-11) தேவன் நம்முடைய ஜெபங்களை, சிறப்பாக நம்முடைய குழு ஜெபங்களை , இவ்வுலகில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்றப் பயன் படுத்துகின்றார். 

நாம் அநேகராகக் கூடி ஜெபிக்கும் போது, தேவன் தரும் நன்மைகளுக்காக நாம் சேர்ந்து மகிழ்வோம். நம்முடைய அன்புத் தந்தை, நாம் அவரிடம் வரும்படி காத்திருக்கின்றார், ஏனெனில் நாம் நினையாத வழிகளில், நம்மூலம் அவர் கிரியை செய்ய முடியும்.

 

பாடல் மூலம் பெலப்படல்

இரண்டாம் உலகப்போரின் போது, நாசி படைகளுக்குத் தப்பி வந்த யூத அகதிகளை ஒளித்து வைத்துக்கொள்ள, பிரான்ஸ் தேசத்தின் கிராமத்தினர் பெரிதும் உதவினர். அவர்களுடைய ஊரைச் சுற்றியுள்ள காடுகளில், சிலர் பாடல்களைப் பாடினர். அது, அகதிகள் தங்கள் மறைந்திருக்கும் இடங்களிலிருந்து வெளிவர பாதுகாப்பானது என்பதை அவர்களுக்குத் தெரிவித்தது. லீ சேம்பான் சர்லிக்னன் என்ற ஊரின் ஜனங்கள், தங்கள் போதகர் ஆன்ட்ரூ ட்ரோக்மே, அவரது மனைவி மேக்டா ஆகியோர் விடுத்த அழைப்பிற்குச் செவிகொடுத்து, யுத்த காலத்தில் தாங்களிருக்கும் பகுதியில் அடைக்கலம் தேடி வந்த யூதர்களுக்கு தைரியமாக பாதுகாப்பளித்தனர். அந்த இடம் “லா மான்டேக்ன் பிராடஸ்ட்டன்ஸ்” என்றழைக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த இசைவழி குறிப்பு, அந்த கிராமத்து மக்களின் தைரியமான செயலுக்கு ஓர் அடையாளம். இதன் மூலம் கிட்டத்தட்ட 3,000 யூதர்கள் மரணத்தினின்று காக்கப்பட்டனர்.

மற்றொரு பயங்கரமான நேரத்தில், சவுல் தாவீதைக் கொலை செய்யும் படி எதிரிகளை, இரவு நேரத்தில் தாவீதின் வீட்டிற்கு அனுப்பியபோது தாவீது பாடினான். அவனுடைய இசை ஓர் அடையாளமாக இசைக்கப்படவில்லை. அது, தனக்கு அடைக்கலமாயிருந்த தேவனுக்கு அவன் செலுத்திய நன்றி காணிக்கை. தாவீது, “நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கம் உண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும், உயர்ந்த அடைக்கலமுமானீர் (சங். 59:16).

தாவீதின் பாடல் இருளின் பயங்கரத்தில் பாடப்பட்ட பாடலல்ல. அது சர்வவல்ல தேவன் மீது அவன் வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்திய பாடல். “தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுமுள்ள என் தேவனுமாயிருக்கிறார் (வச. 17) என்று பாடினான். 

தாவீதின் துதியும், லீ சேம்பான் கிராமத்தினரின் பாடல்களும், நம்மையும் துதித்துப் பாட அழைக்கின்றது. நம் வாழ்வின் கவலைகளின் மத்தியில் நாம் அவருக்கு இசையை எழுப்புவோம் அவர் அன்போடு நமக்கு பதிலளித்து நம் இருதயங்களைப் பெலப்படுத்துவார்.