செப்டம்பர், 2018 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: செப்டம்பர் 2018

புதிரை விடுவித்தல்

ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு நான் திரும்பி வந்தபோது, வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகில் ஒரு ஜோடி உயர் குதிகால் காலணிகள் கிடப்பதைப் பார்த்தேன். அது யாருடையதாக இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. என் மகள் லிசா தன் குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும்போது அவளிடம் கொடுக்க நினைத்து வாகனக்கூடத்தில் அதை எடுத்து வைத்தேன். ஆனால் லிசாவிடம் கேட்டபோது அது அவளுடையது அல்ல என்று கூறினாள். எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அது தங்களுடையது அல்ல என்று கூறினார்கள். அதனால் எடுத்த இடத்திலேயே அதை வைத்துவிட்டேன். அடுத்த நாள் அந்த காலணியைக் காணவில்லை. அது ஒரு புதிராக இருந்தது.

 

பவுல் அப்போஸ்தலர் தன் கடிதங்களில் ஒரு புதிர் அல்லது இரகசியத்தைப் பற்றி எழுதினார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஆனால் அவர் குறிப்பிட்ட புதிர் ‘யார் குற்றவாளி’ என்பது போன்ற புதிரைக் காட்டிலும் மேலானது. உதாரணத்திற்கு எபேசியர் 3ல், “முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படாத” (வச. 5)  இரகசியத்தைப் பற்றிக் கூறுகிறார். முன்பு கர்த்தர் தம்மை இஸ்ரவேல் மூலமாக வெளிப்படுத்தினார், ஆனால் இப்போது இஸ்ரவேலர் அல்லாத புறஜாதிகளும், “அவர்களுடனே வாரிசாக” இருக்கும்படி இயேசு கிறிஸ்து மூலமாக வெளிப்படுத்துகிறார் என்பதே அந்த இரகசியம்.

 

இது எதைத் தெரிவிக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்: இயேசுவை இரட்சகர் என்று நம்பும் அனைவரும் சேர்ந்து அவரை நேசிக்கவும், சேவிக்கவும் முடியும். நாம் அனைவரும் சரிசமமாக அவரை “தைரியம் மற்றும் திட நம்பிக்கையோடே தேவனிடத்தில்” அணுக முடியும் (வச. 12). சபையின் ஐக்கியம் மூலமாக, கர்த்தரின் ஞானம் மற்றும் தயையை உலகம் தெரிந்துகொள்ளும்.

நமது இரட்சிப்புக்காக தேவனைத் துதிப்போம். பலதரப்பட்ட பின்னணி கொண்ட அனைவரும் இயேசுகிறிஸ்துவில் ஒன்றாக இணையும்போது, ஐக்கியத்தின் புதிர் நமக்குப் புரியும்.

சிதறியவற்றை சேகரித்தல்

டான்சானியத் தலைநகர் டோடோமாவில் தரிசாகக் கிடக்கும் ஒரு நிலத்தை என் சிநேகிதி ரூத் பண்படுத்த விரும்பினாள். அங்குள்ள விதவைகளின் தேவைகளை உணர்ந்த ரூத், அவர்கள் நலனுக்காக அந்த தரிசு நிலத்தை சீர்ப்படுத்தி விவசாயம் செய்யவும், கோழி வளர்க்கவும் கூடிய இடமாக மாற்ற நினைக்கிறார். பிறர் தேவை அறிந்து அவர்களுக்கு உதவவேண்டும் என்ற அவளது தொலைநோக்குப் பார்வைக்குக் காரணம் அவள் தேவன்மீது வைத்திருக்கும் அன்பு. மேலும் அவள் பெயர்கொண்ட வேதாகமத்தின் ரூத் அவளுக்கு ஒரு தூண்டுகோல்.

