Archives: ஜனவரி 2019

சுவிகாரப் புத்திரன்

சமுதாயத் தொண்டு செய்யும் ஒருவர் வீடற்ற குழந்தைகளுக்கென ஓர் இல்லம் கட்டியபோது, நான் மிகவும் மகிழ்ந்தேன். அத்தோடு நின்றுவிடாமல், அந்த மனிதன் அதையும் விட மேலாக அப்படிப்பட்ட வீடற்ற குழந்தைகளிலொன்றைத் தனக்குச் சொந்தமாக தத்தெடுத்துக் கொண்டபோது மெய்சிலிர்த்துப் போனோன். அநேக அனாதைக் குழந்தைகள் தங்களை ஆதரிக்க ஒரு வளர்ப்புத் தந்தை கிடைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியடைவர். ஆனால், அந்த வளர்ப்புத் தந்தை தங்களுக்கு உதவுபவர் மட்டுமல்ல, தங்களைச் சொந்தமாக ஏற்றுக் கொள்கிறாரென கேட்கும்போது, அது அவர்களுக்கு எப்படியிருக்கும்?

நீயும் தேவனுடைய பிள்ளையாயிருந்தால், அது உனக்குச் கிடைத்த ஈவு என்பதை
நீ அறிந்திருக்கின்றாய். வெறுமனே, தேவன் நம்மை நேசித்ததினால் தம்முடைய ஒரேபேறான குமாரனை, "நாம் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி" (யோவா. 3:16). அனுப்பியிருந்தால், அது நமக்குப் போதுமானது. நாம் தேவனைக் குறைகூறவும் முடியாது. ஆனால், அது தேவனுக்குப் போதுமானதாகயில்லை. “நம்மை மீட்டுக் கொள்ளத்தக்கதாக" தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார். அத்தோடு அது முடிந்து விடவும் இல்லை. ஆனால், “நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி" (கலா. 4:4-5) தேவன் தம்முடைய குமாரனை அனுப்பினார்.

அப்போஸ்தலனாகிய பவுல் நம்மை “தேவனுடைய புத்திரர்" என்றே குறிப்பிடுகின்றார். ஏனெனில், அவருடைய நாட்களில் மகனுக்குத்தான் தந்தையின் சுதந்திரத்தையடையும் உரிமையிருந்தது. எந்த மனுஷனும், மனுஷியும் இயேசுவின் பேரில் விசுவாசமாயிருந்தால் அவர்களெல்லாரும் தேவனுடைய பிள்ளைகளென்கிற சுதந்தரத்தைப் பெறுகின்றோம் என பவுல் கூறுகின்றார் (வச. 7).

தேவன், வெறுமனே உன்னை மீட்கிறவர் மட்டுமல்ல, அவர் உன்னை நேசிக்கின்றார், உன்னைத் தன்னுடைய சொந்த குடும்பத்தில் சேர்த்துக் கொள்கின்றார். தன்னுடைய நாமத்தை உன்மேல் எழுதுகின்றார் (வெளி. 3:12). உன்னைத் தன்னுடைய பிள்ளையெனப் பெருமையாகக் கூறுகின்றார். இதைவிட மேலாக அன்புகூர நமக்கு யாரிருக்கின்றார்கள்? தேவனை விட முக்கியமானவராக நமக்கு யாரிருக்கக் கூடும்? நீ தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதோடு, அவருடைய பிள்ளையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டாய உன் தந்தை உன்னை நேசிக்கின்றார்.

பாசிகளும், நுண்பாசிகளும்

“நுண்பாசி என்பது என்ன?" என நான் என் சிநேகிதியைக் கேட்டேன். நான் அவளுடைய தோள்மீது சாய்ந்து, அவள் நுண்ணோக்கி மூலம் எடுத்துக் கொண்ட படங்களை, அவளுடைய அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தேன். “ஓ, இது பாசியைப் போன்றது. இதனைப் பார்ப்பது சற்றுக் கடினமானது. சிலவேளைகளில் லென்சுகளில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டுக் கொண்டு தான் பார்க்க முடியும் அல்லது அவை இறந்த பின் தான் பார்கக் முடியும்" என விளக்கினாள். அவள், ஒன்றன் பின் ஒன்றாக படங்களைக் காட்டி விளக்கிய போது, நான் வியந்துபோனேன். நுண்ணோக்கிகளின் மூலம் பார்க்கக் கூடிய அத்தனை சிறிய உயிரினங்களில் தேவன் வைத்துள்ள நுணுக்கமான அமைப்புகளைக் குறித்து நினைத்துக் கொண்டேயிருந்தேன்.

