Archives: மே 2018

ஐக்கியத்தில் ஏற்பட்ட தடங்கல்

உரத்த சத்தமான, வேதனை நிறைந்த குரல் அந்த மதிய வேளையின் இருளைக் கிழித்துக் கொண்டு வந்தது. அது இயேசுவின் பாதத்தினருகில் இருந்த அவருக்கன்பானவர்கள், நண்பர்களின் புலம்பலின் சத்தத்தையும் மேற்கொண்டது. அது, இயேசுவின் அருகில் சிலுவையின் இருபுறமும் இருந்த இரு குற்றவாளிகளின் குமுறலையும் மேற்கொண்டது. அக்குரலைக் கேட்ட யாவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

“ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி?” இயேசு வேதனையில் நம்பிக்கையிழந்தவராய், கொல்கொதா மலை மேல், அவமானத்தின் சின்னமான சிலுவையில் தொங்கியபடி இவ்வாறு கூப்பிடுகின்றார் (மத். 27:45-46).

என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று கேட்கின்றார். இதனையும் விட வேதனை தரும் வார்த்தைகள் என்ன இருக்கின்றது? நித்திய இராஜ்ஜியத்தில் இயேசுவானவர் தேவனாகிய பிதாவோடு நல்ல ஐக்கியத்தில் இருந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்தே இந்த உலகத்தைப் படைத்தனர். இருவரும் சேர்ந்தே மனிதனை தங்களின் சாயலாகப் படைத்தனர். அவர்கள் இருவரும் இரட்சிப்பைக் குறித்து திட்டமிட்டனர். அவர்கள் இருவரும் கடந்த நீண்ட காலங்களில் முற்றிலும் ஐக்கியமாகவேயிருந்தனர்.

இப்பொழுது இயேசு சிலுவையில் வேதனைகளையும் வலியையும் தொடர்ந்து சகித்தார். உலகத்தின் பாவங்களனைத்தும் தன் மீது சுமத்தப்பட்டதால், முதல் முறையாக தேவ பிரசன்னத்தை இழக்கின்றார்.

இதுவே ஒரே வழி. இந்த ஐக்கியத்தில் ஏற்பட்ட இடைவெளி மூலமாகவே நமக்கு இரட்சிப்பு அருளப்பட்டது.  இயேசு கிறிஸ்து சிலுவையில் கைவிடப்பட்ட அனுபவத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாலேயே மனிதர்களுக்கு தேவனோடுள்ள ஐக்கியம் கிடைத்தது.

இயேசுவே, நாங்கள் மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக, மிகவும் அதிக வேதனைகளைச் சிலுவையில் சகித்ததற்காக உமக்கு நன்றி சொல்கின்றோம்.

வார்த்தைகள் தவறாகும்போது

சமீபத்தில் நான் என் மனைவி கேரிக்கு ஒரு குறுஞ்செய்தியை, ஒலி வழிச் செய்தியாக அனுப்பினேன். அவள் வேலையை முடித்ததும் வீட்டிற்கு அழைத்து வரும்படி என் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், இந்த வார்த்தைகளை அனுப்பினேன். ‘‘நான் உன்னை எவ்விடத்தில் வந்து அழைத்துச் செல்ல விரும்புகின்றாய், என் வயதான பெண்மணியே?” என்பதே அச்செய்தி.

கேரியை நான் வயதான பெண்மணி என்று அழைப்பதை அவள் பொருட்படுத்துவதில்லை. அது எங்கள் வீட்டிற்குள்ளே நாங்கள் பயன்படுத்தும் புனைப் பெயர்களில் ஒன்று. ஆனால் அது என் அலைபேசிக்குப் புரியவில்லை. எனவே அது ‘‘வயதான மாடு” என்றனுப்பிவிட்டது.