 

எளியவர்களும், அயல் தேசத்தாரும் வயல்களின் ஓரத்தில் சிந்திய கதிர்களை சேகரித்துக்கொள்ள கர்த்தரின் சட்டம் அனுமதித்தது. (லேவியராகமம் 19:9-10). வேதாகம ரூத் ஒரு அயல்தேசத்தாள். எனவே அவள் தனக்கும், தன் மாமியாருக்கும் சாப்பிட சேகரிக்கும்படியாக வயலில் அனுமதிக்கப்பட்டாள். நெருங்கிய உறவினரான போவாஸின் வயலில் அவள் சிதறிய கதிர்களைப் பொறுக்கியதால் அவளுக்கும், நகோமிக்கும் வீடும், பாதுகாப்பும் கிடைத்தது. அன்றைய தினத்தின் வேலையாக, வயல் ஓரங்களில் உள்ள சிதறிய கதிர்களை சேகரிப்பதற்கு, ரூத் தன் முயற்சி மற்றும் புத்திகூர்மையை உபயோகித்தாள். கர்த்தர் அவளை ஆசீர்வதித்தார்.

 

என் தோழி ரூத்தின் ஆர்வமும், வேதாகம ரூத்தின் அர்ப்பணிப்பும், கர்த்தர் எளிய, ஒடுக்கப்பட்ட மக்களை எப்படிக் காக்கிறார் என்பதை உணர்த்தி, அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்த என்னைத் தூண்டுகின்றன. சமூகத்தில் உள்ளவர்களுக்கு உதவவும், அது ஜீவனுள்ள நம் தேவனுக்கு நன்றிசெலுத்தும் விதமாக அமையவும், அவர்கள் எனக்குத் தூண்டுதலாக அமைகிறார்கள். கர்த்தரின் கருணையை நாம் மற்றவர்களுக்குக் காண்பிப்பதன்மூலம் நாம் எவ்வாறு தேவனை சேவிக்கமுடியும்?

முதலில் கர்த்தரிடம் கேட்பது

திருமணமான புதிதில், என் மனைவியின் விருப்பங்களைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டேன். இரவில் வீட்டில் அமைதியாக சாப்பிடுவதை விரும்புவாளா அல்லது ஒரு ஆடம்பர உணவகத்தில் சாப்பிட விரும்புவாளா? என் நண்பர்களோடு நேரம் செலவழிப்பதை ஒத்துக்கொள்வாளா அல்லது வார இறுதி நாட்களில் அவளுடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாளா? ஒருமுறை, நான் ஊகித்து முடிவெடுப்பதற்குப் பதிலாக, “உன் விருப்பம் என்ன?” என்று அவளிடம் கேட்டேன்.

 

“எனக்கு எதுவானாலும் சம்மதமே,” என்று புன்முறுவலோடு பதில் சொன்னாள். “என்னிடம் கேட்டதே மகிழ்ச்சி,” என்றாள்.

 

சில சமயங்களில், தேவன் நான் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை சரியாகத் தெரிந்துகொள்ள தீவிர ஆர்வம் காட்டினேன். எந்த வேலையில் சேர்வது என்று முடிவெடுப்பதை உதாரணமாக கூறலாம். வழிநடத்துதலுக்காக ஜெபிப்பதும், வேதாகமத்தை வாசிப்பதும் தெளிவான பதிலை வெளிப்படுத்தவில்லை. ஆனால் தெளிவாக இருந்த ஒரு பதில் என்னவென்றால்: நான் கர்த்தரை நம்பி, அவரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருந்து, என் வழியை கர்த்தருக்கு ஒப்புவிப்பதே (சங். 37:3-5).

 

கர்த்தரின் வழிகளை நமது வழிகளுக்கு முன்பாக முதன்மைப்படுத்தும்போது, நம் விருப்பத்தைத் தேர்வு செய்யும் சுதந்தரத்தை அவர் நமக்குத் தருகிறார் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். அதாவது தவறாக, ஆண்டவருக்கு விருப்பமில்லாத நமது தேர்வுகளை விட்டுவிடவேண்டும். நெறியற்ற, தேவ பக்தியற்ற, அவருடன் நமக்கு இருக்கும் உறவை பாதிக்கக்கூடிய ஒன்றாக அது இருக்கலாம். மீதியுள்ள தேர்வுகள் கர்த்தரைப் பிரியப்படுத்தும் என்றால், அவற்றையே நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நமது அன்பின் பிதா நம் இருதயத்தின் வேண்டுதல்களைத் தர விரும்புகிறார். அது அவரிடத்தில் மனமகிழ்ச்சியாய் இருக்கும் இருதயமாய் இருக்க வேண்டும்
(வச. 4).