தேவனுடைய படைப்புகளுக்கும் அவருடைய செயல்களுக்கும் முடிவேயில்லை. இதனைக் குறித்து யோபுவின் நண்பனான எலிகூகூட, யோபு தன் இழப்புகளின் மத்தியில் போராடிக் கொண்டிருந்தபோது அவனுக்கு சுட்டிக் காட்டுகின்றான். எலிகூ தன் நண்பனிடம்," யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்து நின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப் பாரும். தேவன் அவைகளைத் திட்டம் பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ? மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைளையும்... அறிவீரோ?" (யோபு 37:14-16). தேவனுடைய படைப்புகளையும், அவற்றின் சிக்கலான நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள மனித அறிவு போதாது.

நாம் கண்களால் காணமுடியாத அவருடைய படைப்புகளும், தேவனுடைய வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்துகின்றன. அவருடைய மகிமை நம்மைச் சூழ்ந்துள்ளது. நாம் எவற்றின் வழியே கடந்து சென்றாலும், அவைகளைக் காணவும் புரிந்து கொள்ளவும் முடியாவிட்டாலும் தேவன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவரை நாம் இன்று போற்றுவோம், ஏனெனில், “அவர் ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும் எண்ணிமுடியாத அதிசயங்களையும் செய்கிறார்" (யோபு. 5:9).

வானங்களைக் கிழித்துக் கொண்டு

சமீபத்தில் நான் என்னுடைய சிநேதிதியுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, அவள் தன்னுடைய விசுவாசத்தை விட்டு விட்டதாகவும், நாம் அடிக்கடி சொல்லக் கேட்டுள்ள ஒரு குற்றச் சாட்டைக் காரணமாகக் கூறினாள். ஒன்றுமே செய்யாமலிருக்கும் ஒரு தேவனை நான் எப்படி நம்புவது? எனக் கேட்டாள். இந்த துணிச்சலான கேள்வி நம்மில் அநேகருக்கு எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தோன்றலாம். நாம் தீவிரவாத செயல்களைக் குறித்துச் செய்தித்தாளில் வாசிக்கும் போதும், நம்முடைய உள்ளத்தை உடைக்கக் கூடிய காரியங்களின் வழியே கடந்து செல்லும் போதும் இத்தகைய கேள்வி நமக்கும் தோன்றலாம். என்னுடைய சிநேகிதியின் சார்பில் தேவன் செயல்பட வேண்டிய தேவையுள்ளது என்பதை அவளுடைய வேதனை வெளிப்படுத்தியது. நாம் அனைவருமே உணர்ந்திருக்கும் ஓர் ஏக்கம் அவளிடம் இருந்தது.

இஸ்ரவேலர் தங்களுடைய நிலப்பரப்பை நன்கு அறிவர். பாபிலோனிய பேரரசு இஸ்ரவேலரின் தேசத்தைக் கைப்பற்றிக் கொண்டது. இஸ்ரவேலரை இரும்புக் கரம் கொண்டு நசுக்கி எருசலேமை தீக்கிரையாக்கி புகைந்து கொண்டிருக்கும் குப்பை மேடாக்கினர். நம்மை விடுவிக்கிறவராக இருந்த தேவன் எங்கே? (ஏசா. 63:11-15) என்ற கேள்வியோடிருந்த ஜனங்களின் இருண்ட உள்ளத்தில் ஏசாயா தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தைகளைப் போடுகின்றார். அதே இடத்திலிருந்தே ஏசாயா தைரியமாக ஒரு ஜெபத்தை ஏறெடுக்கின்றார். “தேவரீர் வானங்களைச் கிழித்திறங்கி... வாரும்" (64:1) என்கின்றார். ஏசாயாவின் வேதனையும், கவலையும் அவரை தேவனைவிட்டு விலகிப் போகச் செய்யவில்லை. ஆனால், அவர் இன்னும் அதிகமாக தேவனைத் தேடவும் அவரைக் கிட்டிச் சேரவும் செய்தது.