நல்ல வேளையாக கேரி உடனடியாக என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்துக் கொண்டாள். அதனை வேடிக்கையாகவும் எடுத்துக் கொண்டாள். பின்னர் அவள் என்னுடைய குறுஞ்செய்தியை சமூக வலை தளத்தில் பதித்து விட்டு “நான் இதற்காக வருத்தப்படுவேனோ?” எனவும் கேட்டிருந்தாள். நாங்கள் இருவருமே அதனைக் குறித்து சிரித்துக் கொண்டோம்.

என்னுடைய அவலட்சணமான வார்த்தைகளுக்கு என்னுடைய மனைவியின் அன்பான அணுகுமுறை, அன்று என்னை நம்முடைய ஜெபங்களைக் குறித்து தேவனுடைய புரிந்து கொள்ளலைப் பற்றி எண்ண வைத்தது. நாம் ஜெபிக்கும் போது எவற்றைக் கேட்க வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதை அறியவில்லை. ஆனால் நாம் கிறிஸ்துவினுடையவர்களாகும் போது, நமக்குள்ளே வாசம் பண்ணும் பரிசுத்த ஆவியானவர் தாமே வாக்குக்கடங்கா பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்” (ரோம. 8:26). அன்போடு நமக்குதவி செய்து நம்முடைய ஆழ்ந்த தேவைகளைத் தேவனிடம் எடுத்துரைக்க உதவுகின்றார்.

நம்முடைய பரம தந்தை ஒருபோதும் தூர நின்று கொண்டு நம்முடைய சரியான வார்த்தைகளுக்காக காத்திருக்கின்றவரல்ல. நாம் நம்முடைய தேவைகளோடு அவரிடம் வரலாம். அவர் நம்மைப் புரிந்து கொண்டு அன்போடு அரவணைக்கின்றார் என்ற உறுதியைத் தந்துள்ளார்.

அடிவானத்தைப் பார்த்துக் கொண்டிரு

நாங்கள் பயணம் செய்யும் படகு புறப்பட்டதும், என்னுடைய சிறிய மகள் தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறினாள். கடல் பயண நோய் அவளைத் தாக்கியது. சிறிது நேரத்தில் எனக்கும் வயிற்றினைப் புரட்டியது. “அந்த அடிவானத்தை கவனித்துப் பார்” என நான் எனக்குள்ளாகச் சொல்லிக் கொண்டேன். கடல் மாலுமிகள் தங்களின் உள்ளுணர்வுகளை உற்சாகப்படுத்த இதனைக் கூறுவதுண்டு.

இந்த அடிவானத்தை உருவாக்கியவருக்கு (யோபு 26:10) நாம் நம்முடைய வாழ்வின் சில வேளைகளில் பயத்திலும், அமைதியற்ற நிலையிலும் இருக்கின்றோம் என்பது தெரியும். நாம் நம்முடைய பார்வையை தொலைவிலுள்ள இலக்கிற்கு நேராகத் திருப்புவோமாகில் சரியான கண்ணோட்டத்தைப் பெற்றுக் கொள்வோம்.

எபிரெயரை எழுதியவர் இதனை நன்கு புரிந்து கொண்டுள்ளார். அவர் தம் எழுத்துக்களை வாசிப்பவர்களிடம் தோன்றும் மனச் சோர்வை கண்டு கொண்டார். துன்புறுத்தப்பட்ட பலர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறினர். விசுவாசத்திலிருக்கும் வேறு சிலர் மிக அதிகமான சோதனைகளைச் சகிக்கின்றனர். அவர்கள் வீடற்றவர்களாயினர் என எடுத்துக் கூறுகின்றார். அவர்கள் இவற்றையெல்லாம் பொறுமையாகச் சகித்தனர், ஏனெனில் அவர்கள் மேலான ஒன்றை எதிர்பார்த்தனர்.