நாம் சோர்வடையும்போது

சரியான காரியத்தைச் செய்ய முயல்வது சில சமயங்களில் சோர்வை ஏற்படுத்துகிறது. நல்லெண்ணத்தோடு நான் செய்யும் செயல்களும், பேசும் வார்த்தைகளும் யாருக்காவது பிரயோஜனமாயிருக்கிறதா என்று சில சமயங்களில் நாம் யோசிக்கலாம். ஒரு நண்பரை உற்சாகப்படுத்த, அதிகம் யோசித்து, ஜெபத்துடன் அனுப்பிய மின்னஞ்சலுக்கு கோபமாக பதில் வந்தபோது நானும் அப்படிதான் யோசித்தேன். அவரது பதில் எனக்கு கோபத்தையும், மன வருத்தத்தையும் தந்தது. எப்படி அவரால் என்னைத் தவறாக புரிந்துகொள்ள முடிந்தது?

 

நானும் அவருக்கு கோபமாக பதில் அனுப்பும் முன் சற்று யோசித்தேன். இயேசு உங்களை நேசிக்கிறார் என்று நாம் ஒருவருக்குக் கூறும்போது அதன் பலனை (குறிப்பாக நாம் விரும்பும் பலனை) நம்மால் எப்போதும் பார்க்க முடியாது என்பதை நினைவுகூர்ந்தேன். கர்த்தரை நோக்கி ஈர்க்கும் எண்ணத்தில் நாம் பிறருக்கு நல்லது செய்யும்போது, அவர்கள் நம்மை வெறுத்து ஒதுக்கலாம். ஒருவர் சரியான காரியத்தைச் செய்யத் தூண்டுவதற்கு நாம் எடுக்கும் முயற்சியை அவர்கள் பொருட்படுத்தாமல் இருக்கலாம்.

 

கரிசனையோடு நாம் எடுக்கும் முயற்சிகளை, பிறர் ஏற்காததால் நாம் சோர்ந்துபோகும்போது, கலாத்தியர் 6 நாம் படிப்பதற்கு ஏற்ற பகுதியாகும். நம் உள்நோக்கத்தை ஆராயும்படி பவுல் கூறுகிறார் – நாம் பேசுவதையும், சொல்வதையும் ‘சோதித்துப் பார்க்கச்’ சொல்கிறார் (வச. 1-4). அப்படி நாம் செய்தபிறகு, விடாமல் முயற்சி செய்ய ஊக்கப்படுத்துகிறார். “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்” (வச. 9-10).

 

நாம் தொடர்ந்து தேவனுக்காக ஜீவிக்கவேண்டும் என்பதை அவர் விரும்புகிறார். இதுவே “நன்மை செய்வது” – அதாவது பிறருக்காக ஜெபிப்பதும், அவர்களுக்கு ஆண்டவரைக் குறித்து எடுத்துச் சொல்வதுமாகும். அதற்கான பலனை அவர் பார்த்துக்கொள்வார்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