நம்முடைய சந்தேகங்களும் துன்பங்களும் நமக்கு ஒரு வித்தியாசமான ஈவைத் தருகின்றன. நாம் தேவனை விட்டு எவ்வளவு தூரமாய் காணாமல் போய் விட்டோமென்பதையும், தேவன் நம்மிடம் வரும்படியான தேவையில் இருக்கிறோமென்பதையும் அவை நமக்குக் காட்டுகின்றன. இப்பொழுது நாம் நடக்கக் கூடாததும், மறக்க முடியாததுமான கதைகளைக் காண்கின்றோம். இயேசுவின் மூலம் தேவன் வானங்களைக் கிழித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தார். கிறிஸ்து தன்னுடைய சொந்த சரீரத்தைக் கிழிக்கப்பட ஒப்புக் கொடுத்தார். எனவே அவருடைய அன்பினாலே அவர் நம்மை மேற்கொள்ள முடிந்தது. இயேசுவின் மூலம் தேவன் நம்மருகில் இருக்கின்றார்.

மனநிலையை சரிசெய்பவர்

நான் வாரந்தோறும் செல்கின்றபடி, இரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, வாடிக்கையாளர்கள் இரயிலில் ஏறுவதற்கு வரிசையில் நின்றது போல, எதிர்மறையான எண்ணங்கள் என்னுடைய மனதில் நிரம்பி நின்றன. கடன் மீதான கவலை, என்னிடம் பிறர் கூறிய அன்பற்ற வார்த்தைகள், எங்கள் குடும்ப நபர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதத்தில் உதவ முடியாத நிலை என பல எண்ணங்கள் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கும் போது, இரயிலும் வந்தது. நான் பயங்கரமான மனநிலையில் இருந்தேன்.

இரயிலில் ஏறி உட்கார்ந்ததும் மற்றொரு சிந்தனை என் உள்ளத்தில் வந்தது. என்னுடைய புலம்பலையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி தேவனிடம் கொடுக்கும்படி தோன்றியது. என்னுடைய குற்றச்சாட்டுகளையெல்லாம் என்னுடைய குறிப்பேட்டில் கொட்டியபின்னர், நான் என்னுடைய தொலைபேசியை எடுத்து நான் சேமித்து வைத்துள்ள துதிபாடல்களைக் கவனித்தேன். அவற்றை நான் முடிக்கும்முன்பே என்னுடைய மனநிலை முற்றிலும் மாறியது.

சங்கீதம் 94 ஐ எழுதியவர் நியமித்துள்ள வகையின்படியே நானும் ஏறக்குறைய பின்பற்றி வருகின்றேன். சங்கீதக்காரனும் முதலில் தன்னுடைய குறைகளைக் கொட்டித் தீர்க்கின்றார். “பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்... துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்? (சங். 94:2,16). அவன் தேவனிடம், விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் இழைக்கப்படும் அநீதத்தைப் பற்றி பேசும்போது எதையும் மறைவாக வைக்கவில்லை. தன்னுடைய புலம்பலையெல்லாம் தேவனிடம் கொடுத்துவிட்ட பின்பு, அந்த சங்கீதம் தேவனைப் போற்றும்படி மாறுகிறது. “கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்" (வச. 22) என தேவனைப் போற்றுகின்றார்.

நாமும் நம்முடைய புலம்பலையெல்லாம் தன்னிடம் கொண்டுவரும்படி தேவன் அழைக்கின்றார். அவரே நம்முடைய பயம், கவலை, உதவியற்ற நிலை யாவையும் துதியாக மாற்றுபவர்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விழித்திருந்து ஜெபியுங்கள்

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளைத் துளைத்து, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம்.

 

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும்.