எனவே வாசகர்கள் இந்த வீடற்ற அகதிகளைப் போல் தேவன் தாமே ஆயத்தம் பண்ணியிருக்கிற நகரத்தை, அந்த பரம தேசத்தில் காணும்படி அதையே வாஞ்சிப்பார்களாக. (எபிரெயர் 11:10 ; 14, 16) தன்னுடைய கடைசி ஆலோசனையாக எழுத்தாளர் தன்னுடைய வாசகர்களை தேவனுடைய வாக்கின்மேல் உறுதியாயிருக்கும்படித் தெரிவிக்கின்றார். “நிலையான நகரம் நமக்கு இங்கேயில்லை. வரப் போகிறதையே நாடித் தேடுகிறோம்.” (13:14).

இக்கால பாடுகள் நிரந்தரமானவையல்ல. ‘‘இந்த பூமியின் மேல் நாம் அந்நியரும் பரதேசிகளுமாய்” இருக்கின்றோம். (11:13) தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை தூரத்திலே கண்டு அதையே நோக்கி நம் பயணத்தைத் தொடர்வோம்.

கடைசி அழைப்பு

ஹெலிகாப்டர் ஓட்டியாக இருபது ஆண்டுகள் நாட்டிற்குச் சேவை செய்தபின், ஜேம்ஸ் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி, அவனுடைய சமுதாயத்தில் ஆசிரியராகப் பணியாற்றினான். ஆனால் அவன் ஹெலிகாப்டர்களை மிகவும் நேசித்தபடியால் அருகிலுள்ள மருத்துவமனையில், மருத்துவ உதவி செய்வதற்காக பயன்படுத்திய ஹெலிகாப்டரை ஓட்டும் வேலையில் சேர்ந்தான். தன்னுடைய வாழ்வில் இறுதிவரை பறப்பதிலேயே செலவிட்டான்.

இப்பொழுது அவனை வழியனுப்ப வேண்டிய வேளை வந்தது. அவனுடைய நண்பர்களும், குடும்பத்தினரும், அவனோடு பணி புரிந்த இராணுவ உடையணிந்த சில வீரரும் ஆயத்தமாகக் கல்லறைத் தோட்டத்தில் நின்றனர். அவனுடைய சக வேலையாள் ஒருவன் ரேடியோவில் கடைசி அழைப்பு கொடுத்தார். உடனே ஒரு ஹெலிகாப்டரின் மின் விசிறியின் சுழலோசை காற்றைக் கிழித்துக் கொண்டு கிளம்பி அந்த நினைவிடத்தின் மேலே வட்டமிட்டது. பின்னர் அது ஓர் இடத்தில் நிலையாக நின்று மரியாதை செலுத்தியது. பின்னர் அது மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றது. அங்கு வந்திருந்த இராணுவ வீரர்களால் கூடத் தங்கள் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

சவுல் ராஜாவும், அவனுடைய குமாரன் யோனத்தானும் யுத்தத்தில் கொல்லப்பட்ட போது, தாவீது ஒரு பாடலை எழுதினான். அது வில்லின் புலம்பல் எனப் பட்டது. (2 சாமு. 1:17) “இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று.” “பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்கள்” (வ. 19) என்று பாடினான். யோனத்தான் தாவீதின் உற்ற நண்பனும், மைத்துனனுமாவான். தாவீதும் சவுலும் எதிரிகளாயிருந்த போதும், தாவீது அவர்களிருவரையும் கனம் பண்ணினான். ‘‘சவுலுக்காக அழுது புலம்புங்கள்,” “என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன். (வச. 24, 26) என எழுதினான்.

மிகச் சிறந்த விடை பெறல் மிகவும் கடினமானது. ஆனால் தேவன் பேரில் நம்பிக்கையாயிருப்போருக்கு, அந்த நினைவுகள் கசப்பைவிட இனிமையைத் தரும். பிறருக்காக பணி புரிந்தவர்களைக் கனம் பண்ணுவது எத்தனை நன்மையானது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