களவுபோன தெய்வங்கள்

மரத்தால் செய்யப்பட்ட ஒரு குலதெய்வ விக்கிரகத்தைக் காணவில்லை என்று ஒரு பெண் அதிகாரிகளிடம் புகார் அளித்தாள். அவர்கள் அந்த விக்கிரகத்தைக் கண்டுபிடித்துவிட்டதாக எண்ணி, அடையாளம் காண்பிப்பதற்காக அவளை வரச்சொன்னார்கள். இது உங்களுடைய குலதெய்வமா? என்று அவளைக் கேட்க, அவள் வருத்தத்துடன் “இல்லை, என்னுடைய தெய்வம் இதைக்காட்டிலும் பெரியதும் அழகானதுமாய் இருக்கும்” என்று பதிலளித்தாளாம்.  
மக்கள் அவர்களுடைய கரங்களால் செய்யப்படும் தெய்வங்கள் அவர்களை பாதுகாக்கும் என்று நம்பி அவர்கள் விரும்பின வடிவத்தை அதற்கு கொடுக்கிறார்கள். அதினால் தான் யாக்கோபின் மனைவி ராகேல், லாபானிடத்திலிருந்து மறைமுகமாய் புறப்பட்டபோது “தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்” (ஆதியாகமம் 31:19) என்று வேதம் சொல்லுகிறது. ஆனாலும் அந்த சுரூபங்களுக்கு மத்தியில் தேவன் யாக்கோபை பாதுகாத்தார் (வச. 34).  
யாக்கோபுடைய பயணத்தில் யாக்கோபு இரவு முழுவதும் ஒரு மனிதனோடு போராடுகிறான் (32:24). அந்த மனிதன் சாதாரண மனுஷீகத்திற்கு உட்பட்டவன் இல்லை என்பதை யாக்கோபு அறிந்ததினால் தான் “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்” (வச. 26) என்று சொல்லுகிறான். அந்த மனிதன் இவனுடைய பெயரை இஸ்ரவேல் (“தேவன் யுத்தம்செய்கிறார்”) என்று மாற்றி ஆசீர்வதிக்கிறார் (வச. 28-29). “நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல்” (வச. 30) என்று யாக்கோபு பேரிட்டான். 
இந்த தேவனே ஒருவரால் கற்பனை செய்து பார்க்கமுடியாத அளவிற்கு பெரியவரும் அழகானவருமாகிய தேவன். அவரை செதுக்கவோ, திருடவோ, மறைக்கவோ முடியாது. ஆனாலும், அன்றிரவு யாக்கோபு கற்றுக்கொண்டபடி, நாம் அந்த தேவனை அணுகலாம்! இந்த தேவனை “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று அழைக்க இயேசு தம் சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் (மத்தேயு 6:9). 

தேவனால் அறியப்படுதல்

தத்தெடுப்பின் மூலம் பிரிந்த இரட்டைக் குழந்தைகள் இருபது ஆண்களுக்குப் பின் இணைவதற்கு மரபணு பரிசோதனை உதவியது. அதில் ஒருவனான கீரோன் வின்சென்ட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்பியபோது, அவன் “இது யார் புதிய நபராய் இருக்கிறதே?” என்று யோசித்தான். அவன் பிறக்கும்போது அவனுக்கு வைத்த பெயர் என்ன என்று கீரோன் கேட்டபோது, வின்சென்ட் “டைலர்” என்று பதிலளித்தான். அப்போது அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதை அறிந்துகொண்டனர். அவன் தன்னுடைய பெயரினால் அறியப்பட்டான்! 
உயிர்த்தெழுதல் சம்பவத்தில் பெயர் எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது என்பதை பாருங்கள். மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து, இயேசுவின் சரீரத்தைக் காணாமல் அழுகிறாள். “ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்?” (யோவான் 20:15) என்று இயேசு கேட்கிறார். தன்னை கேள்வி கேட்பது யார் என்பதை அவர் “மரியாளே” என்று அழைக்கும் வரைக்கும் மரியாள் அறியாதிருந்தாள் (வச. 16).    
அவர் சொல்லுவதைக் கேட்ட மாத்திரத்தில் அவள் கண்ணீர் சிந்தி, “ரபூனி” (ஆசிரியர் என்று அர்த்தம்) என்று அரமாயிக் மொழியில் அழைத்தாள் (வச. 16). நம் உயிர்த்தெழுந்த கிறிஸ்து அனைவருக்காகவும் மரணத்தை வென்று, நம் ஒவ்வொருவரையும் அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டதை உணர்ந்து, உயிர்த்தெழுதல் பண்டிகையில் கிறிஸ்தவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சிக்கு ஒப்பாக அவளுடைய மகிழ்ச்சி இருந்தது. அவர் மரியாளிடத்தில், “நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்” (வச. 17) என்று சொல்லுகிறார்.  
ஜியார்ஜியாவில் இரண்டு சகோதரர்கள் தங்கள் பெயர்களின் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல தீர்மானித்தனர். உயிர்த்தெழுதல் நாளின்போது, இயேசுவால் அறியப்பட்டவர்களுக்கு அவருடைய தியாகமான அன்பை காண்பிக்கும்பொருட்டு அவர் மேற்கொண்ட பெரிய முயற்சிக்காய் அவரை நாம் மகிமைப்படுத்துகிறோம். அந்த தியாயம் உனக்காகவும் எனக்காகவும் செய்யப்பட்டது. அவர் உயிரோடிருக்கிறார்.  