விழித்திருந்து ஜெபியுங்கள்

ஆவிக்குரிய போராட்டங்களில் ஈடுபடும்போது, கிறிஸ்தவ விசுவாசிகள் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதை ஞானமற்ற முறையில் செய்தால் எவ்வளவு ஆபத்தானது என்பதை புளோரிடாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கண்டுபிடித்தார். அவர் ஜெபிக்கும்போது கண்களை மூடுவது வழக்கம். அவ்வாறு ஒர்நாள் தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு செல்கையில், ஜெபிக்க தன் கண்ணை மூடமுற்பட்டு, ஓர் நிறுத்தத்தில் நிற்கத்தவறி, வேறு பாதை வழியாக குறுக்கிட்டுபோய், ஓர் வீட்டு உரிமையாளரின் முற்றத்தில் தன் காரை நிறுத்தினார். அதிலிருந்து தன்னுடைய காரை பின்பாக எடுக்க முயன்று தோற்றுப்போனார். காயம் ஏற்படவில்லை என்றாலும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும் அவருக்கு போலீஸ் அபராதம் விதித்தது. இந்த ஜெப வீராங்கனை எபேசியர் 6:18-ன் முக்கிய பகுதியை தவறவிட்டுவிட்டார்: “விழித்துக்கொண்டிருங்கள்!”

எபேசியர் 6ல் இடம்பெற்றுள்ள சர்வாயுதவர்கத்தின் பகுதிகளாக, அப்போஸ்தலர் பவுல் இரண்டு இறுதி காரியங்களை உள்ளடக்குகிறார். முதலில், நாம் ஆவிக்குரிய யுத்தங்களை ஜெபத்துடன் செய்யவேண்டும். இதன் பொருள் ஆவியில் ஜெபிப்பது—அவருடைய வல்லமையை நம்புவது. மேலும், அவருடைய வழிகாட்டுதலில் இளைப்பாறுதலடைதல், அவரது தூண்டுதல்களுக்கு பதிலளித்தல், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா வகையான ஜெபங்களையும் ஜெபித்தல் ஆகியவைகளும் உள்ளடங்கும் (வச. 18). இரண்டாவதாக, “விழித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவதற்கும் (மாற்கு 13:33), சோதனையை ஜெயிப்பதற்கும் (14:38), மற்ற விசுவாசிகளுக்காகப் பரிந்துபேசுவதற்கும் ஆவிக்குரிய விழிப்புணர்வு நமக்கு உதவும் (எபேசியர் 6:18).

நாம் தினமும் ஆவிக்குரிய யுத்தங்களில் ஈடுபடும்போது, தீய சக்திகளை எதிர்த்துப் போரிட்டு, கிறிஸ்துவின் வெளிச்சத்தால் இருளைத் துளைத்து, விழித்திருந்து ஜெபிக்கும் அணுகுமுறையுடன் நம் வாழ்வில் ஜெயம்பெறுவோம்.

 

தூதர் துணை

பரிசோதனைமேல் பரிசோதனை செய்துகொண்டேயிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபடியால், பினு மிகவும் சோர்வாகவும் பாரமாகவும் கருதினாள். அவளுடைய உடம்பில் ஏதாவது புற்றுநோய் கட்டிகள் இருக்கிறதா என்பதை பரிசோதிப்பதாக மருத்துவர்கள் அவளிடம் தெரிவித்தனர். ஒவ்வொரு நாளும் தேவன் தம்முடைய பிரசன்னத்தின் வாக்குறுதிகளாலும், அவள் ஜெபிக்கும்போது அல்லது வேதத்தைப் படிக்கும்போது ஓர் நித்திய சமாதானத்தையும் கொண்டு அவளை ஊக்கப்படுத்தினார். அவள் நிச்சயமற்ற மனநிலையுடன் போராடினாள். மேலும் தேவனிடத்தில், ஒருவேளை “இப்படியிருந்தால்...” என்று தன்னுடைய பயத்தை அதிகமாய் பகிர ஆரம்பித்தாள். தீவிர அறுவை சிகிச்சைக்கு முன் ஒரு நாள் காலை பினு தன்  கண்ணில்பட்ட யாத்திராகமம் 23ல் ஒரு வசனத்தை வாசித்தாள். அது: “வழியில் உன்னைக் காக்கிறதற்கும்... இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20)