சத்தியம் தேடுவோர்

ஒரு பெண் ஒருமுறை என்னிடம் ஒரு கருத்து வேறுபாடு தன் தேவாலயத்தை இரண்டாய் கிழித்தது என்று சொன்னாள். “எதில் கருத்து வேறுபாடு?” என்று நான் கேட்டேன். “பூமி தட்டையாக இருக்கிறதா?” என்னும் விவாதத்தினால் என்று பதிலளித்தாள். சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு உணவகத்தின் பின் அறையில் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கூறி ஒரு மனிதன் தன் கையில் ஆயுதம் எந்தி உள்ளே வந்தார் என்னும் செய்தியைப் படித்தேன். ஆனால் அந்த உணவகத்திற்கு பின்பு எந்த அறையும் இல்லை. ஆகையால் அந்த மனிதனை கைது செய்தனர். இந்த இரண்டு சம்பவத்திலும், மக்கள் இணையதளத்தில் இடம்பெறக்கூடிய சர்ச்சைக்குரிய காரியங்களைப் பார்த்துவிட்டு இப்படிப்பட்ட தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.  
கிறிஸ்தவர்கள் மெய்யான குடிமக்கள்களாய் வாழ்வதற்காய் அழைக்கப்படுகின்றனர் (ரோமர் 13:1-7). நல்ல குடிமகன்கள் தவறான செய்திகளைப் பரப்புவதில்லை. லூக்காவின் நாட்களில் இயேசுவைக் குறித்து பல கதைகள் உலாவந்தன. அவற்றுள் சிலவைகள் உண்மையற்றவைகள் (லூக்கா 1:1). தான் கேட்ட அனைத்து செய்திகளையும் அப்படியே தொடர்புகொள்ளாமல், லூக்கா அவற்றை தீர்க்கமாய் ஆராய்ச்சி செய்து, சாட்சியங்களோடு பேசி (வச. 2), “ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்து” (வச. 3), அவருடைய சுவிசேஷத்தில் அவற்றை பெயர்கள், மேற்கோள்கள், சரித்திரதன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பதிவுசெய்துள்ளார்.  
 
நாமும் அப்படியே செய்யமுடியும். தவறான செய்திகள் திருச்சபைகளை பிளவுபடுத்தி ஆத்துமாக்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதினால் உண்மைகளைச் சரிபார்ப்பது அவர்களை நேசிப்பதற்கான ஒரு அடையாளமாகும் (10:27). ஒரு பரபரப்பான சம்வத்தை நாம் கேள்விப்படும்போது, அது உண்மையா என்று அறிந்து சரிபார்த்து, நிபுணர்களின் உதவியை நாடுவது நல்லது. அவ்வாறு செய்து நல்ல தரமான செய்திகளை நாம் பரப்புவது என்பது சுவிசேஷத்திற்கான நம்பகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அவ்வாறு செய்வதின் மூலம் “சத்தியத்தினால் நிரைந்தவரை” (யோவான் 1:14) நான் சேவிக்கமுடியும்.