அந்த வார்த்தைகளை தேவன் மோசேயின் மூலம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலருக்குக் கூறினார். தம்முடைய ஜனங்கள் பின்பற்றும்படியாக தேவன் நியாயப்பிரமாணங்களைக் கொடுத்து, அவர்களைப் புதிய தேசத்திற்கு அழைத்துச் சென்றார் (வச. 14-19). ஆனால் அவர்களுடைய பாததையில் அவர்களை பாதுகாப்பதற்காக, “ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” என்று கூறுகிறார். பினுவின் வாழ்க்கை நிலைமை இதுவாக இல்லாவிட்டாலும், தேவ தூதர்களைக் கொண்டு கர்த்தர் தம்முடைய ஜனத்தை பாதுகாப்பதை மற்ற வேதப்பகுதிகளின் மூலம் அவள் அறிந்தாள். சங்கீதம் 91:11, “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று சொல்லுகிறது. மேலும் எபிரெயர் 1:14, “இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?” என்று குறிப்பிடுகிறது. 

நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தால், நமக்கும் ஊழியம் செய்ய ஒரு துதன் அனுப்பப்படுகிறார் என்பதை விசுவாசிப்போம்.

 

கவலைகளை களையெடுக்கவும்

எனது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு நடவு இயந்திரத்தின் மூலம் சில விதைகளை விதைத்துவிட்டு, அதன் விளைச்சலைப் பார்க்க காத்திருந்தேன். பத்து முதல் பதினான்கு நாட்களுக்குள் விதைகள் முளைக்கும் என்று அறிந்து, நான் அதற்கு நீர் பாய்ச்சி பராமரித்தேன். விரைவில் சில பச்சை இலைகள் மண்ணிலிருந்து வெளியேறுவதைக் கண்டேன். ஆனால் அவை களைகள் என்று எனது கணவர் என்னிடம் சொன்னபோது நான் பதற்றமடைந்தேன். நான் வளர்க்க முயற்சிக்கும் செடிகளை அவை நெரித்துவிடாதபடி விரைவாக அவைகளை வெளியே இழுக்கும்படி எனது கணவர் என்னை ஊக்குவித்தார்.

நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியைத் தடுக்கக்கூடிய ஊடுருவல்காரர்களைக் கையாள்வதன் முக்கியத்துவத்தையும் இயேசு அறிவிக்கிறார். அவர் தனது உவமையின் ஓர் பகுதியை இவ்வாறு விளக்கினார்: விதைப்பவன் ஒருவன் தன்னுடைய விதைகளை விதைத்தபோது, அவற்றுள் “சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது” (மத்தேயு 13:7). முட்களும் களைகளும் தாவரங்களின் வளர்ச்சியை வெகுவாய் பாதிக்கக்கூடியவைகள் (வச. 22). அதுபோல கவலைகள் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். வேதத்தை வாசிப்பதும் ஜெபிப்பதும் நமது விசுவாசத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள். ஆனால் கவலையின் முட்களைக் களையெடுப்பதில் நான் கவனம்செலுத்தவேண்டும் என்பதை உணர்ந்தேன். அவைகள் என்னுள் விதைக்கப்பட்ட நல்ல வசனத்தை நெருக்கி, தவறாய் என்னை திசைதிருப்பக்கூடும். 

வேதத்தில் காணப்படும் ஆவியின் கனிகளானது, அன்பு, சந்தோஷம், சமாதானம் போன்றவற்றை உள்ளடக்கியது (கலாத்தியர் 5:22). ஆனால் நாம் அந்த பலனைக் கொடுப்பதற்கு, தேவனுடைய வல்லமையோடு நம்மைத் திசைதிருப்பக்கூடிய அல்லது நம்முடைய கவனத்தை மாற்றக்கூடிய சந்தேகம் போன்ற கவலையின் களைகளை புறம்பாக்கிட வேண்டும்.